சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்

• ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பிறந்த நாள் : சத்திரமானு ஆண்டு மார்கழி 5ஆம் நான் (18-12-1822) புதன்கிழமை இரவு அவிட்ட நட்சத்திரம்
• தகப்பனார் பெயர் : கந்தப்பிள்ளை; தாயார் பெயர் : இவகாமி.
• ஊர் : யாழ்ப்பாணம் நல்லூர்.
• இறைவனடி சேர்ந்த நாள் : பிரமாதி ஆண்டு கார்த்துகை உச ஆம் நாள் (5-12-1879) மக நட்சத்திரம்.
• இலங்கை அரசாங்கம் ஐந்துசத நாவலர் நினைவு முத்திரை வெளியிட்டநாள்: 29-10-1971

I. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சைவப்பணிகள்

நாவலர் பெருமான் கொண்ட மேலான நோக்கங்கள் இரண்டு. அவற்றுள் ஓன்று அந்நிய சமயத்தவரின் ஆதிக்கத்தில் தன் உன்னத நிலை குன்றிய சைவத்தைத் தொன்மைபோல் ஓங்கச்செய்ய வேண்டும் என்பது, மற்றது செந்தமிழ் மொழியைச் சீர்படுத்தவேண்டும் என்பதாம். இதில் முதலாவது குறித்து 1868இல் அவர் செய்துகொண்ட விண்ணப்பம் ஒன்று பின்வருமாறு:

“அடியவர் குறைவு தீர்த்தாண்டருள்வதே விரதம் பூண்ட பெருங்கருணைக்கடலாகிய சிவபெருமான்” நான் நல்லறிவும் நல்லொழுக்கமும் தம்மாட்டு மெய்யன்பும் சற்றுமுற்றறியாப் பரமசண்டாளனேயாயினும், தமது சமயம் குன்றுதலைக் காண்டலின்கண்ணே பெருங்கவலையும், அச்சமயத்தை வளர்த்தலின்கண்ணே பேராசையும் உடைமையினாற்றானே என்னிம்மைப் பயன்களெல்லாவற்றையும் இழந்தும், பலராலே பலவகையிடையூறுகளை அநுபவித்தும், வருத்த முற்றும் – உண்மையைத் திருவுளங்கொண்டிரங்கி, என் கருத்தை யான் எடுத்த தேகம் விழுமுன் நிறைவேற்றியருளும்பொருட்டு, அவருடைய திருவடிகளைப் பணிந்து பிரார்த்திக்கின்றேன்.

இப்படியாகக் கூறிய நாவலர், சைவத்தின் உயர்வுக்காக ஆற்றிய பணிகளை வரிசைப்படுத்தின், அவை கீழ்க்கண்டவாறு அமைவனவாகும்;- :

1. ஐரோப்பியர் வருகையால் நிலை குன்றியிருந்த சைவசமயத்தை மீண்டும் அதன் நிலைக்குக் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் நாவலருக்கு இளமை முதல் இருந்து வந்தது, பதின்மூன்றாவது வயதிலே இதனை நினைந்து மனம் வருந்தி, சிவபெருமானை வேண்டி வெண்பாப் பாடினார்.

2. சைவத்தை வாழவைக்கவேண்டும் என்ற பேராசையினாலே, தனது சுகபோகங்களை எல்லாந் துறந்து வாழ்நாள் முழுவதும் ழூநைட்டிங்க பிரமசாரியாகவே வாழ்ந்தார். இவைகளெல்லாவற்றிற்குங் காரணம் “சைவசமயத்தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய கல்வியையும் வளர்க்கவேண்டும் என்னும் பேராசையேயாம்” என 1868இல் “சைவசமயிகளுக்கு விக்கியாபனம்” என்னும் இவரது வெளியீட்டில் கூறியிருப்பதன் மூலந் தெரிந்து கொள்ளலாம்;.

3. ஊதியங்கொடுத்துவந்த ஆசிரியர் தொழிலையே விட்டு விலகினார்.

4. சைவமுறையிற் கல்வியூட்டவேண்டுமென்று, நினைத்துப் பால பாடங்களை எழுதினார். பாதிரிமார் முதலாம் வேதவினாவிடை, இரண்டாம் வேதவினாவிடை என்னும் புத்தகங்களை எழுதி அச்சிட்டுப் பரப்பியதுபோல், முதலாம் இரண்டாஞ் சைவ வினா விடைகளை எழுதப் பரப்பிச் சைவ சமய அறிவையூட்டினார்.

5. செய்யுள் நடையிலுள்ள நூல்கள் தமிழறிவு குறைந்த அக்காலத்துப் படிப்போர்க்குக் கடுமையாக இருத்தலைக்கண்டு, சிவாலயதரிசனவிதி, பெரியபுராண வசனம், திருவிளையாடற்புராண வசனம்கந்தபுராண வசனம் போன்ற நூல்களை வசன நடையில் எழுதி வெளியிட்டார்.

6. பாதிரிமார்கள் அச்சியந்திரசாலையைத் தாபித்துத் துண்டுப் பிரசுரங்களையுஞ் சைவ கண்டனமான பிரதிகளையும் அச்சிட்டு வெளிப்படுத்தித் தம் சமயத்திற்கு மக்களை இழுப்பதைக் கண்டு, தானும் சென்னையிலும் யாழ்ப்பாணத்திலும் அச்சுக்கூடங்களை நிறுவிப் பழைய சமய நூல்களை ஆதாரமாகக் கொண்டு தாம் எழுதிய வசன நூல்களையும், கிறித்துமத கண்டனப் புத்தகங்களையும் அச்சிட்டுப் பரப்பினார். மேலும், இதில் பல பழந்தமிழ்ப் பெரு நூல்களையும் பிழையறப் பரிசோதித்துப் பதிப்பித்தும், எழுதியும் வெளியிட்டார்.

7. இளமைதொட்டு மாணவர்களைக் கூட்டி இலவசமாகச் சமய நூல்களையும் கருவி நூல்களையும் கற்பித்தார். இப்படி இவரிடம் கற்ற மாணவர்கள் பிற்காலத்தில் சமயத்திற்குப் பெரும் பணியாற்றியதுடன், நாவலர் மாணவ பரம்பரை ஒன்றையும் சிருட்டித்து விட்டனர். இப்பரம்பரை வழிவழியாக வந்துகொண்டே இருக்கின்றது. புலோலி நா. கதிரைவேற்பிள்ளை, வித்துவ சிரோன்மணி பொன்னம்பலபிள்ளை, கோப்பாய் சபாபதி நாவலர், ஆறுமுகப்பிள்ளை, நடராச ஐயர் போன்றோர் நாவலர் மாணவர்களுள் குறிப்பிடத்தக்க சிலராவர். இன்று நம்முடன் வாழ்ந்துவரும் இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற வித்துவான் நா. சுப்பையாபிள்ளை போன்றோர் நாவலர் மாணவ பரம்பரையைச் சர்ந்தவர்களேயாம்.

8. சைவப்பிள்ளைகள் சைவப்பாடசாலையில் கல்வி கற்கவேண்டுமென்பதை உணர்ந்து, இதனை யாவருக்கும் வெளிப்படுத்தியதோடு வண்ணார்பண்ணையில் கீலக ஆண்டு ஆவணி 5ஆம் நாள் (1848இல்) “சைவப்பிரகாச வித்தியாசாலை” என்னும் பெயருடன் ஒரு பாடசாலையை நிறுவினார். இதனைத் தொடர்ந்து ஊர்கள் தோறும் சைவப்பாடசாலைகளை நிறுவும்படி பிரசங்கித்தும் வந்தார். இதனால் இணுவில், கோப்பாய், புலோலி, கொழும்புத்துறை போன்ற இடங்களில் பாடசாலைகள் நிறுவப்பட்டன. சிதம்பரத்திலும் இதே நோச்கத்திற்காகப் பாடசாலை ஒன்றினை நிறுவியதோடு (1864) ஊர்கள் தோறும் சைவப்பாடசாலைகளைத் தமிழ்நாட்டில் நிறுவும்படியும் ஊக்குவித்து வந்தார். இதனால் “சைவப் பாடசாலைகளின் தாபகத் தந்தை நாவலர்” என்று போற்றத்தக்கவர். தம்மால் தாபிக்கப்பட்ட பாடசாலைகள் இடரின்றி நடைபெறுவதற்கேற்ற தருமங்களையும் அமைத்து வைத்துள்ளார், இங்கெல்லாம் தக்க ஆரிரியர்களையே நியமனஞ் செய்தும் வந்தார். மாணவர்கள் வேதனம் செலுத்தாதே படிந்து வந்தனர். இலவசக் கல்வியை அருளம்பல முதலியாருக்குப் பின்னர் முதன்முதலாக இந்நாட்டில் நடைமுறைப்படுத்தி நிலைபெறச் செய்தவர் நாவலரேயாவர்.

9. சைவப்பிள்ளைகள் ஆங்கிலக் கற்பதற்குச் சைவாங்கிலப் பாடசாலை ஒன்றின் இன்றியமையாமையை உணர்ந்து, வண்ணார் பண்ணையில் ஆங்கிலப் பாடசாலை ஒன்றையும் 1872இல் ஆரம்பித்தார். இப்பாடசாலையைக் கொண்டு நடத்தப் போதிய மூலதனம் சேராமையால் சிறிது காலத்தில் நின்றுவிட்டது. இருந்தும் சிறிது காலத்தின் பின் எழுந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், அதன்பின் ஆங்காங்கு தோன்றிய சைவாங்கில பாடசாலைகளுக்கும் வித்திட்டு வைத்தவர் நம் நாவலர் பெருமானேயாம்.

10. சைவசமய உண்மைகளை விளக்கி வண்ணை வைத்திசுவரன் கோவிலிலும், பிற இடங்களிலும் கேட்டார் பிணிக்குந் தகையவாய் பிரசங்கங்களைத் தான் செய்து வந்ததுடன், தன் மாணாக்கர்களையும், பிறரையும் கொண்டு செய்வித்தும் வந்தார். இதற்காக இடத்திற்கு இடம் சைவப் பிரசார சபைகளைத் தாபித்தும்தாபிக்க உதவியும் வந்தார். இப் பிரசங்கங்களினால் மதமாற்றமடைந்த பலர் திரும்பவும் சைவத்திற் சேர்ந்துள்ளனர்.

11. சைவசமயம் தொடர்பான பிரசாரத்திற்கு “பத்திரிகை” ஒன்று வேண்டும் என அவாவினார். ‘சைவோதயபானு” என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பத்திரிகை இவர் துணையானதேயாம், இதுவே பின்னாளில் இந்துசாதனமாக மாறியது.

12. சைவசமய வளர்ச்சிக்காகச் சேமநிதிகள் உண்டாக்க வேண்டும் என நினைந்து, அதற்கு வேண்டிய விதானங்களையும் எழுதி வைத்தார். இதற்காகத் தம்பலகமத்தில் விளைநிலங்கள். வாங்கி விட்டதற்கு ஆவணங்கள் உண்டு,

13. வேத் சிவாகம நெறிதவறி நடந்து வந்த தேவாலயக் கிரியைகளை நெறிப்படுத்துவித்தார்;

14. வைதிகம் சைவம் என்பன பற்றிப் பிரசங்கித்து, சிவதீட்சை பெறாத வைதிகநெறிப் பிரமாணர்களைச் சிவதீட்சை எழுந்தருளச் செய்தார். இதனால் சிவாகம ஆராய்ச்சியும், சிவபூசையும், தேவார திருவாசக பாராயண ஓசையும், சிவபூசைக்கு இன்றியமையாச் சிறப்பினதாயுள்ள பூசைமணி ஓசையும் (ஆகாச சம்பந்தமான உபசார ஒலி) யாழ்ப்பாணம் எங்கும் பரவத் தொடங்கின. இதனாற் சைவந் தழைத்தோங்கியது.

15. சிவாலயங்களில் சிவ தரிசனஞ் செய்பவர்களுக்குப் பக்தி உண்டாகும் வண்ணம் பண்ணோடு திருமுறைகளை நியமமாக ஓதுவிக்க வேண்டுமென எண்ணி, ஓதுவார்களைத் திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்தும் வரவழைத்துப் பண்முறைப் பயிற்சி செய்வித்தார்.

16. திருக்கோவில்கள் தோறும் புராணபடனஞ் செய்வித்தும் பொருள் விரித்தோதியும் மக்களிடத்திலே சைவ நற்சிந்தனைகளை வளர்த்தார்.

17. திருக்கேதீச்சரம், கீரிமலைச் சிவன்கோவில் என்பவற்றின் புனருத்தாரணம் பற்றி விஞ்ஞாபனஞ் செய்து அறிவுறுத்தினார். யாழ்ப்பாணத்துச் சமயநிலை” என்ற விஞ்ஞாபனத்தில் திருக்கேதீச்சரம் பற்றி அறிக்கை செய்துள்ளார்;.

18. சிவாலய தரிசனஞ் செய்பவர்கள் பொருட்டு “சிவாலய தரிசன விதி” என்னும் நூலையும், சைவசமயத்தின் சாரங்களையெல்லாந் திரட்டித் தாமெழுதிய “சைவசமய சாரம்” என்னும் துண்டுப்பத்திரிகையையும், “கொலைமறுத்தல்” என்னும் நூலுக்குத் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் செய்த உரையையும் பதிப்பித்து வெளியிட்டார்கள்.

19. யாழ்ப்பாணத்தவர் – ஏன் தமிழ்நாட்டவர்கூடக் கேட்டிருக்க முடியாத – பெயரே தெரிந்திருக்க முடியாக் கிடைத்தற்கரிய வடமொழி ஏட்டுருச் சவெதத்துவ – சாத்திர நூல்களைத் தேடி எடுத்துத் தாமே முயன்று வாத்து விளங்க, அவற்றின் சாரங்களைத் தாம் எழுதிய “சிவனது பரத்துவம்”, சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம்: முதலிய தமிழ் நூல்களில் சாதாரண மக்கள் விளக்கத்திற்காக எழு தியமை அருமையின் அருமையாகும்.

20. தமிழ்நாட்டிலும் சைவப்பணிகள் செய்யவேண்டிய இன்றியமையாமையை உணர்ந்து அங்குஞ் சென்று பணிபுரிந்தார். திருவா ஆதீனம், தருமபுர ஆதீனம், மதுரை ஆதீனம், திருவண்ணாமலை ஆதீனம், மதுரை, காஞ்சி, இராமநாதபுரம், சிதம்பரம், சென்னபட்டணம், தொண்டைமண்டலப் பதி புண்ணிய சபை, காரைக்கால், வேதாரணியம் முதலிய இடங்களிலும் பிரசங்கமூலம் சைவப்பிரசாரஞ் செய்தார்.

21. சிதம்பரத்திலும் நல்லூரிலும் வேத சிவாகம குருகுல பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எத்தனித்தார். இவர் எண்ணங்கள் கைகூடவில்லை. ஆயின் இவர் கனவை நனவாக்கி நிற்பதுதான் திருக்கேதீச்சரத்தில் 1961இல் தொடங்கப்பட்டு, 1974இல் யாழ் வண்ணை வைத்தீசுவரன் கோவிலடிக்கு மாற்றம் செய்யப்பட்டு, இன்று நடேசர் கோவிலடியில் நடைபெற்றுவரும், வேதாகம குருகுல பாடசாலை ஆகும்.

22. ஈழத்துத் தமிழர் போற்றும் சமயம் சைவம். இந்நாட்டில் தமிழர் கலாசாரம் – சால்பு இந்நெறி வழியதாம் என்பதை எடுத்துக்காட்டு முகமாகத் தன்னால் தோற்றுவிக்கப்பட்ட யாவற்றிற்கும் “சைவம்” என்ற அடை, கொடுத்துப் பெயர் சூட்டினார். சைவ வினாவிடை – சைவசமய சாரம் – சைவப்பிரகாச வித்தியாசாலை – சைவப்பிரகாச அச்சகம் – சைவப் போதகர்கள் – சைவ அநுட்டானம் போன்றவை குறிப்பிடத்தக்க சிலவாகும். இதனைத் தொடர்ந்து பின்நாளில் சைவபரிபாலன சபை – சைவ வித்தியா விருத்திச் சங்கம் – சைவாசிரியர் கலாசாலை – சைவப் பாடசாலைகள் – சைவசமய பாடப் பரீட்சை – சைவபோதம், சைவபோதினி, சைவ மகத்துவம், சைவப்பிரகாசனம், சைவூத்தாந்த சங்கரகம், சைவ பூஷண சந்திரிகை, சைவூத்தாந்தச் சுருக்கம், சைவக்கிரியை விளக்கம், சைவ மஞ்சரி, சைவ நெறி போன்றவை பிறந்தன.

23. நாவலர் பிறந்திலரேல் யாழ்ப்பாணம் முழுவதும் மதம் மாறியிருக்கும். சிவாலயங்கள் எதனையும் அங்கு காணவும் முடியாது இருந்திநக்கும். யாழ்ப்பாணத்திலுள்ள சகல கிராமங்களில் இன்று சைவசமயத்தவர் எவரையும் காணமுடியாது இருப்பது போன்ற நிலைதான் குடாநாடு முழுவதற்கும் நேர்ந்திருக்கும்.

24. தாம் இல்லாத காலத்திலும் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வண்ணம் எப்பிழையுமின்றிப் பல நூல்களைப் புதியனவாக எழுதியும், உரை வகுத்தும், பரிசோதித்தும் வெளியிட்டார். (இந்நூல்களெல்லாம் யாழ்ப்பாணத்திலே அவராற்றுபிக்கப்பட்ட வித்தியானுபாலன யந்திரசாலையிலும், சென்னை அச்சகங்களிலும் அச்சிடப்பட்டவை,)

நாவலர் புதியனவாக எழுதி வெளியிட்ட நூல்கள்:

1. முதலாம் பாலபாடம்
2. இரண்டாம் பாலபாடம்
3. நான்காம் பாலபாடம்
4. பெரியபுராண வசனம்
5. சிவாலய தரிசன விதி
6. சைவதூஷண பரிகாரம்
7. சுப்பிரபோதம்
8. சைவ வினாவிடை முதற் புத்தகம்
9. சைவ வினாவிடை இரண்டாம் புத்தகம்
10. இலக்கணச் சுருக்கம்
11. சிதம்பர மான்மியம்
12. கந்தபுராண வசனம்
13. அநுட்டான விதி
14. யாழ்ப்பாணச் சமய நிலை
15. இலங்கைப் பூமிசாத்திரம்
16. திருவிளையாடற் புராண வசனம்
17. இலக்கண வினாவிடை முதற் புத்தகம்
18. இலக்கண வினாவிடை இரண்டாம் புத்தகம்
19. நல்லூர் கந்தசுவாமி கோவில் முதற் புத்தகம்
20. நல்லூர் கந்தசுவாமி கோவில் இரண்டாம் புத்தகம்
21. பெரியபுராண சூசனம்
22. போலி அருட்பா மறுப்பு
23. மித்தியவாத நிரசனம்
24. புலோலி பசுபதீச்சரப் பெருமான் திருவூஞ்சல்
25. கதிர்காம சுவாமிமீது கீர்த்தனங்கள்
26. தனிப் பாமாலைகள்

உரை எழுதி வெளியிட்ட நூல்கள்:


1. திருமுருகாற்றுப்படை
2. கோயிற் புராணம்
3. சைவசமய நெறி
4. ஆத்திசூடி
5. கொன்றைவேந்தன்
6. வாக்குண்டாம்
7. நன்னெறி
8. நல்வழி
9. தன்னூல் (காண்டிகையுரை)

பரிசோதித்துப் பதிப்பித்த நூல்கள்:


1. சூடாமணிதிகண்டு – உரையுடன்
2. சௌந்தரியலகரி – உரையுடன்
3: நன்னூல் விருத்தியுரை
4. திருச்செந்தினிரோட்ட யமகவந்தாதி
5. குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
6. கந்தரலங்காரம்
7. கந்தரனுபூதி
8. ஏரெழுபது
9. திருக்கைவழக்கம்
10. மறைசையந்தாதி
11. கோயிற்புராண மூலம்
12. திருக்கருவைப்பத்தந்தாதி
13. சிதம்பர மும்மணிக்கோவை
14. பட்டினத்துப்பிள்ளையார் பாடல்
15 ச. அருணகிரிநாதர் வகுப்பு
16. மருதூரந்தாதியுரை
17. திருச்செந்தூரகவல்
18. விநாயகரகவல்
19. விநாயக கவசம்
20. சிவகவசம்
21. திருவள்ளுவர் பரிமேலழகருரை
22. திருச்சிற்றம்பலக் கோவையுரை
22. சேதுபுராணம்
24. பிரயோகவிவேக மூலமும் உரையும்
25. தருக்க சங்கிரகம்
26. உபமான சங்கிரகம்
27. இரத்தினச் சுருக்கம்
28. இலக்கணக்கொத்து
29, தொல்காப்பியச் சூத்திர விருத்தி
30. இலக்கண விளக்கச் சூறாவளி
31. கந்தபுராணம்
32 பதிலோராந் திருமுறை
33. நால்வர் நான்மணிமாலை, பெரியநாயகி விருத்தம், பெரியநாயகி கலித்துறை, புஷ்டான நவமணிமாலை
34. தொல்காப்பியம் செல்லதிகாரம் சேனுவரையருரை
35. இதம்பர மான்மியம்
36. சிவஞானபோதச் சிற்றுரை
37. பெரியபுராணம்
38. புட்பவிதி
39. உபநிடத மூலமும் உரையும்

நாவலரது சைவப் பணிப் பயன்கள்:

ஆறுமுகநாவலரது சித்தசுத்தியும், சிவபத்தியும் கூடிய இருதயகமலத்தெழுந்த நன்முயற்சிகளும், அற ஒழுக்கங்களுமே அவர் நினைத்த – எடுத்த பணிகள் செம்மையாக நடந்தேற உதவின.

நாவலரது எழுத்துக்களும் – பேச்சுக்களும் – பதிப்புக்களும் சூழ் நிலையின் படிப்படியான வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டவை, அக் காரணத்தால் அவர் முயற்சிகள் எல்லாம் சிறந்த அடிநிலையிலிருந்து தொடங்கி நடந்தவை எனலாம்.

நாவலரது சைவப்பணிப் பயன்கள் பல. அவரது முயற்சியால் அந்நியரின் பொய்யுரையும், மதமாற்றமும் தடைப்பட்டன. மதம்மாறினோர் மீண்டும் சைவராயினர். சைவத்தின் உயர்வை உலகம் அறிந்தது. சைவ மக்கள் சிவாகம அறிவும், ஒழுக்கமும் உள்ளவராயினர். சைவக் கல்வி, சைவ அறிவு, சைவ ஒழுக்கம் ஆகிய மூன்றும்வளரத் தலைப்பட்டன. சிவ சின்னங்களை அணிதலும், சைவப் பிரசங்கங்கள் நிசழ்த்தலும், புராணபடனமும் திருமுறை ஓதலும் வழக்கத்திற்கு உரியனவாயின் நாடெங்கும் சைவக் கல்லூரிகளும், பாடசாலைகளும் தோன்றின. நாவலர் வழியில் சான்றோரும் பலர் தோன்றிச் சைவப் பணிமை ஈழத்திலும், தமிழ் நாட்டிலும் செய்தனர்;. சைவச் சபைகள் தோன்றின. சைவ நூல்கள் பல பதிப்பிக்கப் பெற்றன. எழுதவும்பெற்றன. சைவப் பத்திரிகைகள் தோன்றின. ஊர்கள் தோறும் புதிய ஆலயங்களும் உருவாகின, அங்கெல்லாம் நித்திய நைமித்திய விழாக்கள் சிறப்பாக நடைபெற ஏற்பாடாயின. திருக்கேதீச்சரமும், திருக்கோணேசுவரமும் பண்டை நிலையைப் பெற்றன. நாவலர் திட்டமிட்ட முயற்சிகள் அவர்பின் நிறைவேறின. மிகுதியாயுள்ளவையும் விரைவில் நிறைவேறுதற்கான சூழ்நிலைகள், ஏற்பட்டன. இந்துக்கல்லூரி, கீரிமலைச் சிவன்கோவில், வேதாகம பாடசாலைகள் இவர் காலத்தில் நிறைவேருது, பிற்காலத்தில் இவர் கனவை நனவாக்கும் பொருட்டு நிறைவேறியவையாகும்.

நாவலரைப் போல வரலாற்றில் ஒருவரைக் காணல் அரிது. நாவலர் சைவத்தின் காவலர். பல்லவர் காலத்தில் சைவநெறி சீர்குலைந்தபோது ஞானசம்பந்தரும், அப்பரும் தோன்றிச் சைவத்தைக் காத்தனர். அதேபோன்று ஐரோப்பியர் ஆட்சியில் சைவநெறி சீர்குலைந்தபோது நாவலர் தோன்றிக் காத்தார், நாவலர் ஐந்தாம் குரவர்அறுபத்துநான்காம் நாயனார். இன்று நாவலர் இட்ட சைவநற்பணி ஆல் போல் பரந்து பயன் தருகிறது. இன்று நாம் காணும் சைவம் நாவலரின் சைவம் எனலாம். நாவலரின் சிவப்பணியைப் போற்றாதார் இவர். நாவலர் பிறந்த நல்லூரில் சைவ நன்மக்கள் அவருக்கு ஆலயம் அமைத்துள்ளமை அவரின் சைவப் பணிக்குச்சான்று பகர்கிறது.

இப்பணி நிறைவபெறவேண்டுமெனக் கருவிட்டு முன்னோடியாக நின்றுழைத்தவர் திரு. க. இளையதம்பி ஆவர்.

II. நாவலர் சமூகப் பணிகள்

நாவலர்பெருமான் ஆற்றிய பணிகள் யாவும் சமூகநல அடிப்படையில் உள்ளனவே, எனினும், படிப்பவர் வசதி குறித்துப் பொது நோக்கில் அவர் செய்த சமூகத் தொண்டுகள் சிலவற்றைச் சமயப் பணியினின்றும் பிரித்துச் சிறப்பாக இங்கே காட்டப்படுகின்றன.

இதற்கு முன் கூறிய சமயப் பணிகளுள்ளும், சமூகப் பணிக் குரிய குறிப்புகள் இருப்பதனால், பொருத்தமானவற்றையும் இங்கு சேர்த்துக் கொள்ளவும்.

1. நாவலர் கல்விகற்ற காலங்களில் அநுபவித்த சிரமங்கள் அவர் மனதில் எப்போதும் இருந்தபடியால், பல இடங்களில் பல கல்விக் கூடங்களை ஆரம்பித்துச் சம்பளம் வாங்காமற் படிப்பிக்க வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு இருந்து வந்தது. அந்த எண்ணத்தில் உதயமானவையே வண்ணார்பண்ணைச் சைவப்பிரகாச வித்தியாசாலை போன்றவை. தமிழ்க் கல்வியுடன் ஆங்கிலக் கல்வியையும் நம் சமூகம் அறிந்திருக்க வேண்டுமென்ற பெருநோக்குடன் சைவ ஆங்கில வித்தியாசாலை ஒன்றையும் வண்ணார் பண்ணையில் தொடக்கினார். இவர் விட்டுசசென்ற நோக்கத்தில் உள்ள இச் சமூகப் பணிகளை இவர் அடியை ஒற்றிச் செய்வதற்குத் தோன்றிய தாபனங்கள் தான் யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை, சைவ வித்தியாவிருததிச் சங்கம் போன்றவையாகும், இவற்றைக் கண்டு தனிப்பட்ட பெரியோரும் இப்பணிகளில் ஈடுபடத் தலைப்பட்டனர். இவை யாவற்றுக்குங் காரணராக இருந்தவர் நாவலர் பெருமானேயாம்.

2. நாவலர் அவர்களால் தொடக்கப்பட்ட பாடசாலைகள் தனக்குப் பிற்பட்ட காலங்களில் அவை எவ்வாறு இயங்கவேண்டுமென்பதற்குரிய விதானங்களைச் செய்ததுடன், அவற்றின் பரிபாலனத்துக் குரிய சொத்துக்களையும் தேடிவைத்துள்ளார்.

3. படித்தவர்க்கு மட்டுமே என்றிருந்த பாவுரு நூல்களைச் சாதாரண மக்கள் சமுதாயமும் விளங்கக்கொள்ளக்கூடியதாக வசனநடையில் எழுதி உதவினார்.

4. அச்சுக்கூடம் நிறுவியதும், பழைய நூல்களைச் சமூகத்திற்கு ஏற்ப இலகு மொழியில் ஆக்கியதும், புது நூல்களை எழுதியதும், பழையனவற்றைப் பரிசோதித்ததும், யாவரும் கல்வி கற்பதில் சமவாய்ப்பினைப் பெறவேண்டும். என்ற பெருநோக்கினாலேயாம்;

5. நாவலர் பெருமான் பிரசங்கங்களை வீண் பொழுதுபோக்குக்காகச் செய்தவரல்ல. கேட்டவர்கள் கேட்டபடி ஒழுகி, நன்மை பெறத்தக்க வகையிலேயே அவற்றை ஆற்றி வந்தார். இவற்றால் பயன் பெற்றோர் அளப்பிலர்,

6. துண்டுப் பிரசுரங்கள் மூலம் மக்கள் சமுதாயத்திற்கு விடயங்களை உணர வைக்கும் முறையை முதலில் கைக்கொண்டவர் நாவலரே, இம்முறை இன்று நம்மிடை நன்கு வேரூன்றி நின்று நன்மை பயந்து வருகின்றது.

7. ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை போன்ற ஆங்கிலங் கற்ற கல்விமான்களைத் தமிழ்த் தொண்டர்களாக்கித் தமிழர் சமுதாயத்தைச் சிறப்புற வைக்கக் காரணராக இருந்தவர் நாவலரே.

8. ஈசுர ஆண்டு (1877) மழை குறைந்ததால் தானியங்கள் விளைவு குன்றி நாட்டில் பஞ்சமேற்பட்டபோது, கஞ்சித்தொட்டி கட்டிப் பஞ்சம் நீங்கும்வரை ஏழு மாதங்களுக்கு ஆரம்பத்தில் கஞ்சியும், பின்னர் அன்னம் கறி முதலியனவும் ஏழை மக்களுக்கு வழங்கிப் பஞ்சப் பிணியைப் போக்க வந்தார்.

9. சரியான குற்றம் கண்டவிடத்து, அப்பிழைகளை விட்ட பெரும் பிரபுக்கள் பலரை நேருக்குநேர் வைத்துக் கண்டித்து நல்வழிப்படுத்தியவர் நாவலர் பெருமான்.

10. 1877இல் யாழ்ப்பாணத்தில் பாசையூர், கரையூர் போன்ற கிறீஸ்தவப் பகுதிகளில் பரவி வந்த பேதி நோயைக் கண்டு, தகுந்த பாதுகாப்பு அளிக்கும்படி அரசினர் விட்ட அறிக்கையைச் சீரான முறையில் நடைமுறைப்படுத்தாது பராமுகம் காட்டி வந்த அக்கால மாவட்ட அதிபராகிய துவைனம் துரையின் செய்கையைச் சுட்டிக் கண்டித்து, யாழ்ப்பாணம் வந்த தேசாதிபதிக்கு விண்ணப்பித்து, தூதுக்குழுவொன்றையும் அனுப்பி வைத்தவர் நாவலரே. இது அவர் செய்த சாதி சமய பேத ஆசார உயர்வு தாழ்வுகளுக்கு அப்பாற்பட்ட பணியையும், சீர்திருத்தப் பண்பினையும் காட்டுவதாகும்.

11. நாவலர் தனக்கு எதிராக முறையீடு செய்ததை ஒட்டி, துவைனம் கோபம் உடையவராக இருத்தாரேனும், நாவலர்க்கோ அன்றி அவர் செய்துவந்த பணிகளுக்கோ பெருமதிப்பளிக்க அவர் தவறவில்லை என்பதற்கு, நாவலரின் இறுதி நாளன்று துவைனம் செய்த செயல் நல்லதோர் எடுத்துக்காட்டாகும். நாவலர் உலக வாழ்வை நீத்த செய்தியைக் கேட்ட துவைனம் மிகவும் மனம் நொந்ததுடன், தம் கீழுள்ள அலுவலர்கள் எல்லோரையும் இன்று, நீங்கள் கச்சேரி வேலை பார்க்கவேண்டியதில்லை, நாவலர் வீட்டுக்குப் போக வேண்டும். என்று சொல்லி, அவர்களை அனுப்பிவைத்தமை நாவலர் தொண்டுகளுக்கு அவர் செய்த அரச மரியாதையைக் காட்டுகிறது.

12. திரு. பொன்னம்பலம் இராமநாதன் என்ற இளைஞரைச் சட்டசபைக்கு அனுப்புவதற்காக ஆதரவு வேண்டி 22-5-1879இல் சைவப்பிரகாச வித்தியாசாலையில், சுதுமலை கறோல் விசுவநாதபிள்ளை தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடந்த அரசியல் கூட்டத்தில், சபையோர் மெச்சும் வகையில் தருக்க ரீதியான உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்போகாத நியாயங்கள் காட்டி உரையாற்றியவர் நாவலர். இவர் அரசியல் நோக்கில் சமூகத்திற் காற்றிய பணிக்கு இஃது ஓர் உதாரணமாகும்.

13. சமூகநல விருத்திக்குப் பயன்படக்கூடிய முறையில் இன்றைய அண்ணாமலைப் பல்கலைக்கழக வளவுடன் சேர்ந்த 60 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்க உத்தேசித்திருந்தார். ஆயின், உத்தேச அளவுக்குக் கொள்வனவு செய்யப் பணம் சேரவில்லை. அதனால் கொள்வனவு தடைப்பட்டதெனினும், அவர் கனவுகளையே பின்னாளில் அண்ணாமலைச் செட்டியார் நனவாக்கி இருக்கின்றாரென்பது ஈண்டு நினைவு கூர்ந்து மகிழத் தக்கதாகும்.

14. அன்ன சத்திரம் இல்லாத இடத்து அன்னசாலை தாபித்து சிரத்தையுடன் தீர்த்தயாத்திரை தலயாத்திரை செய்பவராகளுள்ளும், கடவுளுக்கு இடையறாத திருத்தொண்டு செய்பவராககுள்ளும், வறியவராய் உள்ளவர்க்கும், தொழில் செய்து சீவனஞ் செய்யச் சக்தியில்லாத குருடர் மூடவர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும், நோயாளர்க்கும் அன்னம் கொடுக்க லேண்டுமென்ற அறக்கட்டளைகளை நாவலர் ஏற்பாடு செய்திருந்தார்.

15. விவிலிய வேதத்தைத் தமிழில் மொழிபெயர்த்தமை நாவலரது பரந்த நோக்குடன் கூடிய பெருந்தன்மையான சமூகத் தொண்டு என்று கூறுவதில் சைவசமயிகள் பெருமையடைகின்றனர்;

16. கந்தளாய்க் குளத்திற்கு அண்மையில் உள்ள இருபதினாயிரம் ஏக்கர் வளமிக்க காட்டு நிலத்தை நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு, யாழ்ப்மாணம் – மட்டக்களப்பு வர்த்தக வேளாண்மைச் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கத்தை 1872இல் தேசாதிபதியாயிருந்த சேர். வில்லியம் கிரகரி உருவாக்கினார்;. இச்சங்கம் பங்கொன்று பத்துரூபா வீதம் முப்பதினாயிரம் பங்குகளை விற்கும் உரிமை பெற்றிருந்தது. இச்சங்கப் பங்குகளில் நாவலர் அவர்களும், திரு. ரா. ம. சித, முத்துக்கருப்பன் செட்டியாரும் சேர்ந்து இரண்டாயிரம் ரூபா கட்டி இருநூறு பங்குகள் பெற்றார்கள். இவர்கள் இதனை வாங்கியதன் நோக்கம் பஞ்சத்தினாலும், நோய்களினாலும் வாடி வருந்தும் மக்களின் வறுமையையும், பிணியையும் போக்க உதவுமுகமாகவேயாம், இக்காட்டில் வளர் பயன்தரு மரங்களாகிய கருங்காலி, முதிரை, பாலை, சமண்டலை முதலியவற்றைத் தறித்துப் பிற ஊர்களுக்கு அனுப்பின் மிகுந்த வருமானம் வரும் எனவும், அவ்வருமானங்களைத் தான் எடுத்த பொதுப்பணிகளுக்குப் பயன்படுத்தலாம் எனவும் தம்பியமை இன்னோர் நோக்கமாம். மேலும் இருநூறு பங்குகள் பெற்றிருந்தபடியினால் அச்சங்க முகாமைக்காரரில் ஒருவராகவும் இவர் தெரிவு செய்யப்பட்டார், தான் சங்கத்தில் சேர்ந்ததோடு நிற்காது மற்றும் ஆட்களையும் இச்சங்கத்தில், சேர்த்து வேளாண்மையைப் பெருக்குவதற்குக் கூட்டம் கூட்டிப் பிரசங்கித்தும் வந்தார். இன்னும் கிளைச்சங்கம் ஒன்றை நிறுவவும் எண்ணியிருந்தார். சமயப்பிரசாரகராக இருந்த நாவலர், நிலச் சீர்திருத்த வேளாண்மைப் பிரசாரகராக விளங்கியதை மெச்ச, அக்காலச் செய்தி மடலான இலங்கைநேசன் பலமுறை பாராட்டி எழுதியதுடன், ஆசிரியத் தலையங்கத்திலும் விரித்தெழுதியிருந்தது.

17. நாவலர் செய்த சமூகத் தொண்டுகளின் பெருமையினைக் கூற வந்த இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஆசானாகிய தமிழ்ப்பெரியார் வண. கிங்ஸ்பெரி அவர்கள் “அளப்பருஞ் சலநிதி” எனக் கம்பர் வாக்சேக் காட்டி உயர்த்தியுள்ளார். இதற்கு மேலாக அவர் பணி பற்றி யாம் கூற இருப்பது என்னோ!

III. நாவலர் திருக்கோயிற் பணிகள்

1. தொண்டை நாட்டில் உள்ள பாடல் பெற்ற தலங்கள் பலகிலமாகி இருந்தன. அவற்றைப் புனர்நிருமாணம் செய்வதற்கு சென்னையில் சபை ஒன்று கூட்டப்பட்டது. அதன்பெயர் திருத்தொண்டை நாட்டுப் பதிபுண்ணியசபை. இச்சபையின் சார்பில் தொண்டை நாட்டு கிலமடைந்த திருத்தலப் புனர்நிருமாணத்தின் பொருட்டு பொருள்சேர்க்க 1867 மார்கழி 22ஆம்நாளும், 1868, மாசி 1 ஆம் நாளும் சென்னையிற் கூட்டப்பட்ட இரு கூட்டங்களில், திருக்கோயிற்றிருப் பணிகள் செய்யப்படவேண்டிய அவசியம் பற்றியும், திருப்பணிகள் செய்வோர் பெறும் பயன்கள் பற்றியும் நாவலர் பெருமான் விரிவுரை செய்துள்ளார். அவற்றின் சாராம்சமான முக்கிய குறிப்புக்கள் சில இதன் கீழ்த் தரப்படுகின்றன்.

(அ) சிவபெருமான் தம்மைப் புகழ்ந்து தம்மாலே அருளப்பட்ட வேதத்தினும், தம் மெய்யன்பர்களாகிய சமயாசாரியர்கள் வாய்த் தோன்றியதேவார திருவாசகங்கவில் விருப்பமிக்குடையவராய், அவைகளால் வசீகரிக்கப்படுவராதலாலும், அவர்களால் வணங்கப்பட்டு அவர்கள் திருப்பதிகங்களைப் பெற்ற சிவத்தலங்கள் உத்தமோத்தம சிவத்தலங்களாகும்.

(ஆ) சிவாலயத் திருப்பணிகள் “பரமதருமம்” என்பதும், சைவசாத்திர படனத்துக்குஞ் சைவப்பிரசாரத்திற்கும் முக்கியமான இடங்கள் சிவாலயங்களாமாதலாலும், கிலமடைந்திருக்கும் திருக்கோயில்களைத்தற்காலத்தில் புனர்நிருமாணஞ் செய்யாவிடின் விளையுங்கேடு பெரிதாதலாலும், இந்நாட்டிலுள்ள (கொண்டைநாடு) தேவாரம் பெற்ற கோவில்கள் பல கிலமடைந்திருக்கன்றமையினாலும், அப்படியான தலங்களைப் புனர்நிருமாணஞ்செய்தற்கும், நித்தியபூசைகள் இல்லாத ஆலயங்களில் நித்திய பூசை முதலியவை நடத்துவதற்கும் பெரும்பொருள் வேண்டும். தனித்தாயினும், சிலர் மாத்திரம் கூடியாயினும் இவைகளை நிறைவாக்குதல் இயலாது, சைவசமயிகளாகிய நம்மவர்களெல்லோரும் வேறுபாடுகளையும்-பகை உணர்வுகளையும் பாராட்டாது, ஒற்றுமையுடன்-ஐக்கயெத்தோடு ஒருங்குகூடி உத்தமோத்தம சிவபுண்ணியமாகய இச் சிவாலயத்திருப்பணிகளின் பொருட்டுத் தங்கள் தங்களால் இயன்றபடி சிறிதாயினுந் திரவியம் உபகரிக்கக் கடவர். “ஆயிரமாகாணி அறுபத்திரண்டரை” என்றபடி, நம்மவர்களால் உபகரிக்கப்படும் பொருள் மிகப் பெருகிவளர்ந்து திருப்பணியாளர்கள் உத்தேசித்திருக்கும் சிவபுண்ணியங்கள் எல்லாம் இனிது நிறைவேறுதற்குக் காரணமாகும். இப்படிச் செய்பவர்களன்றோ சைவசமயிகள் என்னும் பெயருக்கும் அதனாற் பெறற்பாலதாகய பெரும்பயனுக்கும் பாத்துரர் ஆவார்கள்.

(இ) திருக்கோயில் முதலியவை அழிந்தால் அவைகளை முன்போலச் செய்தவர் பெறும்பயன்; அவைகளை முன் செய்தவர்கள் பெற்ற பயனிலும் ஆமிரமடங்கு அதிகமாகும்? . திருக்கோயிலின் ஒருறுப்புக் லமாயின், அதனை முன்போலச் செய்பவர் பெறும்பயன், முன்செய்தவர் பெற்ற பயனிலும் நூறுமடங்கு அதிகமாகும். இவற்றுக்குப் பிரமாணங்கள் ஓவபுண்ணியத் தெளிவு, இருமந்திரம்) சைவசமயநெறி போன்றவை.

(ஈ) சிவாலயத் திருப்பணிகளுக்குப் பொருள் கொடுப்பவர்களும், அப்பொருளை வாங்கிச் சிவாலயத் திருப்பணிகளைச் செய்பவர்களும் முத்தியை அடைவார்கள்,

(உ) தருமங்களையும், அவைகளின் பலன்களையும், அவைகளைச் செய்யும் முறைமைகளையும் அறியவும் – அறிவிக்கவும் – வல்லவர் கல்கியறிவுடையவராதலாலும், அவைகளைத் திரவியமுபகரித்து முடிக்க வல்லவர் செல்லமுடையவராதலாலும், இவ்விரு திறத்தாருள்ளும் பலர் சபையாகத் திரண்டு விதானங்கள் செய்துகொண்டு, அவ்விதானங்களின் படியே தருமங்கள் நடத்தப் புகுவாராயின், அத்தருமங்களெல்லாம் விதிப்படி நிறைவேறும். அவற்றின் பொருட்டுக் கொடுக்கும் பொருள் முழுவதுந் தருமத்திற்றானே உபயோகப்படும். ஆதலினால், நம்மவருள்ளே தருமஞ் செய்யக் கருத்துடையவர்கள் யாவரும் இத் திருப்பணிச் சபையில் சேர்தலே உத்தமோத்தமம்;.

(ஊ) யாவராயினும் ஒரு தருமத்திற்குதி திரவியம் உபகரிக்கச் சங்கற்பித்தாராயின், சங்கற்பித்த அக்கணமே அததிரவியந் தருமத் திரவியமேயாம் விடும். ஆகவே, அத்திரவியத்தைப் பின்பு கொடா தொழிந்தவர் தருமத்திரவியத்தை அபகரித்து அதிபாதகராக, எரிவாய் நரகத்தில் விழுந்து வருந்துவர். இது உண்மை நூற்றுணிபு. ஆதலினால், நீங்கள் தருமத்தின் பொருட்டுச் சங்கற்பித்த பொருளைச் சிறிதாயினும் தடையின்றி அச்சத்தோடும், அன்போடும் கொடுத்துவிடல் வேண்டும்,

(எ) புண்ணியத்தையேனும், பாவத்தையேனும் செய்தல், செய்வித்தல், உடன்படல் என்னும் மூன்றும் தம்முள் ஒக்குமாதலால், நீங்கள் இத் தருமத்திற்கு உபசரித்தல் மாத்திரமன்றி, உங்கள் உங்கள் பந்துக்கள், நண்பர்கள் முதலாயினோருக்குஞ் சமயம் வாய்க்கும் பொழுதெல்லாம் நல்லறிவுச் சுடர் கொழுத்தி அவர்களையும் இயன்ற மட்டும் இத்தருமத்திற்கு உபகாரர்களாக்க முயலல் வேண்டும்.

(ஏ) இங்கு நாம் கூறியவாறு நடப்பின், சிவபுண்ணியங்களும் சிவஞானமும் அபிவிருத்தியாகும். நீங்கள் உங்களுக்கும் பிறருக்கும் பயன்பட்டு, உங்களுக்கு இனியர்களாகிய உங்களுக்கு, உங்களிலும் இனியராகிய சிவபிரானுடைய திருவருளைப் பெற்று வாழ்வீர்.

2. கோயில் அடையாளயேயின்றி தேவார வடிவில் மாத்திரம் மூன்று நூற்றாண்டுவறை திருந்துவந்த, திருக்கேதீச்சர திருக்கோயிற் திருப்பணி பற்றி “யாழ்ப்பாணச் சமயநிலை” என்னும் பிரசுரத்தில் 1872ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் நாவலர் பெருமான் செய்த விஞ்ஞாபனம்.

“தேவாரம் பெற்ற சிவத்தலங்களுள் இரண்டு இலங்கையில் உள்ளன. அவைகளுள் ஒன்றாகப் திருக்கோணமலைக்குச் சம்பந்தமூர்த்தி நாயனார் திருப்பதிகமொன்றிருக்கின்றது. மற்றொன்றாகய திருக்கேகச்சரத்துக்குத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருபபதிகமொன்றுஞ், சுந்தரமூர்த்தநாயனார் திருப்பதிகமொன்றும் இருக்கன்றன. திருக்கேதீச்சரம் வடமாகாணத்தின் கண்ணுள்ள மன்னாருக்கு சமீபத்திலிருக்கின்ற மாதோட்டத்திலுள்ளது. இத்திருக்கேடச்சரம் அழிந்து காடாகக் கிடக்கன்றதே. புதிது. புதிதாக இவ்விலங்கையில் எத்தனையோ கோயில்கள் கட்டப்படுகன்றனவே, நீங்கள் இந்த மகாதலத்தைச் சிறிதும் நினையாததென்னையோ, இவ்விலங்கையிலுன்ள விபூதாரிகள் எல்லாருஞ் சிறிது சிறிது உபகரிப்பினும், எத்துணைப் பெருந்தொகைப் பொருள் சேர்ந்து விடும். இதை நீங்கள் எல்லீருஞ் சந்தித்து இத்திருப்பணியை நிறைவேற்றுவீர்களாயின் அருட்கடலாகய சிவபெருமான் உங்களுக்கு அநுக்கிரகஞ் செய்வர்.

இன்று யாம் காணும் திருக்கேதீச்சரப் பெருங்கோவிற்றோற்றம் நாவலர் பெருமானது. இவ் விஞ்ஞாபனத்தின் அத்திவாரத்தில் எழுந்ததேயாம்;.

3. 1873ஆம் ஆண்டு தை மாதத்தில் நல்லூர் கந்தசுவாமி கோயிலில், அக்கோயில் ஆகமவிரோதக் கிரியைகள பற்றி விரிவுரை செய்தார். அதனையொட்டி அவ்வாலயத்திலுந் திருப்பணிச்சபையொன்று உதயமாகியது விவரம்.

நல்லூர் கந்தசுவாமிகோயில் கர்ப்பக்கிரகத்தில் வேலாயுதப் பிரட்டை செய்து, இருபுறத்திலும் தெய்வநாயகி, வள்ளிநாயகி விக்கிரகங்களை வைத்துப் பூசித்தல் ஆகமவிரோதமென்றும், அவைகளை நீக்கச் சிலர் விக்கரகந்தாபித்தல் வேண்டுமென்றும் விரிவுரை செய்தார். நாவலர் கூற்றை ஏற்றுக்கொண்டு சிவாகம சம்மதப்படி கர்ப்பக்கிருகம் முதலியவைகளைப் பிரித்துக் கருங்கல்லினாலே கட்டிச் சிலாவிக்கரகப் பிரதிட்டை கருவறையில் செய்ய அக்கால அறங்காவலர் இணங்கினர். அதற்கென ஒரு திருப்பணிச்சபை தெரிவுசெய்யப்பட்டது. அச்சபையின் தலைவராக நாவலரையே வைத்திருந்தனர். இத்திருப்பணிக்கு 6000 ரூபா வரை கையொப்பத்தில் சேர்ந்திருந்தது. இத்தொகையில் 3000 ரூபா வரையில் அறவிடப்பட்டுக் கோயிலதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பணத்துடன், நாவலர் பரிந்துரைக் கடிதத்துடன் தென்னாடு சென்று திருப்பணிக்கு வேண்டிய உயர்தரக் கருங்கற்கள் கருவூரிலிருந்து தருவிக்கப்பட்டன.

4. ஈழநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலயங்கள் பல போர்த்துக்கேயரால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று கீரிமலை சிவன்கோவில். இக்கோயிலின் புனருத்தாரணத்திற்காகவும், நாவலர் முயற்சிகள் எடுத்திருக்கின்றார். இப்புனருத்தாரணத்திற்கென வெகுதானிய ஆண்டு வைகாசி 24ஆம் நாள் (1878) சைவ உலகிற்கு உருக்கமான ஒரு விண்ணப்பத்தைத் தமது கையொப்பத்தோடு வெளியிட்டிருந்தார்கள். இதனோடு தமது வண்ணார்பண்ணைப் பாடசாலையில் கூட்டிய கூட்டத்திலும் இது விடயமாக விரிவுரை செய்ததாகவுந் தெரிகின்றது. கீரிமலைக் கோயில்பற்றி அவர் விடுத்த விண்ணப்பம் கீழ்க்கண்டவாறு,

“கீரிமலையில் ஆதியில் பெரிய ஏவன்கோவில் ஒன்று இருந்தது. அக்கோயில் போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்டுவிட்டது. கீரிமலையின் அடியினின்றுஞ் சுத்த நீர் ஊற்றெடுத்துக் கடலினுள்ளே பாய்கின்றது. அந்தச் சங்கமம் புண்ணிய தீர்த்தமென்று விசுவசித்தன்றோ யாழ்ப்பாணம் எங்குமுள்ள சைவசமயச் சனங்கள் விசேட நாட்களில் அங்கே போய் நீராடுகின்றார்கள். அநேகர் அந்தியேட்டி – சிரார்த்தம் முதலிய கிரியைகள் அங்கே செய்கின்றார்கள். இப்படியாக அங்கு செல்கின்றவார்கள் நீராடியவுடன் சுவாமி தரிசனஞ் செய்யும் பொருட்டு அங்கே ஒரு கோயில் இல்லையே. யாழ்ப்பாணத்தில் எத்தனையோ இடங்களில் புதிது புதிதாகக் கோயில் கட்டும் நம்மவர்கள், எல்லாச் சனங்களுக்கும் பொதுத் தலமாகிய கீரிமலையிலே ஒரு கோயில் கட்டுவிக்க இதுவரை நினையாதது என்னையோ கீரிமலையிலே ஒரு கோயில் கட்டுவித்துச் வெலிங்கப் பிரதிட்டை செய்வித்து, நித்தியபூசை தடத்துவிப்பது மேலாகிய சிவதருமம், பொருளுதவி செய்வார்களானால் இந்தச் சிவதருமத்தைத் தொடங்கி நிறைவு செய்யலாம் எனக் கூறி, பொருள் சேகரிப்பதற்கும் – வழங்குவதற்குமான வழிவகைகளையும் அதில் தெரிவித்திருந்தார்கள்.

தம் பொருள்கொண்டு கிட்டங்கி ஒன்று கட்டி விடுவதற்காக காங்கேசன்துறையில் இக்கோயிலுக்கு நாவலர் நிலம் வாங்கிவிட்டிருந்தார்.

கோயில்கட்டுவதற்கான நிலையத்தை நல்லூர்ச் சோதிடவித்துவானாக விளங்கேய ச.இரகுநாத சாத்திரி, அராலி சுவாமிநாத சிற்பாசாரி ஆகியோரைக் கொண்டு நாவலரே இடுவித்தார்.

இவ்வாறு பலவகையிலும் நாவலர் அன்று எடுத்த முயற்சிகளின் பயனாகத்தான், பின்னாளில் பலர் இப்பணியை நிறைவு செய்ய முன்வந்தனர். இன்று இவ்வாலயத் இருப்பணிகள் ஒரளவிற்கு முற்றுப்பெற்று நாவலர் கனவை நனவாக்கி வருகின்றதுடன், ஈழத்துப் பெருங்கோவில் வரிசையில் ஒன்றாகவுந் திகழ்ன்றது.

5. நாவலர் பணிகளுக்கு நல்லாதரவு செய்தவர்களுள் நாட்டுக் கோட்டைச் செட்டிகளும் அடங்குவர். ஆயின், தவறிழைப்போராயாராக இருப்பினுந் தமர் நமர் என்ற பேதங்காட்டாது உற்றதை உற்ற இடத்தில் உறுதியுடன் கண்டித்து எதிர்ப்பவர். இதற்கு நல்ல சான்று சிவாகம விதிகளுக்கு விரோதமான முறையில் யாழ்ப்பாணம் வண்ணார்பண்னையில் நாட்டுக்கோட்டை நகரத்தார் கட்டிய கதிரேசன் கோயில் பற்றிய நாவலர் கண்டனங்களும் – வெளியீடுகளும்.

IV. நாவலர் கல்விப் பணிகள்

1. நாவலர் மெதடிஸ்த்த பாடசாலையில் (இன்றைய யாழ். மத்திய கல்லூரியில்) பயின்ற காலத்தில் கீழ்வகுப்பு மாணவர்களுக்கு ஆங்லேமும், மேல்வகுப்பு மாணவர்களுக்குத் தமிழும் கற்பித்து வந்தார். திண்ணைப்பள்ளிக்கூடக் காலச் சட்டாம்பிள்ளைமுறை இதுவேயாகும். பாடசாலை ஆசிரியர் வேதனச் செலவுகளைச் சுருக்குவதற்கு இம்முறை பெரிதும் பயன்பட்டமையால், பின்னாளில் பல பாடசாலை அதிபர்கள் இம்முறையினைப் பின்பற்றுவாராயினர்.

2. நாவலரது கல்வியறிவு விருத்திக்காக அக்காலத்து யாழ்ப்பாணத்துப் பெரும்புலவர்களிடம் வீட்டோர் இவரைச் சேர்ப்பித்திருந்தனரேனும், இவரது கல்விப்பெரும்பசியை அவர்களினால் முற்றாகத் தீர்க்கக்கூடிய நிலை இருக்கவில்லைப்போலும். இவர் தாமாகவே பல நூல்களையும் அரிதில் முயன்று கற்றிருக்கின்றார். அச்சமயம் தான் பட்ட இடர்களைப் பின்வருவோரும் படாதிருக்கவேண்டுமென்ற நினைப்பே 1841ஆம் ஆண்டு தொடக்கம் விவேகபுத்தியுள்ள தகுதியான நன்மாணாக்கர்களைக் கூட்டி அவர்களுக்கு இரவுபகல் பாராது இலவசக்கல்வி கற்பிக்க இவரைத் தூண்டியிருக்கின்றது. இதில் வளர்ந்த நல்லாசிரியர் மரபொன்று வாழையடி வாழையாக வந்துகொண்டிருக்கின்றது.

3. காலையிலும் மாலையிலும் மாணவர்களுக்கு இலவசமாகக் கல்வி கற்பிப்பதுடன், முதியோர் கல்வியிலும் கவனம் செலுத்தியுள்ளார்;. 31-12-1847 தொடக்கம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், வண்ணார் பண்ணை சிவன்கோயிலிலும், ஏனைய இடங்களிலும் செய்துவந்த பிரசங்கமாரி, சமய அறிவை ஊட்டிவந்ததுடன் முதியோர் அறிவையும் பெருக்கியுள்ளதென்றே கூறலாம்.

4. தமிழில் பட்டத்தேர்வுகள் வைத்துப் பட்டங்கள் வழங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து வைத்தார். யாழ்ப்பாணத்தில் பின்னாளில் உருவாகிய தமிழ்ச்சங்கத்திற்கு மூலமாக விருந்தவை நாவலர் அவர்களால் செய்து வைக்கப்பட்ட இவ்வேற்பாடுகளேயாம்.

5. நன்மாணாக்கர் நல்லாசிரியரைத் தேடி அடையும் முறையையும், அவர்வழி ஒழுக நூல்களை அணுகும் முறையையும், அவற்றினைக்கற்கவேண்டிய மரபினையும் தாம் வகுத்த கல்விமுறையில் விளக்குகின்றார்”இளமையில் கல்” என்ற ஒளவை வாக்கினை உணர்ந்த நாவலர், இளம் மாணவர்க்குத் தம் மூன்றாம் பாலபாடத்திற் கற்கும் முறைகள் பற்றிக் கூறியவற்றுள் பல இக்காலக் கல்வி முறைக்குப் பெரிதும் உகந்தனவாகக் காணப்படுகின்றன.

6. பெண்கள் கற்றலின் அவசியம்பற்றி 8ஆம் பாலபாடத்தில் விளக்கமாகவும் விரிவாகவும் கூறியுள்ளார்.

7. மக்களால் தேடப்படும் கல்விப்பொருள், செல்வப்பொருள் என்னும் இரண்டினுள், செல்வப்பொருளைச் சம்பாதித்தற்கும், காப்பாற்றுதற்கும், அதனாலடைய வேண்டிய சுகங்களை உள்ளபடி அறிந்து அனுபவிப்பதற்கும், கடவுளையும் அவரை வழிபடும் நெறியையும் அறிந்து வழிபட்டு முத்தியின்பம் பெறுவதற்கும் காரணமாய்ச் சிறந்து முன்னிற்பது கல்வியே, ஆதலால், அதனைப் பயிலுதற்குத்தானமாகய (இடமாகிய) வித்தியாசாலைகளைத் தாபிக்க வேண்டும், அவைகளுக்கு உதவிசெய்ய வேண்டும். முதற் பொருள் வைத்து அவைகளை ஒழுங்குபெற நடத்த வேண்டும். இப்படியாகக் கட்டப்படும் கல்விக்கூடங்களில் கருவிநூல், சமயநூல்களேயன்றிக் கைத்தொழில்களையும் கற்பிப்பது விசேடம் எனக் கூறியிருக்கின்றார்.

8. நாவலர் கல்வித்திட்டத்திலே இளைஞர்களுக்கு அறிபூட்டுவதே முதலிடம் பெற்றிருந்தது. மற்றும் பெரும் புலவர்களெல்லாம் கற்றோர்க்கு நூல் செய்வதில் காலம்கழிக்க, நாவலர் இளைஞர்க்குக் கல்வி ஊட்டுவதில் நாட்டங்கொண்டிருந்தார். சைவத்தை நிலைநாட்ட வேண்டுமாயின், தமிழை வளர்க்கவேண்டுமாயின், வழிவழி வந்த அறிவுச் செல்வத்தைக் காக்கவேண்டுமாயின், இளைஞர்களுக்குக் தகுந்த சூழலிலே. கல்வி புகட்டப்படவேண்டுமென்பதை உணர்ந்தார். இதற்காக மாணவர்கள் இலகுவில் உணரக்கூடிய இலக்கண இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். இலக்கணவினாவிடை, இலக்கணச் சுருக்கம், நன்னூல் காண்டிகையுரை ஆகியவை ஒவ்வொன்றும், ஒன்றினொன்று உயர்ந்தனவாய் எழுதியமைக்கான ‘காரணம் இதுவேயாகும்.

“இலக்கணநூல்” என்பதற்கு நாவலர் கூறியிருக்கும் வரைவிலக் கணத்தை. இனி எவரும் திருத்தவோ அன்றிப் புதுப்பிக்கவோ முடியாது.

இலக்கண நாலாவது உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுள் வழக்கத்தையும் அறிந்து, -விதிப்படி எழுதுவதற்கும், பேசுவதற்கும் கருவியாகிய நூலாம் என்பது அவர் கூற்று.

இன்னும் குற்றியலுகரத்திற்கு நாவலர் எழுதிய வரைவிலக்கணம், நன்னூலநர் வரைவிலக்கணத்தையும் கடந்து மாணவர் மனதில் பதிந்து விடுகின்றது.

“குற்றியலுகரமாவது தனிக்குற்றெழுத்தல்லாத மற்றை எழுத்துக்களுக்குப் பின்னே மொழிகளினிறுதியில் வல்லின மெய்களில் ஏறிநிற்கும் உகரமாம்” என்பர்,

“தமிழ் கற்கப்புகுஞ் சைவசமயிகள் முன்னர் பாலபாடங்களைப் படித்துக்கொண்டு, இலக்கணச் சுருக்கத்தைக் கற்றறிந்து, இயன்றளவு பிழையில்லாமல் எழுதவும் பேசவும் பழகுக” என்று கூறிய நாவலரது இலக்கணச்சுருக்கம், தமிழ் கற்றவர்களுமே தங்கள் ஐயங்களைத் தீர்ப்பதற்குக் கைநூலாகக் கொள்ளத்தக்கதாகும். அத்தகையதிட்பநுட்பத்துடன் எழுதப்பட்ட நால் இலக்கணச் சுருக்கம், தொல்காப்பியரும் நன்னூலாரும் வரையறுக்காது பொதுப்படக் கூறிய சொற்புணர்ச்சி விதிகளை நாவலர் வகைப்படுத்தி வரையறுத்துத் தந்திருப்பது பாராட்டத்தக்கது.

9. மாணவர் தமக்கெழும் ஐயங்களைப் பத்திரிகையில் வினாவாக எழுதி, விடைகளைக் கற்றுவல்லோர் மூலந் தெளிந்து கொள்ளலாம் என்ற கொள்கையையுடையவர் நாவலர். இதற்கு கட்புலன்பற்றித் தமக்கெழுந்த ஐயத்தை நீக்க 1841 ஆவணி 14ஆம் நாள் உதய தாரகைக்கு நாவலர் எழுதிய கடிதத்திற்குரிய விளக்கமான விடை, 1841 புரட்டாது 2ஆம் நாள் உதயதாரகையில் வெளிவந்தமை தக்கவொரு சான்றாகும்.

10. 1848இல் நாவலரால் தாபிக்கப்பட்ட யாழ்ப்பாணம் சைவப்பிரகாச வித்தியாசாலையே பலதுறைகளிலும் பின்னெழுந்த தமிழ்ப் பாடசாலைகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்ததாகும்.

11. எத்தகைய பண நெருக்கடி நேர்ந்தபோதிலும் மாணவர்களிடமிருந்து நாவலர் பணம் வாங்கியது கிடையாது. பாடசாலை ஆசிரியர்களுக்கும் சம்பளம் கொடுக்க வசதியில்லாதிருந்தபோது வீட்டுக்கு வீடு பிடியரிசு சேர்த்து அதனை விற்றுக் கொடுத்து வந்தார். பின்னாளில் சேர்க்கும் கூலிக்கே சேர்ந்த அரிசி காணாமலிருந்தபடியால், அப்பிடி அரிசி சேர்த்தலையும் விட்டுவிட்டிருந்தார், இப்படியான நிலையில் மனம் நொந்து கொண்டிருக்கும் பொழுதுதான், திருவருள் செயலாக பொன். இராமநாதனின் மனைவியாரது தகப்பன் நன்னித்தம்பி முதலியார் கொழும்பிலிருந்து பணம் அனுப்பி இருந்தார்கள். அதனைக் கொண்டு பாடசாலைக்கென இரு கடைகள் வாங்கப்பட்டன.

12. சைவப்பாடசாலைகளைத் தொடங்கிய பின். அப்பாடசாலைகளில் கற்பிப்பதற்கு வேண்டிய பாடப்புத்தகங்கள் இருக்கவில்லை. அக்குறையை நிவிர்த்து செய்வதற்காக வகுப்பிற்கும், வயதிற்கும் ஏற்றதன்மையில் எழுதவெளியிடப்பட்டவையே பாலபாடங்களாகும். பயனில்லாத வெறும் வசனங்களை எழுதாது, கல்வியின் நோக்கத்திற்கமைந்த பொருள் பொதிந்த வசனங்களையும், கட்டுரைகளையுமே பாலபாடங்களில் எழுதியுள்ளார். இவற்றைக் கூர்ந்துநோக்குவோர்க்கு இவ்வுண்மை புலப்படும்.

13. கற்பவர் இலகுவில் விளங்கும் வகையில் கடஞ் சந்திகளைப் பிரித்தும், ஏற்ற குறியீடுகளைப் பயன்படுத்தியும் முதன் முதலில் தமிழ் நூல்களை வெளியிட்டவர் நாவலரேயாம்.

14. நாவலர் பாலபாடங்கள் பற்றி சென்னையிலிருந்து 1872 இல் வெளியாகிய “நேற்றிவ் பப்ளிக் ஒபினியண்” (Native Public Opinion) என்ற ஆங்கிலப் பத்திரிகையில் கூறப்பான நீண்ட மதிப்புரை ஒன்று எழுதப்பட்டிருந்தது:

15. பலரது பல ஆண்டு ஆலோசனைகள் அறிக்கைகள் போன்ற ஆரவாரங்களுக்கு ஊடாக 1945 இல் இலங்கையில் இலவசக் கல்வித்திட்டம் அரசாங்கத்தினால் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது ஆயின், எவரதும் ஆலோசனையோ, அறிக்கையோ ஒன்றுமேயின்றித் தன்னந்தனியாகச் சிந்தித்து “வேதனம் பெறாது கற்பிப்பதே சிறந்த மூறை” என்ற திட்டத்தை நூறு ஆண்டுகளுக்கு முன்னரே செயற்படுத்திச் சாதனையில் காட்டிய தீரர் நாவலர்;.

16. பல நாட்டிலுள்ள கல்விமான்களதும், மனோதத்துவ நிபுணர்களதும் பலகால ஆராய்ச்சி அநுபவமுடிபு “தாய்மொழிக்கல்வியே மாணவர் அறிவு வளர்ச்சிக்குச் சிறந்தது” என்பதாம். இவ்வடிப்படையில் இந்நாட்டில் தாய்மொழிக் கல்வி மொழிமாற்றம் 1946 இல் செயல் படத்தொடங்கியது. இது படிப்படியாக வளர்ந்து 1957 இல் சிரேஷ்ட தரரதரப் பத்திர வகுப்புத் தேர்வும், தாய்மொழியில் நடக்கவும், 1963இல் பல்கலைக்கழக இளங்கலை மாணித் (B.A) தோர்வு தாய்மொழி மூலம் நடக்கவும் வழிபிறந்தது. ஆயின், எவரதும் ஆலோசனையோ ஆராய்ச்சியோ ஒன்றுமேயின்றி, ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன் நாவலரே இத்திட்டத்தைச் செயற்படுத்திவிட்டார். நாவலர் காலத்தில் இங்கிருந்த பெரும்பாலான. பாடசாலைகள் ஆங்கிலத்தையே போதனாமொழியாகக் கொண்டிருந்தன. ஏன் நாவலர் படித்ததுகூட, ஆங்கிலப்பாடசாலையேயாம். அப்படியிருந்தும். பொதுநோக்கில் எல்லோரும் விளக்கமான கல்வி அறிவுபெறவேண்டும் என்றபான்மையில், எல்லாப்பாடங்களையுந் தமிழில் கற்பிக்குந் தமிழ்ப்பாடசாலையையே நாவலர் முதன் முதல் தாபித்தார். தமிழில் கற்பிக்கப்படவேண்டும் என்ற கொள்கைப்படி அக்காலத்தில் அவர் கல்வித்திட்டத்தில் இடம்பெற்ற பாடங்களாவன பூகோளம், வைத்துயம், சோதிடம், வேளாண்மை வாணிகம், அரசநீதி, சிற்பம் போன்றவைகளாகும். தாய்மொழியிற் கற்பிப்பதே சிறந்ததெனக்கருதிய நாவலர், தாய்மொழியிலே ஒவ்வொரு பாடத்திற்கும் தரமான நூல் எழுதப்படவேண்டும் என்பதனையும் உணர்ந்திருந்தார். அந்நோக்கில் அவர் எழுதிய நூல்தான் இலங்கைப் பூமிசாத்திரம்.

17. நாவலர் தன்னாற் தாபிக்கப்பட்ட பாடசாலையிலும், தன் வேண்டுகோட்படி பிறரால். தாபிக்கப்பட்ட பாடசாலைகளிலும் தக்கோரைக்கொண்டு தவணைக்குத் தவணை தேர்வுகள் நடத்துவித்து வந்தார்;.

18. நமது நாட்டுக் கல்விக்கொள்கை கடந்த காலங்களில் எங்கெங்கோவெல்லாஞ் சுற்றிச்சுழன்று வலம் வந்துகொண்டிருந்தது. ஈற்றில் சமயத்தினடியில் சரணடைந்தது. நல்லொழுக்கத்திற்கும், ஆன்ம ஈடேற்றத்துற்கும் வழிவகுப்பதே கல்வியின் முக்கிய அடிப்படை நோக்கமாக இருக்கவேண்டும் என்பதனை உணரத் தலைப்பட்டது. இதனையொட்டியே 1965ஆம் ஆண்டு தொடக்கம் க. பொ, த. சாதாரண தேர்வுக்குச் சமயத்தை ஒரு கட்டாய பாடமாகியுள்ளனர், பல ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கு இவர்கள் கண்டுபிடித்த உண்மையை, நாவலர் நூறாண்டுகளுக்கு முன்னரே கண்டிருந்தார். சமயக்கல்வியை மையமாக வைத்தே நாவலர் தனது கல்விக் கொள்கைகளை அமைத்து விருத்திசெய்ய முயன்றுவந்தார். கல்வி தொடர்பாக அவர் எழுதிய எழுத்துக்களிலும், ஏனைய செயல்களிலும் சமயக்கல்வியின் பிரதிபலிப்புக்கள் மேலோங்கியிருப்பதைக் காணலாம்.

ஏட்டுக்கு ஏடு மாறுபட்டிருக்குஞ் சொற்களை “பாடபேதம்” என அடியிலே குறிப்பிட்டு நூல்களை அச்சிட்டு வருவதே பதிப்பாசிரியர்கள் வழக்கம்;. பாடபேதச் சொற்களைப் பழைய ஏட்டுச் சுவடிகளுடன் மீண்டும் மீண்டும் ஒப்புநோக்கி ஆராய்ந்து, பொருத்தமான சொல்லை எடுத்து அச்ட்டுக்கொண்டு, ஏனையவற்றை நீக்கிப் பாடபேதமில்லாது நூல்களைப் பதிப்பிப்பதே நல்லமுறை என அண்மைக்கால அறிஞர். செய்துகொண்ட முடிபு. அம்முடிபுக்குத் தகப் பல அறிஞர்கள் ஒருங்கிருந்து ஆராய்ந்து பல நூல்களைப் பாடபேதமில்லாத முறையில் பதிப்பித்து வருகின்றனர். இன்று இவர்கள் கண்ட இச்சிறப்பு முறையை நாவலர் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே அறிந்து தானே தன்பாட்டில் பாடபேதச் சொற்களை ஆராய்ந்து, பொருத்தமான சொல்லை எடுத்துக்கொண்டு ஏனையவற்றை நீக்கப் பாடபேதமில்லாது நூல்களைப் பதிப்பித்திருக்கின்றார். இவரது திருக்குறள்பதிப்பே (கி. பி. 1861) இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

இவ்வாறு கல்வி தொடர்பான பலதுறைகளிலும் தீர்க்கதரிசனத்தோடு, சைவத் தமிழுலகிற்கு ஒரு முன்னோடியாக விளங்கிய ஞானச் சுடர்க்கொழுந்தாகிய நாவலரை யாம் மனித நிலையில் வைத்தெண்ணத் தகுமா? இல்லை. அவர் ஒரு தெய்வப் பிறப்பு,

முத்தமிழ் வித்தகர் அருட்டிரு விபுலாநந்தர் கூறுகின்றார்.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரவர்களுடைய முன்மாகிரியைப் பின்பற்றிச் சைவசமமமும், சைவக் கல்வியும் நிலைபேறடைய. வேண்டுமென்னும் ஒரு நோக்கத்தோடு நைட்டிகப் பிரமசாரிகள் பத்துப்பேர் முன்வருவார்களாயின் இந்நாடு நலமடையும். சைவக் கல்வி வளர்ந்தோங்கும். சைவசமயம் விருத்தியடையும்.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.