சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

மண்டூர் கந்தசாமி கோவில்

மட்டக்களப்பில் முப்பது மைல் நீளமுள்ள வாவி ஒன்றுளது.அது கடலோடு கலக்குமிடம் அமிர்தகழி என்னும் புண்ணிய பழம்பதிக்கு அண்மையிலுள்ளது. இதன் தென்கோடிக்கு அண்மையாக மேற்குக்கரையில் மண்டூர் என்னும் பழம்பதி ஒன்றுண்டு. அங்கு கோயில் கொண்டிருக்கும் பெருமான் முருகன் ஆவார். இக்கோயில் இப்பகுதியில் பிரசித்தமான ஒன்றாகும். மட்டக்களப்பிலுள்ள திருப்படைக் கோயில்களுள் மண்டூரும் ஒன்றாகும்.

கதிர்காமம் முருகப்பெருமானது படைவீடுகளில் ஒன்று என்று நம்பப்படுவது. முருகனது ஆணைப்படி சூரனைக் கொன்று கோபாவேசத்துடன் திரும்பிய வெற்றிவேலானது வரும் வழியில் எதிர்ப்பட்ட வாகூரமலையை இரு கூறாகப் பிளந்தெறிந்து கடலில் மூழ்கியதாகவும், மூழ்கிய இடத்தில் மூன்று கதிர்கள் சிந்தியதாகவும் வேலுருக் கொண்ட அக்கதிர்கள் மூன்றும் ஈழத்தின் கிழக்குக் கரையிலுள்ள மூன்று இடங்களில் தங்கின என்றும், அவற்றுள் தன்று மண்டூர்த் தில்லைமரம் ஒன்றில் தங்கியதாகவும், இதனைக் கண்டாச் சரியமடைந்த அவ்விடத்தில் வாழ்ந்த அக்கால வேடர் கொத்துப்பந்தர் அமைத்து அதனை வழிபட்டு வத்த இடமே இன்றைய மண்டூர் கந்தசுவாமி கோவில் எனவும் கர்ணபரம்பரையான கதை ஒன்று நிலவி வருகின்றது. இது தில்லைமண்டூர் எனவும், சின்னக்கதீர்காமம் எனவும் போற்றப்படுவது.

மண்டூர்க் கோயில் அமைப்பும், பூசை முறைகளும் கதிர்காமத்தைப் பின்பற்றியனவேயாகும். இங்கும், கதிர்காமம் போல் வாய்கட்டி மௌன பூசையே நடைபெறுகின்றது. பரம்பரையாக நடைமுறையில் வந்த தனிப்பட்ட சில வழக்க முறைகளிலே பூசைகள் நடைபெறுகின்றன. பூசை செய்பவர் “கப்புகனார்” என்ற பெயரால் அழைக்கப்படுவார்.

கப்புகக் குடியில் பிறந்து, சந்ததி சந்ததியாக உரிமை பெற்றவர்கள் மாத்திரம் கப்புகனாராக வர முடியும். தகுதி பெற்று வருபவர்க்குப் பெரிய கப்புகனார் “படிகடத்தல்” என்னும் கிரியையைச் செய்து வைப்பார். படிகடந்தவர் கப்புசனாராவர். “படிகடத்தல்” என்பது மூலத்தானத்து வாயிற்படியைக் கடந்து உள்ளே புகும் உரிமையைப் பெறுதலாகும். இது ஆகம முறையில் பூசை செய்யும் அர்ச்சகர் ஒருவர் பெறும் ஆசாரிய அபிஷேகத்தற்குச் சமமாகும்.

இக்கோயில் மூலத்தானத்தில் இருப்பதென்ன என்பது பரமரகசியம். கதிர்காமமும் இத்தகையதே. பூசை செய்யும் கப்புகனார் மாத்திரம் இதனை அறிவார். கோயில் வண்ணக்கர்களுக்கும் (நிர்வாகிகளுக்கும்) இது தெரியமாட்டாது. திரை திறந்து பூசை செய்யும் வழக்கமும் இங்கு இல்லை. கப்புகனார் அமுதுக்காவைத் (நிவேதனப் பொருட்கள்) தூக்கிக்கொண்டு அமைதியாக நடந்து செல்லுங்காட்சி பார்ப்போர்க்குப் பரவசமூட்டுவதாக இருக்கும். பூசை முடிந்த பின்னர் கப்புகனார் வெளியே வந்து திரை முன்பு நின்று பூசையை ஏற்றருளுமாறு சங்கு முழங்க, மணியோசை ஒலிக்கக் கையெடுத்துக் கும்பிட்டு வேண்டுதல் செய்யுங் காட்சி கல் மனதையும் உருக்கி மெய்மறக்கச் செய்துவிடும்.

இவ்வாலய உற்சவம் (கொடியேற்றத் திருவிழா) ஆடிமாதப் பூரணை கழிந்த பத்தாவது நாள் தொடங்கும். தொடர்ந்து இருபது நாட்கள் திருவிழாக்கள் நடைபெற்று, இருபத்தோராம் நாளான ஆவணி மாதப் பூரணையன்று தீர்த்தோற்சவம் நடைபெறும். திருவிழாக் காலத்தில் வேடர் குடியில் உள்ளோருள் ஒருவர், வாய்க்குச் – சீலை கட்டி, வில்லம்பு கைக்கொண்டு, புஷ்பக விமானத்தின் முன்னே புறமுதுகு காட்டாமல் – வைத்தகண் வாங்காமல், அடிமேல் அடி வைத்துச் சுவாமியைக் காவல் செய்யும் பாவனையில் வீதிவலமாக நடந்துவரும் காட்சி இன்றும் நடைமுறையில் இருந்து வருகின்றது. வேடர்க்கும் இவ்வாலயத்திற்குமுள்ள அநாதியான தொடர்பை இந்நிகழ்ச்சி காட்டிவருகின்றது. திருவிழாக்காலத்தில் ஆராத்திப் பெண்கள் மயங்கி விழுவதும், கப்புகனார் தீர்த்தந் தெளித்துத் திருநீறிட்டு மயக்கந் தெளியச் செய்வதும் இங்கு இன்றும் நடைபெறும் அற்புதக் காட்சியாகும். இன்னும் தீர்த்தமாடும் வேளையில் கப்புகனார் அறிவிழப்பதும், அவரைக் கைப்பந்தமாகக் கொண்டுவந்து சபா மண்டபத்துள் வைத்து மயக்கந்தெளிவிப்பதும் இங்கு நிகழும் அதிசய நிகழ்ச்சியேயாம்.

தீர்த்தவிழா முடிந்ததும் குடுக்கை கூறுதல், மாலை கூறுதல் என்ற குலவிருது நிகழ்ச்சிகள் இவ்வாலயத்தில் நடைபெறும், “குடுக்கை”, என்பது அமுத முட்டியைக் குறிக்குஞ் சொல் விழாவின்போது, கோயிற்றிருப் பணிகளில் ஈடுபட்டோர்க்கும், விழாப் பொறுப்பாளர்களாய் இருந்தோர்க்கும் ஆண்டவனால் அருளப்பெறும் அருட்பிரசாதத்தைக் கொண்ட முட்டியே குடக்கையாம்.

மண்டூர், குருமண்வெளி, துறைநீலாவணை ஆகிய ஊர்களைச் சேர்ந்த சீர்பாதக்காரரே இவ்வாலயத்தோடு தொடர்புபட்டவர்களாக ஆரம்பத்தில் இருந்து வந்தனர், காலக் கிரமத்தில் கேக்ராகளம்புப் பெரிய கவுத்தன் குடியோரை வண்ணக்கர்களாகக் (நிர்வாகத் தலைவர்களாக) கொண்டு நடைபெற்றுவந்தது. பின்னாளில் கோட்டைக்கல்லாறு, பெரிய கல்லாறு ஆகிய கிராமங்களுஞ் சேர்ந்து கொள்ளவே ஆலய நிர்வாகம் இவ்வைந்து கிராமங்களுக்கும் பரவலாக்கப்பட்டது. அரசாங்க அங்கோரத்துடன் இவ்வைந்து கிராமத்தவருமே இன்று இதனை நடத்தி வருன்றனர்.

தில்லை மண்டூர்க் கோயிற் குடிசையில் பழைய நாட்களில் பல அற்புதங்கள் நடந்ததாகக் கூறுவர், அவற்றுள் ஆங்கிலேயர்கால ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் ஒன்று, “கண்டியை நோக்கித் தனது. படையுடன் குறுக்கு வழியாற் செல்லுதற்கு வந்த ஆங்கிலத்தளபதி ஜோன்ஸ்டன் என்பவன், கோயில் வேலியை அழித்து விட்டுப் படையுடன் செல்ல முயன்றபோது, ஆயிரக் கணக்கான குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகித் தங்கள் ஆயுதங்களையுங் கைவிட்டுத் திசைகெட்டுத் திரும்பி ஓடியதாகும்”. இதற்கு ஆதாரமாக இவர்கள் கைநழுவவிட்டுச் சென்ற ஒரு வாளும், துப்பாக்கியும் கோயிற் பண்டசாலையில் இருப்பதைக் காணலாம். இந்த அற்புதம் நடந்த பின்னர் தான் ஆலயத் திருப்பணி வேலைகள் சிறப்பாக நடைபெற்று இப்போது இருக்கும் கட்டட அமைப்புக்கு உயர்ந்ததாகக் கூறப்படுகின்றது.

இவ்வாறு பற்பல அற்புதங்களை நிகழ்த்தி அடியவர் துயர் தீர்த்தருளும் மண்டூர் மூருகன்மீது பல பெரியோர் பாடல்கள் பாடியுள்ளனர், இவற்றுள் புலோலியூர் வித்துவான் வைத்திலிங்கதேசிகர், பண்டிதர் முருகேசபிள்ளை, புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை, விநாசித்தம்பி ஆகியோர் பாடிய மண்டூர்ப் பதிகம், மண்டூர் இரட்டை மணிமாலை, மண்டூர் வடிவேலவர் குறம், மண்டூர் முருகன் காவடிப்பாட்டு முதலியன சிலைவாகும்.

குறிப்பு : பண்டை அரசர்களது மானியமும், சீர்வரிசைகளும் பெற்று நித்திய நைமித்தியங்கள் நடைபெற்று வந்த கோவில்கள் திருப்படைக் கோவில்கள் என மட்டக்களப்பில் கூறப்படும். திருக்கோவில் சித்திர வேலாயுதசுவாமி கோவில், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீசுவரன் கோவில், பெரிய போரதீவு சித்திர வேலாயுதசுவாமி கோவில், உகந்தமலைக் கந்தசுவாமி கோவில், மண்டூர் கந்தசுவாவி கோவில், சித்தாண்டி கந்தசுவாமி கோவில் முதலானவை திருப்படைக்கோவில் வரிசையிலுள்ளனவாம்.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.