சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
கச்சைசேர் அரவர் போலுங் கறையணி மிடற்றர் போலும் பிச்சைகொண் டுண்பர் போலும் பேரரு ளாளர் போலும் இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலுந் தம்மை நச்சுவார்க் கினியர் போலும் நாகஈச் சரவ னாரே. 1
வேடுறு வேட ராகி விசயனோ டெய்தார் போலுங் காடுறு பதியர் போலுங் கடிபுனற் கங்கை நங்கை சேடெறி சடையர் போலுந் தீவினை தீர்க்க வல்ல நாடறி புகழர் போலும் நாகஈச் சரவ னாரே. 2
கற்றுணை வில்ல தாகக் கடியரண் செற்றார் போலும் பொற்றுணைப் பாதர் போலும் புலியத ளுடையார் போலுஞ் சொற்றுணை மாலை கொண்டு தொழுதெழு வார்கட் கெல்லாம் நற்றுணை யாவர் போலும் நாகஈச் சரவ னாரே. 3
கொம்பனாள் பாகர் போலுங் கொடியுடை விடையர் போலுஞ் செம்பொனா ருருவர் போலுந் திகழ்திரு நீற்றர் போலும் எம்பிரான் எம்மை யாளும் இறைவனே என்று தம்மை நம்புவார்க் கன்பர் போலும் நாகஈச் சரவ னாரே. 4
கடகரி யுரியர் போலுங் கனல்மழு வாளர் போலும் படவர வரையர் போலும் பாரிடம் பலவுங் கூடிக் குடமுடை முழவம் ஆர்ப்பக் கூளிகள் பாட நாளும் நடநவில் அடிகள் போலும் நாகஈச் சரவ னாரே. 5
பிறையுறு சடையர் போலும் பெண்ணொரு பாகர் போலும் மறையுறு மொழியர் போலும் மால்மறை யவன்ற னோடு முறைமுறை அமரர் கூடி முடிகளால் வணங்க நின்ற நறவமர் கழலர் போலும் நாகஈச் சரவ னாரே. 6
வஞ்சகர்க் கரியர் போலும் மருவினோர்க் கெளியர் போலுங் குஞ்சரத் துரியர் போலுங் கூற்றினைக் குமைப்பர் போலும் விஞ்சையர் இரிய அன்று வேலைவாய் வந்தெ ழுந்த நஞ்சணி மிடற்றர் போலும் நாகஈச் சரவ னாரே. 7
போகமார் மோடி கொங்கை புணர்தரு புனிதர் போலும் வேகமார் விடையர் போலும் வெண்பொடி யாடு மேனிப் பாகமா லுடையர் போலும் பருப்பத வில்லர் போலும் நாகநா ணுடையர் போலும் நாகஈச் சரவ னாரே. 8
கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும் அக்கரை யணிவர் போலும் ஐந்தலை யரவர் போலும் வக்கரை யமர்வர் போலும் மாதரை மையல் செய்யும் நக்கரை யுருவர் போலும் நாகஈச் சரவ னாரே. 9
வின்மையாற் புரங்கள் மூன்றும் வெந்தழல் விரித்தார் போலும் தன்மையால் அமரர் தங்கள் தலைவர்க்குந் தலைவர் போலும் வன்மையான் மலையெ டுத்தான் வலியினைத் தொலைவித் தாங்கே நன்மையால் அளிப்பர் போலும் நாகஈச் சரவ னாரே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமி:சண்பகாரண்ணியேசுவரர்;அம்பாள்:குன்றமுலைநாயகியம்மை.10
திருச்சிற்றம்பலம்
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.