சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

திருக்கோணேஸ்வரம்


   
  • இறைவன்: கோணேசுவரர்.
  • இறைவி: மாதுமை.
  • தல மரம்: கல்லால மரம்.
  • தீர்த்தம் : பாவநாசம்.

திருக்கோணேச்சரம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருக்கோணமலையில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான இத்தலம் ஈழநாட்டின் இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது.

திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரின் பதிகங்களில் இத்தலம் வைப்புத் தலமாக இடம்பெற்றுள்ளது. அருணகிரிநாதர் இத்தலத்தின் மீது திருப்புகழ் பாடியுள்ளார். எனவே இத்தலம் திருப்புகழ்த் தலம் எனும் பெருமை பெற்று விளங்குகின்றது. பட்டினத்தார் பாடல்களிலும் இத்தலம் இடம்பெற்றுள்ளது. சேக்கிழார் அருளிய பெரியபுராணத்தில் இத்தலம் பற்றிய குறிப்புகள் உண்டு.

இராமாயண கால இலங்கை வேந்தன் இராவணன் குல தெய்வமாகவும் இஷ்ட தெய்வமாகவும் இத்தல இறைவன் கோணேஸ்வரரையே வழிபட்டான் என ஆலய தலபுராணம் கூறுகின்றது. இராமர் இத்தலத்து இறைவனை வழிபட்டதாக இங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.

கோணேசர் ஆலயம் உலகிலுள்ள பழைய வழிபாட்டுத் தலங்களுள் மிகவும் பழைமையான ஒன்றென்பதும், திருகோணமலை நாகரிகமும், மொஹஞ்சதாரோ நாகரிகமும் ஏறக்குறைய ஒரே காலத்தன என்பதும் ஆராய்ச்சியாளர் சிலரின் கருத்து.

இலங்கையை இராவணன் ஆண்ட காலத்தில் கோணேசுவரர் இராவணனுடைய இஸ்ட தெய்வமாக இருந்ததாகப் பழைய வரலாறுகள் கூறுகின்றன. இராவணன் வழிபட்ட பழைய கோணேசுவரம் கடல்கோளால் மூழ்கி, கடலுக்கடியில் இருப்பதாக ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துக் கூறியுள்ளனர். தென்னகத்துக்காவிரிப்பூம் பட்டினத்தைக்கடல் கொண்டதுபோல், கோணேசுவரமூம் கடல்கொள்ளப்பட்டிருக்கலாமெனக் கருத இடமுண்டு. இதற்குச் சான்றாக இருக்கறது “ராஜவளி” என்ற புராதன பாளிநூல், இராமாயண காலத்திற்குப் பின்னர் கி. மு. 3544 ஆம் ஆண்டிலும், அதற்குப் பின்னர் விகாரமா தேவியின் தந்தை களனிதீசன் காலத்திலும் இரு பெருங்கடற்கோள்கள் நடந்ததாக இந்நூல் கூறுகின்றது. இவற்றுள் ஒன்றினால் கோணேசுவரமும் கடல்கொள்ளப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இதையடுத்து குளக்கோட்டன் என்னும் சோழ மன்னன் திருக்கோணேசுவரர் ஆலயத்தைத் திரும்பவும் கட்டுவித்துத் திருப்பணிகள் செய்ததாகச் சில சாசனங்கள் கூறுகின்றன. இத்திருக்கோயில் பல மண்டபங்களோடும், பெரு வீதிகளோடும், கூடியதாக அக்காலத்தில் விளங்கியுள்ளது.

இப்படிப் பழம் பெருமை வாய்ந்த இத்திருத்தலம் 1624ஆம் ஆண்டு சித்திரை வருடப்பிறப்பன்று போர்த்துக்கேயத் தளபதியினால் இடித்தழிக்கப்பட்டுக் கோட்டை கட்டப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. அவன் கோவிலை இடித்த பொழுது செய்த நல்ல செயல் ஆலயத்தை இடித்துத் தகர்க்குமுன் அதன் படத்தை வரைந்து வைத்திருந்தமையேயாகும். அப்படங்களுள் ஒன்று போர்த்துக்கலில் உள்ள “லிஸ்பன்” நகரிலுள்ள உலகப் பிரசித்தி பெற்ற “அட்சுடா” நூல்நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டு 1889இல் இலங்கையில் பிரசுரிக்கப்பட்டது. கோணேசர் கோவில் புனர்நிர்மாணம் பெற்று விளங்குவதற்கு முன்னோடியாய் நின்று உழைத்த, டாக்டர் பாலேந்திராவிற்கு உதவியாயிருந்த கருவிகளில் இப்படமும் முக்கியமான ஒன்றாகும், 1953இல் இப் பெரியாரால் வெளியிடப்பட்ட “திருகோணமலை விக்கரகங்கள்” என்ற நூலே திருக்கோணசுவரம் பற்றி முதன் முதலாக எழுந்த இக்கால அமைவுபெற்ற ஆராய்ச்சி நூலாகும்.

அழிந்த கோவிலைப் புனருத்தாரணஞ் செய்வதற்காக 9-7-1950இல் நிறுவப்பட்ட இருப்பணிச் சபை, கிணெறொன்றைத் தோண்டியபொழுது நிலத்துள்ளிருந்து தாமிர மயமான சோமாஸ்கந்தர், பார்வதி, சந்திரசேகரர் முதலான விக்கிரகங்கள் கண்டெடுக்கப்பட்டன,

இத் திருப்பணிச் ‘சபையாரின் நன் முயற்சியால், முற்காலத்தே அமைந்த பொலிவுடைய சுற்றுப்பிரகாரத்தோடமைந்த கோவில் ஒன்று கட்டப்பட்டு, சுபகிருது வருடம் பங்குனி 21 ஆம் நாள் புதன்கிழமை (8-4-63 இல்) குடமுழுக்குச் செய்யப்பட்டது. நித்தியநைமித்திய பூசைகள் இன்று ஒழுங்காக நடைபெற்று வருகின்றன. இன்று நாம் காண்பது மூன்றாவது கோணேசர் ஆலயமாகும்.

இந்த ஆலயத்தில் ஆகம முறைப்படி பூசைகள் இடம்பெறுகின்றன. நித்தியப்படி ஆறுகால பூஜைகள் இடம்பெறுகின்றன. பிரதோசம்,பூரணை,சோமவாரம் போன்ற தினங்களில் விஷேட பூஜைகள் இடம்பெறுகின்றன. மகோற்சவம் பங்குனி உத்தரத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, பதினெட்டு நாட்களுக்கு நடைபெறுகின்றது. பதினாறாம் நாள் திருவேட்டைத்திருவிழா, இறைவன் இறைவியிற்கிடையிலான திருவூடல் , ஊடல் களைவு மற்றும் சப்பறத்திருவிழா என்பன நடைபெறும்.பதினேழாம் நாள் பஞ்ச இரத பவனி நடைபெறும். மறுநாள் பாபநாச தீர்த்தோற்சவம் நடைபெறும். இருபதாம் நாள் மாலை இத்தலத்தில் சமுத்திர தெப்போற்சவம் நடைபெறும். அன்றைய தினம் சுவாமி கடலின் மார்க்கமாக கோண மலையை வலம் வருவார்.

இக் கோவிலில் வழிபாடாற்றி அருள் பெற்றோர். தேவேந்திரன், இராவணனின் தாயார், விசறன், கயபாகு மன்னன் போன்றோராவர். வருடாந்த அலங்கார உற்சவம் பங்குனிப் பூரணையும் உத்தரமும் கூடிய நாளில் தொடங்கி, அடுத்துவரும் திருதியைத் திதியுடன் கூடியபரணி நாளில் தீர்த்தம் நடைபெறும்.

 

 

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.