ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்
வாழ்க்கைக் குறிப்பு
ஆறுமுக நாவலர் பெருமான் இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் சைவ நெறியையும் தமிழ் மொழியையும் வளர்ப்பதற்குப் பெரும் பணிபுரிந்தவர். அவரின் கல்விப் புலமை நாவன்மை சைவத் தமிழ்ப் பணி என்பவற்றிற்காகத் திருவாவடுதுறை ஆதினத்தால் நாவலர் என்ற பட்டம் சூட்டிக் கெளரவிக்கப்பட்டார். அவ்வாறே சைவம் காத்த அவர் சைவ மக்களால் ஐந்தாம் குரவர் எனவும் போற்றப்படுகின்றார்.
தோற்றம்
ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18 இல் புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் கந்தப்பிள்ளை – சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகனாகப் பிறந்தார். நாவலரின் இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை என்பதாகும்.
கல்வி
சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் திண்ணைப்பள்ளிக்கூடத்தில் மூதுரை முதலிய நீதிநூல்களையும், நிகண்டு முதலிய நூல்களையும் பயின்றார். சரவணமுத்து புலவர் மற்றும் சேனாதிராச முதலியாரிடம் உயர்கல்வி பயின்றார். தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் புலமை பெற்றார். வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷன் கல்லூரியில் ஆங்கில மொழியைக் கற்றார்.
நாவலர் பெருமான் சைவம், தமிழ் ஆகிய இரண்டின் வளர்ச்சிக்காகவும் தம் வாழ்வை அர்ப்பணம் செய்தவர். அவர் சிவபக்தி உடையவர்; சிவனடியார் மீது பக்தி கொண்டவர்; தமிழ்ப் புலமை மிக்கவர்; சிறந்த கல்விமான்; பிரசங்கத்தில் வல்லவர்; வாக்குச் சாமர்த்தியம் உள்ளவர்; நல்லொழுக்கம் உடையவர். அப்பண்புகள் அவரிடம் இளமைக்காலந் தொட்டுக் காணப்பட்டன. அவை, அவர் சமயப் பணியைத் திறம்படச் செய்ய உதவியாக அமைந்தன.
நாவலர் சைவ சமயத்தை வளர்க்க, பல வழிமுறைகளைக் கையாண்டார். அவற்றில் முதல்வழி சைவப் பிரசங்கமாகும். அவரது பிரசங்கத்தின் பொருளாக சிவசின்னங்கள், திருமுறைகள் முதலானவை அமைந்திருந்தன. அதன் மூலம் மக்களிடையே சமய விழிப்புணர்ச்சியை ஊட்டினார்; புறச்சமயம் போகாமல் மக்களைச் சைவத்தில் நிலைத்திருக்கச் செய்தார். சைவ மக்கள் திருநீறு முதலிய சிவசின்னங்களை அணியவும் சைவத் திருமுறைகளைப் பாடவும் விரதங்களை அனுட்டிக்கவும் ஆலய தரிசனம் செய்யவும் சமய மரபுகளைப் பேணவும் அவர் தூண்டுகோலாக விளங்கினார்.
தமிழகத்திலும் இலங்கையிலும் சைவசமயத்தையும் தமிழையும் வளர்த்த ஆறுமுக நாவலர் எல்லோராலும் நன்கு போற்றப்பட்டார். அவர், சிதம்பரத்திலும், யாழ்ப்பாணத்தில் பல இடங்களிலும் சைவத் தமிழ்ப் பாடசாலைகளை நிறுவினார். அச்சு இயந்திரசாலைகள் அமைத்து, பல நூல்களைத் தமிழில் வெளியிட்டார். பழைய நூல்களைப் புதுப்பித்தும், புதிய நூல்களை எழுதியும் சைவத்திற்கும் தமிழுக்கும் பல தொண்டுகள் செய்தார். அவர் கந்தபுராண வசனம், பெரியபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம் முதலான வசன நூல்களை எழுதினார். அவை எளிமை மிக்கவை. அதனால், வசனநடைக்கு ஆறுமுகநாவலரே தந்தை என்பர்.

நாவலர் சைவத்தின் உயர்வுக்காக ஆற்றிய பணிகளை வரிசைப்படுத்தின் அவை கீழ்க்கண்டவாறு அமைவனவாகும்- :
- ஐரோப்பியர் வருகையால் நிலை குன்றியிருந்த சைவசமயத்தை மீண்டும் அதன் நிலைக்குக் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் நாவலருக்கு இளமை முதல் இருந்து வந்தது. பதின்மூன்றாவது வயதிலே இதனை நினைத்து மனம் வருந்தி, சிவபெருமானை வேண்டி வெண்பா பாடினார்.
- சைவத்தை வாழவைக்கவேண்டும் என்ற பேராசையினாலே. தனது சுகபோகங்களை எல்லாம் துறந்து வாழ்நாள் முழுவதும் பிரமசாரியாகவே வாழ்ந்தார். இவைகளெல்லாவற்றிற்கும் காரணம் “சைவசமயத்தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய கல்வியையும் வளர்க்கவேண்டும் என்னும் பேராசையேயாம்” என 1868இல் “சைவசமயிகளுக்கு விக்கியாபனம்” என்னும் இவரது வெளியீட்டில் கூறியிருப்பதன் மூலந் தெரிந்து கொள்ளலாம்.
- சைவமுறையிற் கல்வியூட்டவேண்டுமென்று நினைத்துப் பால பாடங்களை எழுதினார். பாதிரிமார் முதலாம் வேதவினாவிடை இரண்டாம் வேதவினாவிடை என்னும் புத்தகங்களை எழுதி அச்சிட்டுப் பரப்பியதுபோல் முதலாம் இரண்டாம் சைவ வினா விடைகளை எழுதப் பரப்பி சைவ சமய அறிவையூட்டினார்.
- பாதிரிமார்கள் அச்சியந்திரசாலையைத் தாபித்துத் துண்டுப் பிரசுரங்களையுஞ் சைவ கண்டனமான பிரதிகளையும் அச்சிட்டு வெளிப்படுத்தித் தம் சமயத்திற்கு மக்களை இழுப்பதைக் கண்டு தானும் சென்னையிலும் யாழ்ப்பாணத்திலும் அச்சுக்கூடங்களை நிறுவிப் பழைய சமய நூல்களை ஆதாரமாகக் கொண்டு தாம் எழுதிய வசன நூல்களையும் கிறித்துமத கண்டனப் புத்தகங்களையும் அச்சிட்டுப் பரப்பினார். மேலும். இதில் பல பழந்தமிழ்ப் பெரு நூல்களையும் பிழையறப் பரிசோதித்துப் பதிப்பித்தும் எழுதியும் வெளியிட்டார்.
நாவலர் கல்விப் பணிகள்
- நாவலர் மெதடிஸ்த்த பாடசாலையில் (இன்றைய யாழ். மத்திய கல்லூரியில்) பயின்ற காலத்தில் கீழ்வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலமும் மேல்வகுப்பு மாணவர்களுக்குத் தமிழும் கற்பித்து வந்தார். பாடசாலை ஆசிரியர் வேதனச் செலவுகளைச் சுருக்குவதற்கு இம்முறை பெரிதும் பயன்பட்டமையால் பின்னாளில் பல பாடசாலை அதிபர்கள் இம்முறையினைப் பின்பற்றுவாராயினர்.
- காலையிலும் மாலையிலும் மாணவர்களுக்கு இலவசமாகக் கல்வி கற்பிப்பதுடன் முதியோர் கல்வியிலும் கவனம் செலுத்தியுள்ளார். 31-12-1847 தொடக்கம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும். வண்ணார் பண்ணை சிவன்கோயிலிலும், ஏனைய இடங்களிலும் செய்துவந்த பிரசங்கம், சமய அறிவை ஊட்டிவந்ததுடன் முதியோர் அறிவையும் பெருக்கியுள்ளதென்றே கூறலாம்.
- தமிழில் பட்டத்தேர்வுகள் வைத்துப் பட்டங்கள் வழங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து வைத்தார். யாழ்ப்பாணத்தில் பின்னாளில் உருவாகிய தமிழ்ச்சங்கத்திற்கு மூலமாக விருந்தவை நாவலர் அவர்களால் செய்து வைக்கப்பட்ட இவ்வேற்பாடுகளேயாம்.
- பெண்கள் கற்றலின் அவசியம்பற்றி 8ஆம் பாலபாடத்தில் விளக்கமாகவும் விரிவாகவும் கூறியுள்ளார்.
- மக்களால் தேடப்படும் கல்விப்பொருள். செல்வப்பொருள் என்னும் இரண்டினுள். செல்வப்பொருளைச் சம்பாதித்தற்கும், காப்பாற்றுதற்கும். அதனாலடைய வேண்டிய சுகங்களை உள்ளபடி அறிந்து அனுபவிப்பதற்கும். கடவுளையும் அவரை வழிபடும் நெறியையும் அறிந்து வழிபட்டு முத்தியின்பம் பெறுவதற்கும் காரணமாய்ச் சிறந்து முன்னிற்பது கல்வியே. ஆதலால், அதனைப் பயிலுதற்குத்தானமாகய (இடமாகிய) வித்தியாசாலைகளைத் தாபிக்க வேண்டும். அவைகளுக்கு உதவிசெய்ய வேண்டும். முதற் பொருள் வைத்து அவைகளை ஒழுங்குபெற நடத்த வேண்டும். இப்படியாகக் கட்டப்படும் கல்விக்கூடங்களில் கருவிநூல். சமயநூல்களேயன்றிக் கைத்தொழில்களையும் கற்பிப்பது விசேடம் எனக் கூறியிருக்கின்றார்.
சைவத்தையும் தமிழையும் நன்கு பாதுகாத்த நாவலர், 1879 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 21 ஆந் திகதி இறையடி சேர்ந்தார். அவரது குருபூசைத் தினம் கார்த்திகை மாதம் மக நட்சத்திரமாகும். நாவலரது பணிகளைப் பணிகளைப் பெரியோர் பின்வருமாறு போற்றுவர்.
நல்லைநக ராறுமுக நாவலர்பிறந்திலரேற்
சொல்லுதமி ழெங்கே சுருதியெங்கே – எல்லவரும்
ஏத்துபுரா ணாகமங்க ளெங்கேபிர சங்கமெங்கே
ஆத்தனறி வெங்கே யறை.
-சி.வை.தாமோதரம்பிள்ளை