சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

ஆறாம் திருமுறை – இரண்டாம் பகுதி

திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள்

திருவீழிமிழலை – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

509கயிலாய மலையுள்ளார் காரோ ணத்தார் கந்தமா தனத்துளார் காளத் தியார்
மயிலாடு துறையுளார் மாகா ளத்தார்வக்கரையார் சக்கரமாற் கீந்தார் வாய்ந்த
அயில்வாய சூலமுங் காபா லமும்அமருந் திருக்கரத்தார் ஆனே றேறி
வெயிலாய சோதி விளங்கு நீற்றார்வீழி மிழலையே மேவி னாரே.
6.51.1
510பூதியணி பொன்னிறத்தர் பூண நூலர்பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர்
கேதிசர மேவினார் கேதா ரத்தார்கெடில வடவதிகை வீரட் டத்தார்
மாதுயரந் தீர்த்தென்னை உய்யக் கொண்டார்மழபாடி மேய மழுவா ளனார்
வேதி குடியுளார் மீயச் சூரார்வீழி மிழலையே மேவி னாரே.
6.51.2
511அண்ணா மலையமர்ந்தார் ஆரூ ருள்ளார்அளப்பூரார் அந்தணர்கள் மாடக் கோயில்
உண்ணாழி கையார் உமையா ளோடும்இமையோர் பெருமானார் ஒற்றி யூரார்
பெண்ணா கடத்துப் பெருந்தூங் கானைமாடத்தார் கூடத்தார் பேரா வூரார்
விண்ணோர்க ளெல்லாம் விரும்பி யேத்த வீழி மிழலையே மேவி னாரே.
6.51.3
512வெண்காட்டார் செங்காட்டங் குடியார் வெண்ணி நன்னகரார் வேட்களத்தார் வேத நாவார்
பண்காட்டும் வண்டார் பழனத் துள்ளார்பராய்த்துறையார் சிராப்பள்ளி யுள்ளார் பண்டோ ர்
வெண்கோட்டுக் கருங்களிற்றைப் பிளிறப் பற்றி உரித்துரிவை போர்த்த விடலை வேடம்
விண்காட்டும் பிறைநுதலி யஞ்சக் காட்டிவீழி மிழலையே மேவி னாரே.
6.51.4
513புடைசூழ்ந்த பூதங்கள் வேதம் பாடப் புலியூர்ச்சிற் றம்பலத்தே நடமா டுவார்
உடைசூழ்ந்த புலித்தோலர் கலிக்கச் சிமேற் றளியுளார் குளிர்சோலை யேகம் பத்தார்
கடைசூழ்ந்து பலிதேருங் கங்கா ளனார்கழுமலத்தார் செழுமலர்த்தார்க் குழலி யோடும்
விடைசூழ்ந்த வெல்கொடியர் மல்கு செல்வ வீழி மிழலையே மேவி னாரே.
6.51.5
514பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பா ழியார்பெரும்பற்றப் புலியூர்மூ லட்டா னத்தார்
இரும்புதலார் இரும்பூளை யுள்ளா ரேரார் இன்னம்ப ரார்ஈங்கோய் மலையார் இன்சொற்
கரும்பனையாள் உமையோடுங் கருகா வூரார்கருப்பறிய லூரார் கரவீ ரத்தார்
விரும்பமரர் இரவுபகல் பரவி யேத்த வீழி மிழலையே மேவி னாரே.
6.51.6
515மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார்வாழ்கொளி புத்தூரார் மாகா ளத்தார்
கறைக்காட்டுங் கண்டனார் காபா லியார்கற்குடியார் விற்குடியார் கானப் பேரார்
பறைக்காட்டுங் குழிவிழிகட் பல்பேய் சூழப் பழையனூர் ஆலங்காட் டடிகள் பண்டோ ர்
மிறைக்காட்டுங் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார்வீழி மிழலையே மேவி னாரே.
6.51.7
516அஞ்சைக் களத்துள்ளார் ஐயாற் றுள்ளார்ஆரூரார் பேரூரார் அழுந்தூ ருள்ளார்
தஞ்சைத் தளிக்குளத்தார் தக்க ளூரார்சாந்தை அயவந்தி தங்கி னார்தாம்
நஞ்சைத் தமக்கமுதா உண்ட நம்பர்நாகேச் சரத்துள்ளார் நாரை யூரார்
வெஞ்சொற் சமண்சிறையி லென்னை மீட்டார்வீழி மிழலையே மேவி னாரே.
6.51.8
517கொண்டலுள்ளார் கொண்டீச் சரத்தி னுள்ளார்கோவலூர் வீரட்டங் கோயில் கொண்டார்
தண்டலையார் தலையாலங் காட்டி னுள்ளார்தலைச்சங்கைப் பெருங்கோயில் தங்கி னார்தாம்
வண்டலொடு மணற்கொணரும் பொன்னி நன்னீர் வலஞ்சுழியார் வைகலின்மேன் மாடத் துள்ளார்
வெண்டலைமான் கைக்கொண்ட விகிர்த வேடர்வீழி மிழலையே மேவி னாரே.
6.51.9
518அரிச்சந் திரத்துள்ளார் அம்ப ருள்ளார்அரிபிரமர் இந்திரர்க்கு மரிய ரானார்
புரிச்சந் திரத்துள்ளார் போகத் துள்ளார்பொருப்பரையன் மகளோடு விருப்ப ராகி
எரிச்சந்தி வேட்கு மிடத்தா ரேமக்கூடத்தார் பாடத்தே னிசையார் கீதர்
விரிச்சங்கை யெரிக்கொண்டங் காடும் வேடர்வீழி மிழலையே மேவி னாரே.
6.51.10
519புன்கூரார் புறம்பயத்தார் புத்தூ ருள்ளார்பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க
தன்கூர்மை கருதிவரை யெடுக்க லுற்றான் தலைகளொடு மலைகளன தாளுந் தோளும்
பொன்கூருங் கழலடியோர் விரலா லூன்றிப்பொருப்பதன்கீழ் நெரித்தருள்செய் புவன நாதர்
மின்கூருஞ் சடைமுடியார் விடையின் பாகர்வீழி மிழலையே மேவி னாரே.
6.51.11

திருவீழிமிழலை – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

520கண்ணவன்காண் கண்ணொளிசேர் காட்சி யான்காண்கந்திருவம் பாட்டிசையிற் காட்டு கின்ற
பண்ணவன்காண் பண்ணவற்றின் றிறலா னான்காண்பழமாகிச் சுவையாகிப் பயக்கின் றான்காண்
மண்ணவன்காண் தீயவன்காண் நீரா னான்காண்வந்தலைக்கும் மாருதன்காண் மழைமே கஞ்சேர்
விண்ணவன்காண் விண்ணவர்க்கு மேலா னான்காண்விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
6.52.1
521ஆலைப் படுகரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத் தான்காண்
சீல முடையடியார் சிந்தை யான்காண்திரிபுரமூன் றெரிபடுத்த சிலையி னான்காண்
பாலினொடு தயிர்நறுநெய் யாடி னான்காண்பண்டரங்க வேடன்காண் பலிதேர் வான்காண்
வேலை விடமுண்ட மிடற்றி னான்காண்விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
6.52.2
522தண்மையொடு வெம்மைதா னாயி னான்காண்சக்கரம் புட்பாகற் கருள்செய் தான்காண்
கண்ணுமொரு மூன்றுடைய காபா லிகாண்காமனுடல் வேவித்த கண்ணி னான்காண்
எண்ணில்சமண் தீர்த்தென்னை யாட்கொண் டான்காண்இருவர்க் கெரியா யருளி னான்காண்
விண்ணவர்கள் போற்ற இருக்கின் றான்காண்விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
6.52.3
523காதிசைந்த சங்கக் குழையி னான்காண்கனக மலையனைய காட்சி யான்காண்
மாதிசைந்த மாதவமுஞ் சோதித் தான்காண்வல்லேன வெள்ளெயிற்றா பரணத் தான்காண்
ஆதியன்காண் அண்டத்துக் கப்பா லான்காண்ஐந்தலைமா நாகம்நா ணாக்கி னான்காண்
வேதியன்காண் வேதவிதி காட்டி னான்காண்விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
6.52.4
524நெய்யினொடு பாலிளநீ ராடி னான்காண்நித்தமண வாளனென நிற்கின் றான்காண்
கையின்மழு வாளொடுமான் ஏந்தி னான்காண்காலனுயிர் காலாற் கழிவித் தான்காண்
செய்யதிரு மேனிவெண் ணீற்றி னான்காண்செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னான்காண்
வெய்ய கனல்விளையாட் டாடி னான்காண்விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
6.52.5
525கண்டுஞ்சுங் கருநெடுமால் ஆழி வேண்டிக்கண்ணிடந்து சூட்டக்கண் டருளு வான்காண்
வண்டுண்ணும் மதுக்கொன்றை வன்னி மத்தம்வான்கங்கைச் சடைக்கரந்த மாதே வன்காண்
பண்டங்கு மொழிமடவாள் பாகத் தான்காண்பரமன்காண் பரமேட்டி யாயி னான்காண்
வெண்டிங்கள் அரவொடுசெஞ் சடைவைத் தான்காண்விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
6.52.6
526கற்பொலிதோள் சலந்தரனைப் பிளந்த ஆழிகருமாலுக் கருள்செய்த கருணை யான்காண்
விற்பொலிதோள் விசயன்வலி தேய்வித் தான்காண்வேடுவனாய்ப் போர்பொருது காட்டி னான்காண்
தற்பரமாந் தற்பரமாய் நிற்கின் றான்காண்சதாசிவன்காண் தன்னொப்பா ரில்லா தான்காண்
வெற்பரையன் பாவை விருப்பு ளான்காண்விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
6.52.7
527மெய்த்தவன்காண் மெய்த்தவத்தில் நிற்பார்க் கெல்லாம்விருப்பிலா இருப்புமன வினையர்க் கென்றும்
பொய்த்தவன்காண் புத்தன் மறவா தோடி எறிசல்லி புதுமலர்க ளாக்கி னான்காண்
உய்த்தவன்காண் உயர்கதிக்கே உள்கி னாரைஉலகனைத்தும் ஒளித்தளித்திட் டுய்யச் செய்யும்
வித்தகன்காண் வித்தகர்தாம் விரும்பி யேத்தும் விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
6.52.8
528சந்திரனைத் திருவடியாற் தளர்வித் தான்காண்தக்கனையும் முனிந்தெச்சன் தலைகொண் டான்காண்
இந்திரனைத் தோள்முறிவித் தருள்செய் தான்காண்ஈசன்காண் நேசன்காண் நினைவோர்க் கெல்லாம்
மந்திரமும் மறைப்பொருளு மாயி னான்காண்மாலொடயன் மேலொடுகீழ் அறியா வண்ணம்
வெந்தழலின் விரிசுடரா யோங்கி னான்காண்விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
6.52.9
529ஈங்கைப்பேர் ஈமவனத் திருக்கின் றான்காண்எம்மான்காண் கைம்மாவி னுரிபோர்த் தான்காண்
ஓங்குமலைக் கரையன்றன் பாவை யோடும் ஓருருவாய் நின்றான்காண் ஓங்கா ரன்காண்
கோங்குமலர்க் கொன்றையந்தார்க் கண்ணி யான்காண்கொல்லேறு வெல்கொடிமேற் கூட்டி னான்காண்
வேங்கைவரிப் புலித்தோல்மே லாடை யான்காண்விண்ணிழிதண்வீழி மிழலை யானே.
6.52.10

திருவீழிமிழலை – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

530மானேறு கரமுடைய வரதர் போலும்மால்வரைகால் வளைவில்லா வளைத்தார் போலும்
கானேறு கரிகதற வுரித்தார் போலுங்கட்டங்கங் கொடிதுடிகைக் கொண்டார் போலுந்
தேனேறு திருஇதழித் தாரார் போலுந்திருவீழி மிழலையமர் செல்வர் போலும்
ஆனேற தேறும் அழகர் போலும்அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
6.53.1
531சமரமிகு சலந்தரன்போர் வேண்டி னானைச் சக்கரத்தாற் பிளப்பித்த சதுரர் போலும்
நமனையொரு கால்குறைத்த நாதர் போலும்நாரணனை இடப்பாகத் தடைத்தார் போலுங்
குமரனையும் மகனாக வுடையார் போலுங்குளிர்வீழி மிழலையமர் குழகர் போலும்
அமரர்கள்பின் அமுதுணநஞ் சுண்டார் போலும்அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
6.53.2
532நீறணிந்த திருமேனி நிமலர் போலும்நேமிநெடு மாற்கருளிச் செய்தார் போலும்
ஏறணிந்த கொடியுடையெம் மிறைவர் போலும்எயில்மூன்று மெரிசரத்தா லெய்தார் போலும்
வேறணிந்த கோலமுடை வேடர் போலும்வியன்வீழி மிழலையுறை விகிர்தர் போலும்
ஆறணிந்த சடாமகுடத் தழகர் போலும்அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
6.53.3
533கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலுங்கயாசுரனை அவனாற்கொல் வித்தார் போலுஞ்
செய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தார் போலுந்திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தார் போலும்
மெய்வேள்வி மூர்த்திதலை யறுத்தார் போலும்வியன்வீழி மிழலையிடங் கொண்டார் போலும்
ஐவேள்வி ஆறங்க மானார் போலும்அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
6.53.4
534துன்னத்தின் கோவணமொன் றுடையார் போலுஞ்சுடர்மூன்றுஞ் சோதியுமாய்த் தூயார் போலும்
பொன்னொத்த திருமேனிப் புனிதர் போலும்பூதகணம் புடைசூழ வருவார் போலும்
மின்னொத்த செஞ்சடைவெண் பிறையார் போலும்வியன்வீழி மிழலைசேர் விமலர் போலும்
அன்னத்தேர் அயன்முடிசேர் அடிகள் போலும்அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
6.53.5
535மாலாலும் அறிவரிய வரதர் போலும்மறவாதார் பிறப்பறுக்க வல்லார் போலும்
நாலாய மறைக்கிறைவ ரானார் போலும்நாமவெழுத் தஞ்சாய நம்பர் போலும்
வேலார்கை வீரியைமுன் படைத்தார் போலும்வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்
ஆலாலம் மிடற்றடக்கி அளித்தார் போலும்அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
6.53.6
536பஞ்சடுத்த மெல்விரலாள் பங்கர் போலும்பைந்நாகம் அரைக்கசைத்த பரமர் போலும்
மஞ்சடுத்த மணிநீல கண்டர் போலும்வடகயிலை மலையுடைய மணாளர் போலுஞ்
செஞ்சடைக்கண் வெண்பிறைகொண் டணிந்தார் போலுந்திருவீழி மிழலையமர் சிவனார் போலும்
அஞ்சடக்கும் அடியவர்கட் கணியார் போலும்அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
6.53.7
537குண்டரொடு பிரித்தெனையாட் கொண்டார் போலுங்குடமூக்கி லிடமாக்கிக் கொண்டார் போலும்
புண்டரிகப் புதுமலரா தனத்தார் போலும்புள்ளரசைக் கொன்றுயிர்பின் கொடுத்தார் போலும்
வெண்டலையிற் பலிகொண்ட விகிர்தர் போலும்வியன்வீழி மிழலைநக ருடையார் போலும்
அண்டத்துப் புறத்தப்பா லானார் போலும்அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
6.53.8
538முத்தனைய முகிழ்முறுவ லுடையார் போலும்மொய்பவளக் கொடியனைய சடையார் போலும்
எத்தனையும் பத்திசெய்வார்க் கினியார் போலும்இருநான்கு மூர்த்திகளு மானார் போலும்
மித்திரவச் சிரவணற்கு விருப்பர் போலும்வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்
அத்தனொடும் அம்மையெனக் கானார் போலும்அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
6.53.9
539கரியுரிசெய் துமைவெருவக் கண்டார் போலுங்கங்கையையுஞ் செஞ்சடைமேற் கரந்தார் போலும்
எரியதொரு கைதரித்த இறைவர் போலும்ஏனத்தின் கூனெயிறு பூண்டார் போலும்
விரிகதிரோ ரிருவரைமுன் வெகுண்டார் போலும்வியன்வீழி மிழலையமர் விமலர் போலும்
அரிபிரமர் துதிசெயநின் றளித்தார் போலும்அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
6.53.10
540கயிலாய மலையெடுத்தான் கதறி வீழக் கால்விரலால் அடர்த்தருளிச் செய்தார் போலுங்
குயிலாய மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக் கூத்தாட வல்ல குழகர் போலும்
வெயிலாய சோதிவிளக் கானார் போலும்வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்
அயிலாய மூவிலைவேற் படையார் போலும்அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
6.53.11

திருப்புள்ளிருக்குவேளூர் – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

541ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டுஅடியோடு முடியயன்மா லறியா வண்ணம்
நீண்டானை நெடுங்களமா நகரான் றன்னைநேமிவான் படையால்நீ ளுரவோ னாகங்
கீண்டானைக் கேதாரம் மேவி னானைக்கேடிலியைக் கிளர்பொறிவாள் அரவோ டென்பு
பூண்டானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.1
542சீர்த்தானைச் சிறந்தடியேன் சிந்தை யுள்ளே திகழ்ந்தானைச் சிவன்றன்னைத் தேவ தேவைக்
கூர்த்தானைக் கொடுநெடுவேற் கூற்றந் தன்னைக் குரைகழலாற் குமைத்துமுனி கொண்ட அச்சம்
பேர்த்தானைப் பிறப்பிலியை இறப்பொன் றில்லாப் பெம்மானைக் கைம்மாவி னுரிவை பேணிப்
போர்த்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.2
543பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாட்பாமாலை பாடப் பயில்வித் தானை
எத்தேவு மேத்தும் இறைவன் றன்னைஎம்மானை என்னுள்ளத் துள்ளே யூறும்
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலைஅண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்
புத்தேளைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.3
544இருளாய உள்ளத்தி னிருளை நீக்கிஇடர்பாவங் கெடுத்தேழை யேனை யுய்யத்
தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போற்சிவலோக நெறியறியச் சிந்தை தந்த
அருளானை ஆதிமா தவத்து ளானைஆறங்கம் நால்வேதத் தப்பால் நின்ற
பொருளானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.4
545மின்னுருவை விண்ணகத்தி லொன்றாய் மிக்கு வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்
தன்னுருவின் மூன்றாய்த்தாழ் புனலின் நான்காய்த்தரணிதலத் தஞ்சாகி யெஞ்சாத் தஞ்ச
மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தைவளரொளியை வயிரத்தை மாசொன் றில்லாப்
பொன்னுருவைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.5
546அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை அம்பலத்துள் நடமாடும் அழகன் றன்னைக்
கறையார்மூ விலைநெடுவேற் கடவுள் தன்னைக்கடல்நாகைக் காரோணங் கருதி னானை
இறையானை என்னுள்ளத் துள்ளே விள்ளா திருந்தானை ஏழ்பொழிலுந் தாங்கி நின்ற
பொறையானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.6
547நெருப்பனைய திருமேனி வெண்ணீற் றானைநீங்காதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற
விருப்பவனை வேதியனை வேத வித்தைவெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி
இருப்பவனை இடைமருதோ டீங்கோய் நீங்கா இறையவனை எனையாலுங் கயிலை யென்னும்
பொருப்பவனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.7
548பேரா யிரம்பரவி வானோ ரேத்தும் பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானைமந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.8
549பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் றன்னைப்படர்சடைமேற் புனல்கரந்த படிறன் றன்னை
நண்ணியனை யென்னாக்கித் தன்னா னானைநான்மறையின் நற்பொருளை நளிர்வெண் டிங்கள்
கண்ணியனைக் கடியநடை விடையொன் றேறுங்காரணனை நாரணனைக் கமலத் தோங்கும்
புண்ணியனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.9
550இறுத்தானை இலங்கையர்கோன் சிரங்கள் பத்தும்எழுநரம்பின் இன்னிசைகேட் டின்புற் றானை
அறுத்தானை அடியார்தம் அருநோய் பாவம்அலைகடலில் ஆலால முண்டு கண்டங்
கறுத்தானைக் கண்ணழலாற் காம னாகங்காய்ந்தானைக் கனன்மழுவுங் கலையு மங்கை
பொறுத்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.10

திருக்கயிலாயம் – போற்றித்திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

551வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றிமீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றிஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றிஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.55.1
552பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றிபிறவி யறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றிமருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றிபோகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாக மசைத்தாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.55.2
553மருவார் புரமூன்று மெய்தாய் போற்றிமருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றிஉள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றிதேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி யோடு முகிலே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.55.3
554வானத்தார் போற்றும் மருந்தே போற்றிவந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கு முடலே போற்றிஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றிதேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாட லுகந்தாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.55.4
555ஊராகி நின்ற உலகே போற்றிஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி யெங்கும் பரந்தாய் போற்றிபெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவி யான நிழலே போற்றிநேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.55.5
556சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றிதேவ ரறியாத தேவே போற்றி
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றிபோகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றிபற்றி உலகை விடாதாய் போற்றி
கல்லுயிராய் நின்ற கனலே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.55.6
557பண்ணின் இசையாகி நின்றாய் போற்றிபாவிப்பார் பாவ மறுப்பாய் போற்றி
எண்ணு மெழுத்துஞ்சொல் லானாய் போற்றிஎன்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றிமேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.55.7
558இமையா துயிரா திருந்தாய் போற்றிஎன்சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாக மாகத் தணைத்தாய் போற்றிஊழியே ழான ஒருவா போற்றி
அமையா அருநஞ்ச மார்ந்தாய் போற்றிஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.55.8
559மூவாய் பிறவாய் இறவாய் போற்றிமுன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றிசென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றிஅல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.55.9
560நெடிய விசும்போடு கண்ணே போற்றிநீள அகல முடையாய் போற்றி
அடியும் முடியும் இகலி போற்றிஅங்கொன் றறியாமை நின்றாய் போற்றி
கொடிய வன்கூற்ற முதைத்தாய் போற்றிகோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.55.10
561உண்ணா துறங்கா திருந்தாய் போற்றிஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் றன்னைப் போற்றிஇறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி
பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றிபண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.55.11

திருக்கயிலாயம் – போற்றித்திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

562பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றிபூதப் படையாள் புனிதா போற்றி
நிறையுடைய நெஞ்சின் இடையாய் போற்றிநீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
மறையுடைய வேதம் விரித்தாய் போற்றிவானோர் வணங்கப் படுவாய் போற்றி
கறையுடைய கண்ட முடையாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.56.1
563முன்பாகி நின்ற முதலே போற்றிமூவாத மேனிமுக் கண்ணா போற்றி
அன்பாகி நின்றார்க் கணியாய் போற்றிஆறேறு சென்னிச் சடையாய் போற்றி
என்பாக வெங்கு மணிந்தாய் போற்றிஎன்சிந்தை நீங்கா இறைவா போற்றி
கண்பாவி நின்ற கனலே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.56.2
564மாலை யெழுந்த மதியே போற்றிமன்னியென் சிந்தை யிருந்தாய் போற்றி
மேலை வினைக ளறுப்பாய் போற்றிமேலாடு திங்கள் முடியாய் போற்றி
ஆலைக் கரும்பின் தெளிவே போற்றிஅடியார்கட் காரமுத மானாய் போற்றி
காலை முளைத்த கதிரே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.56.3
565உடலின் வினைக ளறுப்பாய் போற்றிஒள்ளெரி வீசும் பிரானே போற்றி
படருஞ் சடைமேல் மதியாய் போற்றிபல்கணக் கூத்தப் பிரானே போற்றி
சுடரிற் றிகழ்கின்ற சோதி போற்றிதோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றி
கடலி லொளியாய முத்தே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.56.4
566மைசேர்ந்த கண்ட முடையாய் போற்றிமாலுக்கும் ஓராழி ஈந்தாய் போற்றி
பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றிபோகாதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
மெய்சேரப் பால்வெண்ணீ றாடி போற்றிமிக்கார்க ளேத்தும் விளக்கே போற்றி
கைசேர் அனலேந்தி யாடீ போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.56.5
567ஆறேறு சென்னி முடியாய் போற்றிஅடியார்கட் காரமுதாய் நின்றாய் போற்றி
நீறேறு மேனி யுடையாய் போற்றிநீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
கூறேறு மங்கை மழுவா போற்றிகொள்ளுங் கிழமையே ழானாய் போற்றி
காறேறு கண்ட மிடற்றாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.56.6
568அண்டமே ழன்று கடந்தாய் போற்றிஆதி புராணனாய் நின்றாய் போற்றி
பண்டை வினைக ளறுப்பாய் போற்றிபாரோர்விண் ணேத்தப் படுவாய் போற்றி
தொண்டர் பரவு மிடத்தாய் போற்றிதொழில்நோக்கி யாளுஞ் சுடரே போற்றி
கண்டங் கறுக்கவும் வல்லாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.56.7
569பெருகி யலைக்கின்ற ஆறே போற்றிபேராநோய் பேர விடுப்பாய் போற்றி
உருகி நினைவார்தம் முள்ளாய் போற்றிஊனந் தவிர்க்கும் பிரானே போற்றி
அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றிஆரு மிகழப் படாதாய் போற்றி
கருகிப் பொழிந்தோடு நீரே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.56.8
570செய்ய மலர்மேலான் கண்ணன் போற்றி தேடி யுணராமை நின்றாய் போற்றி
பொய்யாநஞ் சுண்ட பொறையே போற்றிபொருளாக என்னையாட் கொண்டாய் போற்றி
மெய்யாக ஆனஞ் சுகந்தாய் போற்றிமிக்கார்க ளேத்துங் குணத்தாய் போற்றி
கையானை மெய்த்தோ லுரித்தாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.56.9
571மேல்வைத்த வானோர் பெருமான் போற்றிமேலாடு புரமூன்று மெய்தாய் போற்றி
சீலத்தான் தென்னிலங்கை மன்னன் போற்றி சிலையெடுக்க வாயலற வைத்தாய் போற்றி
கோலத்தாற் குறைவில்லான் றன்னை யன்றுகொடிதாகக் காய்ந்த குழகா போற்றி
காலத்தாற் காலனையுங் காய்ந்தாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.56.10

திருக்கயிலாயத்திருமலை – போற்றித்திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

572பாட்டான நல்ல தொடையாய் போற்றிபரிசை யறியாமை நின்றாய் போற்றி
சூட்டான திங்கள் முடியாய் போற்றிதூமாலை மத்த மணிந்தாய் போற்றி
ஆட்டான தஞ்சு மமர்ந்தாய் போற்றிஅடங்கார் புரமெரிய நக்காய் போற்றி
காட்டானை மெய்த்தோ லுரித்தாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.57.1
573அதிரா வினைக ளறுப்பாய் போற்றிஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றி
சதுரா சதுரக் குழையாய் போற்றிசாம்பர் மெய்பூசுந் தலைவா போற்றி
எதிரா உலக மமைப்பாய் போற்றிஎன்றுமீ ளாவருள் செய்வாய் போற்றி
கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.57.2
574செய்யாய் கரியாய் வெளியாய் போற்றிசெல்லாத செல்வ முடையாய் போற்றி
ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றிஆகாச வண்ண முடியாய் போற்றி
வெய்யாய் தணியா யணியாய் போற்றிவேளாத வேள்வி யுடையாய் போற்றி
கையார் தழலார் விடங்கா போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.57.3
575ஆட்சி யுலகை யுடையாய் போற்றிஅடியார்க் கமுதெலாம் ஈவாய் போற்றி
சூட்சி சிறிது மிலாதாய் போற்றிசூழ்ந்த கடல்நஞ்ச முண்டாய் போற்றி
மாட்சி பெரிது முடையாய் போற்றிமன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி
காட்சி பெரிது மரியாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.57.4
576முன்னியா நின்ற முதல்வா போற்றிமூவாத மேனி யுடையாய் போற்றி
என்னியா யெந்தை பிரானே போற்றிஏழி னிசையே யுகப்பாய் போற்றி
மன்னிய மங்கை மணாளா போற்றிமந்திரமுந் தந்திரமு மானாய் போற்றி
கன்னியார் கங்கைத் தலைவா போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.57.5
577உரியாய் உலகினுக் கெல்லாம் போற்றிஉணர்வென்னு மூர்வ துடையாய் போற்றி
எரியாய தெய்வச் சுடரே போற்றிஏசுமா முண்டி யுடையாய் போற்றி
அரியாய் அமரர்கட் கெல்லாம் போற்றிஅறிவே அடக்க முடையாய் போற்றி
கரியானுக் காழியன் றீந்தாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.57.6
578எண்மேலும் எண்ண முடையாய் போற்றிஏறரிய வேறுங் குணத்தாய் போற்றி
பண்மேலே பாவித் திருந்தாய் போற்றிபண்ணொடுயாழ் வீணை பயின்றாய் போற்றி
விண்மேலு மேலும் நிமிர்ந்தாய் போற்றிமேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றி
கண்மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.57.7
579முடியார் சடையின் மதியாய் போற்றிமுழுநீறு சண்ணித்த மூர்த்தி போற்றி
துடியா ரிடையுமையாள் பங்கா போற்றிசோதித்தார் காணாமை நின்றாய் போற்றி
அடியா ரடிமை அறிவாய் போற்றிஅமரர் பதியாள வைத்தாய் போற்றி
கடியார் புரமூன்று மெய்தாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.57.8
580போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றிபுண்ணியனே நண்ண லரியாய் போற்றி
ஏற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றிஎண்ணா யிரநூறு பேராய் போற்றி
நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றிநான்முகற்கும் மாற்கு மரியாய் போற்றி
காற்றிசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.
6.57.9
 இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.6.57.10

திருவலம்புரம் – திருத்தாண்டகம் 

திருச்சிற்றம்பலம்

581மண்ணளந்த மணிவண்ணர் தாமும் மற்றை மறையவனும் வானவருஞ் சூழ நின்று
கண்மலிந்த திருநெற்றி யுடையா ரொற்றைக் கதநாகங் கையுடையார் காணீ ரன்றே
பண்மலிந்த மொழியவரு மியானு மெல்லாம் பணிந்திறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல
மண்மலிந்த வயல்புடைசூழ் மாட வீதி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
6.58.1
582சிலைநவின்ற தொருகணையாற் புரமூன் றெய்த தீவண்ணர் சிறந்திமையோர் இறைஞ்சி யேத்தக்
கொலைநவின்ற களியானை யுரிவை போர்த்துக்கூத்தாடித் திரிதருமக் கூத்தர் நல்ல
கலைநவின்ற மறையவர்கள் காணக் காணக்கடுவிடைமேற் பாரிடங்கள் சூழக் காதல்
மலைமகளுங் கங்கையுந் தாமு மெல்லாம் வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
6.58.2
583தீக்கூருந் திருமேனி யொருபால் மற்றை யொருபாலும் அரியுருவந் திகழ்ந்த செல்வர்
ஆக்கூரில் தான்தோன்றி புகுவார் போலஅருவினையேன் செல்வதுமே யப்பா லெங்கும்
நோக்கா ரொருவிடத்து நூலுந் தோலுந்துதைந்திலங்குந் திருமேனி வெண்ணீ றாடி
வாக்கால் மறைவிரித்து மாயம் பேசிவலம்புரமே புக்கிங்கே மன்னி னாரே.
6.58.3
584மூவாத மூக்கப்பாம் பரையிற் சாத்தி மூவர் உருவாய முதல்வ ரிந்நாள்
கோவாத எரிகணையைச் சிலைமேற் கோத்த குழகனார் குளிர்கொன்றை சூடி யிங்கே
போவாரைக் கண்டடியேன் பின்பின் செல்லப்புறக்கணித்துத் தம்முடைய பூதஞ் சூழ
வாவா வெனவுரைத்து மாயம் பேசிவலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
6.58.4
585அனலொருகை யதுவேந்தி அதளி னோடே ஐந்தலைய மாநாகம் அரையிற் சாத்திப்
புனல்பொதிந்த சடைக்கற்றைப் பொன்போல் மேனிப் புனிதனார் புரிந்தமரர் இறைஞ்சி யேத்தச்
சினவிடையை மேற்கொண்டு திருவா ரூருஞ்சிரபுரமும் இடைமருதுஞ் சேர்வார் போல
மனமுருக வளைகழல மாயம் பேசிவலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
6.58.5
586கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக் காலினாற் காய்ந்துகந்த காபா லியார்
முறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்திமுனிகணங்கள் புடைசூழ முற்றந் தோறுந்
தெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச் சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ
மறித்தொருகால் நோக்காதே மாயம் பேசிவலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
6.58.6
587பட்டுடுத்துப் பவளம்போல் மேனி யெல்லாம் பசுஞ்சாந்தங் கொண்டணிந்து பாதம் நோவ
இட்டெடுத்து நடமாடி யிங்கே வந்தார்க் கெவ்வூரீர் எம்பெருமா னென்றேன் ஆவி
விட்டிடுமா றதுசெய்து விரைந்து நோக்கிவேறோர் பதிபுகப் போவார் போல
வட்டணைகள் படநடந்து மாயம் பேசிவலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
6.58.7
588பல்லார் பயில்பழனப் பாசூ ரென்றும்பழனம் பதிபழமை சொல்லி நின்றார்
நல்லார் நனிபள்ளி யின்று வைகிநாளைப்போய் நள்ளாறு சேர்து மென்றார்
சொல்லார் ஒருவிடமாத் தோள்கை வீசிச்சுந்தரராய் வெந்தநீ றாடி யெங்கும்
மல்லார் வயல்புடைசூழ் மாடவீதி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
6.58.8
589பொங்கா டரவொன்று கையிற் கொண்டுபோர்வெண் மழுவேந்திப் போகா நிற்பர்
தங்கா ரொருவிடத்துந் தம்மேல் ஆர்வந் தவிர்த்தருளார் தத்துவத்தே நின்றே னென்பர்
எங்கே யிவர்செய்கை யொன்றொன் றொவ்வாஎன்கண்ணில் நின்றகலா வேடங் காட்டி
மங்குல் மதிதவழும் மாட வீதி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
6.58.9
590செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ் சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப்
பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ
அங்கொருதன் றிருவிரலால் இறையே யூன்றிஅடர்த்தவற்கே அருள்புரிந்த அடிக ளிந்நாள்
வங்கமலி கடல்புடைசூழ் மாட வீதி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
6.58.10

திருவெண்ணியூர் – திருத்தாண்டகம் 

திருச்சிற்றம்பலம்

591தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியி னாருந்தூநீறு துதைந்திலங்கு மார்பி னாரும்
புண்டரிகத் தயனொடுமால் காணா வண்ணம் பொங்குதழற் பிழம்பாய புராண னாரும்
வண்டமரும் மலர்க்கொன்றை மாலை யாரும்வானவர்க்காய் நஞ்சுண்ட மைந்த னாரும்
விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தாரும்வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.59.1
592நெருப்பனைய மேனிமேல் வெண்ணீற் றாரும்நெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தாரும்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பா லாரும்பூந்துருத்தி நகர்மேய புராண னாரும்
மருப்பனைய வெண்மதியக் கண்ணி யாரும்வளைகுளமும் மறைக்காடும் மன்னி னாரும்
விருப்புடைய அடியவர்தம் முள்ளத் தாரும்வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.59.2
593கையுலாம் மூவிலைவே லேந்தி னாருங்கரிகாட்டி லெரியாடுங் கடவு ளாரும்
பையுலாம் நாகங்கொண் டாட்டு வாரும்பரவுவார் பாவங்கள் பாற்று வாருஞ்
செய்யுலாங் கயல்பாய வயல்கள் சூழ்ந்த திருப்புன்கூர் மேவிய செல்வ னாரும்
மெய்யுலாம் வெண்ணீறு சண்ணித் தாரும்வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.59.3
594சடையேறு புனல்வைத்த சதுர னாருந்தக்கன்றன் பெருவேள்வி தடைசெய் தாரும்
உடையேறு புலியதள்மேல் நாகங் கட்டி உண்பலிக்கென் றூரூரி னுழிதர் வாரும்
மடையேறிக் கயல்பாய வயல்கள் சூழ்ந்த மயிலாடு துறையுறையும் மணாள னாரும்
விடையேறு வெல்கொடியெம் விமல னாரும்வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.59.4
595மண்ணிலங்கு நீரனல்கால் வானு மாகி மற்றவற்றின் குணமெலா மாய்நின் றாரும்
பண்ணிலங்கு பாடலோ டாட லாரும்பருப்பதமும் பாசூரும் மன்னி னாருங்
கண்ணிலங்கு நுதலாருங் கபால மேந்திக் கடைதோறும் பலிகொள்ளுங் காட்சி யாரும்
விண்ணிலங்கு வெண்மதியக் கண்ணி யாரும்வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.59.5
596வீடுதனை மெய்யடியார்க் கருள்செய் வாரும்வேலைவிட முண்டிருண்ட கண்டத் தாருங்
கூடலர்தம் மூவெயிலு மெரிசெய் தாருங்குரைகழலாற் கூற்றுவனைக் குமைசெய் தாரும்
ஆடுமர வரைக்கசைத்தங் காடு வாரும்ஆலமர நீழலிருந் தறஞ்சொன் னாரும்
வேடுவனாய் மேல்விசயற் கருள்செய் தாரும்வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.59.6
597மட்டிலங்கு கொன்றையந்தார் மாலை சூடிமடவா ளவளோடு மானொன் றேந்திச்
சிட்டிலங்கு வேடத்தா ராகி நாளுஞ்சில்பலிக்கென் றூரூர் திரிதர் வாருங்
கட்டிலங்கு பாசத்தால் வீச வந்த காலன்றன் கால மறுப்பார் தாமும்
விட்டிலங்கு வெண்குழைசேர் காதி னாரும்வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.59.7
598செஞ்சடைக்கோர் வெண்டிங்கள் சூடி னாருந்திருவால வாயுறையுஞ் செல்வ னாரும்
அஞ்சனக்கண் அரிவையொரு பாகத் தாரும்ஆறங்கம் நால்வேத மாய்நின் றாரும்
மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி மதிலாரூர் புக்கங்கே மன்னி னாரும்
வெஞ்சினத்த வேழமது வுரிசெய் தாரும்வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.59.8
599வளங்கிளர்மா மதிசூடும் வேணி யாரும்வானவர்க்கா நஞ்சுண்ட மைந்த னாருங்
களங்கொளவென் சிந்தையுள்ளே மன்னி னாருங்கச்சியே கம்பத்தெங் கடவு ளாரும்
உளங்குளிர அமுதூறி அண்ணிப் பாரும்உத்தமராய் எத்திசையும் மன்னி னாரும்
விளங்கிளரும் வெண்மழுவொன் றேந்தி னாரும்வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.59.9
600பொன்னிலங்கு கொன்றையந்தார் மாலை சூடிப் புகலூரும் பூவணமும் பொருந்தி னாருங்
கொன்னிலங்கு மூவிலைவே லேந்தி னாருங்குளிரார்ந்த செஞ்சடையெங் குழக னாருந்
தென்னிலங்கை மன்னவர்கோன் சிரங்கள் பத்துந்திருவிரலா லடர்த்தவனுக் கருள்செய் தாரும்
மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகத் தாரும்வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.59.10

திருக்கற்குடி – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

601மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி முதலவனைத் திருவரையின் மூக்கப் பாம்பொன்
றார்த்தவனை அக்கரவம் ஆர மாக அணிந்தவனைப் பணிந்தடியா ரடைந்த வன்போ
டேத்தவனை இறுவரையிற் றேனை ஏனோர்க்கின்னமுதம் அளித்தவனை யிடரை யெல்லாங்
காத்தவனைக் கற்குடியில் விழுமி யானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
6.60.1
602செய்யானை வெளியானைக் கரியான் றன்னைத்திசைமுகனைத் திசையெட்டுஞ் செறிந்தான் றன்னை
ஐயானை நொய்யானைச் சீரி யானைஅணியானைச் சேயானை ஆனஞ் சாடும்
மெய்யானைப் பொய்யாது மில்லான் றன்னைவிடையானைச் சடையானை வெறித்த மான்கொள்
கையானைக் கற்குடியில் விழுமி யானைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
6.60.2
603மண்ணதனில் ஐந்தைமா நீரில் நான்கைவயங்கெரியில் மூன்றைமா ருதத்தி ரண்டை
விண்ணதனி லொன்றை விரிக திரைத்தண்மதியைத் தாரகைகள் தம்மின் மிக்க
எண்ணதனில் எழுத்தையே ழிசையைக் காமன் எழிலழிய எரியுமிழ்ந்த இமையா நெற்றிக்
கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
6.60.3
604நற்றவனைப் புற்றரவ நாணி னானைநாணாது நகுதலையூண் நயந்தான் றன்னை
முற்றவனை மூவாத மேனி யானைமுந்நீரின் நஞ்சமுகந் துண்டான் றன்னைப்
பற்றவனைப் பற்றார்தம் பதிகள் செற்ற படையானை அடைவார்தம் பாவம் போக்கக்
கற்றவனைக் கற்குடியில் விழுமி யானைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
6.60.4
605சங்கைதனைத் தவிர்த்தாண்ட தலைவன் றன்னைச்சங்கரனைத் தழலுறுதாள் மழுவாள் தாங்கும்
அங்கையனை அங்கமணி ஆகத் தானைஆகத்தோர் பாகத்தே அமர வைத்த
மங்கையனை மதியொடுமா சுணமுந் தம்மின் மருவவிரி சடைமுடிமேல் வைத்த வானீர்க்
கங்கையனைக் கற்குடியில் விழுமி யானைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
6.60.5
606பெண்ணவனை ஆணவனைப் பேடா னானைப்பிறப்பிலியை இறப்பிலியைப் பேரா வாணி
விண்ணவனை விண்ணவர்க்கு மேலா னானைவேதியனை வேதத்தின் கீதம் பாடும்
பண்ணவனைப் பண்ணில்வரு பயனா னானைப்பாரவனைப் பாரில்வாழ் உயிர்கட் கெல்லாங்
கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
6.60.6
607பண்டானைப் பரந்தானைக் குவிந்தான் றன்னைப்பாரானை விண்ணாயிவ் வுலக மெல்லாம்
உண்டானை உமிழ்ந்தானை உடையான் றன்னைஒருவருந்தன் பெருமைதனை அறிய வொண்ணா
விண்டானை விண்டார்தம் புரங்கள் மூன்றும் வெவ்வழலில் வெந்துபொடி யாகி வீழக்
கண்டானைக் கற்குடியில் விழுமி யானைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
6.60.7
608வானவனை வானவர்க்கு மேலா னானைவணங்குமடி யார்மனத்துள் மருவிப் புக்க
தேனவனைத் தேவர்தொழு கழலான் றன்னைச்செய்குணங்கள் பலவாகி நின்ற வென்றிக்
கோனவனைக் கொல்லைவிடை யேற்றி னானைக்குழல்முழவம் இயம்பக்கூத் தாட வல்ல
கானவனைக் கற்குடியில் விழுமி யானைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
6.60.8
609கொலையானை யுரிபோர்த்த கொள்கை யானைக்கோளரியைக் கூரம்பா வரைமேற் கோத்த
சிலையானைச் செம்மைதரு பொருளான் றன்னைத்திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த
தலையானைத் தத்துவங்க ளானான் றன்னைத்தையலோர் பங்கினனைத் தன்கை யேந்து
கலையானைக் கற்குடியில் விழுமி யானைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
6.60.9
610பொழிலானைப் பொழிலாரும் புன்கூ ரானைப்புறம்பயனை அறம்புரிந்த புகலூ ரானை
எழிலானை இடைமருதி னிடங்கொண் டானைஈங்கோய்நீங் காதுறையும் இறைவன் றன்னை
அழலாடு மேனியனை அன்று சென்றக் குன்றெடுத்த அரக்கன்றோள் நெரிய வூன்றுங்
கழலானைக் கற்குடியில் விழுமி யானைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
6.60.10

திருக்கன்றாப்பூர் – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

611மாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவாமதிசூடி வானவர்கள் தங்கட் கெல்லாம்
நாதனே யென்றென்று பரவி நாளும் நைந்துருகி வஞ்சகமற் றன்பு கூர்ந்து
வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டுவைகல் மறவாது வாழ்த்தி யேத்திக்
காதன்மையாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
6.61.1
612விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசிவெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச்
செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பா யென்றுஞ்செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந்
துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ்சுடலைதனில் நடமாடுஞ் சோதி யென்றுங்
கடிமலர்தூய்த் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
6.61.2
613எவரேனுந் தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி
உவராதே அவரவரைக் கண்ட போது உகந்தடிமைத் திறநினைந்தங் குவந்து நோக்கி
இவர்தேவ ரவர்தேவ ரென்று சொல்லி இரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக்
கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
6.61.3
614இலங்காலஞ் செல்லாநா ளென்று நெஞ்சத் திடையாதே யாவர்க்கும் பிச்சை யிட்டு
விலங்காதே நெறிநின்றங் கறிவே மிக்குமெய்யன்பு மிகப்பெய்து பொய்யை நீக்கித்
துலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம் உண்டபிரா னடியிணைக்கே சித்தம் வைத்துக்
கலங்காதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
6.61.4
615விருத்தனே வேலைவிட முண்ட கண்டாவிரிசடைமேல் வெண்டிங்கள் விளங்கச் சூடும்
ஒருத்தனே உமைகணவா உலக மூர்த்திநுந்தாத வொண்சுடரே அடியார் தங்கள்
பொருத்தனே யென்றென்று புலம்பி நாளும் புலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பி நோக்கிக்
கருத்தினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
6.61.5
616பொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப் பொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று
பசியினால் மீதூரப் பட்டே யீட்டிப்பலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார்
வசியினா லகப்பட்டு வீழா முன்னம்வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக்
கசிவினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
6.61.6
617ஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு ஆவியார் போவதுமே அகத்தார் கூடி
மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டிமயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சூடும்
ஐயனார்க் காளாகி அன்பு மிக்குஅகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங்
கையினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
6.61.7
618திருதிமையால் ஐவரையுங் காவ லேவித்திகையாதே சிவாயநம என்னுஞ் சிந்தைச்
சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக்கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப்
பருதிதனைப் பற்பறித்த பாவ நாசாபரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங்
கருதிமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
6.61.8
 இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.6.61.9
619குனிந்தசிலை யாற்புரமூன் றெரித்தா யென்றுங்கூற்றுதைத்த குரைகழற்சே வடியா யென்றுந்
தனஞ்சயற்குப் பாசுபத மீந்தா யென்றுந்தசக்கிரிவன் மலையெடுக்க விரலா லூன்றி
முனிந்தவன்றன் சிரம்பத்துந் தாளுந் தோளும் முரணழித்திட் டருள்கொடுத்த மூர்த்தி யென்றுங்
கனிந்துமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
6.61.10

திருவானைக்கா – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

620எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்
செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லைசிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்
சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித் திருவானைக் காவுடைய செல்வா என்றன்
அத்தாவுன் பொற்பாத மடையப் பெற்றால்அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
6.62.1
621ஊனாகி உயிராகி யதனுள் நின்ற உணர்வாகிப் பிறவனைத்தும் நீயாய் நின்றாய்
நானேதும் அறியாமே யென்னுள் வந்துநல்லனவுந் தீயனவுங் காட்டா நின்றாய்
தேனாருங் கொன்றையனே நின்றி யூராய்திருவானைக் காவிலுறை சிவனே ஞானம்
ஆனாயுன் பொற்பாத மடையப் பெற்றால்அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
6.62.2
622ஒப்பாயிவ் வுலகத்தோ டொட்டி வாழ்வான்ஒன்றலாத் தவத்தாரோ டுடனே நின்று
துப்பாருங் குறையடிசில் துற்றி நற்றுன் திறமறந்து திரிவேனைக் காத்து நீவந்
தெப்பாலும் நுண்ணுணர்வே யாக்கி யென்னை ஆண்டவனே எழிலானைக் காவா வானோர்
அப்பாவுன் பொற்பாத மடையப் பெற்றால்அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
6.62.3
623நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்சக் கள்வாநிறைமதியஞ் சடைவைத்தாய் அடையா துன்பால்
முனைத்தவர்கள் புரமூன்று மெரியச் செற்றாய்முன்னானைத் தோல்போர்த்த முதல்வா வென்றுங்
கனைத்துவரும் எருதேறுங் காள கண்டாகயிலாய மலையாநின் கழலே சேர்ந்தேன்
அனைத்துலகும் ஆள்வானே ஆனைக் காவாஅல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
6.62.4
624இம்மாயப் பிறப்பென்னுங் கடலாந் துன்பத்திடைச்சுழிப்பட் டிளைப்பேனை இளையா வண்ணங்
கைம்மான மனத்துதவிக் கருணை செய்துகாதலரு ளவைவைத்தாய் காண நில்லாய்
வெம்மான மதகரியி னுரிவை போர்த்த வேதியனே தென்னானைக் காவுள் மேய
அம்மான்நின் பொற்பாத மடையப் பெற்றால்அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
6.62.5
625உரையாரும் புகழானே ஒற்றி யூராய்கச்சியே கம்பனே காரோ ணத்தாய்
விரையாரும் மலர்தூவி வணங்கு வார்பால்மிக்கானே அக்கரவம் ஆரம் பூண்டாய்
திரையாரும் புனற்பொன்னித் தீர்த்த மல்கு திருவானைக் காவிலுறை தேனே வானோர்
அரையாவுன் பொற்பாத மடையப் பெற்றால்அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
6.62.6
626மையாரும் மணிமிடற்றாய் மாதோர் கூறாய்மான்மறியு மாமழுவும் அனலு மேந்துங்
கையானே காலனுடல் மாளச் செற்ற கங்காளா முன்கோளும் விளைவு மானாய்
செய்யானே திருமேனி யரியாய் தேவர்குலக்கொழுந்தே தென்னானைக் காவுள் மேய
ஐயாவுன் பொற்பாத மடையப் பெற்றால்அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
6.62.7
627இலையாருஞ் சூலத்தாய் எண்தோ ளானேஎவ்விடத்தும் நீயலா தில்லை யென்று
தலையாரக் கும்பிடுவார் தன்மை யானேதழல்மடுத்த மாமேரு கையில் வைத்த
சிலையானே திருவானைக் காவுள் மேய தீயாடீ சிறுநோயால் நலிவுண் டுள்ளம்
அலையாதே நின்னடியே அடையப் பெற்றால்அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
6.62.8
628விண்ணாரும் புனல்பொதிசெஞ் சடையாய் வேதநெறியானே எறிகடலின் நஞ்ச முண்டாய்
எண்ணாரும் புகழானே உன்னை யெம்மான்என்றென்றே நாவினிலெப் பொழுதும் உன்னிக்
கண்ணாரக் கண்டிருக்கக் களித்தெப் போதுங்கடிபொழில்சூழ் தென்னானைக் காவுள் மேய
அண்ணாநின் பொற்பாத மடையப் பெற்றால்அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
6.62.9
629கொடியேயும் வெள்ளேற்றாய் கூளி பாடக்குறட்பூதங் கூத்தாட நீயு மாடி
வடிவேயும் மங்கைதனை வைத்த மைந்தாமதிலானைக் காவுளாய் மாகா ளத்தாய்
படியேயுங் கடலிலங்கைக் கோமான் றன்னைப் பருமுடியுந் திரள்தோளு மடர்த்து கந்த
அடியேவந் தடைந்தடிமை யாகப் பெற்றால்அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
6.62.10

திருவானைக்கா – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

630முன்னானைத் தோல்போர்த்த மூர்த்தி தன்னைமூவாத சிந்தையே மனமே வாக்கே
தன்னானை யாப்பண்ணி யேறி னானைச்சார்தற் கரியானைத் தாதை தன்னை
என்னானைக் கன்றினையென் ஈசன் றன்னைஎறிநீர்த் திரையுகளுங் காவி ரிசூழ்
தென்னானைக் காவானைத் தேனைப் பாலைச்செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
6.63.1
631மருந்தானை மந்திரிப்பார் மனத்து ளானைவளர்மதியஞ் சடையானை மகிழ்ந்தென் னுள்ளத்
திருந்தானை இறப்பிலியைப் பிறப்பி லானைஇமையவர்தம் பெருமானை உமையா ளஞ்சக்
கருந்தான மதகளிற்றி னுரிபோர்த் தானைக்கனமழுவாட் படையானைப் பலிகொண் டூரூர்
திரிந்தானைத் திருவானைக் காவு ளானைச்செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
6.63.2
632முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானைமுந்நீர்நஞ் சுண்டிமையோர்க் கமுதம் நல்கும்
உற்றானைப் பல்லுயிர்க்குந் துணையா னானைஓங்காரத் துட்பொருளை உலக மெல்லாம்
பெற்றானைப் பின்னிறக்கஞ் செய்வான் றன்னைப்பிரானென்று போற்றாதார் புரங்கள் மூன்றுஞ்
செற்றானைத் திருவானைக் காவு ளானைச்செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
6.63.3
633காராரு மணிமிடற்றெம் பெருமான் றன்னைக்காதில்வெண் குழையானைக் கமழ்பூங் கொன்றைத்
தாரானைப் புலியதளி னாடை யானைத்தானன்றி வேறொன்று மில்லா ஞானப்
பேரானை மணியார மார்பி னானைப்பிஞ்ஞகனைத் தெய்வநான் மறைகள் பூண்ட
தேரானைத் திருவானைக் காவு ளானைச்செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
6.63.4
634பொய்யேது மில்லாத மெய்யன் றன்னைப்புண்ணியனை நண்ணாதார் புரநீ றாக
எய்தானைச் செய்தவத்தின் மிக்கான் றன்னைஏறமரும் பெருமானை இடமா னேந்து
கையானைக் கங்காள வேடத் தானைக்கட்டங்கக் கொடியானைக் கனல்போல் மேனிச்
செய்யானைத் திருவானைக் காவு ளானைச்செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
6.63.5
635கலையானைப் பாசுபதப் பாணி யானைக்கனவயிரத் திரளானை மணிமா ணிக்க
மலையானை யென்றலையி னுச்சி யானைவார்தருபுன் சடையானை மயான மன்னும்
நிலையானை வரியரவு நாணாக் கோத்து நினையாதார் புரமெரிய வளைத்த மேருச்
சிலையானைத் திருவானைக் காவு ளானைச்செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
6.63.6
636ஆதியனை எறிமணியின் ஓசை யானைஅண்டத்தார்க் கறிவொண்ணா தப்பால் மிக்க
சோதியனைத் தூமறையின் பொருளான் றன்னைச்சுரும்பமரும் மலர்க்கொன்றைத் தொன்னூல் பூண்ட
வேதியனை அறமுரைத்த பட்டன் றன்னைவிளங்குமல ரயன்சிரங்கள் ஐந்தி லொன்றைச்
சேதியனைத் திருவானைக் காவு ளானைச்செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
6.63.7
637மகிழ்ந்தானைக் கச்சியே கம்பன் றன்னைமறவாது கழல்நினைந்து வாழ்த்தி யேத்திப்
புகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப் பானைப்பூதகணப் படையானைப் புறங்காட் டாடல்
உகந்தானைப் பிச்சையே யிச்சிப் பானைஒண்பவளத் திரளையென் னுள்ளத் துள்ளே
திகழ்ந்தானைத் திருவானைக் காவு ளானைச்செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
6.63.8
638நசையானை நால்வேதத் தப்பா லானைநல்குரவுந் தீப்பிணிநோய் காப்பான் றன்னை
இசையானை எண்ணிறந்த குணத்தான் றன்னைஇடைமருதும் ஈங்கோயும் நீங்கா தேற்றின்
மிசையானை விரிகடலும் மண்ணும் விண்ணும்மிகுதீயும் புனலெறிகாற் றாகி யெட்டுத்
திசையானைத் திருவானைக் காவு ளானைச்செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
6.63.9
639பார்த்தானைக் காமனுடல் பொடியாய் வீழப்பண்டயன்மா லிருவர்க்கும் அறியா வண்ணஞ்
சீர்த்தானைச் செந்தழல்போ லுருவி னானைத்தேவர்கள்தம் பெருமானைத் திறமுன் னாதே
ஆர்த்தோடி மலையெடுத்த இலங்கை வேந்தன் ஆண்மையெலாங் கெடுத்தவன்றன் இடரப் போதே
தீர்த்தானைத் திருவானைக் காவு ளானைச்செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
6.63.10

திருவேகம்பம் – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

640கூற்றுவன்காண் கூற்றுவனைக் குமைத்த கோன்காண்குவலயன்காண் குவலயத்தின் நீரா னான்காண்
காற்றவன்காண் கனலவன்காண் கலிக்கும் மின்காண்கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளை
நீற்றவன்காண் நிலாவூருஞ் சென்னி யான்காண்நிறையார்ந்த புனற்கங்கை நிமிர்ச டைமேல்
ஏற்றவன்காண் எழிலாறும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.64.1
641பரந்தவன்காண் பல்லுயிர்க ளாகி யெங்கும்பணிந்தெழுவார் பாவமும் வினையும் போகத்
துரந்தவன்காண் தூமலரங் கண்ணி யான்காண்தோற்ற நிலையிறுதிப் பொருளாய் வந்த
மருந்தவன்காண் வையங்கள் பொறைதீர்ப் பான்காண்மலர்தூவி நினைந்தெழுவா ருள்ளம் நீங்கா
திருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.64.2
642நீற்றவன்காண் நீராகித் தீயா னான்காண்நிறைமழுவுந் தமருகமும் எரியுங் கையில்
தோற்றவன்காண் தோற்றக்கே டில்லா தான்காண்துணையிலிகாண் துணையென்று தொழுவா ருள்ளம்
போற்றவன்காண் புகழ்கள்தமைப் படைத்தான் றான்காண்பொறியரவும் விரிசடைமேற் புனலுங் கங்கை
ஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.64.3
643தாயவன்காண் உலகிற்குத் தன்னொப் பில்லாத் தத்துவன்காண் மலைமங்கை பங்கா வென்பார்
வாயவன்காண் வரும்பிறவி நோய்தீர்ப் பான்காண்வானவர்க்குந் தானவர்க்கும் மண்ணு ளோர்க்குஞ்
சேயவன்காண் நினைவார்க்குச் சித்த மாரத் திருவடியே உள்கிநினைந் தெழுவா ருள்ளம்
ஏயவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.64.4
644அடுத்தானை யுரித்தான் காண் … … … … … …

இச்செய்யுளில் எஞ்சிய பாகம் சிதைந்து போயிற்று.
6.64.5
645அழித்தவன்காண் எயில்மூன்றும் அயில்வா யம்பால்ஐயாறும் இடைமருதும் ஆள்வான் றான்காண்
பழித்தவன்காண் அடையாரை அடைவார் தங்கள் பற்றவன்காண் புற்றரவ நாணி னான்காண்
சுழித்தவன்காண் முடிக்கங்கை அடியே போற்றுந் தூயமா முனிவர்க்காப் பார்மேல் நிற்க
இழித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.64.6
646அசைந்தவன்காண் நடமாடிப் பாடல் பேணிஅழல்வண்ணத் தில்லடியும் முடியுந் தேடப்
பசைந்தவன்காண் பேய்க்கணங்கள் பரவி யேத்தும் பான்மையன்காண் பரவிநினைந் தெழுவார் தம்பால்
கசிந்தவன்காண் கரியினுரி போர்த்தான் றான்காண்கடலில்விட முண்டமரர்க் கமுத மீய
இசைந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.64.7
647முடித்தவன்காண் வன்கூற்றைச் சீற்றத் தீயால் வலியார்தம் புரமூன்றும் வேவச் சாபம்
பிடித்தவன்காண் பிஞ்ஞகனாம் வேடத் தான்காண்பிணையல்வெறி கமழ்கொன்றை அரவு சென்னி
முடித்தவன்காண் மூவிலைநல் வேலி னான்காண்முழங்கியுரு மெனத்தோன்று மழையாய் மின்னி
இடித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.64.8
648வருந்தான்காண் மனமுருகி நினையா தார்க்கு வஞ்சகன்காண் அஞ்செழுத்து நினைவார்க் கென்றும்
மருந்தவன்காண் வான்பிணிகள் தீரும் வண்ணம்வானகமும் மண்ணகமு மற்று மாகிப்
பரந்தவன்காண் படர்சடையெட் டுடையான் றான்காண்பங்கயத்தோன் றன்சிரத்தை யேந்தி யூரூர்
இரந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.64.9
649வெம்மான உழுவையத ளுரிபோர்த் தான்காண்வேதத்தின் பொருளான்காண் என்றி யம்பி
விம்மாநின் றழுவார்கட் களிப்பான் றான்காண்விடையேறித் திரிவான்காண் நடஞ்செய் பூதத்
தம்மான்காண் அகலிடங்கள் தாங்கி னான்காண்அற்புதன்காண் சொற்பதமுங் கடந்து நின்ற
எம்மான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.64.10
650அறுத்தான்காண் அயன்சிரத்தை அமரர் வேண்டஆழ்கடலின் நஞ்சுண்டங் கணிநீர்க் கங்கை
செறுத்தான்காண் தேவர்க்குந் தேவன் றான்காண்திசையனைத்துந் தொழுதேத்தக் கலைமான் கையிற்
பொறுத்தான்காண் புகலிடத்தை நலிய வந்து பொருகயிலை யெடுத்தவன்றன் முடிதோள் நாலஞ்
சிறுத்தான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.64.11

திருவேகம்பம் – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

651உரித்தவன்காண் உரக்களிற்றை உமையாள் ஒல்கஓங்காரத் தொருவன்காண் உணர்மெய்ஞ் ஞானம்
விரித்தவன்காண் விரித்தநால் வேதத் தான்காண்வியனுலகிற் பல்லுயிரை விதியி னாலே
தெரித்தவன்காண் சில்லுருவாய்த் தோன்றி யெங்குந்திரண்டவன்காண் திரிபுரத்தை வேவ வில்லால்
எரித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.65.1
652நேசன்காண் நேசர்க்கு நேசந் தன்பால் இல்லாத நெஞ்சத்து நீசர் தம்மைக்
கூசன்காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே குடிகொண்ட குழகன்காண் அழகார் கொன்றை
வாசன்காண் மலைமங்கை பங்கன் றான்காண்வானவர்கள் எப்பொழுதும் வணங்கி யேத்தும்
ஈசன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.65.2
653பொறையவன்காண் பூமியேழ் தாங்கி யோங்கும் புண்ணியன்காண் நண்ணியபுண் டரிகப் போதின்
மறையவன்காண் மறையவனைப் பயந்தோன் றான்காண்வார்சடைமா சுணமணிந்து வளரும் பிள்ளைப்
பிறையவன்காண் பிறைதிகழும் எயிற்றுப் பேழ்வாய்ப் பேயோடங் கிடுகாட்டில் எல்லி யாடும்
இறையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.65.3
654பாரவன்காண் விசும்பவன்காண் பவ்வந் தான்காண்பனிவரைகள் இரவினொடு பகலாய் நின்ற
சீரவன்காண் திசையவன்காண் திசைக ளெட்டுஞ்செறிந்தவன்காண் சிறந்தடியார் சிந்தை செய்யும்
பேரவன்காண் பேராயி ரங்க ளேத்தும் பெரியவன்காண் அரியவன்காண் பெற்ற மூர்ந்த
ஏரவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.65.4
655பெருந்தவத்தெம் பிஞ்ஞகன்காண் பிறைசூ டிகாண்பேதையேன் வாதையுறு பிணியைத் தீர்க்கும்
மருந்தவன்காண் மந்திரங்க ளாயி னான்காண்வானவர்கள் தாம்வணங்கும் மாதே வன்காண்
அருந்தவத்தான் ஆயிழையாள் உமையாள் பாகம் அமர்ந்தவன்காண் அமரர்கள்தாம் அர்ச்சித் தேத்த
இருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.65.5
656ஆய்ந்தவன்காண் அருமறையோ டங்க மாறும்அணிந்தவன்காண் ஆடரவோ டென்பு மாமை
காய்ந்தவன்காண் கண்ணழலாற் காம னாகங்கனன்றெழுந்த காலனுடல் பொடியாய் வீழப்
பாய்ந்தவன்காண் பண்டுபல சருகாற் பந்தர் பயின்றநூற் சிலந்திக்குப் பாராள் செல்வம்
ஈந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.65.6
657உமையவளை யொருபாகஞ் சேர்த்தி னான்காண்உகந்தொலிநீர்க் கங்கைசடை யொழுக்கி னான்காண்
இமய வடகயிலைச் செல்வன் றான்காண்இல்பலிக்குச் சென்றுழலும் நல்கூர்ந் தான்காண்
சமயமவை ஆறினுக்குந் தலைவன் றான்காண்தத்துவன்காண் உத்தமன்காண் தானே யாய
இமையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.65.7
658தொண்டுபடு தொண்டர்துயர் தீர்ப்பான் றான்காண்தூமலர்ச்சே வடியிணையெஞ் சோதி யான்காண்
உண்டுபடு விடங்கண்டத் தொடுக்கி னான்காண்ஒலிகடலி லமுதமரர்க் குதவி னான்காண்
வண்டுபடு மலர்க்கொன்றை மாலை யான்காண்வாண்மதியாய் நாண்மீனு மாயி னான்காண்
எண்டிசையும் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.65.8
659முந்தைகாண் மூவரினு முதலா னான்காண்மூவிலைவேல் மூர்த்திகாண் முருக வேட்குத்
தந்தைகாண் தண்கடமா முகத்தி னாற்குத் தாதைகாண் தாழ்ந்தடியே வணங்கு வார்க்குச்
சிந்தைகாண் சிந்தாத சித்தத் தார்க்குச் சிவனவன்காண் செங்கண்மால் விடையொன் றேறும்
எந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.65.9
660பொன்னிசையும் புரிசடையெம் புனிதன் றான்காண்பூதகண நாதன்காண் புலித்தோ லாடை
தன்னிசைய வைத்தவெழி லரவி னான்காண்சங்கவெண் குழைக்காதிற் சதுரன் றான்காண்
மின்னிசையும் வெள்ளெயிற்றோன் வெகுண்டு வெற்பை எடுக்கவடி அடர்ப்பமீண் டவன்றன் வாயில்
இன்னிசைகேட் டிலங்கொளிவாள் ஈந்தோன் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.65.10

திருநாகேச்சரம் – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

661தாயவனை வானோர்க்கும் ஏனோ ருக்குந்தலையவனை மலையவனை உலக மெல்லாம்
ஆயவனைச் சேயவனை அணியான் றன்னைஅழலவனை நிழலவனை அறிய வொண்ணா
மாயவனை மறையவனை மறையோர் தங்கள் மந்திரனைத் தந்திரனை வளரா நின்ற
தீயவனைத் திருநாகேச் சரத்து ளானைச்சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
6.66.1
662உரித்தானை மதவேழந் தன்னை மின்னார் ஒளிமுடியெம் பெருமானை உமையோர் பாகந்
தரித்தானைத் தரியலர்தம் புரமெய் தானைத்தன்னடைந்தார் தம்வினைநோய் பாவ மெல்லாம்
அரித்தானை ஆலதன்கீழ் இருந்து நால்வர்க் கறம்பொருள்வீ டின்பமா றங்கம் வேதந்
தெரித்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
6.66.2
663காரானை உரிபோர்த்த கடவுள் தன்னைக்காதலித்து நினையாத கயவர் நெஞ்சில்
வாரானை மதிப்பவர்தம் மனத்து ளனைமற்றொருவர் தன்னொப்பா ரொப்பி லாத
ஏரானை இமையவர்தம் பெருமான் றன்னைஇயல்பாகி உலகெலாம் நிறைந்து மிக்க
சீரானைத் திருநாகேச் சரத்து ளானைச்சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
6.66.3
664தலையானை எவ்வுலகுந் தானா னானைத்தன்னுருவம் யாவர்க்கு மறிய வொண்ணா
நிலையானை நேசர்க்கு நேசன் றன்னைநீள்வான முகடதனைத் தாங்கி நின்ற
மலையானை வரியரவு நாணாக் கோத்து வல்லசுரர் புரமூன்று மடிய வெய்த
சிலையானைத் திருநாகேச் சரத்து ளானைச்சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
6.66.4
665மெய்யானைத் தன்பக்கல் விரும்பு வார்க்குவிரும்பாத அரும்பாவி யவர்கட் கென்றும்
பொய்யானைப் புறங்காட்டி லாட லானைப்பொன்பொலிந்த சடையானைப் பொடிகொள் பூதிப்
பையானைப் பையரவ மசைத்தான் றன்னைப்பரந்தானைப் பவளமால் வரைபோல் மேனிச்
செய்யானைத் திருநாகேச் சரத்து ளானைச்சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
6.66.5
666துறந்தானை அறம்புரியாத் துரிசர் தம்மைத்தோத்திரங்கள் பலசொல்லி வானோ ரேத்த
நிறைந்தானை நீர்நிலந்தீ வெளிகாற் றாகிநிற்பனவும் நடப்பனவு மாயி னானை
மறந்தானைத் தன்னினையா வஞ்சர் தம்மைஅஞ்செழுத்தும் வாய்நவில வல்லோர்க் கென்றுஞ்
சிறந்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
6.66.6
667மறையானை மால்விடையொன் றூர்தி யானைமால்கடல்நஞ் சுண்டானை வானோர் தங்கள்
இறையானை என்பிறவித் துயர்தீர்ப் பானைஇன்னமுதை மன்னியசீர் ஏகம் பத்தில்
உறைவானை ஒருவருமீங் கறியா வண்ணம் என்னுள்ளத் துள்ளே யொளித்து வைத்த
சிறையானைத் திருநாகேச் சரத்து ளானைச்சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
6.66.7
668எய்தானைப் புரமூன்றும் இமைக்கும் போதில்இருவிசும்பில் வருபுனலைத் திருவார் சென்னிப்
பெய்தானைப் பிறப்பிலியை அறத்தில் நில்லாப் பிரமன்றன் சிரமொன்றைக் கரமொன் றினாற்
கொய்தானைக் கூத்தாட வல்லான் றன்னைக்குறியிலாக் கொடியேனை அடியே னாகச்
செய்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
6.66.8
669அளியானை அண்ணிக்கும் ஆன்பால் தன்னைவான்பயிரை அப்பயிரின் வாட்டந் தீர்க்குந்
துளியானை அயன்மாலுந் தேடிக் காணாச் சுடரானைத் துரிசறத் தொண்டு பட்டார்க்
கெளியானை யாவர்க்கு மரியான் றன்னைஇன்கரும்பின் தன்னுள்ளா லிருந்த தேறற்
தெளியானைத் திருநாகேச் சரத்து ளானைச்சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
6.66.9
670சீர்த்தானை உலகேழுஞ் சிறந்து போற்றச் சிறந்தானை நிறைந்தோங்கு செல்வன் றன்னைப்
பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழப்பனிமதியஞ் சடையானைப் புனிதன் றன்னை
ஆர்த்தோடி மலையெடுத்த அரக்க னஞ்ச அருவிரலா லடர்த்தானை அடைந்தோர் பாவந்
தீர்த்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
6.66.10

திருக்கீழ்வேளூர் – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

671ஆளான அடியவர்கட் கன்பன் றன்னைஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்க
தாளானைத் தன்னொப்பா ரில்லா தானைச்சந்தனமுங் குங்குமமுஞ் சாந்துந் தோய்ந்த
தோளானைத் தோளாத முத்தொப் பானைத்தூவெளுத்த கோவணத்தை அரையி லார்த்த
கீளானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
6.67.1
672சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித்தூங்காதார் மனத்திருளை வாங்கா தானை
நற்பான்மை அறியாத நாயி னேனைநன்னெறிக்கே செலும்வண்ணம் நல்கி னானைப்
பற்பாவும் வாயாரப் பாடி யாடிப்பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்கக்
கிற்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
6.67.2
673அளைவாயில் அரவசைத்த அழகன் றன்னைஆதரிக்கு மடியவர்கட் கன்பே யென்றும்
விளைவானை மெய்ஞ்ஞானப் பொருளா னானைவித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்
குளைவானை அல்லாதார்க் குளையா தானைஉலப்பிலியை உள்புக்கென் மனத்து மாசு
கிளைவானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
6.67.3
674தாட்பாவு கமலமலர் தயங்கு வானைத் தலையறுத்து மாவிரதந் தரித்தான் றன்னைக்
கோட்பாவு நாளெல்லா மானான் றன்னைக்கொடுவினையேன் கொடுநரகக் குழியில் நின்றால்
மீட்பானை வித்துருவின் கொத்தொப் பானைவேதியனை வேதத்தின் பொருள்கொள் வீணை
கேட்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
6.67.4
675நல்லானை நரைவிடையொன் றூர்தி யானைநால்வேதத் தாறங்கம் நணுக மாட்டாச்
சொல்லானைச் சுடர்மூன்று மானான் றன்னைத்தொண்டாகிப் பணிவார்கட் கணியான் றன்னை
வில்லானை மெல்லியலோர் பங்கன் றன்னைமெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க
கில்லானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
6.67.5
676சுழித்தானைக் கங்கைமலர் வன்னி கொன்றைதூமத்தம் வாளரவஞ் சூடி னானை
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவஆலால நஞ்சதனை யுண்டான் றன்னை
விழித்தானைக் காமனுடல் பொடியாய் வீழமெல்லியலோர் பங்கனைமுன் வேனி லானைக்
கிழித்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
6.67.6
677உளரொளியை உள்ளத்தி னுள்ளே நின்ற ஓங்காரத் துட்பொருள்தா னாயி னானை
விளரொளியை விடுசுடர்கள் இரண்டு மொன்றும் விண்ணொடுமண் ஆகாச மாயி னானை
வளரொளியை மரகதத்தி னுருவி னானைவானவர்க ளெப்பொழுதும் வாழ்த்தி யேத்துங்
கிளரொளியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
6.67.7
678தடுத்தானைக் காலனைக் காலாற் பொன்றத்தன்னடைந்த மாணிக்கன் றருள்செய் தானை
உடுத்தானைப் புலியதளோ டக்கும் பாம்பும்உள்குவார் உள்ளத்தி னுள்ளான் றன்னை
மடுத்தானை அருநஞ்சம் மிடற்றுள் தங்கவானவர்கள் கூடியஅத் தக்கன் வேள்வி
கெடுத்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
6.67.8
679மாண்டார் எலும்பணிந்த வாழ்க்கை யானைமயானத்திற் கூத்தனைவா ளரவோ டென்பு
பூண்டானைப் புறங்காட்டி லாட லானைப்போகாதென் னுட்புகுந் திடங்கொண் டென்னை
ஆண்டானை அறிவரிய சிந்தை யானைஅசங்கையனை அமரர்கள்தஞ் சங்கை யெல்லாங்
கீண்டானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
6.67.9
680முறிப்பான பேசிமலை யெடுத்தான் றானும் முதுகிறமுன் கைந்நரம்பை யெடுத்துப் பாடப்
பறிப்பான்கைச் சிற்றரிவாள் நீட்டி னானைப்பாவியேன் நெஞ்சகத்தே பாதப் போது
பொறித்தானைப் புரமூன்று மெரிசெய் தானைப்பொய்யர்களைப் பொய்செய்து போது போக்கிக்
கிறிப்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
6.67.10

திருமுதுகுன்றம் – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

681கருமணியைக் கனகத்தின் குன்றொப் பானைக்கருதுவார்க் காற்ற எளியான் றன்னைக்
குருமணையைக் கோளரவ மாட்டு வானைக்கொல்வேங்கை யதளனைக்கோ வணவன் றன்னை
அருமணியை அடைந்தவர்கட் கமுதொப் பானைஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்க
திருமணியைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.
6.68.1
682காரொளிய கண்டத்தெங் கடவுள் தன்னைக்காபாலி கட்டங்க மேந்தி னானைப்
பாரொளியை விண்ணொளியைப் பாதாளத் தானைப்பான்மதியஞ் சூடியோர் பண்பன் றன்னைப்
பேரொளியைப் பெண்பாகம் வைத்தான் றன்னைப்பேணுவார் தம்வினையைப் பேணி வாங்குஞ்
சீரொளியைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.
6.68.2
683எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானைஏறூர்ந்த பெம்மானை யெம்மா னென்று
பத்தனாய்ப் பணிந்தடியேன் றன்னைப் பன்னாட்பாமாலை பாடப் பயில்வித் தானை
முத்தினை யென்மணியை மாணிக் கத்தைமுளைத்தெழுந்த செம்பவளக் கொழுந்தொப் பானைச்
சித்தனையென் திருமுதுகுன் றுடையான் றன்னைத்தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.
6.68.3
684ஊன்கருவின் உள்நின்ற சோதி யானைஉத்தமனைப் பத்தர்மனம் குடிகொண் டானைக்
கான்றிரிந்து காண்டீப மேந்தி னானைக்கார்மேக மிடற்றானைக் கனலைக் காற்றைத்
தான்றெரிந்தங் கடியேனை யாளாக் கொண்டு தன்னுடைய திருவடியென் றலைமேல் வைத்த
தீன்கரும்பைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.
6.68.4
685தக்கனது பெருவேள்வி தகர்த்தா னாகித்தாமரையான் நான்முகனுந் தானே யாகி
மிக்கதொரு தீவளிநீர் ஆகா சமாய்மேலுலகுக் கப்பாலாய் இப்பா லானை
அக்கினொடு முத்தினையு மணிந்து தொண்டர்க்கங்கங்கே அறுசமய மாகி நின்ற
திக்கினையென் றிருமுதுகுன் றுடையான் றன்னைத்தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.
6.68.5
686புகழொளியைப் புரமெரித்த புனிதன் றன்னைப்பொன்பொதிந்த மேனியனைப் புராணன் றன்னை
விழவொலியும் விண்ணொலியு மானான் றன்னை வெண்காடு மேவிய விகிர்தன் றன்னைக்
கழலொலியுங் கைவளையு மார்ப்ப வார்ப்பக்கடைதோறு மிடுபிச்சைக் கென்று செல்லுந்
திகழொளியைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.
6.68.6
687போர்த்தானை யின்னுரிதோல் பொங்கப் பொங்கப்புலியதளே உடையாகத் திரிவான் றன்னைக்
காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றுங்காலனையுங் குரைகழலாற் காய்ந்தான் றன்னை
மாத்தாடிப் பத்தராய் வணங்குந் தொண்டர்வல்வினைவே ரறும்வண்ணம் மருந்து மாகித்
தீர்த்தானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.
6.68.7
688துறவாதே யாக்கை துறந்தான் றன்னைச்சோதி முழுமுதலாய் நின்றான் றன்னைப்
பிறவாதே எவ்வுயிர்க்குந் தானே யாகிப்பெண்ணினோ டாணுருவாய் நின்றான் றன்னை
மறவாதே தன்றிறமே வாழ்த்துந் தொண்டர்மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற
திறலானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.
6.68.8
689பொற்றூணைப் புலால்நாறு கபால மேந்திப்புவலோக மெல்லா முழிதந் தானை
முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானைமுழுமுதலாய் மூவுலகும் முடிவொன் றில்லாக்
கற்றூணைக் காளத்தி மலையான் றன்னைக்கருதாதார் புரமூன்று மெரிய அம்பாற்
செற்றானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.
6.68.9
690இகழ்ந்தானை இருபதுதோள் நெரிய வூன்றிஎழுநரம்பின் இசைபாட லினிது கேட்டுப்
புகழ்ந்தானைப் பூந்துருத்தி மேயான் றன்னைப்புண்ணியனை விண்ணவர்கள் நிதியந் தன்னை
மகிழ்ந்தானை மலைமகளோர் பாகம் வைத்துவளர்மதியஞ் சடைவைத்து மாலோர் பாகந்
திகழ்ந்தானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.
6.68.10

திருப்பள்ளியின்முக்கூடல் – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

691ஆராத இன்னமுதை அம்மான் றன்னைஅயனொடுமா லறியாத ஆதி யானைத்
தாராரும் மலர்க்கொன்றைச் சடையான் றன்னைச்சங்கரனைத் தன்னொப்பா ரில்லா தானை
நீரானைக் காற்றானைத் தீயா னானைநீள்விசும்பாய் ஆழ்கடல்க ளேழுஞ் சூழ்ந்த
பாரானைப் பள்ளியின்முக் கூட லானைப்பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.69.1
692விடையானை விண்ணவர்கள் எண்ணத் தானைவேதியனை வெண்டிங்கள் சூடுஞ் சென்னிச்
சடையானைச் சாமம்போற் கண்டத் தானைத்தத்துவனைத் தன்னொப்பா ரில்லா தானை
அடையாதார் மும்மதிலுந் தீயில் மூழ்கஅடுகணைகோத் தெய்தானை அயில்கொள் சூலப்
படையானைப் பள்ளியின்முக் கூட லானைப்பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.69.2
693பூதியனைப் பொன்வரையே போல்வான் றன்னைப்புரிசடைமேற் புனல்கரந்த புனிதன் றன்னை
வேதியனை வெண்காடு மேயான் றன்னைவெள்ளேற்றின் மேலானை விண்ணோர்க் கெல்லாம்
ஆதியனை ஆதிரைநன் னாளான் றன்னைஅம்மானை மைம்மேவு கண்ணி யாளோர்
பாதியனைப் பள்ளியின்முக் கூட லானைப்பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.69.3
694போர்த்தானை ஆனையின்றோல் புரங்கள் மூன்றும்பொடியாக எய்தானைப் புனிதன் றன்னை
வார்த்தாங்கு வனமுலையாள் பாகன் றன்னைமறிகடலுள் நஞ்சுண்டு வானோ ரச்சந்
தீர்த்தானைத் தென்றிசைக்கே காமன் செல்லச்சிறிதளவில் அவனுடலம் பொடியா வங்கே
பார்த்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.69.4
695அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள்அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணங்
கடிந்தானைக் கார்முகில்போற் கண்டத் தானைக்கடுஞ்சினத்தோன் றன்னுடலை நேமி யாலே
தடிந்தானைத் தன்னொப்பா ரில்லா தானைத்தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சிற்
படிந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.69.5
696கரந்தானைச் செஞ்சடைமேற் கங்கை வெள்ளங்கனலாடு திருமேனி கமலத் தோன்றன்
சிரந்தாங்கு கையானைத் தேவ தேவைத்திகழொளியைத் தன்னடியே சிந்தை செய்வார்
வருந்தாமைக் காப்பானை மண்ணாய் விண்ணாய்மறிகடலாய் மால்விசும்பாய் மற்று மாகிப்
பரந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.69.6
697நதியாருஞ் சடையானை நல்லூ ரானைநள்ளாற்றின் மேயானை நல்லத் தானை
மதுவாரும் பொழிற்புடைசூழ் வாய்மூ ரானைமறைக்காடு மேயானை ஆக்கூ ரானை
நிதியாளன் றோழனை நீடு ரானைநெய்த்தான மேயானை ஆரூ ரென்னும்
பதியானைப் பள்ளியின்முக் கூட லானைப்பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.69.7
698நற்றவனை நான்மறைக ளாயி னானைநல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றுஞ்
செற்றவனைச் செஞ்சடைமேற் றிங்கள் சூடுந்திருவாரூர்த் திருமூலத் தான மேய
கொற்றவனைக் கூரரவம் பூண்டான் றன்னைக்குறைந்தடைந்து தன்றிறமே கொண்டார்க் கென்றும்
பற்றவனைப் பள்ளியின்முக் கூட லானைப்பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.69.8
699ஊனவனை உடலவனை உயிரா னானைஉலகேழு மானானை உம்பர் கோவை
வானவனை மதிசூடும் வளவி யானைமலைமகள்முன் வராகத்தின் பின்பே சென்ற
கானவனைக் கயிலாய மலையு ளானைக்கலந்துருகி நைவார்தம் நெஞ்சி னுள்ளே
பானவனைப் பள்ளியின்முக் கூட லானைப்பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.69.9
700தடுத்தானைத் தான்முனிந்து தன்றோள் கொட்டித்தடவரையை இருபதுதோள் தலையி னாலும்
எடுத்தானைத் தாள்விரலால் மாள வூன்றிஎழுநரம்பின் இசைபாடல் இனிது கேட்டுக்
கொடுத்தானைப் பேரோடுங் கூர்வாள் தன்னைக்குரை கழலாற் கூற்றுவனை மாள வன்று
படுத்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.69.10

க்ஷேத்திரக்கோவை – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

701தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளிதேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர்
கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல்வீரட்டங் கோகரணங் கோடி காவும்
முல்லைப் புறவம் முருகன் பூண்டிமுழையூர் பழையாறை சத்தி முற்றங்
கல்லிற் றிகழ்சீரார் காளத் தியுங்கயிலாய நாதனையே காண லாமே.
6.70.1
702ஆரூர்மூ லத்தானம் ஆனைக் காவும்ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர்
பேரூர் பிரமபுரம் பேரா வூரும்பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்
கூரார் குறுக்கைவீ ரட்டா னமுங்கோட்டூர் குடமூக்கு கோழம் பமுங்
காரார் கழுக்குன்றுங் கானப் பேருங்கயிலாய நாதனையே காண லாமே.
6.70.2
703இடைமரு தீங்கோ யிராமேச் சுரம்இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேறூர்
சடைமுடி சாலைக் குடிதக் களூர்தலையாலங் காடு தலைச்சங் காடு
கொடுமுடி குற்றாலங் கொள்ளம் பூதூர்கோத்திட்டை கோட்டாறு கோட்டுக் காடு
கடைமுடி கானூர் கடம்பந் துறைகயிலாய நாதனையே காண லாமே.
6.70.3
704எச்சில் இளமர் ஏம நல்லூர்இலம்பையங் கோட்டூர் இறையான் சேரி
அச்சிறு பாக்க மளப்பூர் அம்பர்ஆவடு தண்டுறை அழுந்தூர் ஆறைக்
கச்சினங் கற்குடி கச்சூர் ஆலக்கோயில் கரவீரங் காட்டுப் பள்ளி
கச்சிப் பலதளியும் ஏகம் பத்துங்கயிலாய நாதனையே காண லாமே.
6.70.4
705கொடுங்கோளூர் அஞ்சைக் களஞ்செங் குன்றூர்கொங்கணங் குன்றியூர் குரக்குக் காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக் காவும்நின்றியூர் நீடூர் நியம நல்லூர்
இடும்பா வனமெழுமூர் ஏழூர் தோழூர்எறும்பியூர் ஏராரும் ஏம கூடங்
கடம்பை யிளங்கோயில் தன்னி லுள்ளுங்கயிலாய நாதனையே காண லாமே.
6.70.5
706மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர்வக்கரை மந்தாரம் வார ணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக் குடிவிளமர் விராடபுரம் வேட்க ளத்தும்
பெண்ணை யருட்டுறைதண் பெண்ணா கடம்பிரம்பில் பெரும்புலியூர் பெருவே ளூருங்
கண்ணை களர்க்காறை கழிப்பா லையுங்கயிலாய நாதனையே காண லாமே.
6.70.6
707வீழி மிழலைவெண் காடு வேங்கூர்வேதி குடிவிசய மங்கை வியலூர்
ஆழியகத் தியான்பள்ளி அண்ணா மலைஆலங் காடும் அரைதைப் பெரும்
பாழி பழனம்பனந் தாள்பா தாளம்பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட் டூர்தண்
காழி கடல்நாகைக் காரோ ணத்துங்கயிலாய நாதனையே காண லாமே.
6.70.7
708உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்உரித்திர கோடி மறைக்காட் டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்வீரட்டம் மாதானங் கேதா ரத்தும்
வெஞ்சமாக் கூடல்மீ யச்சூர் வைகாவேதிச்சுரம் வீவிசுரம் வொற்றி யூருங்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக் கையுங்கயிலாய நாதனையே காண லாமே.
6.70.8
709திண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன் பள்ளிதேவூர் சிரபுரஞ்சிற் றேமஞ் சேறை
கொண்டீச்சரங் கூந்தலூர் கூழையூர் கூடல்குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழுமதிகை வீரட் டானம்ஐயா றசோகந்தி ஆமாத் தூருங்
கண்டியூர் வீரட்டங் கருகா வூருங்கயிலாய நாதனையே காண லாமே.
6.70.9
710நறையூரிற் சித்தீச் சரம்நள் ளாறுநாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூல மங்கைதோணிபுரந் துருத்தி சோமீச் சரம்
உறையூர் கடலொற்றி யூரூற் றத்தூர்ஓமாம் புலியூரோர் ஏட கத்துங்
கறையூர் கருப்பறியல் கன்றாப் பூருங்கயிலாய நாதனையே காண லாமே.
6.70.10
711புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர்புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல்வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி
நிலமலிநெய்த் தானத்தோ டெத்தா னத்தும்நிலவுபெருங் கோயில்பல கண்டாற் றொண்டீர்
கலிவலிமிக் கோனைக்கால் விரலாற் செற்றகயிலாய நாதனையே காண லாமே.
6.70.11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


6.71 திருஅடைவு – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

712பொருப்பள்ளி வரைவில்லாப் புரமூன் றெய்துபுலந்தழிய சலந்தரனைப் பிளந்தான் பொற்சக்
கரப்பள்ளி திருக்காட்டுப் பள்ளி கள்ளார்கமழ்கொல்லி யறைப்பள்ளி கலவஞ் சாரற்
சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன் பள்ளிசெழுநனி பள்ளிதவப் பள்ளி சீரார்
பரப்பள்ளி யென்றென்று பகர்வோ ரெல்லாம்பரலோகத் தினிதாகப் பாலிப் பாரே.
6.71.1
713காவிரியின் கரைக்கண்டி வீரட் டானங்கடவூர்வீ ரட்டானங் காமருசீ ரதிகை
மேவியவீ ரட்டானம் வழுவை வீரட்டம்வியன்பறியல் வீரட்டம் விடையூர்திக் கிடமாங்
கோவல்நகர் வீரட்டங் குறுக்கை வீரட்டங்கோத்திட்டைக் குடிவீரட் டானமிவை கூறி
நாவினவின் றுரைப்பார்க்கு நணுகச் சென்றால்நமன்றமருஞ் சிவன்றமரென் றகல்வர் நன்கே.
6.71.2
714நற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்குடிநல்லக் குடிநளிநாட் டியத்தான் குடி
கற்குடிதென் களக்குடிசெங் காட்டங் குடிகருந்திட்டைக் குடிகடையக் குடிகா ணுங்கால்
விற்குடிவேள் விக்குடிநல் வேட்டக் குடிவேதிகுடி மாணிகுடி விடைவாய்க் குடி
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடிபுதுக்குடியும் போற்றவிடர் போகு மன்றே.
6.71.3
715பிறையூருஞ் சடைமுடியெம் பெருமா னாரூர்பெரும்பற்றப் புலியூரும் பேரா வூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற் றூரும்நாலூருஞ் சேற்றூரும் நாரை யூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத் தூரும்அளப்பூரோ மாம்புலியூர் ஒற்றி யூருந்
துறையூருந் துவையூருந் தோழுர் தானுந்துடையூருந் தொழவிடர்கள் தொடரா வன்றே.
6.71.4
716பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்துதாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரு மன்றே.
6.71.5
717மலையார்தம் மகளொடுமா தேவன் சேரும்மறைக்காடு வண்பொழில்சூழ் தலைச்சங் காடு
தலையாலங் காடுதடங் கடல்சூ ழந்தண்சாய்க்காடு தெள்ளுபுனற் கொள்ளிக் காடு
பலர்பாடும் பழையனூர் ஆலங் காடுபனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க
விலையாடும் வளைதிளைக்கக் குடையும் பொய்கைவெண்காடும் அடையவினை வேறா மன்றே.
6.71.6
718கடுவாயர் தமைநீக்கி யென்னை யாட்கொள்கண்ணுதலோன் நண்ணுமிடம் அண்ணல் வாயில்
நெடுவாயில் நிறைவயல்சூழ் நெய்தல் வாயில்நிகழ்முல்லை வாயிலொடு ஞாழல் வாயில்
மடுவார்தென் மதுரைநகர் ஆல வாயில்மறிகடல்சூழ் புனவாயில் மாடம் நீடு
குடவாயில் குணவாயி லான வெல்லாம்புகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே.
6.71.7
719நாடகமா டிடநந்தி கேச்சுரமா காளேச்சுரநாகேச் சுரநாகளேச் சுரநன் கான
கோடீச்சுரங் கொண்டீச் சுரந்திண் டீச்சுரங்குக்குடேச் சுரமக்கீச் சுரங்கூ றுங்கால்
ஆடகேச் சுரமகத்தீச் சுரமய னீச்சுரம்அத்தீச்சுரஞ் சித்தீச்சுர மந்தண் கானல்
ஈடுதிரை இராமேச்சுர மென்றென் றேத்திஇறைவனுறை சுரம்பலவும் இயம்பு வோமே.
6.71.8
720கந்தமா தனங்கயிலை மலை கேதாரங்காளத்தி கழுக்குன்றங் கண்ணார் அண்ணா
மந்தமாம் பொழிற்சாரல் வடபர்ப் பதம்மகேந்திரமா மலைநீலம் ஏம கூடம்
விந்தமா மலைவேதஞ் சைய மிக்கவியன் பொதியின் மலைமேரு வுதய மத்தம்
இந்துசே கரனுறையும் மலைகள் மற்றும்ஏத்துவோம் இடர்கெடநின் றேத்து வோமே.
6.71.9
721நள்ளாறும் பழையாறுங் கோட்டாற் றோடுநலந்திகழும் நாலாறுந் திருவை யாறுந்
தெள்ளாறும் வளைகுளமுந் தளிக்கு ளமுநல்இடைக்குளமுந் திருக்குளத்தோ டஞ்சைக் களம்
விள்ளாத நெடுங்களம்வேட் களம்நெல் லிக்காகோலக்கா ஆனைக்கா வியன்கோ டிகா
கள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறுங்குளங்களங்கா எனவனைத்துங் கூறு வோமே.
6.71.10
722கயிலாயமலை யெடுத்தான் கரங்க ளோடுசிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்
பயில்வாய பராய்த்துறைதென் பாலைத் துறைபண்டெழுவர் தவத்துறைவெண் டுறைபைம் பொழிற்
குயிலாலந் துறைசோற்றுத் துறைபூந் துறைபெருந்துறையுங் குரங்காடு துறையி னோடு
மயிலாடு துறைகடம்பந் துறையா வடுதுறைமற்றுந் துறையனைத்தும் வணங்கு வோமே.
6.71.11

6.72 திருவலஞ்சுழி – திருத்தாண்டகம் 

திருச்சிற்றம்பலம்

723அலையார் புனற்கங்கை நங்கை காணஅம்பலத்தில் அருநட்ட மாடி வேடந்
தொலையாத வென்றியார் நின்றி யூரும்நெடுங்களமும் மேவிவிடை யைமேற் கொண்டு
இலையார் படைகையி லேந்தி யெங்கும்இமையவரும் உமையவளும் இறைஞ்சி யேத்த
மலையார் திரளருவிப் பொன்னி சூழ்ந்தவலஞ்சுழியே புக்கிடமா மருவி னாரே.
6.72.1

திருவலஞ்சுழியும் – திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும் 

திருச்சிற்றம்பலம்

724கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய்கல்லால நிழற்கீ ழிருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்பவளக்குன் றன்ன பரமன் கண்டாய்
வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்
குருமணிபோல் அழகமருங் கொட்டை யூரிற்கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
6.73.1
725கலைக்கன்று தங்கு கரத்தான் கண்டாய்கலைபயில்வோர் ஞானக்கண் ணானான் கண்டாய்
அலைக்கங்கை செஞ்சடைமே லேற்றான் கண்டாய்அண்ட கபாலத்தப் பாலான் கண்டாய்
மலைப்பண்டங் கொண்டு வருநீர்ப் பொன்னிவலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்
குலைத்தெங்கஞ் சோலைசூழ் கொட்டை யூரிற்கோடீச்சரத் துறையுங் கோமான் றானே.
6.73.2
726செந்தா மரைப்போ தணிந்தான் கண்டாய்சிவன்கண்டாய் தேவர் பெருமான் கண்டாய்
பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய்பாலோடு நெய் தயிர்தே னாடி கண்டாய்
மந்தார முந்தி வருநீர்ப் பொன்னிவலஞ்சுழியின் மன்னு மணாளன் கண்டாய்
கொந்தார் பொழிற்புடைசூழ் கொட்டை யூரிற்கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
6.73.3
727பொடியாடு மேனிப் புனிதன் கண்டாய்புட்பாகற் காழி கொடுத்தான் கண்டாய்
இடியார் கடுமுழக்கே றூர்ந்தான் கண்டாய்எண்டிசைக்கும் விளக்காகி நின்றான் கண்டாய்
மடலார் திரைபுரளுங் காவி ரிவாய்வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்
கொடியாடு நெடுமாடக் கொட்டை யூரிற்கோடீச்சரத் துறையுங் கோமான் றானே.
6.73.4
728அக்கரவம் அரைக்கசைத்த அம்மான் கண்டாய்அருமறைக ளாறங்க மானான் கண்டாய்
தக்கனது பெருவேள்வி தகர்த்தான் கண்டாய்சதாசிவன்காண் சலந்தரனைப் பிளந்தான் கண்டாய்
மைக்கொண்மயிற் றழைகொண்டு வருநீர்ப் பொன்னிவலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய்
கொக்கமரும் வயற்புடைசூழ் கொட்டை யூரிற்கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
6.73.5
729சண்டனைநல் லண்டர்தொழச் செய்தான் கண்டாய்சதாசிவன் கண்டாய்சங் கரன்றான் கண்டாய்
தொண்டர்பலர் தொழுதேத்துங் கழலான் கண்டாய்சுடரொளியாய்த் தொடர்வரிதாய் நின்றான் கண்டாய்
மண்டுபுனற் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய்
கொண்டல்தவழ் கொடிமாடக் கொட்டை யூரிற்கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
6.73.6
730அணவரியான் கண்டாய் அமலன் கண்டாய்அவிநாசி கண்டாயண் டத்தான் கண்டாய்
பணமணிமா நாக முடையான் கண்டாய்பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய்
மணல்வருநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்
குணமுடைநல் லடியார்வாழ் கொட்டை யூரிற்கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
6.73.7
731விரைகமழு மலர்க்கொன்றைத் தாரான் கண்டாய்வேதங்கள் தொழநின்ற நாதன் கண்டாய்
அரையதனிற் புள்ளியத ளுடையான் கண்டாய்அழலாடி கண்டாய் அழகன் கண்டாய்
வருதிரைநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்வஞ்சமனத் தவர்க்கரிய மைந்தன் கண்டாய்
குரவமரும் பொழிற்புடைசூழ் கொட்டை யூரிற்கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
6.73.8
732தளங்கிளருந் தாமரையா தனத்தான் கண்டாய்தசரதன்றன் மகனசைவு தவிர்த்தான் கண்டாய்
இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான் கண்டாய்எட்டெட் டிருங்கலையு மானான் கண்டாய்
வளங்கிளர்நீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்மாமுனிகள் தொழுதெழுபொற் கழலான் கண்டாய்
குளங்குளிர்செங் குவளைகிளர் கொட்டை யூரிற்கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
6.73.9
733விண்டார் புரமூன் றெரித்தான் கண்டாய்விலங்கலில்வல் லரக்கனுட லடர்த்தான் கண்டாய்
தண்டா மரையானும் மாலுந் தேடத்தழற்பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய்
வண்டார்பூஞ் சோலைவலஞ் சுழியான் கண்டாய்மாதேவன் கண்டாய் மறையோ டங்கங்
கொண்டாடு வேதியர்வாழ் கொட்டை யூரிற்கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
6.73.10

திருநாரையூர் – திருத்தாண்டகம் 

திருச்சிற்றம்பலம்

734சொல்லானைப் பொருளானைச் சுருதி யானைச்சுடராழி நெடுமாலுக் கருள்செய் தானை
அல்லானைப் பகலானை அரியான் றன்னைஅடியார்கட் கெளியானை அரண்மூன் றெய்த
வில்லானைச் சரம்விசயற் கருள்செய் தானைவெங்கதிரோன் மாமுனிவர் விரும்பி யேத்தும்
நல்லானைத் தீயாடு நம்பன் றன்னைநாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
6.74.1
735பஞ்சுண்ட மெல்லடியாள் பங்கன் றன்னைப்பாரொடுநீர் சுடர்படர்காற் றாயி னானை
மஞ்சுண்ட வானாகி வானந் தன்னில்மதியாகி மதிசடைமேல் வைத்தான் றன்னை
நெஞ்சுண்டென் நினைவாகி நின்றான் றன்னைநெடுங்கடலைக் கடைந்தவர்போய் நீங்க வோங்கும்
நஞ்சுண்டு தேவர்களுக் கமுதீந் தானைநாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
6.74.2
736மூவாதி யாவர்க்கும் மூத்தான் றன்னைமுடியாதே முதல்நடுவு முடிவா னானைத்
தேவாதி தேவர்கட்குந் தேவன் றன்னைத்திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தான் றன்னை
ஆவாத அடலேறொன் றுடையான் றன்னைஅடியேற்கு நினைதோறும் அண்ணிக் கின்ற
நாவானை நாவினில்நல் லுரையா னானைநாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
6.74.3
737செம்பொன்னை நன்பவளந் திகழு முத்தைச்செழுமணியைத் தொழுமவர்தஞ் சித்தத் தானை
வம்பவிழும் மலர்க்கணைவேள் உலக்க நோக்கிமகிழ்ந்தானை மதிற்கச்சி மன்னு கின்ற
கம்பனையெங் கயிலாய மலையான் றன்னைக்கழுகினொடு காகுத்தன் கருதி யேத்தும்
நம்பனையெம் பெருமானை நாதன் றன்னைநாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
6.74.4
738புரையுடைய கரியுரிவைப் போர்வை யானைப்புரிசடைமேற் புனலடைத்த புனிதன் றன்னை
விரையுடைய வெள்ளெருக்கங் கண்ணி யானைவெண்ணீறு செம்மேனி விரவி னானை
வரையுடைய மகள்தவஞ்செய் மணாளன் றன்னைவருபிணிநோய் பிரிவிக்கும் மருந்து தன்னை
நரைவிடைநற் கொடியுடைய நாதன் றன்னைநாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
6.74.5
739பிறவாதும் இறவாதும் பெருகி னானைப்பேய்பாட நடமாடும் பித்தன் றன்னை
மறவாத மனத்தகத்து மன்னி னானைமலையானைக் கடலானை வனத்து ளானை
உறவானைப் பகையானை உயிரா னானைஉள்ளானைப் புறத்தானை ஓசை யானை
நறவாரும் பூங்கொன்றை சூடி னானைநாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
6.74.6
740தக்கனது வேள்விகெடச் சாடி னானைத்தலைகலனாப் பலியேற்ற தலைவன் றன்னைக்
கொக்கரைசச் சரிவீணைப் பாணி யானைக்கோணாகம் பூணாகக் கொண்டான் றன்னை
அக்கினொடும் என்பணிந்த அழகன் றன்னைஅறுமுகனோ டானைமுகற் கப்பன் றன்னை
நக்கனைவக் கரையானை நள்ளாற் றானைநாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
6.74.7
741அரிபிரமர் தொழுதேத்தும் அத்தன் றன்னைஅந்தகனுக் கந்தகனை அளக்க லாகா
எரிபுரியும் இலிங்கபுரா ணத்து ளானைஎண்ணாகிப் பண்ணா ரெழுத்தா னானைத்
திரிபுரஞ்செற் றொருமூவர்க் கருள்செய் தானைச்சிலந்திக்கும் அரசளித்த செல்வன் றன்னை
நரிவிரவு காட்டகத்தி லாட லானைநாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
6.74.8
742ஆலால மிடற்றணியா அடக்கி னானைஆலதன்கீழ் அறம்நால்வர்க் கருள்செய் தானைப்
பாலாகித் தேனாகிப் பழமு மாகிப்பைங்கரும்பா யங்கருந்துஞ் சுவையா னானை
மேலாய வேதியர்க்கு வேள்வி யாகிவேள்வியினின் பயனாய விமலன் றன்னை
நாலாய மறைக்கிறைவ னாயி னானைநாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
6.74.9
743மீளாத ஆளென்னை உடையான் றன்னைவெளிசெய்த வழிபாடு மேவி னானை
மாளாமை மறையவனுக் குயிரும் வைத்துவன்கூற்றின் உயிர்மாள உதைத்தான் றன்னைத்
தோளாண்மை கருதிவரை யெடுத்த தூர்த்தன்தோள்வலியுந் தாள்வலியுந் தொலைவித் தாங்கே
நாளோடு வாள்கொடுத்த நம்பன் றன்னைநாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
6.74.10

திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

744சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச்சொற்பொருளுங் கடந்தசுடர்ச் சோதி போலுங்
கன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங்கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்
மன்மலிந்த மணிவரைத்திண் டோ ளர் போலும்மலையரையன் மடப்பாவை மணாளர் போலுங்
கொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலுங்குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
6.75.1
745கானலிளங் கலிமறவ னாகிப் பார்த்தன்கருத்தளவு செருத்தொகுதி கண்டார் போலும்
ஆனவிளங் கடுவிடையொன் றேறி அண்டத்தப்பாலும் பலிதிரியும் அழகர் போலுந்
தேனலிளந் துவலைமலி தென்றல் முன்றிற்செழும்பொழிற்பூம் பாளைவிரி தேறல் நாறுங்
கூனலிளம் பிறைதடவு கொடிகொள் மாடக்குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
6.75.2
746நீறலைத்த திருவுருவும் நெற்றிக் கண்ணும்நிலாவலைத்த பாம்பினொடு நிறைநீர்க் கங்கை
ஆறலைத்த சடைமுடியும் அம்பொற் றோளும்அடியவர்க்குக் காட்டியருள் புரிவார் போலும்
ஏறலைத்த நிமிர்கொடியொன் றுடையார் போலும்ஏழுலகுந் தொழுகழலெம் மீசர் போலுங்
கூறலைத்த மலைமடந்தை கொழுநர் போலுங்குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
6.75.3
747தக்கனது பெருவேள்வி தகர்த்தார் போலுஞ்சந்திரனைக் கலைகவர்ந்து தரித்தார் போலுஞ்
செக்கரொளி பவளவொளி மின்னின் சோதிசெழுஞ்சுடர்த்தீ ஞாயிறெனச் செய்யர் போலும்
மிக்கதிறல் மறையவரால் விளங்கு வேள்விமிகுபுகைபோய் விண்பொழியக் கழனி யெல்லாங்
கொக்கினிய கனிசிதறித் தேறல் பாயுங்குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
6.75.4
748காலன்வலி தொலைத்தகழற் காலர் போலுங்காமனெழில் அழல்விழுங்கக் கண்டார் போலும்
ஆலதனில் அறம்நால்வர்க் களித்தார் போலும்ஆணொடுபெண் ணலியல்ல ரானார் போலும்
நீலவுரு வயிரநிரைப் பச்சை செம்பொன்நெடும்பளிங்கென் றறிவரிய நிறத்தார் போலுங்
கோலமணி கொழித்திழியும் பொன்னி நன்னீர்க்குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
6.75.5
749முடிகொண்ட வளர்மதியும் மூன்றாய்த் தோன்றும்முளைஞாயி றன்னமலர்க் கண்கள் மூன்றும்
அடிகொண்ட சிலம்பொலியும் அருளார் சோதிஅணிமுறுவற் செவ்வாயும் அழகாய்த் தோன்றத்
துடிகொண்ட இடைமடவாள் பாகங் கொண்டுசுடர்ச்சோதிக் கடிச்செம்பொன் மலைபோ லிந்நாள்
குடிகொண்டென் மனத்தகத்தே புகுந்தார் போலுங்குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
6.75.6
750காரிலங்கு திருவுருவத் தவற்கும் மற்றைக்கமலத்திற் காரணற்குங் காட்சி யொண்ணாச்
சீரிலங்கு தழற்பிழம்பிற் சிவந்தார் போலுஞ்சிலைவளைவித் தவுணர்புரஞ் சிதைத்தார் போலும்
பாரிலங்கு புனலனல்கால் பரமா காசம்பருதிமதி சுருதியுமாய்ப் பரந்தார் போலுங்
கூரிலங்கு வேற்குமரன் தாதை போலுங்குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
6.75.7
751பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூ ருள்ளார்புறம்பயத்தார் அறம்புரிபூந் துருத்தி புக்கு
மாச்சூழ்ந்த பழனத்தார் நெய்த்தா னத்தார்மாதவத்து வளர்சோற்றுத் துறையார் நல்ல
தீச்சூழ்ந்த திகிரிதிரு மாலுக் கீந்துதிருவானைக் காவிலோர் சிலந்திக் கந்நாள்
கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலுங்குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
6.75.8
752பொங்கரவர் புலித்தோலர் புராணர் மார்பிற்பொறிகிளர்வெண் பூணநூற் புனிதர் போலுஞ்
சங்கரவக் கடன்முகடு தட்ட விட்டுச்சதுரநட மாட்டுகந்த சைவர் போலும்
அங்கரவத் திருவடிக்காட் பிழைப்பத் தந்தைஅந்தணனை அறஎறிந்தார்க் கருளப் போதே
கொங்கரவச் சடைக்கொன்றை கொடுத்தார் போலுங்குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
6.75.9
753ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனைஇப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே
கூவிஅம ருலகனைத்து முருவிப் போகக்குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலுந்
தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கைசரச்வதிபொற் றாமரைப்புட் கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்தகுடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
6.75.10
754செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறித்தித்திக்குஞ் சிவபுவனத் தமுதம் போலும்
நெறிகொண்ட குழலியுமை பாக மாகநிறைந்தமரர் கணம்வணங்க நின்றார் போலும்
மறிகொண்ட கரதலத்தெம் மைந்தர் போலும்மதிலிலங்கைக் கோன்மலங்க வரைக்கீ ழிட்டுக்
குறிகொண்ட இன்னிசைகேட் டுகந்தார் போலுங்குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
6.75.11

திருப்புத்தூர் – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

755புரிந்தமரர் தொழுதேத்தும் புகழ்தக் கோன்காண்போர்விடையின் பாகன்காண் புவன மேழும்
விரிந்துபல உயிராகி விளங்கி னான்காண்விரைக்கொன்றைக் கண்ணியன்காண் வேத நான்குந்
தெரிந்துமுதல் படைத்தோனைச் சிரங்கொண் டோ ன்காண்தீர்த்தன்காண் திருமாலோர் பங்கத் தான்காண்
திருந்துவயல் புடைதழுவு திருப்புத் தூரில்திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
6.76.1
756வாராரும் முலைமங்கை பாகத் தான்காண்மாமறைக ளாயவன்காண் மண்ணும் விண்ணுங்
கூரார்வெந் தழலவனுங் காற்றும் நீருங்குலவரையும் ஆயவன்காண் கொடுநஞ் சுண்ட
காராருங் கண்டன்காண் எண்டோ ளன்காண்கயிலைமலைப் பொருப்பன்காண் விருப்போ டென்றுந்
தேராரும் நெடுவீதித் திருப்புத் தூரில்திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
6.76.2
757மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும்விருப்பவன்காண் பொருப்புவலிச் சிலைக்கை யோன்காண்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறிநற்கனகக் கிழிதருமிக் கருளி னோன்காண்
பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்றபுனக்காந்தட் கைகாட்டக் கண்டு வண்டு
தென்காட்டுஞ் செழும்புறவின் திருப்புத் தூரில்திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
6.76.3
758ஏடேறு மலர்க்கமலத் தயனும் மாலும்இந்திரனும் பணிந்தேத்த இருக்கின் றான்காண்
தோடேறு மலர்க்கடுக்கை வன்னி மத்தந்துன்னியசெஞ் சடையான்காண் துகள்தீர் சங்கம்
மாடேறி முத்தீனுங் கானல் வேலிமறைக்காட்டு மாமணிகாண் வளங்கொள் மேதி
சேடேறி மடுப்படியுந் திருப்புத் தூரில்திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
6.76.4
759கருமருவு வல்வினைநோய் காற்றி னான்காண்காமருபூங் கச்சியே கம்பத் தான்காண்
பெருமருவு பேருலகிற் பிணிகள் தீர்க்கும்பெரும்பற்றத் தண்புலியூர் மன்றா டீகாண்
தருமருவு கொடைத்தடக்கை அளகைக் கோன்றன்சங்காத்தி ஆரூரில் தனியா னைகாண்
திருமருவு பொழில்புடைசூழ் திருப்புத் தூரில்திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
6.76.5
760காம்பாடு தோளுமையாள் காண நட்டங்கலந்தாடல் புரிந்தவன்காண் கையில் வெய்ய
பாம்பாடப் படுதலையிற் பலிகொள் வான்காண்பவளத்தின் பருவரைபோற் படிமத் தான்காண்
தாம்பாடு சினவிடையே பகடாக் கொண்டசங்கரன்காண் பொங்கரவக் கச்சை யோன்காண்
சேம்பாடு வயல்புடைசூழ் திருப்புத் தூரில்திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
6.76.6
761வெறிவிரவு மலர்க்கொன்றை விளங்கு திங்கள்வன்னியொடு விரிசடைமேல் மிலைச்சி னான்காண்
பொறிவிரவு கதநாகம் அக்கி னோடுபூண்டவன்காண் பொருபுலித்தோ லாடை யான்காண்
அறிவரிய நுண்பொருள்க ளாயி னான்காண்ஆயிரம்பே ருடையவன்காண் அந்தண் கானற்
செறிபொழில்சூழ் மணிமாடத் திருப்புத் தூரில்திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
6.76.7
762புக்கடைந்த வேதியற்காய்க் காலற் காய்ந்தபுண்ணியன்காண் வெண்ணகைவெள் வளையா ளஞ்ச
மிக்கெதிர்ந்த கரிவெருவ உரித்த கோன்காண்வெண்மதியைக் கலைசேர்த்த திண்மை யோன்காண்
அக்கரும்பு பெரும்புன்னை நெருங்கு சோலைஆரூருக் கதிபதிகாண் அந்தண் தென்றல்
திக்கணைந்து வருமருங்கில் திருப்புத் தூரில்திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
6.76.8
763பற்றவன்காண் ஏனோர்க்கும் வானோ ருக்கும்பராபரன்காண் தக்கன்றன் வேள்வி செற்ற
கொற்றவன்காண் கொடுஞ்சினத்தை யடங்கச் செற்றுஞானத்தை மேன்மிகுத்தல் கோளாக் கொண்ட
பெற்றியன்காண் பிறங்கருவிக் கழுக்குன் றத்தெம்பிஞ்ஞகன்காண் பேரெழிலார் காம வேளைச்
செற்றவன்காண் சீர்மருவு திருப்புத் தூரில்திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
6.76.9
764உரமதித்த சலந்தரன்றன் ஆகங் கீண்டஓராழி படைத்தவன்காண் உலகு சூழும்
வரமதித்த கதிரவனைப் பற்கொண் டான்காண்வானவர்கோன் புயம்நெரித்த வல்லா ளன்காண்
அரமதித்துச் செம்பொன்னி னாரம் பூணாஅணிந்தவன்காண் அலைகடல்சூழ் இலங்கை வேந்தன்
சிரம்நெரித்த சேவடிகாண் திருப்புத் தூரில்திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
6.76.10

திருவாய்மூர் – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

765பாட வடியார் பரவக் கண்டேன்பத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம்
ஆடல் முழவம் அதிரக் கண்டேன்அங்கை அனல்கண்டேன் கங்கை யாளைக்
கோட லரவார் சடையிற் கண்டேன்கொக்கி னிதழ்கண்டேன் கொன்றை கண்டேன்
வாடல் தலையொன்று கையிற் கண்டேன்வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
6.77.1
766பாலின் மொழியாளோர் பாகங் கண்டேன்பதினெண் கணமும் பயிலக் கண்டேன்
நீல நிறமுண்ட கண்டங் கண்டேன்நெற்றி நுதல்கண்டேன் பெற்றங் கண்டேன்
காலைக் கதிர்செய் மதியங் கண்டேன்கரந்தை திருமுடிமேல் தோன்றக் கண்டேன்
மாலைச் சடையும் முடியுங் கண்டேன்வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
6.77.2
767மண்ணைத் திகழ நடம தாடும்வரைசிலம் பார்க்கின்ற பாதங் கண்டேன்
விண்ணிற் றிகழும் முடியுங் கண்டேன்வேடம் பலவாஞ் சரிதை கண்டேன்
நண்ணிப் பிரியா மழுவுங் கண்டேன்நாலு மறையங்க மோதக் கண்டேன்
வண்ணப் பொலிந்திலங்கு கோலங் கண்டேன்வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
6.77.3
768விளைத்த பெரும்பத்தி கூர நின்றுமெய்யடியார் தம்மை விரும்பக் கண்டேன்
இளைக்குங் கதநாக மேனி கண்டேன்என்பின் கலந்திகழ்ந்து தோன்றக் கண்டேன்
திளைக்குந் திருமார்பில் நீறு கண்டேன்சேணார் மதின்மூன்றும் பொன்ற வன்று
வளைத்த வரிசிலையுங் கையிற் கண்டேன்வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
6.77.4
769கான்மறையும் போதகத்தி னுரிவை கண்டேன்காலிற் கழல்கண்டேன் கரியின் றோல்கொண்
டூன்மறையப் போர்த்த வடிவுங் கண்டேன்உள்க மனம்வைத்த உணர்வுங் கண்டேன்
நான்மறை யானோடு நெடிய மாலும்நண்ணி வரக்கண்டேன் திண்ண மாக
மான்மறி தங்கையின் மருவக் கண்டேன்வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
6.77.5
770அடியார் சிலம்பொலிக ளார்ப்பக் கண்டேன்அவ்வவர்க்கே ஈந்த கருணை கண்டேன்
முடியார் சடைமேல் அரவ மூழ்கமூரிப் பிறைபோய் மறையக் கண்டேன்
கொடியா ரதன்மேல் இடபங் கண்டேன்கோவணமுங் கீளுங் குலாவக் கண்டேன்
வடியாரும் மூவிலைவேல் கையிற் கண்டேன்வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
6.77.6
771குழையார் திருத்தோடு காதிற் கண்டேன்கொக்கரையுஞ் சச்சரியுங் கொள்கை கண்டேன்
இழையார் புரிநூல் வலத்தே கண்டேன்ஏழிசை யாழ்வீணை முரலக் கண்டேன்
தழையார் சடைகண்டேன் தன்மை கண்டேன்தக்கையொடு தாளங் கறங்கக் கண்டேன்
மழையார் திருமிடறும் மற்றுங் கண்டேன்வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
6.77.7
772பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன்போற்றிசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்
பரிந்தார்க் கருளும் பரிசுங் கண்டேன்பாராகிப் புனலாகி நிற்கை கண்டேன்
விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன்மெல்லியலும் விநாயகனுந் தோன்றக் கண்டேன்
மருந்தாய்ப் பிணிதீர்க்கு மாறு கண்டேன்வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
6.77.8
773மெய்யன்ப ரானார்க் கருளுங் கண்டேன்வேடுவனாய் நின்ற நிலையுங் கண்டேன்
கையம் பரனெரித்த காட்சி கண்டேன்கங்கணமும் அங்கைக் கனலுங் கண்டேன்
ஐயம் பலவூர் திரியக் கண்டேன்அன்றவன் றன்வேள்வி அழித்து கந்து
வையம் பரவ இருத்தல் கண்டேன்வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
6.77.9
774கலங்க இருவர்க் கழலாய் நீண்டகாரணமுங் கண்டேன் கருவாய் நின்று
பலங்கள் தரித்துகந்த பண்புங் கண்டேன்பாடல் ஒலியெலாங் கூடக் கண்டேன்
இலங்கைத் தலைவன் சிரங்கள் பத்தும்இறுத்தவனுக் கீந்த பெருமை கண்டேன்
வலங்கைத் தலத்துள் அனலுங் கண்டேன்வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
6.77.10

திருவாலங்காடு – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

775ஒன்றா வுலகனைத்து மானார் தாமேஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே
நின்றாகி யெங்கும் நிமிர்ந்தார் தாமேநீர்வளிதீ யாகாச மானார் தாமே
கொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமேகோலப் பழனை யுடையார் தாமே
சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமேதிருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
6.78.1
776மலைமகளைப் பாக மமர்ந்தார் தாமேவானோர் வணங்கப் படுவார் தாமே
சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமேசரணென் றிருப்பார்கட் கன்பர் தாமே
பலபலவும் வேடங்க ளானார் தாமேபழனை பதியா வுடையார் தாமே
சிலைமலையா மூவெயிலும் அட்டார் தாமேதிருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
6.78.2
777ஆவுற்ற ஐந்து முகந்தார் தாமேஅளவில் பெருமை யுடையார் தாமே
பூவுற்ற நாற்றமாய் நின்றார் தாமேபுனிதப் பொருளாகி நின்றார் தாமே
பாவுற்ற பாட லுகப்பார் தாமேபழனை பதியா வுடையார் தாமே
தேவுற் றடிபரவ நின்றார் தாமேதிருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
6.78.3
778நாறுபூங் கொன்றை முடியார் தாமேநான்மறையோ டாறங்கஞ் சொன்னார் தாமே
மாறிலா மேனி யுடையார் தாமேமாமதியஞ் செஞ்சடைமேல் வைத்தார் தாமே
பாறினார் வெண்டலையி லுண்டார் தாமேபழனை பதியா வுடையார் தாமே
தேறினார் சித்தத் திருந்தார் தாமேதிருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
6.78.4
779அல்லும் பகலுமாய் நின்றார் தாமேஅந்தியுஞ் சந்தியு மானார் தாமே
சொல்லும் பொருளெலா மானார் தாமேதோத்திரமுஞ் சாத்திரமு மானார் தாமே
பல்லுரைக்கும் பாவெலா மானார் தாமேபழனை பதியா வுடையார் தாமே
செல்லும் நெறிகாட்ட வல்லார் தாமேதிருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
6.78.5
780தொண்டாய்ப் பணிவார்க் கணியார் தாமேதூநீ றணியுஞ் சுவண்டர் தாமே
தண்டா மரையானும் மாலுந் தேடத்தழலுருவா யோங்கி நிமிர்ந்தார் தாமே
பண்டா னிசைபாட நின்றார் தாமேபழனை பதியா வுடையார் தாமே
திண்டோ ள்க ளெட்டு முடையார் தாமேதிருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
6.78.6
781மையாருங் கண்ட மிடற்றார் தாமேமயானத்தி லாடல் மகிழ்ந்தார் தாமே
ஐயாறும் ஆரூரும் ஆனைக் காவும்அம்பலமுங் கோயிலாக் கொண்டார் தாமே
பையா டரவ மசைத்தார் தாமேபழனை பதியா வுடையார் தாமே
செய்யாள் வழிபட நின்றார் தாமேதிருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
6.78.7
782விண்முழுதும் மண்முழுது மானார் தாமேமிக்கோர்க ளேத்துங் குணத்தார் தாமே
கண்விழியாற் காமனையுங் காய்ந்தார் தாமேகாலங்க ளூழி கடந்தார் தாமே
பண்ணியலும் பாட லுகப்பார் தாமேபழனை பதியா வுடையார் தாமே
திண்மழுவா ளேந்து கரத்தார் தாமேதிருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
6.78.8
783காரார் கடல்நஞ்சை யுண்டார் தாமேகயிலை மலையை யுடையார் தாமே
ஊரா வேகம்பம் உகந்தார் தாமேஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே
பாரார் புகழப் படுவார் தாமேபழனை பதியா வுடையார் தாமே
தீராத வல்வினைநோய் தீர்ப்பார் தாமேதிருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
6.78.9
784மாலைப் பிறைசென்னி வைத்தார் தாமேவண்கயிலை மாமலையை வந்தி யாத
நீலக் கடல்சூ ழிலங்கைக் கோனைநெரிய விரலா லடர்த்தார் தாமே
பாலொத்த மேனி நிறத்தார் தாமேபழனை பதியா வுடையார் தாமே
சீலத்தா ரேத்துந் திறத்தார் தாமேதிருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
6.78.10

திருத்தலையாலங்காடு – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

785தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் றன்னைச்சூழ்நரகில் வீழாமே காப்பான் றன்னை
அண்டத்துக் கப்பாலைக் கப்பா லானைஆதிரைநா ளாதரித்த அம்மான் றன்னை
முண்டத்தின் முளைத்தெழுந்த தீயா னானைமூவுருவத் தோருருவாய் முதலாய் நின்ற
தண்டத்திற் றலையாலங் காடன் றன்னைச்சாராதே சாலநாள் போக்கி னேனே.
6.79.1
786அக்கிருந்த அரையானை அம்மான் றன்னைஅவுணர்புர மொருநொடியி லெரிசெய் தானைக்
கொக்கிருந்த மகுடத்தெங் கூத்தன் றன்னைக்குண்டலஞ்சேர் காதானைக் குழைவார் சிந்தை
புக்கிருந்து போகாத புனிதன் றன்னைப்புண்ணியனை எண்ணருஞ்சீர்ப் போக மெல்லாந்
தக்கிருந்த தலையாலங் காடன் றன்னைச்சாராதே சாலநாள் போக்கி னேனே.
6.79.2
787மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தைவிளங்கிளமா மதிசூடும் விகிர்தன் றன்னை
எய்த்தவமே உழிதந்த ஏழை யேனைஇடர்க்கடலில் வீழாமே யேற வாங்கிப்
பொய்த்தவத்தா ரறியாத நெறிநின் றானைப்புனல்கரந்திட் டுமையொடொரு பாகம் நின்ற
தத்துவனைத் தலையாலங் காடன் றன்னைச்சாராதே சாலநாள் போக்கி னேனே.
6.79.3
788சிவனாகித் திசைமுகனாய்த் திருமா லாகிச்செழுஞ்சுடராய்த் தீயாகி நீரு மாகிப்
புவனாகிப் புவனங்க ளனைத்து மாகிப்பொன்னாகி மணியாகி முத்து மாகிப்
பவனாகிப் பவனங்க ளனைத்து மாகிப்பசுவேறித் திரிவானோர் பவனாய் நின்ற
தவனாய தலையாலங் காடன் றன்னைச்சாராதே சாலநாள் போக்கி னேனே.
6.79.4
789கங்கையெனுங் கடும்புனலைக் கரந்தான் றன்னைக்காமருபூம் பொழிற்கச்சிக் கம்பன் றன்னை
அங்கையினில் மான்மறியொன் றேந்தி னானைஐயாறு மேயானை ஆரூ ரானைப்
பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் றன்னைப்பரிதிநிய மத்தானைப் பாசூ ரானைச்
சங்கரனைத் தலையாலங் காடன் றன்னைச்சாராதே சாலநாள் போக்கி னேனே.
6.79.5
790விடந்திகழும் அரவரைமேல் வீக்கி னானைவிண்ணவர்க்கு மெண்ணரிய அளவி னானை
அடைந்தவரை அமருலக மாள்விப் பானைஅம்பொன்னைக் கம்பமா களிறட் டானை
மடந்தையொரு பாகனை மகுடந் தன்மேல்வார்புனலும் வாளரவும் மதியும் வைத்த
தடங்கடலைத் தலையாலங் காடன் றன்னைச்சாராதே சாலநாள் போக்கி னேனே.
6.79.6
791விடையேறிக் கடைதோறும் பலிகொள் வானைவீரட்டம் மேயானை வெண்ணீற் றானை
முடைநாறு முதுகாட்டி லாட லானைமுன்னானைப் பின்னானை அந்நா ளானை
உடையாடை யுரிதோலே உகந்தான் றன்னைஉமையிருந்த பாகத்து ளொருவன் றன்னைச்
சடையானைத் தலையாலங் காடன் றன்னைசாராதே சாலநாள் போக்கி னேனே.
6.79.7
792கரும்பிருந்த கட்டிதனைக் கனியைத் தேனைக்கன்றாப்பின் நடுதறியைக் காறை யானை
இரும்பமர்ந்த மூவிலைவே லேந்தி னானைஎன்னானைத் தென்னானைக் காவான் றன்னைச்
சுரும்பமரும் மலர்க்கொன்றை சூடி னானைத்தூயானைத் தாயாகி உலகுக் கெல்லாந்
தரும்பொருளைத் தலையாலங் காடன் றன்னைச்சாராதே சாலநாள் போக்கி னேனே.
6.79.8
793பண்டளவு நரம்போசைப் பயனைப் பாலைப்படுபயனைக் கடுவெளியைக் கனலைக் காற்றைக்
கண்டளவிற் களிகூர்வார்க் கெளியான் றன்னைக்காரணனை நாரணனைக் கமலத் தோனை
எண்டளவி லென்னெஞ்சத் துள்ளே நின்றஎம்மானைக் கைம்மாவி னுரிவை பேணுந்
தண்டரனைத் தலையாலங் காடன் றன்னைச்சாராதே சாலநாள் போக்கி னேனே.
6.79.9
794கைத்தலங்கள் இருபதுடை அரக்கர் கோமான்கயிலைமலை அதுதன்னைக் கருதா தோடி
முத்திலங்கு முடிதுளங்க வளைக ளெற்றிமுடுகுதலுந் திருவிரலொன் றவன்மேல் வைப்பப்
பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப்பரிந்தவனுக் கிராவணனென் றீந்த நாம
தத்துவனைத் தலையாலங் காடன் றன்னைச்சாராதே சாலநாள் போக்கி னேனே.
6.79.10

திருமாற்பேறு – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

795பாரானைப் பாரினது பயனா னானைப்படைப்பாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் றன்னை
ஆராத இன்னமுதை அடியார் தங்கட்கனைத்துலகு மானானை அமரர் கோனைக்
காராருங் கண்டனைக் கயிலை வேந்தைக்கருதுவார் மனத்தானைக் காலற் செற்ற
சீரானைச் செல்வனைத் திருமாற் பேற்றெஞ்செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
6.80.1
796விளைக்கின்ற நீராகி வித்து மாகிவிண்ணோடு மண்ணாகி விளங்கு செம்பொன்
துளைக்கின்ற துளையாகிச் சோதி யாகித்தூண்டரிய சுடராகித் துளக்கில் வான்மேல்
முளைக்கின்ற கதிர்மதியு மரவு மொன்றிமுழங்கொலிநீர்க் கங்கையொடு மூவா தென்றுந்
திளைக்கின்ற சடையானைத் திருமாற் பேற்றெஞ்செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
6.80.2
797மலைமகள்தங் கோனவனை மாநீர் முத்தைமரகதத்தை மாமணியை மல்கு செல்வக்
கலைநிலவு கையானைக் கம்பன் றன்னைக்காண்பினிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை
விலைபெரிய வெண்ணீற்று மேனி யானைமெய்யடியார் வேண்டுவதே வேண்டு வானைச்
சிலைநிலவு கரத்தானைத் திருமாற் பேற்றெஞ்செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
6.80.3
798உற்றானை உடல்தனக்கோர் உயிரா னானைஓங்காரத் தொருவனையங் குமையோர் பாகம்
பெற்றானைப் பிஞ்ஞகனைப் பிறவா தானைப்பெரியனவும் அரியனவு மெல்லாம் முன்னே
கற்றானைக் கற்பனவுந் தானே யாயகச்சியே கம்பனைக் காலன் வீழச்
செற்றானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
6.80.4
799நீறாகி நீறுமிழும் நெருப்பு மாகிநினைவாகி நினைவினிய மலையான் மங்கை
கூறாகிக் கூற்றாகிக் கோளு மாகிக்குணமாகிக் குறையாத உவகைக் கண்ணீர்
ஆறாத ஆனந்தத் தடியார் செய்தஅனாசாரம் பொறுத்தருளி அவர்மே லென்றுஞ்
சீறாத பெருமானைத் திருமாற் பேற்றெஞ்செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
6.80.5
800மருவினிய மறைப்பொருளை மறைக்காட் டானைமறப்பிலியை மதியேந்து சடையான் றன்னை
உருநிலவு மொண்சுடரை உம்ப ரானைஉரைப்பினிய தவத்தானை உலகின் வித்தைக்
கருநிலவு கண்டனைக் காளத் தியைக்கருதுவார் மனத்தானைக் கல்வி தன்னைச்
செருநிலவு படையானைத் திருமாற் பேற்றெஞ்செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
6.80.6
801பிறப்பானைப் பிறவாத பெருமை யானைப்பெரியானை அரியானைப் பெண்ணா ணாய
நிறத்தானை நின்மலனை நினையா தாரைநினையானை நினைவோரை நினைவோன் றன்னை
அறத்தானை அறவோனை ஐயன் றன்னைஅண்ணல்தனை நண்ணரிய அமர ரேத்துந்
திறத்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
6.80.7
802வானகத்தில் வளர்முகிலை மதியந் தன்னைவணங்குவார் மனத்தானை வடிவார் பொன்னை
ஊனகத்தில் உறுதுணையை உலவா தானைஒற்றியூர் உத்தமனை ஊழிக் கன்றைக்
கானகத்துக் கருங்களிற்றைக் காளத் தியைக்கருதுவார் கருத்தானைக் கருவை மூலத்
தேனகத்தி லின்சுவையைத் திருமாற் பேற்றெஞ்செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
6.80.8
803முற்றாத முழுமுதலை முளையை மொட்டைமுழுமலரின் மூர்த்தியை முனியா தென்றும்
பற்றாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் றன்னைப்பராபரனைப் பரஞ்சுடரைப் பரிவோர் நெஞ்சில்
உற்றானை உயர்கருப்புச் சிலையோன் நீறாய்ஒள்ளழல்வாய் வேவவுறு நோக்கத் தானைச்
செற்றானைத் திரிபுரங்கள் திருமாற் பேற்றெஞ் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
6.80.9
804விரித்தானை நான்மறையோ டங்க மாறும்வெற்பெடுத்த இராவணனை விரலா லூன்றி
நெரித்தானை நின்மலனை அம்மான் றன்னைநிலாநிலவு செஞ்சடைமேல் நிறைநீர்க் கங்கை
தரித்தானைச் சங்கரனைச் சம்பு தன்னைத்தரியலர்கள் புரமூன்றுந் தழல்வாய் வேவச்
சிரித்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
6.80.10
   

திருக்கோடிகா – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

805கண்டலஞ்சேர் நெற்றியிளங் காளை கண்டாய்கன்மதில்சூழ் கந்தமா தனத்தான் கண்டாய்
மண்டலஞ்சேர் மயக்கறுக்கும் மருந்து கண்டாய் மதிற்கச்சி யேகம்ப மேயான் கண்டாய்
விண்டலஞ்சேர் விளக்கொளியாய் நின்றான் கண்டாய்மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்
கொண்டலஞ்சேர் கண்டத்தெங் கூத்தன் கண்டாய்கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.
6.81.1
806வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்மறைக்காட் டுறையும் மணாளன் கண்டாய்
பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்
செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்திருவாரூர்த் திருமூலத் தானன் கண்டாய்
கொண்டாடு மடியவர்தம் மனத்தான் கண்டாய்கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.
6.81.2
807அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய்அடியார்கட் காரமுத மானான் கண்டாய்
மலையார்ந்த மடமங்கை பங்கன் கண்டாய்வானோர்கள் முடிக்கணியாய் நின்றான் கண்டாய்
இலையார்ந்த திரிசூலப் படையான் கண்டாய்ஏழுலகு மாய்நின்ற எந்தை கண்டாய்
கொலையார்ந்த குஞ்சரத்தோல் போர்த்தான் கண்டாய்கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.
6.81.3
808மற்றாருந் தன்னொப்பா ரில்லான் கண்டாய்மயிலாடு துறையிடமா மகிழ்ந்தான் கண்டாய்
புற்றா டரவணிந்த புனிதன் கண்டாய்பூந்துருத்திப் பொய்யிலியாய் நின்றான் கண்டாய்
அற்றார்கட் கற்றானாய் நின்றான் கண்டாய்ஐயா றகலாத ஐயன் கண்டாய்
குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தன் கண்டாய்கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.
6.81.4
809வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய்
போரார்ந்த மால்விடையொன் றூர்வான் கண்டாய்புகலூரை யகலாத புனிதன் கண்டாய்
நீரார்ந்த நிமிர்சடையொன் றுடையான் கண்டாய்நினைப்பார்தம் வினைப்பாரம் இழிப்பான் கண்டாய்
கூரார்ந்த மூவிலைவேற் படையான் கண்டாய்கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.
6.81.5
810கடிமலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய்கண்ணப்ப விண்ணப்புக் கொடுத்தான் கண்டாய்
படிமலிந்த பல்பிறவி யறுப்பான் கண்டாய்பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்
அடிமலிந்த சிலம்பலம்பத் திரிவான் கண்டாய்அமரர்கணந் தொழுதேத்தும் அம்மான் கண்டாய்
கொடிமலிந்த மதில்தில்லைக் கூத்தன் கண்டாய்கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.
6.81.6
811உழையாடு கரதலமொன் றுடையான் கண்டாய்ஒற்றியூ ரொற்றியா வுடையான் கண்டாய்
கழையாடு கழுக்குன்ற மமர்ந்தான் கண்டாய்காளத்திக் கற்பகமாய் நின்றான் கண்டாய்
இழையாடு மெண்புயத்த இறைவன் கண்டாய்என்னெஞ்சத் துள்நீங்கா எம்மான் கண்டாய்
குழையாட நடமாடுங் கூத்தன் கண்டாய்கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.
6.81.7
812படமாடு பன்னகக்கச் சசைத்தான் கண்டாய்பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்
நடமாடி ஏழுலகுந் திரிவான் கண்டாய்நான்மறையின் பொருள்கண்டாய் நாதன் கண்டாய்
கடமாடு களிறுரித்த கண்டன் கண்டாய்கயிலாயம் மேவி யிருந்தான் கண்டாய்
குடமாடி யிடமாகக் கொண்டான் கண்டாய்கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.
6.81.8
 இப்பதிகத்தில் 9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.6.81.9-10

திருச்சாய்க்காடு – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

813வானத் திளமதியும் பாம்புந் தன்னில்வளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலுந்
தேனைத் திளைத்துண்டு வண்டு பாடுந்தில்லை நடமாடுந் தேவர் போலும்
ஞானத்தின் ஒண்சுடராய் நின்றார் போலும்நன்மையுந் தீமையு மானார் போலுந்
தேனொத் தடியார்க் கினியார் போலுந்திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
6.82.1
814விண்ணோர் பரவநஞ் சுண்டார் போலும்வியன்துருத்தி வேள்விக் குடியார் போலும்
அண்ணா மலையுறையும் அண்ணல் போலும்அதியரைய மங்கை யமர்ந்தார் போலும்
பண்ணார் களிவண்டு பாடி யாடும்பராய்த்துறையுள் மேய பரமர் போலுந்
திண்ணார் புகார்முத் தலைக்குந் தெண்ணீர்த்திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
6.82.2
815கானிரிய வேழ முரித்தார் போலுங்காவிரிப்பூம் பட்டினத் துள்ளார் போலும்
வானிரிய வருபுரமூன் றெரித்தார் போலும்வடகயிலை மலையதுதம் மிருக்கை போலும்
ஊனிரியத் தலைகலனா வுடையார் போலும்உயர்தோணி புரத்துறையு மொருவர் போலுந்
தேனிரிய மீன்பாயுந் தெண்ணீர்ப் பொய்கைத்திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
6.82.3
816ஊனுற்ற வெண்டலைசேர் கையர் போலும்ஊழி பலகண் டிருந்தார் போலும்
மானுற்ற கரதலமொன் றுடையார் போலும்மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலுங்
கானுற்ற ஆட லமர்ந்தார் போலுங்காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலுந்
தேனுற்ற சோலை திகழ்ந்து தோன்றுந் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
6.82.4
817கார்மல்கு கொன்றையந் தாரார் போலுங்காலனையும் ஓருதையாற் கண்டார் போலும்
பார்மல்கி யேத்தப் படுவார் போலும்பருப்பதத்தே பல்லூழி நின்றார் போலும்
ஊர்மல்கு பிச்சைக் குழன்றார் போலும்ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலுஞ்
சீர்மல்கு பாட லுகந்தார் போலுந்திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
6.82.5
818மாவாய்ப் பிளந்துகந்த மாலுஞ் செய்யமலரவனுந் தாமேயாய் நின்றார் போலும்
மூவாத மேனி முதல்வர் போலும்முதுகுன்ற மூதூ ருடையார் போலுங்
கோவாய முனிதன்மேல் வந்த கூற்றைக்குரைகழலா லன்று குமைத்தார் போலுந்
தேவாதி தேவர்க் கரியார் போலுந்திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
6.82.6
819கடுவெளியோ டோ ரைந்து மானார் போலுங்காரோணத் தென்று மிருப்பார் போலும்
இடிகுரல்வாய்ப் பூதப் படையார் போலும்ஏகம்பம் மேவி யிருந்தார் போலும்
படியொருவ ரில்லாப் படியார் போலும்பாண்டிக் கொடுமுடியுந் தம்மூர் போலுஞ்
செடிபடுநோ யடியாரைத் தீர்ப்பார் போலுந்திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
6.82.7
820விலையிலா ஆரஞ்சேர் மார்பர் போலும்வெண்ணீறு மெய்க்கணிந்த விகிர்தர் போலும்
மலையினார் மங்கை மணாளர் போலும்மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலுந்
தொலைவிலார் புரமூன்றுந் தொலைத்தார் போலுஞ்சோற்றுத் துறைதுருத்தி யுள்ளார் போலுஞ்
சிலையினார் செங்க ணரவர் போலுந்திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
6.82.8
821அல்ல லடியார்க் கறுப்பார் போலும்அமருலகந் தம்மடைந்தார்க் காட்சி போலும்
நல்லமும் நல்லூரும் மேயார் போலும்நள்ளாறு நாளும் பிரியார் போலும்
முல்லை முகைநகையாள் பாகர் போலும்முன்னமே தோன்றி முளைத்தார் போலுந்
தில்லை நடமாடுந் தேவர் போலுந்திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
6.82.9
822உறைப்புடைய இராவணன்பொன் மலையைக் கையால்ஊக்கஞ்செய் தெடுத்தலுமே உமையா ளஞ்ச
நிறைப்பெருந்தோள் இருபதும்பொன் முடிகள் பத்தும்நிலஞ்சேர விரல்வைத்த நிமலர் போலும்
பிறைப்பிளவு சடைக்கணிந்த பெம்மான் போலும்பெண்ணா ணுருவாகி நின்றார் போலுஞ்
சிறப்புடைய அடியார்கட் கினியார் போலுந்திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
6.82.10

திருப்பாசூர் – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

823விண்ணாகி நிலனாகி விசும்பு மாகிவேலைசூழ் ஞாலத்தார் விரும்பு கின்ற
எண்ணாகி எழுத்தாகி இயல்பு மாகிஏழுலகுந் தொழுதேத்திக் காண நின்ற
கண்ணாகி மணியாகிக் காட்சி யாகிக்காதலித்தங் கடியார்கள் பரவ நின்ற
பண்ணாகி இன்னமுதாம் பாசூர் மேயபரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
6.83.1
824வேதமோர் நான்காயா றங்க மாகிவிரிக்கின்ற பொருட்கெல்லாம் வித்து மாகிக்
கூதலாய்ப் பொழிகின்ற மாரி யாகிக்குவலயங்கள் முழுதுமாய்க் கொண்ட லாகிக்
காதலால் வானவர்கள் போற்றி யென்றுகடிமலர்க ளவைதூவி ஏத்த நின்ற
பாதியோர் மாதினனைப் பாசூர் மேயபரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
6.83.2
825தடவரைக ளேழுமாய்க் காற்றாய்த் தீயாய்த்தண்விசும்பாய்த் தண்விசும்பி னுச்சி யாகிக்
கடல்வலயஞ் சூழ்ந்ததொரு ஞால மாகிக்காண்கின்ற கதிரவனும் மதியு மாகிக்
குடமுழவச் சதிவழியே அனல்கை யேந்திக்கூத்தாட வல்ல குழக னாகிப்
படவரவொன் றதுவாட்டிப் பாசூர் மேயபரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
6.83.3
826நீராருஞ் செஞ்சடைமேல் அரவங் கொன்றைநிறைமதிய முடன்சூடி நீதி யாலே
சீராரும் மறையோதி உலக முய்யச்செழுங்கடலைக் கடைந்தகடல் நஞ்ச முண்ட
காராருங் கண்டனைக் கச்சி மேயகண்ணுதலைக் கடலொற்றி கருதி னானைப்
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர்ப்பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
6.83.4
827வேடனாய் விசயன்றன் வியப்பைக் காண்பான்விற்பிடித்துக் கொம்புடைய ஏனத் தின்பின்
கூடினார் உமையவளுங் கோலங் கொள்ளக்கொலைப்பகழி யுடன்கோத்துக் கோரப் பூசல்
ஆடினார் பெருங்கூத்துக் காளி காணஅருமறையோ டாறங்கம் ஆய்ந்து கொண்டு
பாடினார் நால்வேதம் பாசூர் மேயபரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
6.83.5
828புத்தியினாற் சிலந்தியுந்தன் வாயின் நூலாற்பொதுப்பந்தர் அதுவிழைத்துச் சருகால் மேய்ந்த
சித்தியினால் அரசாண்டு சிறப்புச் செய்யச்சிவகணத்துப் புகப்பெய்தார் திறலான் மிக்க
வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்புவிரவியவா கண்டதற்கு வீடு காட்டிப்
பத்தர்களுக் கின்னமுதாம் பாசூர் மேயபரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
6.83.6
829இணையொருவர் தாமல்லால் யாரு மில்லார்இடைமருதோ டேகம்பத் தென்றும் நீங்கார்
அணைவரியர் யாவர்க்கும் ஆதி தேவர்அருமந்த நன்மையெலாம் அடியார்க் கீவர்
தணல்முழுகு பொடியாடுஞ் செக்கர் மேனித்தத்துவனைச் சாந்தகிலி னளறு தோய்ந்த
பணைமுலையாள் பாகனையெம் பாசூர் மேயபரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
6.83.7
830அண்டவர்கள் கடல்கடைய அதனுட் டோ ன்றிஅதிர்ந்தெழுந்த ஆலாலம் வேலை ஞாலம்
எண்டிசையுஞ் சுடுகின்ற ஆற்றைக் கண்டும்இமைப்பளவில் உண்டிருண்ட கண்டர் தொண்டர்
வண்டுபடு மதுமலர்கள் தூவி நின்றுவானவர்கள் தானவர்கள் வணங்கி யேத்தும்
பண்டரங்க வேடனையெம் பாசூர் மேயபரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
6.83.8
831ஞாலத்தை யுண்டதிரு மாலும் மற்றைநான்முகனு மறியாத நெறியான் கையிற்
சூலத்தால் அந்தகனைச் சுருளக் கோத்துத்தொல்லுலகிற் பல்லுயிரைக் கொல்லுங் கூற்றைக்
காலத்தா லுதைசெய்து காதல் செய்தஅந்தணனைக் கைக்கொண்ட செவ்வான் வண்ணர்
பாலொத்த வெண்ணீற்றர் பாசூர் மேயபரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
6.83.9
832வேந்தன்நெடு முடியுடைய அரக்கர் கோமான்மெல்லியலாள் உமைவெருவ விரைந்திட் டோ டிச்
சாந்தமென நீறணிந்தான் கயிலை வெற்பைத்தடக்கைகளா லெடுத்திடலுந் தாளா லூன்றி
ஏந்துதிரள் திண்டோ ளுந் தலைகள் பத்தும் இறுத்தவன்றன் இசைகேட்டு விரக்கங் கொண்ட
பாந்தளணி சடைமுடியெம் பாசூர் மேயபரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
6.83.1

திருச்செங்காட்டங்குடி – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

833பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக் கத்தைப்பேணிநினைந் தெழுவார்தம் மனத்தே மன்னி
இருந்தமணி விளக்கதனை நின்ற பூமேல்எழுந்தருளி இருந்தானை எண்டோ ள் வீசி
அருந்திறன்மா நடமாடும் அம்மான் றன்னைஅங்கனகச் சுடர்க்குன்றை அன்றா லின்கீழ்த்
திருந்துமறைப் பொருள்நால்வர்க் கருள்செய் தானைச்செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.1
834துங்கநகத் தாலன்றித் தொலையா வென்றித்தொகுதிறலவ் விரணியனை ஆகங் கீண்ட
அங்கனகத் திருமாலும் அயனுந் தேடும்ஆரழலை அனங்கனுடல் பொடியாய் வீழ்ந்து
மங்கநகத் தான்வல்ல மருந்து தன்னைவண்கயிலை மாமலைமேல் மன்னி நின்ற
செங்கனகத் திரள்தோளெஞ் செல்வன் றன்னைச்செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.2
835உருகுமனத் தடியவர்கட் கூறுந் தேனைஉம்பர்மணி முடிக்கணியை உண்மை நின்ற
பெருகுநிலைக் குறியாளர் அறிவு தன்னைப்பேணியஅந் தணர்க்குமறைப் பொருளைப் பின்னும்
முருகுவிரி நறுமலர்மே லயற்கும் மாற்கும்முழுமுதலை மெய்த்தவத்தோர் துணையை வாய்த்த
திருகுகுழல் உமைநங்கை பங்கன் றன்னைச்செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.3
836கந்தமலர்க் கொன்றையணி சடையான் றன்னைக்கதிர்விடுமா மணிபிறங்கு கனகச் சோதிச்
சந்தமலர்த் தெரிவையொரு பாகத் தானைச்சராசரநற் றாயானை நாயேன் முன்னைப்
பந்தமறுத் தாளாக்கிப் பணிகொண் டாங்கேபன்னியநூற் றமிழ்மாலை பாடு வித்தென்
சிந்தைமயக் கறுத்ததிரு வருளி னானைச்செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.4
837நஞ்சடைந்த கண்டத்து நாதன் றன்னைநளிர்மலர்ப்பூங் கணைவேளை நாச மாக
வெஞ்சினத்தீ விழித்ததொரு நயனத் தானைவியன்கெடில வீரட்டம் மேவி னானை
மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதிமதிலாரூ ரிடங்கொண்ட மைந்தன் றன்னைச்
செஞ்சினத்த திரிசூலப் படையான் றன்னைச்செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.5
838கன்னியையங் கொருசடையிற் கரந்தான் றன்னைக்கடவூரில் வீரட்டங் கருதி னானைப்
பொன்னிசூழ் ஐயாற்றெம் புனிதன் றன்னைப்பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தி னானைப்
பன்னியநான் மறைவிரிக்கும் பண்பன் றன்னைப்பரிந்திமையோர் தொழுதேத்திப் பரனே யென்று
சென்னிமிசைக் கொண்டணிசே வடியி னானைச்செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.6
839எத்திக்கு மாய்நின்ற இறைவன் றன்னைஏகம்பம் மேயானை இல்லாத் தெய்வம்
பொத்தித்தம் மயிர்பறிக்குஞ் சமணர் பொய்யிற்புக்கழுந்தி வீழாமே போத வாங்கிப்
பத்திக்கே வழிகாட்டிப் பாவந் தீர்த்துப்பண்டைவினைப் பயமான எல்லாம் போக்கித்
தித்தித்தென் மனத்துள்ளே ஊறுந் தேனைச்செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.7
840கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னைக்கற்றார்கள் உற்றோருங் காத லானைப்
பொல்லாத நெறியுகந்தார் புரங்கள் மூன்றும்பொன்றிவிழ அன்றுபொரு சரந்தொட் டானை
நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்கநிறைதவத்தை அடியேற்கு நிறைவித் தென்றுஞ்
செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைச்செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.8
841அரியபெரும் பொருளாகி நின்றான் றன்னைஅலைகடலில் ஆலால மமுது செய்த
கரியதொரு கண்டத்துச் செங்க ணேற்றுக்கதிர்விடுமா மணிபிறங்கு காட்சி யானை
உரியபல தொழிற்செய்யு மடியார் தங்கட்குலகமெலாம் முழுதளிக்கும் உலப்பி லானைத்
தெரிவையொரு பாகத்துச் சேர்த்தி னானைச்செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.9
842போரரவம் மால்விடையொன் றூர்தி யானைப்புறம்பயமும் புகலூரும் மன்னி னானை
நீரரவச் செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்நீங்காமை வைத்தானை நிமலன் றன்னைப்
பேரரவப் புட்பகத்தே ருடைய வென்றிப்பிறங்கொளிவா ளரக்கன்முடி யிடியச் செற்ற
சீரரவக் கழலானைச் செல்வன் றன்னைச்செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.1

திருமுண்டீச்சரம் – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

843ஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்கு நாணாஅடியவர்கட் கன்பன்காண் ஆனைத் தோலைப்
போர்த்தான்காண் புரிசடைமேற் புனலேற் றான்காண்புறங்காட்டி லாடல் புரிந்தான் றான்காண்
காத்தான்காண் உலகேழுங் கலங்கா வண்ணங்கனைகடல்வாய் நஞ்சதனைக் கண்டத் துள்ளே
சேர்த்தான்காண் திருமுண்டீச் சரத்து மேயசிவலோகன் காணவனென் சிந்தை யானே.
6.85.1
844கருத்தன்காண் கமலத்தோன் றலையி லொன்றைக்காய்ந்தான்காண் பாய்ந்தநீர் பரந்த சென்னி
ஒருத்தன்காண் உமையவளோர் பாகத் தான்காண்ஓருருவின் மூவுருவா யொன்றாய் நின்ற
விருத்தன்காண் விண்ணவர்க்கும் மேலா னான்காண்மெய்யடியா ருள்ளத்தே விரும்பி நின்ற
திருத்தன்காண் திருமுண்டீச் சரத்து மேயசிவலோகன் காணவனென் சிந்தை யானே.
6.85.2
845நம்பன்காண் நரைவிடையொன் றேறி னான்காண்நாதன்காண் கீதத்தை நவிற்றி னான்காண்
இன்பன்காண் இமையாமுக் கண்ணி னான்காண்ஏசற்று மனமுருகும் அடியார் தங்கட்
கன்பன்காண் ஆரழல தாடி னான்காண்அவனிவனென் றியாவர்க்கும் அறிய வொண்ணாச்
செம்பொன்காண் திருமுண்டீச் சரத்து மேயசிவலோகன் காணவனென் சிந்தை யானே.
6.85.3
846மூவன்காண் மூவர்க்கும் முதலா னான்காண்முன்னுமாய்ப் பின்னுமாய் முடிவா னான்காண்
காவன்காண் உலகுக்கோர் கண்ணா னான்காண்கங்காளன் காண்கயிலை மலையி னான்காண்
ஆவன்காண் ஆவகத்தஞ் சாடி னான்காண்ஆரழலாய் அயற்கரிக்கும் அறிய வொண்ணாத்
தேவன்காண் திருமுண்டீச் சரத்து மேயசிவலோகன் காணவனென் சிந்தை யானே.
6.85.4
847கானவன்காண் கானவனாய்ப் பொருதான் றான்காண்கனலாட வல்லான்காண் கையி லேந்தும்
மானவன்காண் மறைநான்கு மாயி னான்காண்வல்லேறொன் றதுவேற வல்லான் றான்காண்
ஊனவன்காண் உலகத்துக் குயிரா னான்காண்உரையவன்காண் உணர்வவன்காண் உணர்ந்தார்க் கென்றுந்
தேனவன்காண் திருமுண்டீச் சரத்து மேயசிவலோகன் காணவனென் சிந்தை யானே.
6.85.5
848உற்றவன்காண் உறவெல்லா மாவான் றான்காண்ஒழிவற நின்றெங்கு முலப்பி லான்காண்
புற்றரவே ஆடையுமாய்ப் பூணு மாகிப்புறங்காட்டி லெரியாடல் புரிந்தான் றான்காண்
நற்றவன்காண் அடியடைந்த மாணிக் காகநணுகியதோர் பெருங்கூற்றைச் சேவ டியினாற்
செற்றவன்காண் திருமுண்டீச் சரத்து மேயசிவலோகன் காணவனென் சிந்தை யானே.
6.85.6
849உதைத்தவன்காண் உணராத தக்கன் வேள்விஉருண்டோ டத் தொடர்ந்தருக்கன் பல்லை யெல்லாந்
தகர்த்தவன்காண் தக்கன்றன் தலையைச் செற்றதலையவன்காண் மலைமகளாம் உமையைச் சால
மதிப்பொழிந்த வல்லமரர் மாண்டார் வேள்விவந்தவியுண் டவரோடு மதனை யெல்லாஞ்
சிதைத்தவன்காண் திருமுண்டீச் சரத்து மேயசிவலோகன் காணவனென் சிந்தை யானே.
6.85.7
850உரிந்தவுடை யார்துவரா லுடம்பை மூடிஉழிதருமவ் வூமரவர் உணரா வண்ணம்
பரிந்தவன்காண் பனிவரைமீப் பண்ட மெல்லாம்பறித்துடனே நிரந்துவரு பாய்நீர்ப் பெண்ணை
நிரந்துவரும் இருகரையுந் தடவா வோடிநின்மலனை வலங்கொண்டு நீள நோக்கித்
திரிந்துலவு திருமுண்டீச் சரத்து மேயசிவலோகன் காணவனென் சிந்தை யானே.
6.85.8
 இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.6.85.9
851அறுத்தவன்காண் அடியவர்கள் அல்ல லெல்லாம்அரும்பொருளாய் நின்றவன்காண் அனங்க னாகம்
மறுத்தவன்காண் மலைதன்னை மதியா தோடிமலைமகள்தன் மனம்நடுங்க வானோ ரஞ்சக்
கறுத்தவனாய்க் கயிலாய மெடுத்தோன் கையுங்கதிர்முடியுங் கண்ணும் பிதுங்கி யோடச்
செறுத்தவன்காண் திருமுண்டீச் சரத்து மேயசிவலோகன் காணவனென் சிந்தை யானே.
6.85.1

திருவாலம்பொழில் – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

852கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் றன்னைக்கமலத்தோன் றலையரிந்த கபா லியை
உருவார்ந்த மலைமகளோர் பாகத் தானைஉணர்வெலா மானானை ஓசை யாகி
வருவானை வலஞ்சுழியெம் பெருமான் றன்னைமறைக்காடும் ஆவடுதண் டுறையு மேய
திருவானைத் தென்பரம்பைக் குடியின் மேயதிருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
6.86.1
853உரித்தானைக் களிறதன் றோல் போர்வை யாகஉடையானை உடைபுலியி னதளே யாகத்
தரித்தானைச் சடையதன்மேற் கங்கை யங்கைத்தழலுருவை விடமமுதா வுண்டி தெல்லாம்
பரித்தானைப் பவளமால் வரையன் னானைப்பாம்பணையான் றனக்கன்றங் காழி நல்கிச்
சிரித்தானைத் தென்பரம்பைக் குடியின் மேயதிருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
6.86.2
854உருமூன்றாய் உணர்வின்கண் ஒன்றா னானைஓங்கார மெய்ப்பொருளை உடம்பி னுள்ளாற்
கருவீன்ற வெங்களவை யறிவான் றன்னைக்காலனைத்தன் கழலடியாற் காய்ந்து மாணிக்
கருளீன்ற ஆரமுதை அமரர் கோனைஅள்ளூறி எம்பெருமா னென்பார்க் கென்றுந்
திருவீன்ற தென்பரம்பைக் குடியின் மேயதிருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
6.86.3
855பார்முழுதாய் விசும்பாகிப் பாதா ளமாம்பரம்பரனைச் சுரும்பமருங் குழலாள் பாகத்
தாரமுதாம் அணிதில்லைக் கூத்தன் றன்னைவாட்போக்கி யம்மானை எம்மா னென்று
வாரமதா மடியார்க்கு வார மாகிவஞ்சனைசெய் வார்க்கென்றும் வஞ்ச னாகுஞ்
சீரரசைத் தென்பரம்பைக் குடியின் மேயதிருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
6.86.4
856வரையார்ந்த மடமங்கை பங்கன் றன்னைவானவர்க்கும் வானவனை மணியை முத்தை
அரையார்ந்த புலித்தோல்மேல் அரவ மார்த்தஅம்மானைத் தம்மானை அடியார்க் கென்றும்
புரையார்ந்த கோவணத்தெம் புனிதன் றன்னைப்பூந்துருத்தி மேயானைப் புகலூ ரானைத்
திரையார்ந்த தென்பரம்பைக் குடியின் மேயதிருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
6.86.5
857விரிந்தானைக் குவிந்தானை வேத வித்தைவியன்பிறப்போ டிறப்பாகி நின்றான் றன்னை
அரிந்தானைச் சலந்தரன்றன் உடலம் வேறாஆழ்கடல்நஞ் சுண்டிமையோ ரெல்லா முய்யப்
பரிந்தானைப் பல்லசுரர் புரங்கள் மூன்றும்பாழ்படுப்பான் சிலைமலைநா ணேற்றி யம்பு
தெரிந்தானைத் தென்பரம்பைக் குடியின் மேயதிருவாலம் பொழிலானைச்சிந்தி நெஞ்சே.
6.86.6
858பொல்லாத என்னழுக்கிற் புகுவா னென்னைப்புறம்புறமே சோதித்த புனிதன் றன்னை
எல்லாருந் தன்னையே இகழ அந்நாள்இடுபலியென் றகந்திரியும் எம்பி ரானைச்
சொல்லாதா ரவர்தம்மைச் சொல்லா தானைத்தொடர்ந்துதன் பொன்னடியே பேணு வாரைச்
செல்லாத நெறிசெலுத்த வல்லான் றன்னைத்திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
6.86.7
859ஐந்தலைய நாகவணைக் கிடந்த மாலோடயன்தேடி நாடரிய அம்மான் றன்னைப்
பந்தணவு மெல்விரலாள் பாகத் தானைப்பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான் றன்னைப்
பொந்துடைய வெண்டலையிற் பலிகொள் வானைப்பூவணமும் புறம்பயமும் பொருந்தி னானைச்
சிந்தியவெந் தீவினைகள் தீர்ப்பான் றன்னைத்திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
6.86.8
860கையிலுண் டுழல்வாருஞ் சாக்கி யருங்கல்லாத வன்மூடர்க் கல்லா தானைப்
பொய்யிலா தவர்க்கென்றும் பொய்யி லானைப்பூணாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்
கையினார் அம்பெரிகால் ஈர்க்குக் கோலாக்கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த
செய்யினார் தென்பரம்பைக் குடியின் மேயதிருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
6.86.9
 இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் மறைந்து போயிற்று.6.86.1

திருச்சிவபுரம் – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

861வானவன்காண் வானவர்க்கும் மேலா னான்காண்வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும்
ஆனவன்காண் ஆனைந்து மாடி னான்காண்ஐயன்காண் கையிலன லேந்தி யாடுங்
கானவன்காண் கானவனுக் கருள்செய் தான்காண்கருதுவார் இதயத்துக் கமலத் தூறுந்
தேனவன்காண் சென்றடையாச் செல்வன் றான்காண்சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
6.87.1
862நக்கன்காண் நக்கரவ மரையி லார்த்தநாதன்காண் பூதகண மாட ஆடுஞ்
சொக்கன்காண் கொக்கிறகு சூடி னான்காண்துடியிடையாள் துணைமுலைக்குச் சேர்வ தாகும்
பொக்கன்காண் பொக்கணத்த வெண்ணீற் றான்காண்புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற
திக்கன்காண் செக்கரது திகழு மேனிச்சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
6.87.2
863வம்பின்மலர்க் குழலுமையாள் மணவா ளன்காண்மலரவன்மால் காண்பரிய மைந்தன் றான்காண்
கம்பமதக் கரிபிளிற வுரிசெய் தோன்காண்கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டத் தான்காண்
அம்பர்நகர்ப் பெருங்கோயி லமர்கின் றான்காண்அயவந்தி யுள்ளான்காண் ஐயா றன்காண்
செம்பொனெனத் திகழ்கின்ற உருவத் தான்காண்சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
6.87.3
864பித்தன்காண் தக்கன்றன் வேள்வி யெல்லாம்பீடழியச் சாடி யருள்கள் செய்த
முத்தன்காண் முத்தீயு மாயி னான்காண்முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்க
அத்தன்காண் புத்தூரி லமர்ந்தான் றான்காண்அரிசிற் பெருந்துறையே ஆட்சி கொண்ட
சித்தன்காண் சித்தீச் சரத்தான் றான்காண்சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
6.87.4
865தூயவன்காண் நீறு துதைந்த மேனிதுளங்கும் பளிங்கனைய சோதி யான்காண்
தீயவன்காண் தீயவுணர் புரஞ்செற் றான்காண்சிறுமான்கொள் செங்கையெம் பெருமான் றான்காண்
ஆயவன்காண் ஆரூரி லம்மான் றான்காண்அடியார்கட் காரமுத மாயி னான்காண்
சேயவன்காண் சேமநெறி யாயி னான்காண்சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
6.87.5
866பாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண்பயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியில் நின்ற
நீரவன்காண் நீர்சடைமேல் நிகழ்வித் தான்காண்நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும்
பேரவன்காண் பிறையெயிற்று வெள்ளைப் பன்றிபிரியாது பலநாளும் வழிபட் டேத்துஞ்
சீரவன்காண் சீருடைய தேவர்க் கெல்லாஞ்சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
6.87.6
867வெய்யவன்காண் வெய்யகன லேந்தி னான்காண்வியன்கெடில வீரட்டம் மேவி னான்காண்
மெய்யவன்காண் பொய்யர்மனம் விரவா தான்காண்வீணையோ டிசைந்துமிகு பாடல் மிக்க
கையவன்காண் கையில்மழு வேந்தி னான்காண்காமரங்கம் பொடிவீழ்த்த கண்ணி னான்காண்
செய்யவன்காண் செய்யவளை மாலுக் கீந்தசிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
6.87.7
 இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் மறைந்து போயின.6.87.8-9
868கலையாரு நூலங்க மாயி னான்காண்கலைபயிலுங் கருத்தன்காண் திருத்த மாகி
மலையாகி மறிகடலேழ் சூழ்ந்து நின்றமண்ணாகி விண்ணாகி நின்றான் றான்காண்
தலையாய மலையெடுத்த தகவி லோனைத்தகர்ந்துவிழ ஒருவிரலாற் சாதித் தாண்ட
சிலையாரும் மடமகளோர் கூறன் றான்காண்சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
6.87.1

திருவோமாம்புலியூர் – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

869ஆராரும் மூவிலைவேல் அங்கை யானைஅலைகடல்நஞ் சயின்றானை அமர ரேத்தும்
ஏராரும் மதிபொதியுஞ் சடையி னானைஎழுபிறப்பும் எனையாளா வுடையான் றன்னை
ஊராரும் படநாக மாட்டு வானைஉயர்புகழ்சேர் தருமோமாம் புலியூர் மன்னுஞ்
சீராரும் வடதளியெஞ் செல்வன் றன்னைச்சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
6.88.1
870ஆதியான் அரிஅயனென் றறிய வொண்ணாஅமரர்தொழுங் கழலானை அமலன் றன்னைச்
சோதிமதி கலைதொலையத் தக்க னெச்சன்சுடரிரவி அயிலெயிறு தொலைவித் தானை
ஓதிமிக அந்தணர்கள் எரிமூன் றோம்பும்உயர்புகழார் தருமோமாம் புலியூர் மன்னுந்
தீதிற்றிரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
6.88.2
871வருமிக்க மதயானை யுரித்தான் றன்னைவானவர்கோன் தோளனைத்தும் மடிவித் தானைத்
தருமிக்க குழலுமையாள் பாகன் றன்னைச்சங்கரனெம் பெருமானைத் தரணி தன்மேல்
உருமிக்க மணிமாடம் நிலாவு வீதிஉத்தமர்வாழ் தருமோமாம் புலியூர் மன்னுந்
திருமிக்க வடதளியெஞ் செல்வன் றன்னைச்சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
6.88.3
872அன்றினவர் புரமூன்றும் பொடியாய் வேவஅழல்விழித்த கண்ணானை அமரர் கோனை
வென்றிமிகு காலனுயிர் பொன்றி வீழவிளங்குதிரு வடியெடுத்த விகிர்தன் றன்னை
ஒன்றியசீர் இருபிறப்பர் முத்தீ யோம்பும்உயர்புகழ்நான் மறையோமாம் புலியூர் நாளுந்
தென்றல்மலி வடதளியெஞ் செல்வன் றன்னைச்சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
6.88.4
873பாங்குடைய எழிலங்கி யருச்சனைமுன் விரும்பப்பரிந்தவனுக் கருள்செய்த பரமன் றன்னைப்
பாங்கிலா நரகதனிற் தொண்ட ரானார்பாராத வகைபண்ண வல்லான் றன்னை
ஓங்குமதிற் புடைதழுவும் எழிலோமாம் புலியூர்உயர்புகழந் தணரேத்த வுலகர்க் கென்றுந்
தீங்கில்திரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
6.88.5
874அருந்தவத்தோர் தொழுதேத்தும் அம்மான் றன்னைஆராத இன்னமுதை அடியார் தம்மேல்
வருந்துயரந் தவிர்ப்பானை உமையாள் நங்கைமணவாள நம்பியையென் மருந்து தன்னைப்
பொருந்துபுனல் தழுவுவயல் நிலவு துங்கப்பொழில்கெழுவு தருமோமாம் புலியூர் நாளுந்
திருந்துதிரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
6.88.6
875மலையானை வருமலையன் றுரிசெய் தானைமறையானை மறையாலும் அறிய வொண்ணாக்
கலையானைக் கலையாருங் கையி னானைக்கடிவானை அடியார்கள் துயர மெல்லாம்
உலையாத அந்தணர்கள் வாழு மோமாம்புலியூரெம் உத்தமனைப் புரமூன் றெய்த
சிலையானை வடதளியெஞ் செல்வன் றன்னைச்சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
6.88.7
876சேர்ந்தோடு மணிக்கங்கை சூடி னானைச்செழுமதியும் படஅரவும் உடன்வைத் தானைச்
சார்ந்தோர்கட் கினியானைத் தன்னொப் பில்லாத்தழலுருவைத் தலைமகனைத் தகைநால் வேதம்
ஓர்ந்தோதிப் பயில்வார்வாழ் தருமோமாம் புலியூர்உள்ளானைக் கள்ளாத அடியார் நெஞ்சிற்
சேர்ந்தானை வடதளியெஞ் செல்வன் றன்னைச்சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
6.88.8
877வார்கெழுவு முலையுமையாள் வெருவ வன்றுமலையெடுத்த வாளரக்கன் றோளுந் தாளும்
ஏர்கெழுவு சிரம்பத்தும் இறுத்து மீண்டேஇன்னிசைகேட் டிருந்தானை இமையோர் கோனைப்
பார்கெழுவு புகழ்மறையோர் பயிலும் மாடப்பைம்பொழில்சேர் தருமோமாம் புலியூர் மன்னுஞ்
சீர்கெழுவு வடதளியெஞ் செல்வன் றன்னைச்சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
6.88.9
 இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் மறைந்து போயிற்று.6.88.1

திருவின்னம்பர் – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

878அல்லி மலர்நாற்றத் துள்ளார் போலும்அன்புடையார் சிந்தை யகலார் போலுஞ்
சொல்லின் அருமறைகள் தாமே போலுந்தூநெறிக்கு வழிகாட்டுந் தொழிலார் போலும்
வில்லிற் புரமூன் றெரித்தார் போலும்வீங்கிருளும் நல்வெளியு மானார் போலும்
எல்லி நடமாட வல்லார் போலும்இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.89.1
879கோழிக் கொடியோன்றன் தாதை போலுங்கொம்பனாள் பாகங் குளிர்ந்தார் போலும்
ஊழி முதல்வருந் தாமே போலும்உள்குவார் உள்ளத்தி னுள்ளார் போலும்
ஆழித்தேர் வித்தகருந் தாமே போலும்அடைந்தவர்கட் கன்பராய் நின்றார் போலும்
ஏழு பிறவிக்குந் தாமே போலும்இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.89.2
880தொண்டர்கள் தந்தகவி னுள்ளார் போலுந்தூநெறிக்குந் தூநெறியாய் நின்றார் போலும்
பண்டிருவர் காணாப் படியார் போலும்பத்தர்கள்தஞ் சித்தத் திருந்தார் போலுங்
கண்ட மிறையே கறுத்தார் போலுங்காமனையுங் காலனையுங் காய்ந்தார் போலும்
இண்டைச் சடைசேர் முடியார் போலும்இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.89.3
881வானத் திளந்திங்கட் கண்ணி தன்னைவளர்சடைமேல் வைத்துகந்த மைந்தர் போலும்
ஊனொத்த வேலொன் றுடையார் போலும்ஒளிநீறு பூசு மொருவர் போலுந்
தானத்தின் முப்பொழுதுந் தாமே போலுந்தம்மின் பிறர்பெரியா ரில்லை போலும்
ஏனத் தெயிறிலங்கப் பூண்டார் போலும்இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.89.4
882சூழுந் துயர மறுப்பார் போலுந்தோற்றம் இறுதியாய் நின்றார் போலும்
ஆழுங் கடல்நஞ்சை யுண்டார் போலும்ஆட லுகந்த அழகர் போலுந்
தாழ்வின் மனத்தேனை யாளாக் கொண்டுதன்மை யளித்த தலைவர் போலும்
ஏழு பிறப்பு மறுப்பார் போலும்இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.89.5
883பாதத் தணையுஞ் சிலம்பர் போலும்பாரூர் விடையொன் றுடையார் போலும்
பூதப் படையாள் புனிதர் போலும்பூம்புகலூர் மேய புராணர் போலும்
வேதப் பொருளாய் விளைவார் போலும்வேடம் பரவித் திரியுந் தொண்டர்
ஏதப் படாவண்ணம் நின்றார் போலும்இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.89.6
884பல்லார் தலையோட்டில் ஊணார் போலும்பத்தர்கள்தஞ் சித்தத் திருந்தார் போலுங்
கல்லாதார் காட்சிக் கரியார் போலுங்கற்றவர்கள் ஏதங் களைவார் போலும்
பொல்லாத பூதப் படையார் போலும்பொருகடலும் ஏழ்மலையுந் தாமே போலும்
எல்லாரு மேத்தத் தகுவார் போலும்இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.89.7
885மட்டு மலியுஞ் சடையார் போலும்மாதையோர் பாக முடையார் போலுங்
கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலுங்காலன்றன் வாழ்நாள் கழிப்பார் போலும்
நட்டம் பயின்றாடும் நம்பர் போலும்ஞாலமெரி நீர்வெளிகா லானார் போலும்
எட்டுத் திசைகளுந் தாமே போலும்இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.89.8
886கருவுற்ற காலத்தே என்னை யாண்டுகழற்போது தந்தளித்த கள்வர் போலுஞ்
செருவிற் புரமூன்று மட்டார் போலுந்தேவர்க்குந் தேவராஞ் செல்வர் போலும்
மருவிப் பிரியாத மைந்தர் போலும்மலரடிகள் நாடி வணங்க லுற்ற
இருவர்க் கொருவராய் நின்றார் போலும்இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.89.9
887அலங்கற் சடைதாழ ஐய மேற்றுஅரவ மரையார்க்க வல்லார் போலும்
வலங்கை மழுவொன் றுடையார் போலும்வான்றக்கன் வேள்வி சிதைத்தார் போலும்
விலங்கல் எடுத்துகந்த வெற்றி யானைவிறலழித்து மெய்ந்நரம்பாற் கீதங் கேட்டன்
றிலங்கு சுடர்வாள் கொடுத்தார் போலும்இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.89.10

திருக்கஞ்சனூர் – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

888மூவிலைவேற் சூலம்வல னேந்தி னானைமூன்றுசுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை
நாவலனை நரைவிடையொன் றேறு வானைநால்வேத மாறங்க மாயி னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோவைஅயன்றிருமா லானானை அனலோன் போற்றுங்
காவலனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
6.90.1
889தலையேந்து கையானை என்பார்த் தானைச்சவந்தாங்கு தோளானைச் சாம்ப லானைக்
குலையேறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக்கோணாக மசைத்தானைக் குலமாங் கைலை
மலையானை மற்றொப்பா ரில்லா தானைமதிகதிரும் வானவரும் மாலும் போற்றுங்
கலையானைக் கஞ்சனூ ராண்ட கோவைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
6.90.2
890தொண்டர்குழாந் தொழுதேத்த அருள்செய் வானைச்சுடர்மழுவாட் படையானைச் சுழிவான் கங்கைத்
தெண்டிரைகள் பொருதிழிசெஞ் சடையி னானைச்செக்கர்வா னொளியானைச் சேரா தெண்ணிப்
பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாம்பாழ்படுத்துத் தலையறுத்துப் பற்கண் கொண்ட
கண்டகனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
6.90.3
891விண்ணவனை மேருவில்லா வுடையான் றன்னைமெய்யாகிப் பொய்யாகி விதியா னானைப்
பெண்ணவனை ஆணவனைப் பித்தன் றன்னைப்பிணமிடுகா டுடையானைப் பெருந்தக் கோனை
எண்ணவனை எண்டிசையுங் கீழு மேலும்இருவிசும்பு மிருநிலமு மாகித் தோன்றுங்
கண்ணவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
6.90.4
892உருத்திரனை உமாபதியை உலகா னானைஉத்தமனை நித்திலத்தை ஒருவன் றன்னைப்
பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பி னானைப்பகலிரவாய் நீர்வெளியாய்ப் பரந்து நின்ற
நெருப்பதனை நித்திலத்தின் தொத்தொப் பானைநீறணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக்
கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
6.90.5
893ஏடேறு மலர்க்கொன்றை அரவு தும்பைஇளமதியம் எருக்குவா னிழிந்த கங்கைச்
சேடெறிந்த சடையானைத் தேவர் கோவைச்செம்பொன்மால் வரையானைச் சேர்ந்தார் சிந்தைக்
கேடிலியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்கிறிபேசி மடவார்பெய் வளைகள் கொள்ளுங்
காடவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
6.90.6
894நாரணனும் நான்முகனு மறியா தானைநால்வேதத் துருவானை நம்பி தன்னைப்
பாரிடங்கள் பணிசெய்யப் பலிகொண் டுண்ணும்பால்வணனைத் தீவணனைப் பகலா னானை
வார்பொதியும் முலையாளோர் கூறன் றன்னைமானிடங்கை யுடையானை மலிவார் கண்டங்
கார்பொதியுங் கஞ்சனூ ராண்ட கோவைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
6.90.7
895வானவனை வலிவலமும் மறைக்காட் டானைமதிசூடும் பெருமானை மறையோன் றன்னை
ஏனவனை இமவான்றன் பேதை யோடும்இனிதிருந்த பெருமானை ஏத்து வார்க்குத்
தேனவனைத் தித்திக்கும் பெருமான் றன்னைத்தீதிலா மறையவனைத் தேவர் போற்றுங்
கானவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
6.90.8
896நெருப்புருவு திருமேனி வெண்ணீற் றானைநினைப்பார்தம் நெஞ்சானை நிறைவா னானைத்
தருக்கழிய முயலகன்மேற் றாள்வைத் தானைச்சலந்தரனைத் தடிந்தோனைத் தக்கோர் சிந்தை
விருப்பவனை விதியானை வெண்ணீற் றானைவிளங்கொளியாய் மெய்யாகி மிக்கோர் போற்றுங்
கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
6.90.9
897மடலாழித் தாமரையா யிரத்தி லொன்றுமலர்க்கணிடந் திடுதலுமே மலிவான் கோலச்
சுடராழி நெடுமாலுக் கருள்செய் தானைத்தும்பியுரி போர்த்தானைத் தோழன் விட்ட
அடலாழித் தேருடைய இலங்கைக் கோனைஅருவரைக்கீழ் அடர்த்தானை அருளார் கருணைக்
கடலானைக் கஞ்சனூ ராண்ட கோவைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
6.90.10
   

திருவெறும்பியூர் – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

898பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்எண்ணோடு பண்ணிறைந்த கலைக ளாய
தன்னையுந்தன் றிறத்தறியாப் பொறியி லேனைத்தன்றிறமு மறிவித்து நெறியுங் காட்டி
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்அடைந்தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்ட
தென்னெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
6.91.1
899பளிங்கினிழ லுட்பதித்த சோதி யானைப்பசுபதியைப் பாசுபத வேடத் தானை
விளிந்தெழுந்த சலந்தரனை வீட்டி னானைவேதியனை விண்ணவனை மேவி வையம்
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும்அருமருந்தை ஆமா றறிந்தென் னுள்ளந்
தெளிந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
6.91.2
900கருவையென்றன் மனத்திருந்த கருத்தை ஞானக்கடுஞ்சுடரைப் படிந்துகிடந் தமர ரேத்தும்
உருவையண்டத் தொருமுதலை யோத வேலிஉலகினிறை தொழிலிறுதி நடுவாய் நின்ற
மருவைவென்ற குழன்மடவாள் பாகம் வைத்தமயானத்து மாசிலா மணியை வாசத்
திருவெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
6.91.3
901பகழிபொழிந் தடலரக்கர் புரங்கள் மூன்றும்பாழ்படுத்த பரஞ்சுடரைப் பரிந்து தன்னைப்
புகழுமன்பர்க் கின்பமரும் அமுதைத் தேனைப்புண்ணியனைப் புவனியது முழுதும் போக
உமிழுமம்பொற் குன்றத்தை முத்தின் றூணைஉமையவள்தம் பெருமானை இமையோ ரேத்துந்
திகழெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
6.91.4
902பாரிடங்க ளுடன்பாடப் பயின்று நட்டம்பயில்வானை அயில்வாய சூல மேந்தி
நேரிடும்போர் மிகவல்ல நிமலன் றன்னைநின்மலனை அம்மலர்கொண் டயனும் மாலும்
பாரிடந்தும் மேலுயர்ந்துங் காணா வண்ணம்பரந்தானை நிமிர்ந்துமுனி கணங்க ளேத்துஞ்
சீரெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
6.91.5
903கார்முகிலாய்ப் பொழிவானைப் பொழிந்த முந்நீர்கரப்பானைக் கடியநடை விடையொன் றேறி
ஊர்பலவுந் திரிவானை ஊர தாகஒற்றியூ ருடையனாய் முற்றும் ஆண்டு
பேரெழுத்தொன் றுடையானைப் பிரம னோடுமாலவனும் இந்திரனும் மந்திரத்தா லேத்துஞ்
சீரெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
6.91.6
904நீணிலவும் அந்தீயும் நீரும் மற்றைநெறியிலங்கு மிகுகாலும் ஆகா சமும்
வாணிலவு தாரகையும் மண்ணும் விண்ணும்மன்னுயிரும் என்னுயிருந் தானாஞ் செம்பொன்
ஆணியென்றும் அஞ்சனமா மலையே யென்றும்அம்பவளத் திரளென்றும் அறிந்தோ ரேத்துஞ்
சேணெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
6.91.7
905அறந்தெரியா ஊத்தைவாய் அறிவில் சிந்தைஆரம்பக் குண்டரோ டயர்த்து நாளும்
மறந்துமரன் திருவடிகள் நினைய மாட்டாமதியிலியேன் வாழ்வெலாம் வாளா மண்மேற்
பிறந்தநாள் நாளல்ல வாளா வீசன்பேர்பிதற்றிச் சீரடிமைத் திறத்து ளன்பு
செறிந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
6.91.8
906அறிவிலங்கு மனத்தானை அறிவார்க் கன்றிஅறியாதார் தந்திறத்தொன் றறியா தானைப்
பொறியிலங்கு வாளரவம் புனைந்து பூண்டபுண்ணியனைப் பொருதிரைவாய் நஞ்ச முண்ட
குறியிலங்கு மிடற்றானை மடற்றேன் கொன்றைச்சடையானை மடைதோறுங் கமல மென்பூச்
செறியெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
6.91.9
907அருந்தவத்தின் பெருவலியா லறிவ தன்றிஅடலரக்கன் றடவரையை யெடுத்தான் றிண்டோ ள்
முரிந்துநெரிந் தழிந்துபா தாள முற்றுமுன்கைநரம் பினையெடுத்துக் கீதம் பாட
இருந்தவனை ஏழுலகு மாக்கி னானைஎம்மானை கைம்மாவி னுரிவை போர்த்த
திருந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
6.91.10
   

திருக்கழுக்குன்றம் – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

908மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னைமுதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனைஆலால முண்டுகந்த ஐயன் றன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்புணர்வரிய பெருமானைப் புனிதன் றன்னைக்
காவலனைக் கழுக்குன்ற மமர்ந்தான் றன்னைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
6.92.1
909பல்லாடு தலைசடைமே லுடையான் றன்னைப்பாய்புலித்தோ லுடையானைப் பகவன் றன்னைச்
சொல்லோடு பொருளனைத்து மானான் றன்னைச்சுடருருவில் என்பறாக் கோலத் தானை
அல்லாத காலனைமுன் னடர்த்தான் றன்னைஆலின்கீழ் இருந்தானை அமுதா னானைக்
கல்லாடை புனைந்தருளுங் காபா லியைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
6.92.2
 இப்பதிகத்தில் முதலிரண்டு செய்யுட்கள் தவிர 
ஏனைய செய்யுட்கள் மறைந்து போயின.
6.92.3-10
   

பலவகைத் – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

910நேர்ந்தொருத்தி ஒருபாகத் தடங்கக் கண்டுநிலைதளர ஆயிரமா முகத்தி னோடு
பாய்ந்தொருத்தி படர்சடைமேற் பயிலக் கண்டுபடவரவும் பனிமதியும் வைத்த செல்வர்
தாந்திருத்தித் தம்மனத்தை ஒருக்காத் தொண்டர்தனித்தொருதண் டூன்றிமெய் தளரா முன்னம்
பூந்துருத்தி பூந்துருத்தி என்பீ ராகிற்பொல்லாப் புலாற்றுருத்தி போக்க லாமே.
6.93.1
911ஐத்தானத் தகமிடறு சுற்றி யாங்கேஅகத்தடைந்தால் யாதொன்று மிடுவா ரில்லை
மைத்தானக் கண்மடவார் தங்க ளோடுமாயமனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்
பைத்தானத் தொண்மதியும் பாம்பும் நீரும்படர்சடைமேல் வைத்துகந்த பண்பன் மேய
நெய்த்தானம் நெய்த்தானம் என்பீ ராகில்நிலாவாப் புலாற்றானம் நீக்க லாமே.
6.93.2
912பொய்யாறா வாறே புனைந்து பேசிப்புலர்ந்தெழுந்த காலைப் பொருளே தேடிக்
கையாறாக் கரண முடையோ மென்றுகளித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்
நெய்யாறா ஆடிய நீல கண்டர்நிமிர்புன் சடைநெற்றிக் கண்ணர் மேய
ஐயாறே ஐயாறே என்பீ ராகில்அல்லல்தீர்ந் தமருலகம் ஆள லாமே.
6.93.3
913இழவொன்று தாமொருவர்க் கிட்டொன் றீயார்ஈன்றெடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள்
கழனங்கோ வையாதல் கண்டுந் தேறார்களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்
அழனம்மை நீக்குவிக்கும் அரைய னாக்கும்அமருலகம் ஆள்விக்கும் அம்மான் மேய
பழனம் பழனமே என்பீ ராகிற்பயின்றெழுந்த பழவினைநோய் பாற்ற லாமே.
6.93.4
914ஊற்றுத் துறையொன்ப துள்நின் றோரீர்ஒக்க அடைக்கும்போ துணர மாட்டீர்
மாற்றுத் துறைவழிகொண் டோ டா முன்னம்மாய மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்
வேற்றுத் தொழில்பூண்டார் புரங்கள் மூன்றும்வெவ்வழல்வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய
சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீ ராகிற்துயர்நீங்கித் தூநெறிக்கண் சேர லாமே.
6.93.5
915கலஞ்சுழிக்குங் கருங்கடல்சூழ் வையந் தன்னிற்கள்ளக் கடலி லழுந்தி வாளா
நலஞ்சுழியா எழுநெஞ்சே இன்பம் வேண்டில்நம்பன்றன் அடியிணைக்கே நவில்வா யாகில்
அலஞ்சுழிக்கும் மன்னாகந் தன்னான் மேயஅருமறையோ டாறங்க மானார் கோயில்
வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீ ராகில்வல்வினைகள் தீர்ந்துவா னாள லாமே.
6.93.6
916தண்டி குண்டோ தரன்பிங் கிருடிசார்ந்த புகழ்நந்தி சங்கு கன்னன்
பண்டை உலகம் படைத்தான் றானும்பாரை யளந்தான்பல் லாண்டி சைப்பத்
திண்டி வயிற்றுச் சிறுகட் பூதஞ்சிலபாடச் செங்கண் விடையொன் றூர்வான்
கண்டியூர் கண்டியூர் என்பீ ராகிற்கடுகநும் வல்வினையைக் கழற்ற லாமே.
6.93.7
917விடமூக்கப் பாம்பேபோற் சிந்தி நெஞ்சேவெள்ளேற்றான் தன்றமரைக் கண்ட போது
வடமூக்க மாமுனிவர் போலச் சென்றுமாதவத்தார் மனத்துளார் மழுவாட் செல்வர்
படமூக்கப் பாம்பணையிற் பள்ளி யானும்பங்கயத்து மேலயனும் பரவிக் காணா
குடமூக்கே குடமூக்கே என்பீ ராகிற்கொடுவினைகள் தீர்ந்தரனைக் குறுக லாமே.
6.93.8
918தண்காட்டாச் சந்தனமுந் தவள நீறுந்தழையணுகுங் குறுங்கொன்றை மாலை சூடிக்
கண்காட்டாக் கருவரைபோ லனைய காஞ்சிக்கார்மயிலஞ் சாயலார் கலந்து காண
எண்காட்டாக் காடங் கிடமா நின்றுஎரிவீசி இரவாடும் இறைவர் மேய
வெண்காடே வெண்காடே என்பீ ராகில்வீடாத வல்வினைநோய் வீட்ட லாமே.
6.93.9
919தந்தையார் தாயா ருடன் பிறந்தார்தாரமார் புத்திரரார் தாந்தா மாரே
வந்தவா றெங்ஙனே போமா றேதோமாயமா மிதற்கேதும் மகிழ வேண்டா
சிந்தையீர் உமக்கொன்று சொல்லக் கேண்மின்திகழ்மதியும் வாளரவுந் திளைக்குஞ் சென்னி
எந்தையார் திருநாமம் நமச்சி வாயஎன்றெழுவார்க் கிருவிசும்பி லிருக்க லாமே.
6.93.10
   

நின்ற – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

920இருநிலனாய்த் தீயாகி நீரு மாகிஇயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகிஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும்பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகிநிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே.
6.94.1
921மண்ணாகி விண்ணாகி மலையு மாகிவயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக்
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்கலையாகிக் கலைஞானந் தானே யாகிப்
பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப்பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி
எண்ணாகி எண்ணுக்கோ ரெழுத்து மாகிஎழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே.
6.94.2
922கல்லாகிக் களறாகிக் கானு மாகிக்காவிரியாய்க் காலாறாய்க் கழியு மாகிப்
புல்லாகிப் புதலாகிப் பூடு மாகிப்புரமாகிப் புரமூன்றுங் கெடுத்தா னாகிச்
சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளு மாகிச்சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழ லாகி
நெல்லாகி நிலனாகி நீரு மாகிநெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.
6.94.3
923காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க்கனவாகி நனவாகிக் கங்கு லாகிக்
கூற்றாகிக் கூற்றுதைத்தகொல் களிறு மாகிக்குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமா னுமாய்
நீற்றானாய் நீறேற்ற மேனி யாகிநீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகி
ஏற்றானாய் ஏறூர்ந்த செல்வ னாகிஎழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
6.94.4
924தீயாகி நீராகித் திண்மை யாகித்திசையாகி அத்திசைக்கோர் தெய்வ மாகித்
தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித்தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக்
காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்றஇரதங்கள் நுகர்வானுந் தானே யாகி
நீயாகி நானாகி நேர்மை யாகிநெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.
6.94.5
925அங்கமா யாதியாய் வேத மாகிஅருமறையோ டைம்பூதந் தானே யாகிப்
பங்கமாய்ப் பலசொல்லுந் தானே யாகிப்பான்மதியோ டாதியாய்ப் பான்மை யாகிக்
கங்கையாய்க் காவிரியாய்க் கன்னி யாகிக்கடலாகி மலையாகிக் கழியு மாகி
எங்குமாய் ஏறூர்ந்த செல்வ னாகிஎழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
6.94.6
926மாதா பிதாவாகி மக்க ளாகிமறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்
கோதா விரியாய்க் குமரி யாகிக்கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்
போதாய மலர்கொண்டு போற்றி நின்றுபுனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி
யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகிஅழல்வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே.
6.94.7
927ஆவாகி ஆவினில் ஐந்து மாகிஅறிவாகி அழலாகி அவியு மாகி
நாவாகி நாவுக்கோர் உரையு மாகிநாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப்
பூவாகிப் பூவுக்கோர் நாற்ற மாகிப்பூக்குளால் வாசமாய் நின்றா னாகித்
தேவாகித் தேவர் முதலு மாகிச்செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.
6.94.8
928நீராகி நீளகலந் தானே யாகிநிழலாகி நீள்விசும்பி னுச்சி யாகிப்
பேராகிப் பேருக்கோர் பெருமை யாகிப்பெருமதில்கள் மூன்றினையு மெய்தா னாகி
ஆரேனுந் தன்னடைந்தார் தம்மை யெல்லாம்ஆட்கொள்ள வல்லவெம் மீச னார்தாம்
பாராகிப் பண்ணாகிப் பாட லாகிப்பரஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.
6.94.9
929மாலாகி நான்முகனாய் மாபூ தமாய்மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வு மாகிப்
பாலாகி எண்டிசைக்கும் எல்லை யாகிப்பரப்பாகிப் பரலோகந் தானே யாகிப்
பூலோகப் புவலோக சுவலோ கமாய்ப்பூதங்க ளாய்ப்புராணன் றானே யாகி
ஏலா தனவெலாம் ஏல்விப் பானாய்எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
6.94.10
   

தனி – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

930அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீஅன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரு மொண்பொரு ளும்நீஒருகுலமுஞ் சுற்றமும் ஓரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீதுணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீஇறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.
6.95.1
931வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்வெய்ய வினைப்பகையும் பைய நையும்
எம்பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்
அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடிஅனலாடி ஆனஞ்சும் ஆட்டு கந்த
செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்செவ்வான வண்ணரென் சிந்தை யாரே.
6.95.2
932ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரேஅடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரேஉருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரேபணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரேகாண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே.
6.95.3
933நற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்திநலஞ்சுடரே நால்வேதத் தப்பால் நின்ற
சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்றசொலற்கரிய சூழலாய் இதுவுன் றன்மை
நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள்நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற
கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன்கனகமா மணிநிறத்தெங் கடவு ளானே.
6.95.4
934திருக்கோயி லில்லாத திருவி லூருந்திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்பாங்கினொடு பலதளிக ளில்லா வூரும்
விருப்போடு வெண்சங்க மூதா வூரும்விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்
அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா வூரும்அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே.
6.95.5
935திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகிற்தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்
ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்
அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப்பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே.
6.95.6
936நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய்
மன்னானாய் மன்னவர்க்கோ ரமுத மானாய்மறைநான்கு மானாயா றங்க மானாய்
பொன்னானாய் மணியானாய் போக மானாய்பூமிமேற் புகழ்தக்க பொருளே உன்னை
என்னானாய் என்னானாய் என்னி னல்லால்ஏழையேன் என்சொல்லி ஏத்து கேனே.
6.95.7
937அத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய்அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியைநீ எளியை யானாய்எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தா யன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோஎம்பெருமான் றிருக்கருணை இருந்த வாறே.
6.95.8
938குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன்குற்றமே பெரிதுடையேன் கோல மாய
நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன்நல்லாரோ டிசைந்திலேன் நடுவே நின்ற
விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தே னல்லேன்வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்
இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன்என்செய்வான் தோன்றினேன் ஏழை யேனே.
6.95.9
939சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தத்துதரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனுங்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவு ளாரே.
6.95.10
   

தனி – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

940ஆமயந்தீர்த் தடியேனை ஆளாக் கொண்டார்அதிகைவீ ரட்டானம் ஆட்சி கொண்டார்
தாமரையோன் சிரமரிந்து கையிற் கொண்டார்தலையதனிற் பலிகொண்டார் நிறைவாந் தன்மை
வாமனனார் மாகாயத் துதிரங் கொண்டார்மானிடங்கொண் டார்வலங்கை மழுவாள் கொண்டார்
காமனையும் உடல்கொண்டார் கண்ணால் நோக்கிக்கண்ணப்பர் பணியுங்கொள் கபாலி யாரே.
6.96.1
941முப்புரிநூல் வரைமார்பில் முயங்கக் கொண்டார்முதுகேழல் முளைமருப்புங் கொண்டார் பூணாச்
செப்புருவ முலைமலையாள் பாகங் கொண்டார்செம்மேனி வெண்ணீறு திகழக் கொண்டார்
துப்புரவார் சுரிசங்கின் தோடு கொண்டார்சுடர்முடிசூழ்ந் தடியமரர் தொழவுங் கொண்டார்
அப்பலிகொண் டாயிழையார் அன்புங் கொண்டார்அடியேனை ஆளுடைய அடிக ளாரே.
6.96.2
942முடிகொண்டார் முளையிளவெண் டிங்க ளோடுமூசுமிள நாகமுட னாகக் கொண்டார்
அடிகொண்டார் சிலம்பலம்பு கழலு மார்ப்பஅடங்காத முயலகனை அடிக்கீழ்க் கொண்டார்
வடிகொண்டார்ந் திலங்குமழு வலங்கைக் கொண்டார்மாலையிடப் பாகத்தே மருவக் கொண்டார்
துடிகொண்டார் கங்காளந் தோள்மேற் கொண்டார்சூலைதீர்த் தடியேனை யாட்கொண் டாரே.
6.96.3
943பொக்கணமும் புலித்தோலும் புயத்திற் கொண்டார்பூதப் படைகள்புடை சூழக் கொண்டார்
அக்கினொடு படவரவம் அரைமேற் கொண்டார்அனைத்துலகும் படைத்தவையும் அடங்கக் கொண்டார்
கொக்கிறகுங் கூவிளமுங் கொண்டை கொண்டார்கொடியானை அடலாழிக் கிரையாக் கொண்டார்
செக்கர்நிறத் திருமேனி திகழக் கொண்டார்செடியேனை யாட்கொண்ட சிவனார் தாமே.
6.96.4
944அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார்அருமறையைத் தேர்க்குதிரை யாக்கிக் கொண்டார்
சுந்தரனைத் துணைக்கவரி வீசக் கொண்டார்சுடுகாடு நடமாடு மிடமாக் கொண்டார்
மந்தரநற் பொருசிலையா வளைத்துக் கொண்டார்மாகாளன் வாசற்காப் பாகக் கொண்டார்
தந்திரமந் திரத்தரா யருளிக் கொண்டார்சமண்தீர்த்தென் றன்னையாட் கொண்டார் தாமே.
6.96.5
945பாரிடங்கள் பலகருவி பயிலக் கொண்டார்பவள நிறங்கொண்டார் பளிங்குங் கொண்டார்
நீரடங்கு சடைமுடிமேல் நிலாவுங் கொண்டார்நீலநிறங் கோலநிறை மிடற்றிற் கொண்டார்
வாரடங்கு வனமுலையார் மைய லாகிவந்திட்ட பலிகொண்டார் வளையுங் கொண்டார்
ஊரடங்க ஒற்றிநகர் பற்றிக் கொண்டார்உடலுறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.
6.96.6
946அணிதில்லை அம்பலமா டரங்காக் கொண்டார்ஆலால அருநஞ்சம் அமுதாக் கொண்டார்
கணிவளர்தார்ப் பொன்னிதழிக் கமழ்தார் கொண்டார்காதலார் கோடிகலந் திருக்கை கொண்டார்
மணிபணத்த அரவந்தோள் வளையாக் கொண்டார்மால்விடைமேல் நெடுவீதி போதக் கொண்டார்
துணிபுலித்தோ லினையாடை யுடையாக் கொண்டார்சூலங்கைக் கொண்டார்தொண் டெனைக்கொண் டாரே.
6.96.7
947படமூக்கப் பாம்பணையா னோடு வானோன்பங்கயனென் றங்கவரைப் படைத்துக் கொண்டார்
குடமூக்கிற் கீழ்க்கோட்டங் கோயில் கொண்டார்கூற்றுதைத்தோர் வேதியனை உய்யக் கொண்டார்
நெடுமூக்கிற் கரியினுரி மூடிக் கொண்டார்நினையாத பாவிகளை நீங்கக் கொண்டார்
இடமாக்கி இடைமருதுங் கொண்டார் பண்டேஎன்னையிந்நா ளாட்கொண்ட இறைவர் தாமே.
6.96.8
948எச்சனிணைத் தலைகொண்டார் பகன்கண் கொண்டார்இரவிகளி லொருவன்பல் லிறுத்துக் கொண்டார்
மெச்சன்வியாத் திரன்றலையும் வேறாக் கொண்டார்விறலங்கி கரங்கொண்டார் வேள்வி காத்து
உச்சநமன் றாளறுத்தார் சந்திரனை யுதைத்தார்உணர்விலாத் தக்கன்றன் வேள்வி யெல்லாம்
அச்சமெழ அழித்துக்கொண் டருளுஞ் செய்தார்அடியேனை யாட்கொண்ட அமலர் தாமே.
6.96.9
949சடையொன்றிற் கங்கையையுந் தரித்துக் கொண்டார்சாமத்தின் இசைவீணை தடவிக் கொண்டார்
உடையொன்றிற் புள்ளியுழைத் தோலுங் கொண்டார்உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக் கொண்டார்
கடைமுன்றிற் பலிகொண்டார் கனலுங் கொண்டார்காபால வேடங் கருதிக் கொண்டார்
விடைவென்றிக் கொடியதனில் மேவக் கொண்டார்வெந்துயரந் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.
6.96.10
950குராமலரோ டராமதியஞ் சடைமேற் கொண்டார்குடமுழநந் தீசனைவா சகனாக் கொண்டார்
சிராமலைதஞ் சேர்விடமாத் திருந்தக் கொண்டார்தென்றல்நெடுந் தேரோனைப் பொன்றக் கொண்டார்
பராபரனென் பதுதமது பேராக் கொண்டார்பருப்பதங் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி
இராவணனென் றவனைப்பே ரியம்பக் கொண்டார்இடருறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.
6.96.11
   

திருவினாத் – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

951அண்டங் கடந்த சுவடு முண்டோ அனலங்கை யேந்திய ஆட லுண்டோ 
பண்டை யெழுவர் படியு முண்டோ பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ 
கண்ட மிறையே கறுத்த துண்டோ கண்ணின்மேற் கண்ணொன்று கண்ட துண்டோ 
தொண்டர்கள் சூழத் தொடர்ச்சி யுண்டோ சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.
6.97.1
952எரிகின்ற இளஞாயி றன்ன மேனிஇலங்கிழையோர் பாலுண்டோ வெள்ளே றுண்டோ 
விரிகின்ற பொறியரவத் தழலு முண்டோ வேழத்தி னுரியுண்டோ வெண்ணூ லுண்டோ 
வரிநின்ற பொறியரவச் சடையு முண்டோ அச்சடைமேல் இளமதியம் வைத்த துண்டோ 
சொரிகின்ற புனலுண்டோ சூல முண்டோ சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.
6.97.2
953நிலாமாலை செஞ்சடைமேல் வைத்த துண்டோ நெற்றிமேற் கண்ணுண்டோ நீறு சாந்தோ
புலால்நாறு வெள்ளெலும்பு பூண்ட துண்டோ பூதந்தற் சூழ்ந்தனவோ போரே றுண்டோ 
கலாமாலை வேற்கண்ணாள் பாகத் துண்டோ கார்க்கொன்றை மாலை கலந்த துண்டோ 
சுலாமாலை யாடரவந் தோள்மே லுண்டோ சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.
6.97.3
954பண்ணார்ந்த வீணை பயின்ற துண்டோ பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ 
உண்ணா வருநஞ்ச முண்ட துண்டோ ஊழித்தீ யன்ன ஒளிதா னுண்டோ 
கண்ணார் கழற்காலற் செற்ற துண்டோ காமனையுங் கண்ணழலாற் காய்ந்த துண்டோ 
எண்ணார் திரிபுரங்க ளெய்த துண்டோ எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே.
6.97.4
955நீறுடைய திருமேனி பாக முண்டோ நெற்றிமே லொற்றைக்கண் முற்று முண்டோ 
கூறுடைய கொடுமழுவாள் கையி லுண்டோ கொல்புலித்தோ லுடையுண்டோ கொண்ட வேடம்
ஆறுடைய சடையுண்டோ அரவ முண்டோ அதனருகே பிறையுண்டோ அளவி லாத
ஏறுடைய கொடியுண்டோ இலய முண்டோ எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே.
6.97.5
956பட்டமுந் தோடுமோர் பாகங் கண்டேன்பார்திகழப் பலிதிரிந்து போதக் கண்டேன்
கொட்டிநின் றிலயங்க ளாடக் கண்டேன்குழைகாதிற் பிறைசென்னி யிலங்கக் கண்டேன்
கட்டங்கக் கொடிதிண்டோ ளாடக் கண்டேன்கனமழுவாள் வலங்கையி லிலங்கக் கண்டேன்
சிட்டனைத் திருவால வாயிற் கண்டேன்தேவனைக் கனவில்நான் கண்ட வாறே.
6.97.6
957அலைத்தோடு புனற்கங்கை சடையிற் கண்டேன்அலர்கொன்றைத் தாரணிந்த வாறு கண்டேன்
பலிக்கோடித் திரிவார்கைப் பாம்பு கண்டேன்பழனம் புகுவாரைப் பகலே கண்டேன்
கலிக்கச்சி மேற்றளியே இருக்கக் கண்டேன்கறைமிடறுங் கண்டேன் கனலுங் கண்டேன்
வலித்துடுத்த மான்றோ லரையிற் கண்டேன்மறைவல்ல மாதவனைக் கண்ட வாறே.
6.97.7
958நீறேறு திருமேனி நிகழக் கண்டேன்நீள்சடைமேல் நிறைகங்கை யேறக் கண்டேன்
கூறேறு கொடுமழுவாள் கொள்ளக் கண்டேன்கொடுகொட்டி கையலகு கையிற் கண்டேன்
ஆறேறு சென்னியணி மதியுங் கண்டேன்அடியார்கட் காரமுத மாகக் கண்டேன்
ஏறேறி இந்நெறியே போதக் கண்டேன்இவ்வகையெம் பெருமானைக் கண்ட வாறே.
6.97.8
959விரையுண்ட வெண்ணீறு தானு முண்டுவெண்டலைகை யுண்டொருகை வீணை யுண்டு
சுரையுண்டு சூடும் பிறையொன் றுண்டுசூலமுந் தண்டுஞ் சுமந்த துண்டு
அரையுண்ட கோவண ஆடை யுண்டுவலிக்கோலுந் தோலு மழகா வுண்டு
இரையுண் டறியாத பாம்பு முண்டுஇமையோர் பெருமா னிலாத தென்னே.
6.97.9
960மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சிமயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்ஓரூர னல்லனோ ருவம னில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண் ணமும்அவனருளே கண்ணாகக் காணி னல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே.
6.97.10
961பொன்னொத்த மேனிமேற் பொடியுங் கண்டேன்புலித்தோ லுடைகண்டேன் புணரத் தன்மேல்
மின்னொத்த நுண்ணிடையாள் பாகங் கண்டேன்மிளிர்வதொரு பாம்பும் அரைமேற் கண்டேன்
அன்னத்தே ரூர்ந்த அரக்கன் றன்னைஅலற அடர்த்திட்ட அடியுங் கண்டேன்
சின்ன மலர்க்கொன்றைக் கண்ணி கண்டேன்சிவனைநான் சிந்தையுட் கண்ட வாறே.
6.97.11
   

திருமறுமாற்றத் – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

962நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்நரகத்தி லிடர்ப்படோ ம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யானசங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே.
6.98.1
963அகலிடமே இடமாக ஊர்கள் தோறும்அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம்
புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவிஉடன்கிடந்தாற் புரட்டாள்பொய் யன்று மெய்யே
இகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டான்இனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோந்
துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லுஞ்சொற்கேட்கக் கடவோமோ துரிசற் றோமே.
6.98.2
964வாராண்ட கொங்கையர்சேர் மனையிற் சேரோம்மாதேவா மாதேவா என்று வாழ்த்தி
நீராண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்நீறணியுங் கோலமே நிகழப் பெற்றோங்
காராண்ட மழைபோலக் கண்ணீர் சோரக்கன்மனமே நன்மனமாக் கரையப் பெற்றோம்
பாராண்டு பகடேறித் திரிவார் சொல்லும்பணிகேட்கக் கடவோமோ பற்றற் றோமே.
6.98.3
965உறவாவார் உருத்திரபல் கணத்தி னோர்கள்உடுப்பனகோ வணத்தொடுகீ ளுளவா மன்றே
செறுவாருஞ் செறமாட்டார் தீமை தானும்நன்மையாய்ச் சிறப்பதே பிறப்பிற் செல்லோம்
நறவார்பொன் னிதழிநறுந் தாரோன் சீரார்நமச்சிவா யஞ்சொல்ல வல்லோம் நாவாற்
சுறவாருங் கொடியானைப் பொடியாக் கண்டசுடர்நயனச் சோதியையே தொடர்வுற் றோமே.
6.98.4
966என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை
சென்றுநாஞ் சிறுதெய்வஞ் சேர்வோ மல்லோஞ்சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்
ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றேஉறுபிணியார் செறலொழிந்திட் டோ டிப் போனார்
பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே.
6.98.5
967மூவுருவின் முதலுருவாய் இருநான் கானமூர்த்தியே யென்றுமுப் பத்து மூவர்
தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்துஞ்செம்பவளத் திருமேனிச் சிவனே யென்னும்
நாவுடையார் நமையாள வுடையா ரன்றேநாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான
காவலரே யேவி விடுத்தா ரேனுங்கடவமலோங் கடுமையொடு களவற் றோமே.
6.98.6
968நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும்நெருப்பினொடு காற்றாகி நெடுவா னாகி
அற்பமொடு பெருமையுமாய் அருமை யாகிஅன்புடையார்க் கெளிமையதாய் அளக்க லாகாத்
தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும்ஆகின்ற தன்மையனை நன்மை யோடும்
பொற்புடைய பேசக் கடவோம் பேயர்பேசுவன பேசுதுமோ பிழையற் றோமே.
6.98.7
969ஈசனையெவ் வுலகினுக்கும் இறைவன் றன்னைஇமையவர்தம் பெருமானை எரியாய் மிக்க
தேசனைச் செம்மேனி வெண்ணீற் றானைச்சிலம்பரையன் பொற்பாவை நலஞ்செய் கின்ற
நேசனை நித்தலும் நினையப் பெற்றோம்நின்றுண்பா ரெம்மை நினையச் சொன்ன
வாசக மெல்லாம் மறந்தோ மன்றேவந்தீரார் மன்னவனா வான்றா னாரே.
6.98.8
970சடையுடையான் சங்கக் குழையோர் காதன்சாம்பலும் பாம்பு மணிந்த மேனி
விடையுடையான் வேங்கை யதள்மே லாடைவெள்ளிபோற் புள்ளியுழை மான்றோல் சார்ந்த
உடையுடையான் நம்மை யுடையான் கண்டீர்உம்மோடு மற்று முளராய் நின்ற
படையுடையான் பணிகேட்கும் பணியோ மல்லோம்பாசமற வீசும் படியோம் நாமே.
6.98.9
971நாவார நம்பனையே பாடப் பெற்றோம்நாணற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்
ஆவாவென் றெமையாள்வான் அமரர் நாதன்அயனொடுமாற் கறிவரிய அனலாய் நீண்ட
தேவாதி தேவன் சிவனென் சிந்தைசேர்ந்திருந்தான் தென்றிசைக்கோன் றானே வந்து
கோவாடிக் குற்றேவல் செய்கென் றாலுங்குணமாகக் கொள்ளோமெண் குணத்து ளோமே.
6.98.10
   

திருப்புகலூர் – திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

972எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோஎம்பெருமான் திருவடியே எண்ணி னல்லாற்
கண்ணிலேன் மற்றோர் களைக ணில்லேன்கழலடியே கைதொழுது காணி னல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.99.1
973அங்கமே பூண்டாய் அனலா டினாய்ஆதிரையாய் ஆல்நிழலாய் ஆனே றூர்ந்தாய்
பங்கமொன் றில்லாத படர்ச டையினாய்பாம்பொடு திங்கள் பகைதீர்த் தாண்டாய்
சங்கையொன் றின்றியே தேவர் வேண்டச்சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச்
சிங்கமே உன்னடிக்கே போது கின்றேன்திருப்புகலூர் மேவிய தேவ தேவே.
6.99.2
974பையரவக் கச்சையாய் பால்வெண் ணீற்றாய்பளிக்குக் குழையினாய் பண்ணார் இன்சொல்
மைவிரவு கண்ணாளைப் பாகங் கொண்டாய்மான்மறிகை யேந்தினாய் வஞ்சக் கள்வர்
ஐவரையும் என்மேற் றரவ றுத்தாய்அவர்வேண்டுங் காரியமிங் காவ தில்லை
பொய்யுரையா துன்னடிக்கே போது கின்றேன்பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.99.3
975தெருளாதார் மூவெயிலுந் தீயில் வேவச்சிலைவளைத்துச் செங்கணையாற் செற்ற தேவே
மருளாதார் தம்மனத்தில் வாட்டந் தீர்ப்பாய்மருந்தாய்ப் பிணிதீர்ப்பாய் வானோர்க் கென்றும்
அருளாகி ஆதியாய் வேத மாகிஅலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்துங் காணாப்
பொருளாவாய் உன்னடிக்கே போது கின்றேன்பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.99.4
976நீரேறு செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்நீங்காமை வைத்துகந்த நீதி யானே
பாரேறு படுதலையிற் பலிகொள் வானேபண்டனங்கற் காய்ந்தானே பாவ நாசா
காரேறு முகிலனைய கண்டத் தானேகருங்கைக் களிற்றுரிவை கதறப் போர்த்த
போரேறே உன்னடிக்கே போது கின்றேன்பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.99.5
977விரிசடையாய் வேதியனே வேத கீதாவிரிபொழில்சூழ் வெண்காட்டாய் மீயச் சூராய்
திரிபுரங்க ளெரிசெய்த தேவ தேவேதிருவாரூர்த் திருமூலத் தான மேயாய்
மருவினியார் மனத்துளாய் மாகா ளத்தாய்வலஞ்சுழியாய் மாமறைக்காட் டெந்தா யென்றும்
புரிசடையாய் உன்னடிக்கே போது கின்றேன்பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.99.6
978தேவார்ந்த தேவனைத் தேவ ரெல்லாந்திருவடிமேல் அலரிட்டுத் தேடி நின்று
நாவார்ந்த மறைபாடி நட்ட மாடிநான்முகனும் இந்திரனும் மாலும் போற்றக்
காவார்ந்த பொழிற்சோலைக் கானப் பேராய்கழுக்குன்றத் துச்சியாய் கடவு ளேநின்
பூவார்ந்த பொன்னடிக்கே போது கின்றேன்பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.99.7
979நெய்யாடி நின்மலனே நீல கண்டாநிறைவுடையாய் மறைவல்லாய் நீதி யானே
மையாடு கண்மடவாள் பாகத் தானேமான்றோ லுடையாய் மகிழ்ந்து நின்றாய்
கொய்யாடு கூவிளங் கொன்றை மாலைகொண்டடியேன் நானிட்டுக் கூறி நின்று
பொய்யாத சேவடிக்கே போது கின்றேன்பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.99.8
980துன்னஞ்சேர் கோவணத்தாய் தூய நீற்றாய்துதைந்திலங்கு வெண்மழுவாள் கையி லேந்தித்
தன்னணையுந் தண்மதியும் பாம்பும் நீருஞ்சடைமுடிமேல் வைத்துகந்த தன்மை யானே
அன்ன நடைமடவாள் பாகத் தானேஅக்காரம் பூண்டானே ஆதி யானே
பொன்னங் கழலடிக்கே போது கின்றேன்பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.99.9
981ஒருவனையு மல்லா துணரா துள்ளம்உணர்ச்சித் தடுமாற்றத் துள்ளே நின்ற
இருவரையும் மூவரையும் என்மே லேவிஇல்லாத தரவறுத்தாய்க் கில்லேன் ஏலக்
கருவரை சூழ்கானல் இலங்கை வேந்தன்கடுந்தேர்மீ தோடாமைக் காலாற் செற்ற
பொருவரையாய் உன்னடிக்கே போது கின்றேன்பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.99.10
   

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த 
தேவாரப்பதிகங்கள் ஆறாம் திருமுறை முற்றும்.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.