சமீபத்திய செய்தி
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி
7.51 திருவாரூர்
பண் – பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
518 | பத்திமையும் அடிமையையுங் கைவிடுவான் பாவியேன் பொத்தினநோ யதுவிதனைப் பொருளறிந்தேன் போய்த்தொழுவேன் முத்தினைமா மணிதன்னை வயிரத்தை மூர்க்கனேன் எத்தனைநாட் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே. | 7.51.1 |
519 | ஐவணமாம் பகழியுடை அடல்மதனன் பொடியாகச் செவ்வணமாந் திருநயனம் விழிசெய்த சிவமூர்த்தி மையணவு கண்டத்து வளர்சடையெம் மாரமுதை எவ்வணம்நான் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே. | 7.51.2 |
520 | சங்கலக்குந் தடங்கடல்வாய் விடஞ்சுடவந் தமரர்தொழ அங்கலக்கண் தீர்த்துவிடம் உண்டுகந்த அம்மானை இங்கலக்கும் உடற்பிறந்த அறிவிலியேன் செறிவின்றி எங்குலக்கப் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே. | 7.51.3 |
521 | இங்ஙனம்வந் திடர்ப்பிறவிப் பிறந்தயர்வேன் அயராமே அங்ஙனம்வந் தெனையாண்ட அருமருந்தென் ஆரமுதை வெங்கனல்மா மேனியனை மான்மருவுங் கையானை எங்ஙனம்நான் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே. | 7.51.4 |
522 | செப்பரிய அயனொடுமால் சிந்தித்துந் தெரிவரிய அப்பெரிய திருவினையே அறியாதே அருவினையேன் ஒப்பரிய குணத்தானை இணையிலியை அணைவின்றி எப்பரிசு பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே. | 7.51.5 |
523 | வன்னாகம் நாண்வரைவில் அங்கிகணை அரிபகழி தன்னாகம் உறவாங்கிப் புரமெரித்த தன்மையனை முன்னாக நினையாத மூர்க்கனேன் ஆக்கைசுமந் தென்னாகப் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே. | 7.51.6 |
524 | வன்சயமாய் அடியான்மேல் வருங்கூற்றின் உரங்கிழிய முன்சயமார் பாதத்தால் முனிந்துகந்த மூர்த்திதனை மின்செயும்வார் சடையானை விடையானை அடைவின்றி என்செயநான் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே. | 7.51.7 |
525 | முன்னெறிவா னவர்கூடித் தொழுதேத்தும் முழுமுதலை அந்நெறியை அமரர்தொழும் நாயகனை அடியார்கள் செந்நெறியைத் தேவர்குலக் கொழுந்தைமறந் திங்ஙனம்நான் என்னறிவான் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே. | 7.51.8 |
526 | கற்றுளவான் கனியாய கண்ணுதலைக் கருத்தார உற்றுளனாம் ஒருவனைமுன் இருவர்நினைந் தினிதேத்தப் பெற்றுளனாம் பெருமையனைப் பெரிதடியேன் கையகன்றிட் டெற்றுளனாய்ப் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே. | 7.51.9 |
527 | ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் யான்செய்யுந் துரிசுகளுக் குடனாகி மாழையொண்கண் பரவையைத்தந் தாண்டானை மதியில்லா ஏழையேன் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே. | 7.51.10 |
528 | வங்கமலி கடல்நஞ்சை வானவர்கள் தாமுய்ய நுங்கிஅமு தவர்க்கருளி நொய்யேனைப் பொருட்படுத்துச் சங்கிலியோ டெனைப்புணர்த்த தத்துவனைச் சழக்கனேன் எங்குலக்கப் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே. | 7.51.11 |
529 | பேரூரும் மதகரியின் உரியானைப் பெரியவர்தஞ் சீரூருந் திருவாரூர்ச் சிவனடியே திறம்விரும்பி ஆரூரன் அடித்தொண்டன் அடியன்சொல் அகலிடத்தில் ஊரூரன் இவைவல்லார் உலகவர்க்கு மேலாரே. | 7.51.12 |
இது திருவொற்றியூரிற் சங்கிலிநாச்சியாருடன்
இருக்கும்போது வீதிவிடங்கப்பெருமானுடைய
திருவோலக்கதரிசன ஞாபகம்வர ஓதியருளிய பதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.52 திருவாலங்காடு
பண் – பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
530 | முத்தா முத்தி தரவல்ல முகிழ்மென் முலையா ளுமைபங்கா சித்தா சித்தித் திறங்காட்டுஞ் சிவனே தேவர் சிங்கமே பத்தா பத்தர் பலர்போற்றும் பரமா பழைய னூர்மேய அத்தா ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே. | 7.52.1 |
531 | பொய்யே செய்து புறம்புறமே திரிவேன் றன்னைப் போகாமே மெய்யே வந்திங் கெனையாண்ட மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே பையா டரவம் அரைக்கசைத்த பரமா பழைய னூர்மேய ஐயா ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே. | 7.52.2 |
532 | தூண்டா விளக்கின் நற்சோதீ தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய் பூண்டாய் எலும்பைப் புரமூன்றும் பொடியாச் செற்ற புண்ணியனே பாண்டாழ் வினைக ளவைதீர்க்கும் பரமா பழைய னூர்மேய ஆண்டா ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே. | 7.52.3 |
533 | மறிநேர் ஒண்கண் மடநல்லார் வலையிற் பட்டு மதிமயங்கி அறிவே அழிந்தே னையாநான் மையார் கண்ட முடையானே பறியா வினைக ளவைதீர்க்கும் பரமா பழைய னூர்மேய அறிவே ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே. | 7.52.4 |
534 | வேலங் காடு தடங்கண்ணார் வலையுட் பட்டுன் நெறிமறந்து மாலங் காடி மறந்தொழிந்தேன் மணியே முத்தே மரகதமே பாலங் காடி நெய்யாடி படர்புன் சடையாய் பழையனூர் ஆலங் காடா உன்னுடைய அடியார்க் கடியேன் ஆவேனே. | 7.52.5 |
535 | எண்ணார் தங்கள் எயிலெய்த எந்தாய் எந்தை பெருமானே கண்ணாய் உலகங் காக்கின்ற கருத்தா திருத்த லாகாதாய் பண்ணா ரிசைக ளவைகொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் அண்ணா ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே. | 7.52.6 |
536 | வண்டார் குழலி உமைநங்கை பங்கா கங்கை மணவாளா விண்டார் புரங்க ளெரிசெய்த விடையாய் வேத நெறியானே பண்டாழ் வினைகள் பலதீர்க்கும் பரமா பழைய னூர்மேய அண்டா ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே. | 7.52.7 |
537 | பேழ்வா யரவி னணையானும் பெரிய மலர்மே லுறைவானுந் தாழா துன்றன் சரண்பணியத் தழலாய் நின்ற தத்துவனே பாழாம் வினைக ளவைதீர்க்கும் பரமா பழையனூர் தன்னை ஆள்வாய் ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே. | 7.52.8 |
538 | எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழேழ் படிகால் எமையாண்ட பெம்மான் ஈமப் புறங்காட்டிற் பேயோ டாடல் புரிவானே பன்மா மலர்க ளவைகொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் அம்மா ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே. | 7.52.9 |
539 | பத்தர் சித்தர் பலரேத்தும் பரமன் பழைய னூர்மேய அத்தன் ஆலங் காடன்றன் அடிமைத் திறமே அன்பாகிச் சித்தர் சித்தம் வைத்தபுகழ்ச் சிறுவன் ஊரன் ஒண்டமிழ்கள் பத்தும் பாடி ஆடுவார் பரமன் அடியே பணிவாரே. | 7.52.10 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – ஊர்த்துவதாண்டவேசுவரர், தேவியார் – வண்டார்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.53 திருக்கடவூர் மயானம்
பண் – பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
540 | மருவார் கொன்றை மதிசூடி மாணிக் கத்தின் மலைபோல வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப் படைசூழத் திருமால் பிரமன் இந்திரற்குந் தேவர் நாகர் தானவர்க்கும் பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே. | 7.53.1 |
541 | விண்ணோர் தலைவர் வெண்புரிநூல் மார்பர் வேத கீதத்தர் கண்ணார் நுதலர் நகுதலையர் கால காலர் கடவூரர் எண்ணார் புரமூன் றெரிசெய்த இறைவ ருமையோ ரொருபாகம் பெண்ணா ணாவர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே. | 7.53.2 |
542 | காயும் புலியின் அதளுடையர் கண்டர் எண்டோ ட் கடவூரர் தாயுந் தந்தை பல்லுயிர்க்குந் தாமே யாய தலைவனார் பாயும் விடையொன் றதுவேறிப் பலிதேர்ந் துண்ணும் பரமேட்டி பேய்கள் வாழும் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே. | 7.53.3 |
543 | நறைசேர் மலரைங் கணையானை நயனத் தீயாற் பொடிசெய்த இறையா ராவர் எல்லார்க்கும் இல்லை யென்னா தருள்செய்வார் பறையார் முழவம் பாட்டோ டு பயிலுந் தொண்டர் பயில்கடவூர்ப் பிறையார் சடையார் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே. | 7.53.4 |
544 | கொத்தார் கொன்றை மதிசூடிக் கோள்நா கங்கள் பூணாக மத்த யானை உரிபோர்த்து மருப்பும் ஆமைத் தாலியார் பத்தி செய்து பாரிடங்கள் பாடி ஆடப் பலிகொள்ளும் பித்தர் கடவூர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே. | 7.53.5 |
545 | துணிவார் கீளுங் கோவணமுந் துதைந்து சுடலைப் பொடியணிந்து பணிமே லிட்ட பாசுபதர் *பஞ்ச வடிமார் பினர்கடவூர்த் திணிவார் குழையார் புரமூன்றுந் தீவாய்ப் படுத்த சேவகனார் பிணிவார் சடையார் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே. * பஞ்சவடியாவது மயிர்ப்பூணநூல். இது மாவிரதியரென்னும் உட்சமயத்தாரணிவது. மேலும் அவர்களணியுமணி எலும்பினாலாகிய மணிகள். இவற்றை மானக்கஞ்சாறநாயனார் புராணத்து 23-வது திருவிருத்தத்தானுமுணர்க. | 7.53.6 |
546 | காரார் கடலின் நஞ்சுண்ட கண்டர் கடவூர் உறைவாணர் தேரார் அரக்கன் போய்வீழ்ந்து சிதைய விரலா லூன்றினார் ஊர்தான் ஆவ துலகேழும் உடையார்க் கொற்றி யூராரூர் பேரா யிரவர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே. | 7.53.7 |
547 | வாடா முலையாள் தன்னோடும் மகிழ்ந்து கானில் வேடுவனாய்க் கோடார் கேழற் பின்சென்று குறுகி விசயன் தவமழித்து நாடா வண்ணஞ் செருச்செய்து ஆவ நாழி நிலையருள்செய் பீடார் சடையார் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே. | 7.53.8 |
548 | வேழம் உரிப்பர் மழுவாளர் வேள்வி அழிப்பர் சிரமறுப்பர் ஆழி அளிப்பர் அரிதனக்கன் றானஞ் சுகப்பர் அறமுரைப்பர் ஏழைத் தலைவர் கடவூரில் இறைவர் சிறுமான் மறிக்கையர் பேழைச் சடையர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே. | 7.53.9 |
549 | மாட மல்கு கடவூரில் மறையோ ரேத்தும் மயானத்துப் பீடை தீர அடியாருக் கருளும் பெருமா னடிகள்சீர் நாடி நாவ லாரூரன் நம்பி சொன்ன நற்றமிழ்கள் பாடு மடியார் கேட்பார்மேற் பாவ மான பறையுமே. | 7.53.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பிரமபுரீசுவரர், தேவியார் – மலர்க்குழல்மின்னம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.54 திருவொற்றியூர்
பண் – தக்கேசி
திருச்சிற்றம்பலம்
550 | அழுக்கு மெய்கொடுன் றிருவடி அடைந்தேன் அதுவும் நான்படப் பாலதொன் றானாற் பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள் பிழைப்பன் ஆகிலுந் திருவடிப் பிழையேன் வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லால் மற்று நான்அறி யேன்மறு மாற்றம் ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்ஒற்றி யூரெனும் ஊருறை வானே. | 7.54.1 |
551 | கட்ட னேன்பிறந் தேன்உனக் காளாய் காதற் சங்கிலி காரண மாக எட்டி னாற்றிக ழுந்திரு மூர்த்தி என்செய் வான்அடி யேன்எடுத் துரைக்கேன் பெட்ட னாகிலுந் திருவடிப் பிழையேன்பிழைப்ப னாகிலுந் திருவடிக் கடிமை ஒட்டி னேன்எனை நீசெய்வ தெல்லாம்ஒற்றி யூரெனும் ஊருறை வானே. | 7.54.2 |
552 | கங்கை தங்கிய சடையுடைக் கரும்பே கட்டி யேபலர்க் குங்களை கண்ணே அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே அத்தா என்னிடர் ஆர்க்கெடுத் துரைக்கேன் சங்கும் இப்பியுஞ் சலஞ்சலம் முரல வயிரம் முத்தொடு பொன்மணி வரன்றி ஒங்கு மாகடல் ஓதம்வந் துலவும்ஒற்றி யூரெனும் ஊருறை வானே. | 7.54.3 |
553 | ஈன்று கொண்டதோர் சுற்றமொன் றன்றா லியாவ ராகிலென் அன்புடை யார்கள் தோன்ற நின்றருள் செய்தளித் திட்டாற் சொல்லு வாரைஅல் லாதன சொல்லாய் மூன்று கண்ணுடை யாய்அடி யேன்கண் கொள்வ தேகணக் குவழக் காகில் ஊன்று கோல்எனக் காவதொன் றருளாய்ஒற்றி யூரெனும் ஊருறை வானே. | 7.54.4 |
554 | வழித்த லைப்படு வான்முயல் கின்றேன் உன்னைப் போல்என்னைப் பாவிக்க மாட்டேன் சுழித்த லைப்பட்ட நீரது போலச் சுழல்கின் றேன்சுழல் கின்றதென் னுள்ளங் கழித்த லைப்பட்ட நாயது போல ஒருவன் கோல்பற்றிக் கறகற இழுக்கை ஒழித்து நீயரு ளாயின செய்யாய்ஒற்றி யூரெனும் ஊருறை வானே. | 7.54.5 |
555 | மானை நோக்கியர் கண்வலைப் பட்டு வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சித் தேனை ஆடிய கொன்றையி னாய்உன் சீல முங்குண முஞ்சிந்தி யாதே நானும் இத்தனை வேண்டுவ தடியேன் உயிரொ டும்நர கத்தழுந் தாமை ஊனம் உள்ளன தீர்த்தருள் செய்யாய்ஒற்றி யூரெனும் ஊருறை வானே. | 7.54.6 |
556 | மற்றுத் தேவரை நினைந்துனை மறவேன் எஞ்சி னாரொடு வாழவும் மாட்டேன் பெற்றி ருந்து பெறாதொழி கின்ற பேதை யேன்பிழைத் திட்டதை அறியேன் முற்றும் நீஎனை முனிந்திட அடியேன் கடவ தென்னுனை நான்மற வேனேல் உற்ற நோயுறு பிணிதவிர்த் தருளாய்ஒற்றி யூரெனும் ஊருறை வானே. | 7.54.7 |
557 | கூடினாய் மலை மங்கையை நினையாய் கங்கை ஆயிர முகம்உடை யாளைச் சூடி னாயென்று சொல்லிய புக்கால் தொழும்ப னேனுக்குஞ் சொல்லலு மாமே வாடி நீயிருந் தென்செய்தி மனனே வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சி ஊடி னாலினி ஆவதொன் றுண்டேஒற்றி யூரெனும் ஊருறை வானே. | 7.54.8 |
558 | மகத்திற் புக்கதோர் சனிஎனக் கானாய் மைந்த னேமணி யேமண வாளா அகத்திற் பெண்டுகள் நானொன்று சொன்னால் அழையேற் போகுரு டாஎனத் தரியேன் முகத்திற் கண்ணிழந் தெங்ஙனம் வாழ்கேன் முக்க ணாமுறை யோமறை யோதீ உகைக்குந் தண்கடல் ஓதம்வந் துலவும் ஒற்றி யூரெனும் ஊருறை வானே. | 7.54.9 |
559 | ஓதம் வந்துல வுங்கரை தன்மேல் ஒற்றி யூருறை செல்வனை நாளும் ஞாலந் தான்பர வப்படு கின்ற நான்ம றையங்கம் ஓதிய நாவன் சீலந் தான்பெரி தும்மிக வல்ல சிறுவன் வன்றொண்டன் ஊரன் உரைத்த பாடல் பத்திவை வல்லவர் தாம்போய்ப் பரகதி திண்ணம் நண்ணுவர் தாமே. | 7.54.10 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – படம்பக்கநாதர் – மாணிக்கத்தியாகர்,
தேவியார் – வடிவுடையம்மை.
இது உன்னைப்பிரிந்துபோவதில்லையென்று சங்கிலி நாச்சியாருக்குச்
சூளுரைசெய்து மணந்துமகிழ்ந் திருக்கையில் திருவாரூர்
வீதிவிடங்கப்பெருமானுடய திருவோலக்கத் தரிசனஞ்செய்வதற்கின்றி
நெடுநாள் பிரிந்திருக்கின்றோமேயென்னும் ஞாபகமுண்டாகப்
பரமசிவத்தின் திருவிளையாட்டால் முன்கூறிய சூளுரையைமறந்து
திருவொற்றியூரெல்லையைக் கடந்தவளவில் நேத்திரங்களுக்கு
அபாவந்தோன்ற வருந்தித் துதிசெய்த பதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.55 திருப்புன்கூர்
பண் – தக்கேசி
திருச்சிற்றம்பலம்
560 | அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத அவனைக் காப்பது காரண மாக வந்த காலன்றன் ஆருயி ரதனை வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன் எந்தை நீயெனை நமன்றமர் நலியின் இவன்மற் றென்னடி யானென விலக்குஞ் சிந்தை யால்வந்துன் றிருவடி அடைந்தேன்செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. | 7.55.1 |
561 | வைய கமுற்றும் மாமழை மறந்து வயலில் நீரிலை மாநிலந் தருகோம் உய்யக் கொள்கமற் றெங்களை என்ன ஒலிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும் பெய்யும் மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப் பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளுஞ் செய்கை கண்டுநின் றிருவடி அடைந்தேன்செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. | 7.55.2 |
562 | ஏத நன்னிலம் ஈரறு வேலி ஏயர் கோனுற்ற இரும்பிணி தவிர்த்துக் கோத னங்களின் பால்கறந் தாட்டக் கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற தாதை தாளற எறிந்ததண் டிக்குன் சடைமி சைமலர் அருள்செயக் கண்டு பூத ஆளிநின் பொன்னடி அடைந்தேன்பூம்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. | 7.55.3 |
563 | நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன் நாவினுக் கரையன் நாளைப்போ வானுங் கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள் குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங் கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன் பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும் பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே. | 7.55.4 |
564 | கோல மால்வரை மத்தென நாட்டிக் கோள ரவுசுற் றிக்கடைந் தெழுந்த ஆல நஞ்சுகண் டவர்மிக இரிய அமரர் கட்கருள் புரிவது கருதி நீல மார்கடல் விடந்தனை உண்டு கண்டத் தேவைத்த பித்தநீ செய்த சீலங் கண்டுநின் றிருவடி அடைந்தேன்செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. | 7.55.5 |
565 | இயக்கர் கின்னரர் யமனொடு வருணர் இயங்கு தீவளி ஞாயிறு திங்கள் மயக்கம் இல்புலி வானரம் நாகம் வசுக்கள் வானவர் தானவர் எல்லாம் அயர்ப்பொன் றின்றிநின் றிருவடி அதனை அர்ச்சித் தார்பெறும் ஆரருள் கண்டு திகைப்பொன் றின்றிநின் றிருவடி அடைந்தேன்செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. | 7.55.6 |
566 | போர்த்த நீள்செவி யாளர்அந் தணர்க்குப் பொழில்கொள் ஆல்நிழற் கீழறம் புரிந்து பார்த்த னுக்கன்று பாசுப தங்கொடுத் தருளி னாய்பண்டு பகீரதன் வேண்ட ஆர்த்து வந்திழி யும்புனற் கங்கைநங்கை யாளைநின் சடைமிசைக் கரந்த தீர்த்த னேநின்றன் றிருவடி அடைந்தேன்செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. | 7.55.7 |
567 | மூவெ யில்செற்ற ஞான்றுய்ந்த மூவரில் இருவர் நின்றிருக் கோயிலின் வாய்தல் காவ லாளரென் றேவிய பின்னை ஒருவ நீகரி காடரங் காக மானை நோக்கியோர் மாநடம் மகிழமணிமு ழாமுழக் கஅருள் செய்த தேவ தேவநின் றிருவடி அடைந்தேன்செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. | 7.55.8 |
568 | அறிவி னால்மிக்க அறுவகைச் சமயம் அவ்வ வர்க்கங்கே ஆரருள் புரிந்து எறியு மாகடல் இலங்கையர் கோனைத் துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக் குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக் கோல வாளொடு நாளது கொடுத்த செறிவு கண்டுநின் றிருவடி அடைந்தேன்செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. | 7.55.9 |
569 | கம்ப மால்களிற் றின்னுரி யானைக் காமற் காய்ந்ததோர் கண்ணுடை யானைச் செம்பொ னேயொக்குந் திருவுரு வானைச் செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானை உம்பர் ஆளியை உமையவள் கோனை ஊரன் வன்றொண்டன் உள்ளத் தாலுகந் தன்பி னாற்சொன்ன அருந்தமிழ் ஐந்தோடைந்தும் வல்லவர் அருவினை இலரே. | 7.55.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சிவலோகநாதர், தேவியார் – சொக்கநாயகியம்மை.
சுந்தரமூர்த்திசுவாமிகள் திருப்புன்கூருக்கெழுந்தருளியபோது அந்தத்தலத்தார்
கண்டு தொழுது சுவாமீ! இங்கு நெடுநாளாக மழைபொழிதலின்றி
வருந்துகிறோம், ஆதலால் கிருபைபாலிக்கவேண்டுமென்று விண்ணப்பஞ்செய்ய,
மழைபொழிந்தால் சுவாமிக்கியாது தருவீர்களென்ன, அவர்கள் பன்னிரண்டு
வேலி நிலந்தருகிறோமென்னக் கிருபை கூர்ந்து இந்தப்பதிகமோதியருளலும்,
மழை அதிகமாய்ப்பெய்ய அவர்களுடையவேண்டுதலினால் மழை தணிந்து
பெய்யும்படிசெய்து முன்னமவர்கள் சொல்லிய பன்னிரண்டுவேலி நிலமேயன்றி
மீட்டும் பன்னிரண்டுவேலி நிலங்கொடுக்கப்பெற்றருளியது.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.56 திருநீடூர்
பண் – தக்கேசி
திருச்சிற்றம்பலம்
570 | ஊர்வ தோர்விடை ஒன்றுடை யானை ஒண்ணு தல்தனிக் கண்ணுத லானைக் கார தார்கறை மாமிடற் றானைக் கருத லார்புரம் மூன்றெரித் தானை நீரில் வாளை வரால்குதி கொள்ளும் நிறைபு னற்கழ னிச்செல்வ நீடூர்ப் பாரு ளார்பர வித்தொழ நின்ற பரம னைப்பணி யாவிட லாமே. | 7.56.1 |
571 | துன்னு வார்சடைத் தூமதி யானைத் துயக்கு றாவகை தோன்றுவிப் பானைப் பன்னு நான்மறை பாடவல் லானைப் பார்த்த னுக்கருள் செய்தபி ரானை என்னை இன்னருள் எய்துவிப் பானை ஏதி லார்தமக் கேதிலன் றன்னைப் புன்னை மாதவி போதலர் நீடூர்ப் புனித னைப்பணி யாவிட லாமே. | 7.56.2 |
572 | கொல்லும் மூவிலை வேலுடை யானைக் கொடிய காலனை யுங்குமைத் தானை நல்ல வாநெறி காட்டுவிப் பானை நாளும் நாம்உகக் கின்ற பிரானை அல்ல லில்லரு ளேபுரி வானை ஆடு நீர்வயல் சூழ்புனல் நீடூர்க் கொல்லை வெள்ளெரு தேறவல் லானைக் கூறி நாம்பணி யாவிட லாமே. | 7.56.3 |
573 | தோடு காதிடு தூநெறி யானைத் தோற்ற முந்துறப் பாயவன் றன்னைப் பாடு மாமறை பாடவல் லானைப் பைம்பொ ழிற்குயில் கூவிட மாடே ஆடு மாமயில் அன்னமோ டாட அலைபு னற்கழ னித்திரு நீடூர் வேட னாயபி ரானவன் றன்னை விரும்பி நாம்பணி யாவிட லாமே. | 7.56.4 |
574 | குற்ற மொன்றடி யாரிலர் ஆனாற் கூடு மாறத னைக்கொடுப் பானைக் கற்ற கல்வியி லும்மினி யானைக் காணப் பேணும வர்க்கெளி யானை முற்ற அஞ்சுந் துறந்திருப் பானை மூவ ரின்முத லாயவன் றன்னைச் சுற்று நீள்வயல் சூழ்திரு நீடூர்த் தோன்ற லைப்பணி யாவிட லாமே. | 7.56.5 |
575 | காடில் ஆடிய கண்ணுத லானைக் கால னைக்கடிந் திட்டபி ரானைப் பாடி ஆடும்பரி சேபுரிந் தானைப் பற்றி னோடுசுற் றம்மொழிப் பானைத் தேடி மாலயன் காண்பரி யானைச் சித்த முந்தெளி வார்க்கெளி யானைக் கோடி தேவர்கள் கும்பிடு நீடூர்க் கூத்த னைப்பணி யாவிட லாமே. | 7.56.6 |
576 | விட்டி லங்கெரி யார்கையி னானை வீடி லாதவி யன்புக ழானைக் கட்டு வாங்கந் தரித்தபி ரானைக் காதி லார்கன கக்குழை யானை விட்டி லங்குபுரி நூலுடை யானை வீந்த வர்தலை யோடுகை யானைக் கட்டி யின்கரும் போங்கிய நீடூர்க் கண்டு நாம்பணி யாவிட லாமே. | 7.56.7 |
577 | மாய மாய மனங்கெடுப் பானை மனத்து ளேமதி யாய்இருப் பானைக் காய மாயமும் ஆக்குவிப் பானைக் காற்று மாய்க்கன லாய்க்கழிப் பானை ஓயு மாறுரு நோய்புணர்ப் பானை ஒல்லை வல்வினை கள்கெடுப் பானை வேய்கொள் தோள்உமைப் பாகனை நீடூர் வேந்த னைப்பணி யாவிட லாமே. | 7.56.8 |
578 | கண்ட முங்கறுத் திட்டபி ரானைக் காணப் பேணும வர்க்கெளி யானைத் தொண்ட ரைப்பெரி தும்முகப் பானைத் துன்ப முந்துறந் தின்பினி யானைப் பண்டை வல்வினை கள்கெடுப் பானைப் பாக மாமதி யாயவன் றன்னைக் கெண்டை வாளை கிளர்புனல் நீடூர்க் கேண்மை யாற்பணி யாவிட லாமே. | 7.56.9 |
579 | அல்லல் உள்ளன தீர்த்திடு வானை அடைந்த வர்க்கமு தாயிடு வானைக் கொல்லை வல்லர வம்மசைத் தானைக் கோல மார்கரி யின்னுரி யானை நல்ல வர்க்கணி யானவன் றன்னை நானுங் காதல்செய் கின்றபி ரானை எல்லி மல்லிகை யேகமழ் நீடூர் ஏத்தி நாம்பணி யாவிட லாமே. | 7.56.10 |
580 | பேரோர் ஆயிர மும்முடை யானைப் பேரி னாற்பெரி தும்மினி யானை நீரூர் வார்சடை நின்மலன் றன்னை நீடூர் நின்றுகந் திட்டபி ரானை ஆரூ ரன்னடி காண்பதற் கன்பாய் ஆத ரித்தழைத் திட்டவிம் மாலை பாரூ ரும்பர வித்தொழ வல்லார் பத்த ராய்முத்தி தாம்பெறு வாரே. | 7.56.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சோமநாதேசுவரர், தேவியார் – வேயுறுதோளியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.57 திருவாழ்கொளிபுத்தூர்
பண் – தக்கேசி
திருச்சிற்றம்பலம்
581 | தலைக்க லன்றலை மேல்தரித் தானைத் தன்னைஎன் னைநினைக் கத்தரு வானைக் கொலைக்கை யானைஉரி போர்த்துகந் தானைக்கூற்றுதைத் தகுரை சேர்கழ லானை அலைத்த செங்கண்விடை ஏறவல் லானைஆணை யால்அடி யேன்அடி நாயேன் மலைத்தசெந் நெல்வயல் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. | 7.57.1 |
582 | படைக்கட் சூலம் பயிலவல் லானைப் பாவிப் பார்மனம் பரவிக்கொண் டானைக் கடைக்கட்பிச் சைக்கிச்சை காதலித் தானைக்காமன்ஆ கந்தனைக் கட்டழித் தானைச் சடைக்கட் கங்கையைத் தாழவைத் தானைத்தண்ணீர்மண் ணிக்கரை யானைத்தக் கானை மடைக்கண்நீ லம்அலர் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. | 7.57.2 |
583 | வெந்த நீறுமெய் பூசவல் லானைவேத மால்விடை ஏறவல் லானை அந்தம் ஆதிஅறி தற்கரி யானைஆறலைத் தசடை யானைஅம் மானைச் சிந்தை யென்றடு மாற்றறுப் பானைத்தேவ தேவனென் சொல்முனி யாதே வந்தென் உள்ளம்புகும் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. | 7.57.3 |
584 | தடங்கை யான்மலர் தூய்த்தொழு வாரைத் தன்னடிக் கேசெல்லு மாறுவல் லானைப் படங்கொள் நாகம்அரை ஆர்த்துகந் தானைப்பல்லின்வெள் ளைத்தலை ஊணுடை யானை நடுங்க ஆனைஉரி போர்த்துகந் தானைநஞ்சம் உண்டுகண் டங்கறுத் தானை மடந்தை பாகனை வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. | 7.57.4 |
585 | வளைக்கை முன்கைமலை மங்கை மணாளன்மார னார்உடல் நீறெழச் செற்றுத் துளைத்த அங்கத்தொடு தூமலர்க் கொன்றை தோலும்நூ லுந்துதைந் தவரை மார்பன் திளைக்குந் தெவ்வர் திரிபுரம் மூன்றும் அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ வளைத்த வில்லியை வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. | 7.57.5. |
586 | திருவின் நாயகன் ஆகிய மாலுக் கருள்கள் செய்திடும் தேவர் பிரானை உருவி னானைஒன் றாவறி வொண்ணா மூர்த்தி யைவிச யற்கருள் செய்வான் செருவில் ஏந்தியோர் கேழற்பின் சென்று செங்கண் வேடனாய் என்னொடும் வந்து மருவி னான்றனை வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. | 7.57.6 |
587 | எந்தை யைஎந்தை தந்தை பிரானை ஏத மாயஇடர் தீர்க்கவல் லானை முந்தி யாகிய மூவரின் மிக்க மூர்த்தி யைமுதற் காண்பரி யானைக் கந்தின் மிக்ககரி யின்மருப் போடுகார கில்கவ ரிம்மயிர் மண்ணி வந்து வந்திழி வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. | 7.57.7 |
588 | தேனை ஆடிய கொன்றையி னானைத் தேவர் கைதொழுந் தேவர் பிரானை ஊனம் ஆயின தீர்க்க வல்லானை ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண் ணானைக் கான ஆனையின் கொம்பினைப் பீழ்ந்த கள்ளப் பிள்ளைக்குங் காண்பரி தாய வான நாடனை வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. | 7.57.8 |
589 | காளை யாகி வரையெடுத் தான்றன் கைகள் இற்றவன் மொய்தலை எல்லாம் மூளை போத ஒருவிரல் வைத்த மூர்த்தி யைமுதல் காண்பரி யானைப் பாளை தெங்கு பழம்விழ மண்டிச் செங்கண் மேதிகள் சேடெறிந் தெங்கும் வாளை பாய்வயல் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. | 7.57.9 |
590 | திருந்த நான்மறை பாடவல் லானைத் தேவர்க் குந்தெரி தற்கரி யானைப் பொருந்த மால்விடை ஏறவல் லானைப்பூதிப் பைபுலித் தோலுடை யானை இருந்துண் தேரரும் நின்றுணுஞ் சமணும் ஏச நின்றவன் ஆருயிர்க் கெல்லாம் மருந்த னான்றனை வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. | 7.57.10 |
591 | மெய்யனை மெய்யின் நின்றுணர் வானைமெய்யி லாதவர் தங்களுக் கெல்லாம் பொய்ய னைப்புரம் மூன்றெரித் தானைப்புனித னைப்புலித் தோலுடை யானைச் செய்ய னைவெளி யதிரு நீற்றில்திகழு மேனியன் மான்மறி ஏந்தும் மைகொள் கண்டனை வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. | 7.57.11 |
592 | வளங்கி ளர்பொழில் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனென் றுளங்கு ளிர்தமிழ் ஊரன்வன் றொண்டன்சடையன் காதலன் வனப்பகை அப்பன் நலங்கி ளர்வயல் நாவலர் வேந்தன் நங்கை சிங்கடி தந்தை பயந்த பலங்கி ளர்தமிழ் பாடவல் லார்மேல் பறையு மாஞ்செய்த பாவங்கள் தானே. | 7.57.12 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மாணிக்கவண்ணர்,
தேவியார் – வண்டமர்பூங்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.58 திருக்கழுமலம்
பண் – தக்கேசி
திருச்சிற்றம்பலம்
593 | சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத் தன்னருள் தந்தஎந் தலைவனை மலையின் மாதினை மதித்தங்கோர் பால்கொண்ட மணியைவருபுனல் சடையிடை வைத்தஎம் மானை ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரைஎண்வகை ஒருவனை எங்கள்பி ரானைக் காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. | 7.58.1 |
594 | மற்றொரு துணையினி மறுமைக்குங் காணேன்வருந்தலுற் றேன்மற வாவரம் பெற்றேன் சுற்றிய சுற்றமுந் துணையென்று கருதேன்துணையென்று நான்தொழப் பட்டஒண் சுடரை முத்தியும் ஞானமும் வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளுங் காட்டிக் கற்பனை கற்பித்த கடவுளை அடியேன் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. | 7.58.2 |
595 | திருத்தினை நகர்உறை சேந்தன் அப்பன்என்செய்வினை அறுத்திடுஞ் செம்பொனை அம்பொன் ஒருத்தனை அல்லதிங் காரையும் உணரேன்உணர்வுபெற் றேன்உய்யுங் காரணந் தன்னால் விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி விழித்தெங்குங் காணமாட் டாதுவிட் டிருந்தேன் கருத்தனை நிருத்தஞ்செய் காலனை வேலைக் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. | 7.58.3 |
596 | மழைக்கரும் பும்மலர்க் கொன்றையி னானை வளைக்கலுற் றேன்மற வாமனம் பெற்றேன் பிழைத்தொரு கால்இனிப் போய்ப்பிற வாமைப் பெருமைபெற் றேன்பெற்ற தார்பெறு கிற்பார் குழைக்கருங் கண்டனைக் கண்டுகொள் வானே பாடுகின் றேன்சென்று கூடவும் வல்லேன் கழைக்கரும் புங்கத லிப்பல சோலைக்கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. | 7.58.4 |
597 | குண்டலங் குழைதிகழ் காதனே என்றுங்கொடுமழு வாட்படைக் குழகனே என்றும் வண்டலம் பும்மலர்க் கொன்றையன் என்றும்வாய்வெரு வித்தொழு தேன்விதி யாலே பண்டைநம் பலமன முங்களைந் தொன்றாய்ப்பசுபதி பதிவின விப்பல நாளுங் கண்டலங் கழிக்கரை ஓதம்வந் துலவுங்கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. | 7.58.5 |
598 | வரும்பெரும் வல்வினை என்றிருந் தெண்ணிவருந்தலுற் றேன்மற வாமனம் பெற்றேன் விரும்பிஎன் மனத்திடை மெய்குளிர்ப் பெய்திவேண்டிநின் றேதொழு தேன்விதி யாலே அரும்பினை அலரினை அமுதினைத் தேனைஐயனை அறவனென் பிறவிவேர் அறுக்குங் கரும்பினைப் பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனிக்கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. | 7.58.6 |
599 | அயலவர் பரவவும் அடியவர் தொழவும்அன்பர்கள் சாயலுள் அடையலுற் றிருந்தேன் முயல்பவர் பின்சென்று முயல்வலை யானை படுமென மொழிந்தவர் வழிமுழு தெண்ணிப் புயலினைத் திருவினைப் பொன்னின தொளியைமின்னின துருவை என்னிடைப் பொருளைக் கயலினஞ் சேலொடு வயல்விளை யாடுங்கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. | 7.58.7 |
600 | நினைதரு பாவங்கள் நாசங்க ளாகநினைந்துமுன் தொழுதெழப் பட்டஒண் சுடரை மலைதரு மலைமகள் கணவனை வானோர் மாமணி மாணிக்கத் தைம்மறைப் பொருளைப் புனைதரு புகழினை எங்கள தொளியைஇருவரும் ஒருவனென் றுணர்வரி யவனைக் கனைதரு கருங்கடல் ஓதம்வந் துலவுங்கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. | 7.58.8 |
601 | மறையிடைத் துணிந்தவர் மனையிடை இருப்ப வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாயத் துறையுறக் குளித்துள தாகவைத் துய்த்த உண்மை யெனுந்தக வின்மையை ஓரேன் பிறையுடைச் சடையனை எங்கள்பி ரானைப்பேரரு ளாளனைக் காரிருள் போன்ற கறையணி மிடறுடை அடிகளை அடியேன் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. | 7.58.9 |
602 | செழுமலர்க் கொன்றையுங் கூவிள மலரும் விரவிய சடைமுடி அடிகளை நினைந்திட் டழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால் அறிவரி தவன்றிரு வடியிணை இரண்டுங் கழுமல வளநகர்க் கண்டுகொண் டூரன்சடையன்றன் காதலன் பாடிய பத்துந் தொழுமலர் எடுத்தகை அடியவர் தம்மைத் துன்பமும் இடும்பையுஞ் சூழகி லாவே. | 7.58.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பிரமபுரியீசுவரர்,
தேவியார் – திருநிலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.59 திருவாரூர்
பண் – தக்கேசி
திருச்சிற்றம்பலம்
603 | பொன்னும் மெய்ப்பொரு ளுந்தரு வானைப்போக முந்திரு வும்புணர்ப் பானைப் பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை இன்ன தன்மையன் என்றறி வொண்ணா எம்மா னைஎளி வந்தபி ரானை அன்னம் வைகும் வயற்பழ னத்தணி ஆரூ ரானை மறக்கலு மாமே. | 7.59.1 |
604 | கட்ட மும்பிணி யுங்களை வானைக் காலற் சீறிய காலுடை யானை விட்ட வேட்கைவெந் நோய்களை வானைவிரவி னால்விடு தற்கரி யானைப் பட்ட வார்த்தை படநின்ற வார்த்தைவாரா மேதவி ரப்பணிப் பானை அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை ஆரூ ரானை மறக்கலு மாமே. | 7.59.2 |
605 | கார்க்குன் றமழை யாய்ப்பொழி வானைக்கலைக்கெ லாம்பொரு ளாயுடன் கூடிப் பார்க்கின் றஉயிர்க் குப்பரிந் தானைப்பகலுங் கங்குலும் ஆகிநின் றானை ஓர்க்கின் றசெவி யைச்சுவை தன்னைஉணரும் நாவினைக் காண்கின்ற கண்ணை ஆர்க்கின் றகட லைமலை தன்னைஆரூ ரானை மறக்கலு மாமே. | 7.59.3 |
606 | செத்த போதினில் முன்னின்று நம்மைச் சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம் வைத்த சிந்தைஉண் டேமனம் உண்டேமதிஉண் டேவிதி யின்பயன் உண்டே முத்தன் எங்கள்பி ரானென்று வானோர் தொழநின் றதிமில் ஏறுடை யானை அத்தன் எந்தைபி ரான்எம்பி ரானைஆரூ ரானை மறக்கலு மாமே. | 7.59.4 |
607 | செறிவுண் டேல்மனத் தாற்றெளி வுண்டேல்தேற்றத் தால்வருஞ் சிக்கன வுண்டேல் மறிவுண் டேல்மறு மைப்பிறப் புண்டேல்வாணாள் மேற்செல்லும் வஞ்சனை உண்டேல் பொறிவண் டாழ்செய்யும் பொன்மலர்க் கொன்றைப் பொன்போ லுஞ்சடை மேற்புனைந் தானை அறிவுண் டேஉட லத்துயிர் உண்டேஆரூ ரானை மறக்கலு மாமே. | 7.59.5 |
608 | பொள்ளல் இவ்வுட லைப்பொரு ளென்றுபொருளுஞ் சுற்றமும் போகமும் ஆகி மெள்ள நின்றவர் செய்வன எல்லாம் வாரா மேதவிர்க் கும்விதி யானை வள்ளல் எந்தமக் கேதுணை என்று நாள்நா ளும்அம ரர்தொழு தேத்தும் அள்ள லங்கழ னிப்பழ னத்தணி ஆரூ ரானை மறக்கலு மாமே. | 7.59.6 |
609 | கரியா னைஉரி கொண்டகை யானைக்கண்ணின் மேலொரு கண்ணுடை யானை வரியா னைவருத் தங்களை வானைமறையா னைக்குறை மாமதி சூடற் குரியா னைஉல கத்துயிர்க் கெல்லாம்ஒளியா னைஉகந் துள்கிநண் ணாதார்க் கரியா னைஅடி யேற்கெளி யானைஆரூ ரானை மறக்கலு மாமே. | 7.59.7 |
610 | வாளா நின்று தொழும்அடி யார்கள் வான்ஆ ளப்பெறும் வார்த்தையைக் கேட்டும் நாணா ளும்மலர் இட்டுவணங் கார் நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார் கேளா நான்கிடந் தேஉழைக் கின்றேன்கிளைக்கெ லாந்துணை யாமெனக் கருதி ஆளா வான்பலர் முன்பழைக் கின்றேன்ஆரூ ரானை மறக்கலு மாமே. | 7.59.8 |
611 | விடக்கை யேபெருக் கிப்பல நாளும் வேட்கை யாற்பட்ட வேதனை தன்னைக் கடக்கி லேன்நெறி காணவும் மாட்டேன்கண்கு ழிந்திரப் பார்கையி லொன்றும் இடக்கி லேன்பர வைத்திரைக் கங்கைச் சடையா னைஉமை யாளையோர் பாகத் தடக்கி னானைஅந் தாமரைப் பொய்கை ஆரூ ரானை மறக்கலு மாமே. | 7.59.9 |
612 | ஒட்டி ஆட்கொண்டு போயொளித் திட்ட உச்சிப் போதனை நச்சர வார்த்த பட்டி யைப்பக லையிருள் தன்னைப்பாவிப் பார்மனத் தூறுமத் தேனைக் கட்டி யைக்கரும் பின்றெளி தன்னைக்காத லாற்கடல் சூர்தடிந் திட்ட செட்டி யப்பனைப் பட்டனைச் செல்வ ஆரூ ரானை மறக்கலு மாமே. | 7.59.10 |
613 | ஓரூ ரென்றுல கங்களுக் கெல்லாம் உரைக்க லாம்பொரு ளாயுடன் கூடிக் காரூ ருங்கமழ் கொன்றைநன் மாலை முடியன் காரிகை காரண மாக ஆரூ ரைம்மறத் தற்கரி யானை அம்மான் றன்றிருப் பேர்கொண்ட தொண்டன் ஆரூ ரன்னடி நாயுரை வல்லார் அமர லோகத் திருப்பவர் தாமே. | 7.59.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.60 திருவிடைமருதூர்
பண் – தக்கேசி
திருச்சிற்றம்பலம்
614 | கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற் கைப்பர் பாழ்புக மற்றது போலப் பழுது நான்உழன் றுள்தடு மாறிப் படுசு ழித்தலைப் பட்டனன் எந்தாய் அழுது நீயிருந் தென்செய்தி மனனேஅங்க ணாஅர னேயென மாட்டா இழுதை யேனுக்கோர் உய்வகை அருளாய்இடைம ருதுறை எந்தைபி ரானே. | 7.60.1 |
615 | நரைப்பு மூப்பொடு பிணிவரும் இன்னேநன்றி யில்வினை யேதுணிந் தெய்த்தேன் அரைத்த மஞ்சள தாவதை அறிந்தேன்அஞ்சி னேன்நம னாரவர் தம்மை உரைப்பன் நானுன சேவடி சேர உணரும் வாழ்க்கையை ஒன்றறி யாத இரைப்ப னேனுக்கோர் உய்வகை அருளாய்இடைம ருதுறை எந்தைபி ரானே. | 7.60.2 |
616 | புன்னு னைப்பனி வெங்கதிர் கண்டாற் போலும் வாழ்க்கை பொருளிலை நாளும் என்னெ னக்கினி இற்றைக்கு நாளை என்றி ருந்திடர் உற்றனன் எந்தாய் முன்ன மேஉன சேவடி சேரா மூர்க்க னாகிக் கழிந்தன காலம் இன்னம் என்றனக் குய்வகை அருளாய்இடைம ருதுறை எந்தைபி ரானே. | 7.60.3 |
617 | முந்திச் செய்வினை இம்மைக்கண் நலியமூர்க்க னாகிக் கழிந்தன காலம் சிந்தித் தேமனம் வைக்கவும் மாட்டேன்சிறுச்சிறி தேஇரப் பார்கட்கொன் றீயேன் அந்தி வெண்பிறை சூடும்எம் மானே ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா எந்தை நீயெனக் குய்வகை அருளாய்இடைம ருதுறை எந்தைபி ரானே. | 7.60.4 |
618 | அழிப்பர் ஐவர் புரவுடை யார்கள்ஐவ ரும்புர வாசற ஆண்டு கழித்துக் காற்பெய்து போயின பின்னைக்கடைமு றைஉனக் கேபொறை ஆனேன் விழித்துக் கண்டனன் மெய்ப்பொருள் தன்னைவேண்டேன் மானுட வாழ்க்கையீ தாகில் இழித்தேன் என்றனக் குய்வகை அருளாய்இடைம ருதுறை எந்தைபி ரானே. | 7.60.5 |
619 | குற்றந் தன்னொடு குணம்பல பெருக்கிக்கோல நுண்ணிடை யாரொடு மயங்கிக் கற்றி லேன்கலை கள்பல ஞானங் கடிய ஆயின கொடுமைகள் செய்தேன் பற்ற லாவதோர் பற்றுமற் றில்லேன்பாவி யேன்பல பாவங்கள் செய்தேன் எற்று ளேன்எனக் குய்வகை அருளாய்இடைம ருதுறை எந்தைபி ரானே. | 7.60.6 |
620 | கொடுக்க கிற்றிலேன் ஒண்பொருள் தன்னைக்குற்றஞ் செற்றம் இவைமுத லாக விடுக்க கிற்றிலேன் வேட்கையுஞ் சினமும்வேண்டில் ஐம்புலன் என்வசம் அல்ல நடுக்கம் உற்றதோர் மூப்புவந் தெய்தநமன்த மர்நர கத்திடல் அஞ்சி இடுக்கண் உற்றனன் உய்வகை அருளாய்இடைம ருதுறை எந்தைபி ரானே. | 7.60.7 |
621 | ஐவ கையர் ஐயரவ ராகி ஆட்சி கொண்டொரு காலவர் நீங்கார் அவ்வ கையவர் வேண்டுவ தானால்அவர வர்வழி ஒழுகிநான் வந்து செய்வ கையறி யேன்சிவ லோகாதீவ ணாசிவ னேயெரி யாடீ எவ்வ கையெனக் குய்வகை அருளாய்இடைம ருதுறை எந்தைபி ரானே. | 7.60.8 |
622 | ஏழை மானுட இன்பினை நோக்கிஇளைய வர்வயப் பட்டிருந் தின்னம் வாழை தான்பழுக் கும்நமக் கென்று வஞ்ச வல்வினை யுள்வலைப் பட்டுக் கூழை மாந்தர்தஞ் செல்கதிப் பக்கம்போக மும்பொருள் ஒன்றறி யாத ஏழை யேனுக்கோர் உய்வகை அருளாய்இடைம ருதுறை எந்தைபி ரானே. | 7.60.9 |
623 | அரைக்குஞ் சந்தனத் தோடகில் உந்தி ஐவ னஞ்சுமந் தார்த்திரு பாலும் இரைக்குங் காவிரித் தென்கரை தன்மேல் இடைம ருதுறை எந்தைபி ரானை உரைக்கும் ஊரன் ஒளிதிகழ் மாலைஉள்ளத் தால்உகந் தேத்தவல் லார்கள் நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றிநாதன் சேவடி நண்ணுவர் தாமே. | 7.60.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மருதீசுவரர், தேவியார் – நலமுலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.61 திருவேகம்பம்
பண் – தக்கேசி
திருச்சிற்றம்பலம்
624 | ஆலந் தானுகந் தமுதுசெய் தானைஆதி யைஅம ரர்தொழு தேத்துஞ் சீலந் தான்பெரி தும்முடை யானைச்சிந்திப் பாரவர் சிந்தையு ளானை ஏல வார்குழ லாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கால காலனைக் கம்பனெம் மானைக்காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. | 7.61.1 |
625 | உற்ற வர்க்குத வும்பெரு மானை ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப் பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப்பாவிப் பார்மனம் பரவிக்கொண் டானை அற்ற மில்புக ழாள்உமை நங்கை ஆத ரித்து வழிபடப் பெற்ற கற்றை வார்சடைக் கம்பனெம் மானைக்காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. | 7.61.2 |
626 | திரியும் முப்புரம் தீப்பிழம் பாகச் செங்கண் மால்விடை மேற்றிகழ் வானைக் கரியின் ஈருரி போர்த்துகந் தானைக்காம னைக்கன லாவிழித் தானை வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை மருவி யேத்தி வழிபடப் பெற்ற *பெரிய கம்பனை எங்கள்பி ரானைக்காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. *காமாட்சியம்மையால் பூசிக்கப்பட்ட ஏகாம்பர நாதரே பெரியகம்பர். | 7.61.3 |
627 | குண்ட லந்திகழ் காதுடை யானைக்கூற்று தைத்த கொடுந்தொழி லானை வண்டலம் புமலர்க் கொன்றையி னானைவாள ராமதி சேர்சடை யானைக் கெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை கெழுமி யேத்தி வழிபடப் பெற்ற கண்டம் நஞ்சுடைக் கம்பனெம் மானைக்காணக் கண்அடி யேன்பெற்ற வறே. | 7.61.4 |
628 | வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானைவேலை நஞ்சுண்ட வித்தகன் றன்னை அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானைஅரும றையவை அங்கம்வல் லானை எல்லை யிற்புக ழாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற *நல்ல கம்பனை எங்கள் பிரானை காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. *உருத்திரராற் பூசிக்கப்பட்ட சிவலிங்கப் பெருமானுக்கு நல்லகம்பனென்றுபெயர். | 7.61.5 |
629 | திங்கள் தங்கிய சடையுடை யானைத்தேவ தேவனைச் செழுங்கடல் வளருஞ் சங்க வெண்குழைக் காதுடை யானைச்சாம வேதம் பெரிதுகப் பானை மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற கங்கை யாளனைக் கம்பனெம் மானைக்காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. | 7.61.6 |
630 | விண்ண வர்தொழு தேத்தநின் றானைவேதந் தான்விரித் தோதவல் லானை நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னைநாளும் நாம்உகக் கின்றபி ரானை எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கண்ணும் மூன்றுடைக் கம்பனெம் மானைக்காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. | 7.61.7 |
631 | சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள் சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப் பந்தித் தவினைப் பற்றறுப் பானைப்பாலோ டானஞ்சும் ஆட்டுகந் தானை அந்த மில்புக ழாள்உமை நங்கை ஆத ரித்து வழிபடப் பெற்ற கந்த வார்சடைக் கம்பனெம் மானைக்காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. | 7.61.8 |
632 | வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம் வாலி யபுரம் மூன்றெரித் தானை நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி நிரந்த ரஞ்செய்த நிட்கண் டகனைப் பரந்த தொல்புக ழாள்உமை நங்கை பரவி யேத்தி வழிபடப் பெற்ற கரங்கள் எட்டுடைக் கம்பனெம் மானைக்காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. | 7.61.9 |
633 | எள்க லின்றி இமையவர் கோனைஈச னைவழி பாடுசெய் வாள்போல் உள்ளத் துள்கி உகந்துமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி வெருவி ஓடித் தழுவவெளிப் பட்ட *கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. *திருமாலாற் பூசிக்கப்பட்ட சிவலிங்கப் பெருமானுக்கு கள்ளக்கம்பனென்றுபெயர். | 7.61.10 |
634 | பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப்பெரிய எம்பெரு மானென்றெப் போதுங் கற்ற வர்பர வப்படு வானைக் காணக் கண்அடி யேன்பெற்ற தென்று கொற்ற வன்கம்பன் கூத்தனெம் மானைக்குளிர்பொ ழிற்றிரு நாவலா ரூரன் நற்ற மிழ்இவை ஈரைந்தும் வல்லார்நன்னெ றிஉல கெய்துவர் தாமே. | 7.61.11 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – ஏகாம்பரநாதர், தேவியார் – காமாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.62 திருக்கோலக்கா
பண் – தக்கேசி
திருச்சிற்றம்பலம்
635 | புற்றில் வாளர வார்த்த பிரானைப்பூத நாதனைப் பாதமே தொழுவார் பற்று வான்துணை எனக்கெளி வந்த பாவ நாசனை மேவரி யானை முற்ற லார்திரி புரமொரு மூன்றும் பொன்ற வென்றிமால் வரைஅரி அம்பாக் கொற்ற வில்லங்கை ஏந்திய கோனைக்கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. | 7.62.1 |
636 | அங்கம் ஆறும்மா மறைஒரு நான்கும் ஆய நம்பனை வேய்புரை தோளி தங்கு மாதிரு உருவுடை யானைத்தழல்ம திச்சடை மேற்புனைந் தானை வெங்கண் ஆனையின் ஈருரி யானைவிண்ணு ளாரொடு மண்ணுளார் பரசுங் கொங்கு லாம்பொழிற் குரவெறி கமழுங்கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. | 7.62.2 |
637 | பாட்ட கத்திசை யாகிநின் றானைப்பத்தர் சித்தம் பரிவினி யானை நாட்ட கத்தேவர் செய்கையு ளானைநட்ட மாடியை நம்பெரு மானைக் காட்ட கத்துறு புலியுரி யானை கண்ணோர் மூன்றுடை அண்ணலை அடியேன் கோட்ட கப்புன லார்செழுங் கழனிக்கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. | 7.62.3 |
638 | ஆத்தம் என்றெனை ஆளுகந் தானைஅமரர் நாதனைக் குமரனைப் பயந்த வார்த்த யங்கிய முலைமட மானை வைத்து வான்மிசைக் கங்கையைக் கரந்த தீர்த்த னைச்சிவ னைச்செழுந் தேனைத் தில்லை அம்பலத் துள்நிறைந் தாடுங் கூத்த னைக்குரு மாமணி தன்னைக்கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. | 7.62.4 |
639 | அன்று வந்தெனை அகலிடத் தவர்முன்ஆள தாகஎன் றாவணங் காட்டி நின்று வெண்ணெய்நல் லூர்மிசை ஒளித்த நித்தி லத்திரள் தொத்தினை முத்திக் கொன்றி னான்றனை உம்பர் பிரானைஉயரும் வல்லர ணங்கெடச் சீறுங் குன்ற வில்லியை மெல்லிய லுடனே கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. | 7.62.5 |
640 | காற்றுத் தீப்புன லாகிநின் றானைக்கடவு ளைக்கொடு மால்விடை யானை நீற்றுத் தீயுரு வாய்நிமிர்ந் தானை நிரம்பு பல்கலை யின்பொ ருளாலே போற்றித் தன்கழல் தொழுமவன் உயிரைப் போக்கு வான்உயிர் நீக்கிடத் தாளாற் கூற்றைத் தீங்குசெய் குரைகழ லானைக்கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. | 7.62.6 |
641 | அன்ற யன்சிரம் அரிந்ததிற் பலிகொண் டமர ருக்கருள் வெளிப்படுத் தானைத் துன்று பைங்கழ லிற்சிலம் பார்த்த சோதி யைச்சுடர் போலொளி யானை மின்ற யங்கிய இடைமட மங்கை மேவும் ஈசனை வாசமா முடிமேற் கொன்றை யஞ்சடைக் குழகனை அழகார் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. | 7.62.7 |
642 | நாளும் இன்னிசை யாற்றமிழ் பரப்பும் ஞான சம்பந்த னுக்குல கவர்முன் தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்குந் தன்மை யாளனை என்மனக் கருத்தை ஆளும் பூதங்கள் பாடநின் றாடும் அங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சுங் கோளி லிப்பெருங் கோயிலுள் ளானைக்கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. | 7.62.8 |
643 | அரக்கன் ஆற்றலை அழித்தவன் பாட்டுக் கன்றி ரங்கிய வென்றியி னானைப் பரக்கும் பாரளித் துண்டுகந் தவர்கள் பரவி யும்பணி தற்கரி யானைச் சிரக்கண் வாய் செவி மூக்குயர் காயம்ஆகித் தீவினை தீர்த்தஎம் மானைக் குரக்கி னங்குதி கொண்டுகள் வயல்சூழ் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. | 7.62.9 |
644 | கோட ரம்பயில் சடையுடைக் கரும்பைக்கோலக் காவுளெம் மானைமெய்ம் மானப் பாட ரங்குடி அடியவர் விரும்பப் பயிலும் நாவலா ரூரன்வன் றொண்டன் நாடி ரங்கிமுன் அறியுமந் நெறியால் நவின்ற பத்திவை விளம்பிய மாந்தர் காட ரங்கென நடம்நவின் றான்பாற் கதியும் எய்துவர் பதியவர்க் கதுவே. | 7.62.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சத்தபுரீசுவரர், தேவியார் – ஓசைகொடுத்தநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.63 நம்பி என்ற திருப்பதிகம்
பண் – தக்கேசி
திருச்சிற்றம்பலம்
645 | மெய்யைமுற் றப்பொடிப் பூசியோர் நம்பிவேதம்நான் கும்விரித் தோதியோர் நம்பி கையிலோர் வெண்மழு ஏந்தியோர் நம்பிகண்ணு மூன்றுடை யாயொரு நம்பி செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால் எய்தநம் பியென்னை ஆளுடை நம்பிஎழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. | 7.63.1 |
646 | திங்கள் நம்பிமுடி மேலடி யார்பால் சிறந்தநம் பிபிறந் தஉயிர்க் கெல்லாம் அங்கண் நம்பியருள் மால்விசும் பாளும் அமரர் நம்பிகும ரன்முதல் தேவர் தங்கள் நம்பிதவத் துக்கொரு நம்பி தாதை என்றுன் சரண்பணிந் தேத்தும் எங்கள் நம்பிஎன்னை ஆளுடை நம்பிஎழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. | 7.63.2 |
647 | வருந்த அன்றுமத யானை உரித்த வழக்கு நம்பிமுழக் குங்கடல் நஞ்சம் அருந்தும் நம்பிஅம ரர்க்கமு தீந்த அருளென் நம்பிபொரு ளால்வரு நட்டம் புரிந்த நம்பிபுரி நூலுடை நம்பி பொழுதும் விண்ணும்முழு தும்பல வாகி இருந்த நம்பிஎன்னை ஆளுடை நம்பிஎழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. | 7.63.3 |
648 | ஊறு நம்பிஅமு தாஉயிர்க் கெல்லாம் உரிய நம்பிதெரி யம்மறை அங்கங் கூறு நம்பிமுனி வர்க்கருங் கூற்றைக் குமைத்த நம்பிகுமை யாப்புலன் ஐந்துஞ் சீறு நம்பிதிரு வெள்ளடை நம்பி செங்கண்வெள் ளைச்செழுங் கோட்டெரு தென்றும் ஏறு நம்பிஎன்னை ஆளுடை நம்பிஎழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. | 7.63.4 |
649 | குற்ற நம்பிகுறு காரெயில் மூன்றைக்குலைத்த நம்பிசிலை யாவரை கையிற் பற்று நம்பிபர மானந்த வெள்ளம் பணிக்கும் நம்பிஎனப் பாடுத லல்லால் மற்று நம்பிஉனக் கென்செய வல்லேன்மதியி லேன்படு வெந்துயர் எல்லாம் எற்று நம்பிஎன்னை ஆளுடை நம்பிஎழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. | 7.63.5 |
650 | அரித்த நம்பிஅடி கைதொழு வார்நோய்ஆண்ட நம்பிமுன்னை ஈண்டுல கங்கள் தெரித்த நம்பிஒரு சேவுடை நம்பிசில்பலிக் கென்றகந் தோறுமெய் வேடந் தரித்த நம்பிசம யங்களின் நம்பி தக்கன்றன் வேள்விபுக் கன்றிமை யோரை இரித்த நம்பிஎன்னை ஆளுடை நம்பிஎழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. | 7.63.6 |
651 | பின்னை நம்பும்புயத் தான்நெடு மாலும் பிரமனும் என்றிவர் நாடியுங் காணா உன்னை நம்பிஒரு வர்க்கெய்த லாமேஉலகு நம்பிஉரை செய்யும தல்லால் முன்னைநம் பிபின்னும் வார்சடை நம்பி முழுதிவை இத்தனை யுந்தொகுத் தாண்ட தென்னை நம்பிஎம் பிரானாய நம்பிஎழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. | 7.63.7 |
652 | சொல்லை நம்பிபொரு ளாய்நின்ற நம்பிதோற்றம் ஈறுமுத லாகிய நம்பி வல்லை நம்பிஅடி யார்க்கருள் செய்யவருந்தி நம்பிஉனக் காட்செய கில்லார் அல்லல் நம்பிபடு கின்றதென் நாடி அணங்கொரு பாகம்வைத் தெண்கணம் போற்ற இல்ல நம்பியிடு பிச்சைகொள் நம்பிஎழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. | 7.63.8 |
653 | காண்டு நம்பிகழற் சேவடி என்றுங் கலந்துனைக் காதலித் தாட்செய்கிற் பாரை ஆண்டு நம்பியவர் முன்கதி சேர அருளும் நம்பிகுரு மாப்பிறை பாம்பைத் தீண்டுநம் பிசென்னி யிற்கன்னி தங்கத் திருத்து நம்பிபொய்ச் சமண்பொரு ளாகி ஈண்டு நம்பிஇமை யோர்தொழு நம்பிஎழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. | 7.63.9 |
654 | கரக்கும் நம்பிகசி யாதவர் தம்மை கசிந்தவர்க் கிம்மையோ டம்மையில் இன்பம் பெருக்கும் நம்பி பெருகக் கருத்தா… ………… ………… ………… ……….. ………… ………… ………… ……….. | 7.63.10 |
இச்செய்யுளின் பிற்பகுதி சிதைந்து போயிற்று.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.64 திருத்தினை நகர்
பண் – தக்கேசி
திருச்சிற்றம்பலம்
655 | நீறு தாங்கிய திருநுத லானைநெற்றிக் கண்ணனை நிரைவளை மடந்தை கூறு தாங்கிய கொள்கையி னானைக் குற்றம் இல்லியைக் கற்றையஞ் சடைமேல் ஆறு தாங்கிய அழகனை அமரர்க் கரிய சோதியை வரிவரால் உகளுஞ் சேறு தாங்கிய திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. | 7.64.1 |
656 | பிணிகொள் ஆக்கை பிறப்பிறப் பென்னும் இதனைநீக்கி ஈசன் திருவடி யிணைக்காள் துணிய வேண்டிடிற் சொல்லுவன் கேள்நீ அஞ்சல் நெஞ்சமே வஞ்சர்வாழ் மதின்மூன் றணிகொள் வெஞ்சிலை யால்உகச் சீறும் ஐயன் வையகம் பரவிநின் றேத்துந் திணியும் வார்பொழில் திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. | 7.64.2 |
657 | வடிகொள் கண்ணிணை மடந்தையர் தம்பால் மயல துற்றுவஞ் சனைக்கிட மாகி முடியு மாகரு தேலெரு தேறும் மூர்த்தி யைமுத லாயபி ரானை அடிகள் என்றடி யார்தொழு தேத்தும் அப்பன் ஒப்பிலா முலைஉமை கோனைச் செடிகொள் கான்மலி திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. | 7.64.3 |
658 | பாவ மேபுரிந் தகலிடந் தன்னிற் பலப கர்ந்தல மந்துயிர் வாழ்க்கைக் காவ என்றுழந் தயர்ந்துவீ ழாதே அண்ணல் தன்றிறம் அறிவினாற் கருதி மாவின் ஈருரி உடைபுனைந் தானை மணியை மைந்தனை வானவர்க் கமுதைத் தேவ தேவனைத் திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. | 7.64.4 |
659 | ஒன்ற லாவுயிர் வாழ்க்கையை நினைந்திட் டுடல்த ளர்ந்தரு மாநிதி இயற்றி என்றும் வாழலாம் எமக்கெனப் பேசும் இதுவும் பொய்யென வேநினை உளமே குன்று லாவிய புயமுடை யானைக்கூத்த னைக்குலா விக்குவ லயத்தோர் சென்றெ லாம்பயில் திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. | 7.64.5 |
660 | வேந்த ராயுல காண்டறம் புரிந்துவீற்றி ருந்தஇவ் வுடலிது தன்னைத் தேய்ந்தி றந்துவெந் துயருழந் திடுமிப் பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே பாந்த ளங்கையில் ஆட்டுகந் தானைப்பரமனைக் கடற் சூர்தடிந் திட்ட சேந்தர் தாதையைத் திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. | 7.64.6 |
661 | தன்னில் ஆசறு சித்தமு மின்றித்தவ முயன்றவ மாயின பேசிப் பின்ன லார்சடை கட்டியென் பணிந்தாற்பெரிதும் நீந்துவ தரிதது நிற்க முன்னெ லாம்முழு முதலென்று வானோர் மூர்த்தி யாகிய முதலவன் றன்னைச் செந்நெ லார்வயல் திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. | 7.64.7 |
662 | பரிந்த சுற்றமும் மற்றுவன் றுணையும்பலருங் கண்டழு தெழவுயிர் உடலைப் பிரிந்து போமிது நிச்சயம் அறிந்தாற் பேதை வாழ்வெனும் பிணக்கினைத் தவிர்ந்து கருந்த டங்கண்ணி பங்கனை உயிரைக்கால காலனைக் கடவுளை விரும்பிச் செருந்தி பொன்மலர் திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. | 7.64.8 |
663 | நமையெ லாம்பலர் இகழ்ந்துரைப் பதன்முன்நன்மை ஒன்றிலாத் தேரர்புன் சமணாஞ் சமய மாகிய தவத்தினார் அவத்தத்தன்மை விட்டொழி நன்மையை வேண்டில் உமையோர் கூறனை ஏறுகந் தானைஉம்பர் ஆதியை எம்பெரு மானைச் சிமய மார்பொழில் திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. | 7.64.9 |
664 | நீடு பொக்கையிற் பிறவியைப் பழித்து நீங்க லாமென்று மனத்தினைத் தெருட்டிச் சேடு லாம்பொழில் திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைத் திருவடி யிணைதான் நாடெ லாம்புகழ் நாவலூ ராளிநம்பி வன்றொண்ட னூரன் உரைத்த பாட லாந்தமிழ் பத்திவை வல்லார் முத்தி யாவது பரகதிப் பயனே. | 7.64.10 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – திருநந்தீசுவரர், தேவியார் – இளங்கொம்பம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.65 திருநின்றியூர்
பண் – தக்கேசி
திருச்சிற்றம்பலம்
665 | திருவும் வண்மையுந் திண்டிறல் அரசுஞ்சிலந்தி யார்செய்த செய்பணி கண்டு மருவு கோச்செங்க ணான்றனக் களித்த வார்த்தை கேட்டுநுன் மலரடி அடைந்தேன் பெருகு பொன்னிவந் துந்துபன் மணியைப் பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணித் தெருவுந் தெற்றியும் முற்றமும் பற்றித் திரட்டுந் தென்றிரு நின்றியூ ரானே. | 7.65.1 |
666 | அணிகொள் ஆடையம் பூண்மணி மாலைஅமுது செய்தமு தம்பெறு சண்டி இணைகொள் ஏழெழு நூறிரு பனுவல் ஈன்ற வன்றிரு நாவினுக் கரையன் கணைகொள் கண்ணப்பன் என்றிவர் பெற்ற காத லின்னருள் ஆதரித் தடைந்தேன் திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியுஞ் செல்வத் தென்றிரு நின்றியூ ரானே. | 7.65.2 |
667 | மொய்த்த சீர்முந்நூற் றறுபது வேலி மூன்று நூறுவே தியரொடு நுனக்கு ஒத்த பொன்மணிக் கலசங்க ளேந்திஓங்கு நின்றியூர் என்றுனக் களிப்பப் பத்தி செய்தவப் பரசுரா மற்குப் பாதங் காட்டிய நீதிகண் டடைந்தேன் சித்தர் வானவர் தானவர் வணங்குஞ் செல்வத் தென்றிரு நின்றியூ ரானே. | 7.65.3 |
668 | இரவி நீள்சுடர் எழுவதன் முன்னம் எழுந்து தன்முலைக் கலசங்க ளேந்திச் சுரபி பால்சொரிந் தாட்டிநின் பாதந் தொடர்ந்த வார்த்தை திடம்படக் கேட்டுப் பரவி உள்கிவன் பாசத்தை அறுத்துப் பரம வந்துநுன் பாதத்தை அடைந்தேன் நிரவி நித்திலம் அத்தகு செம்பொன் அளிக்குந் தென்றிரு நின்றியூ ரானே. | 7.65.4 |
669 | வந்தோர் இந்திரன் வழிபட மகிழ்ந்துவான நாடுநீ ஆள்கென அருளிச் சந்தி மூன்றிலுந் தாபரம் நிறுத்திச் சகளி செய்திறைஞ் சகத்தியர் தமக்குச் சிந்து மாமணி அணிதிருப் பொதியிற் சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன் செந்தண் மாமலர்த் திருமகள் மருவுஞ் செல்வத் தென்றிரு நின்றியூ ரானே. | 7.65.5 |
670 | காது பொத்தரைக் கின்னரர் உழுவைகடிக்கும் பன்னகம் பிடிப்பருஞ் சீயங் கோதில் மாதவர் குழுவுடன் கேட்பக் கோல ஆல்நிழற் கீழறம் பகர ஏதஞ் செய்தவர் எய்திய இன்பம் யானுங் கேட்டுநின் இணையடி அடைந்தேன் நீதி வேதியர் நிறைபுகழ் உலகில் நிலவு தென்றிரு நின்றியூ ரானே. | 7.65.6 |
671 | கோடு நான்குடைக் குஞ்சரங் குலுங்கநலங்கொள் பாதம்நின் றேத்திய பொழுதே பீடு விண்மிசைப் பெருமையும் பெற்ற பெற்றி கேட்டுநின் பொற்கழல் அடைந்தேன் பேடை மஞ்ஞையும் பிணைகளின் கன்றும்பிள்ளைக் கிள்ளையும் எனப்பிறை நுதலார் நீடு மாடங்கள் மாளிகை தோறும் நிலவு தென்றிரு நின்றியூ ரானே. | 7.65.7 |
இப்பதிகத்தில் 8-10ம் செய்யுட்கள் சிதைந்து போயின. | 7.65.8-10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – இலட்சுமிவரதர், தேவியார் – உலகநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.66 திருவாவடுதுறை
பண் – தக்கேசி
திருச்சிற்றம்பலம்
672 | மறைய வனொரு மாணிவந் தடையவார மாய்அவன் ஆருயிர் நிறுத்தக் கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற் கடந்த காரணங் கண்டுகண் டடியேன் இறைவன் எம்பெரு மானென்றெப் போதும்ஏத்தி ஏத்திநின் றஞ்சலி செய்துன் அறைகொள் சேவடிக் கன்பொடும் அடைந்தேன்ஆவ டுதுறை ஆதிஎம் மானே. | 7.66.1 |
673 | தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி சித்தி ரப்பந்தர் சிக்கென இயற்றச் சுருண்ட செஞ்சடை யாயது தன்னைச்சோழன் ஆக்கிய தொடர்ச்சிகண் டடியேன் புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம்போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி அருண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்ஆவ டுதுறை ஆதிஎம் மானே. | 7.66.2 |
674 | திகழும் மாலவன் ஆயிரம் மலரால் ஏத்து வானொரு நீண்மலர் குறையப் புகழி னாலவன் கண்ணிடந் திடலும்புரிந்து சக்கரங் கொடுத்தல்கண் டடியேன் திகழும் நின்றிருப் பாதங்கள் பரவித்தேவ தேவநின் றிறம்பல பிதற்றி அகழும் வல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்ஆவ டுதுறை ஆதிஎம் மானே. | 7.66.3 |
675 | வீரத் தாலொரு வேடுவ னாகி விசைத்தோர் கேழலைத் துரந்துசென் றணைந்து போரைத் தான்விச யன்றனக் கன்பாய்ப் புரிந்து வான்படை கொடுத்தல்கண் டடியேன் வாரத் தாலுன நாமங்கள் பரவி வழிபட் டுன்றிற மேநினைந் துருகி ஆர்வத் தோடும்வந் தடியிணை அடைந்தேன்ஆவ டுதுறை ஆதிஎம் மானே. | 7.66.4 |
676 | ஒக்க முப்புரம் ஓங்கெரி தூவஉன்னை உன்னிய மூவர்நின் சரணம் புக்கு மற்றவர் பொன்னுல காளப் புகழி னாலருள் ஈந்தமை அறிந்து மிக்க நின்கழ லேதொழு தரற்றிவேதி யாஆதி மூர்த்திநின் அரையில் அக்க ணிந்தஎம் மானுனை அடைந்தேன்ஆவ டுதுறை ஆதிஎம் மானே. | 7.66.5 |
இப்பதிகத்தில் 6-10ம் செய்யுட்கள் சிதைந்து போயின. | 7.66.6-10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மாசிலாமணியீசுவரர், தேவியார் – ஒப்பிலாமுலையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.67 திருவலிவலம்
பண் – தக்கேசி
திருச்சிற்றம்பலம்
677 | ஊனங் கத்துயிர்ப் பாயுல கெல்லாம் ஓங்கா ரத்துரு வாகிநின் றானை வானங் கத்தவர்க் கும்மளப் பரிய வள்ள லையடி யார்கள்தம் உள்ளத் தேனங் கத்தமு தாகியுள் ளூறுந் தேச னைத்திளைத் தற்கினி யானை மானங் கைத்தலத் தேந்தவல் லானைவலிவ லந்தனில் வந்துகண் டேனே. | 7.67.1 |
678 | பல்லடி யார்பணிக் குப்பரி வானைப்பாடியா டும்பத்தர்க் கன்புடை யானைச் செல்லடி யேநெருக் கித்திறம் பாது சேர்ந்தவர்க் கேசித்தி முத்திசெய் வானை நல்லடி யார்மனத் தெய்ப்பினில் வைப்பைநானுறு குறையறிந் தருள்புரி வானை வல்லடி யார்மனத் திச்சை உளானைவலிவ லந்தனில் வந்துகண் டேனே. | 7.67.2 |
679 | ஆழிய னாய்அகன் றேஉயர்ந் தானைஆதியந் தம்பணி வார்க்கணி யானைக் கூழைய ராகிப்பொய் யேகுடிஓம்பிக்குழைந்து மெய்யடி யார்குழுப் பெய்யும் வாழியர்க் கேவழு வாநெறி காட்டி மறுபி றப்பென்னை மாசறுத் தானை மாழையொண் கண்ணுமை யைமகிழ்ந் தானைவலிவ லந்தனில் வந்துகண் டேனே. | 7.67.3 |
680 | நாத்தான் உன்றிற மேதிறம் பாது நண்ணியண் ணித்தமு தம்பொதிந் தூறும் ஆத்தா னைஅடி யேன்றனக் கென்றும் அளவி றந்தபல தேவர்கள் போற்றுஞ் சோத்தா னைச்சுடர் மூன்றிலும் ஒன்றித்துருவி மால்பிர மன்னறி யாத மாத்தா னைமாத் தெனக்குவைத் தானைவலிவ லந்தனில் வந்துகண் டேனே. | 7.67.4 |
681 | நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக்கரசரும் பாடிய நற்றமிழ் மாலை சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானைத்தொண்ட னேன்அறி யாமை அறிந்து கல்லி யல்மனத் தைக்கசி வித்துக் கழலடி காட்டியென் களைகளை அறுக்கும் வல்லியல் வானவர் வணங்க நின்றானைவலிவ லந்தனில் வந்துகண் டேனே. | 7.67.5 |
682 | பாடுமா பாடிப் பணியுமா றறியேன்பனுவுமா பனுவிப் பரவுமா றறியேன் தேடுமா தேடித் திருத்துமா றறியேன்செல்லுமா செல்லச் செலுத்துமா றறியேன் கூடுமா றெங்ஙன மோவென்று கூறக் குறித்துக் காட்டிக் கொணர்ந்தெனை ஆண்டு வாடிநீ வாளா வருந்தலென் பானை வலிவ லந்தனில் வந்துகண் டேனே. | 7.67.6 |
683 | பந்தித்த வல்வினைப் பற்றறப் பிறவிப்படுக டற்பரப் புத்தவிர்ப் பானைச் சந்தித் ததிற லாற்பணி பூட்டித் தவத்தை ஈட்டிய தம்மடி யார்க்குச் சிந்தித் தற்கெளி தாய்த்திருப் பாதஞ்சிவலோ கந்திறந் தேற்றவல் லானை வந்திப் பார்தம் மனத்தினுள் ளானைவலிவ லந்தனில் வந்துகண் டேனே. | 7.67.7 |
684 | எவ்வவர் தேவர் இருடிகள் மன்னர் எண்ணிறந் தார்கள்மற் றெங்கும்நின் றேத்த அவ்வவர் வேண்டிய தேஅருள் செய்துஅடைந்தவர்க் கேஇட மாகிநின் றானை இவ்வவர் கருணையெங் கற்பகக் கடலைஎம்பெரு மான்அரு ளாய்என்ற பின்னை வவ்வியென் ஆவி மனங்கலந் தானைவலிவ லந்தனில் வந்துகண் டேனே. | 7.67.8 |
685 | திரியும் முப்புரஞ் செற்றதுங் குற்றத் திறல ரக்கனைச் செறுத்ததும் மற்றைப் பெரிய நஞ்சமு துண்டதும் முற்றும் பின்னை யாய்முன்ன மேமுளைத் தானை அரிய நான்மறை அந்தணர் ஓவா தடிப ணிந்தறி தற்கரி யானை வரையின் பாவை மணாளனெம் மானைவலிவ லந்தனில் வந்துகண் டேனே. | 7.67.9 |
686 | ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து நிறைக்க மாலுதி ரத்தினை ஏற்றுத் தோன்று தோண்மிசைக் களேபரந் தன்னைச் சுமந்த மாவிர தத்தகங் காளன் சான்று காட்டுதற் கரியவன் எளியவன்றன்னைத் தன்னி லாமனத் தார்க்கு மான்று சென்றணை யாதவன் றன்னைவலிவ லந்தனில் வந்துகண் டேனே. | 7.67.10 |
687 | கலிவ லங்கெட ஆரழல் ஓம்புங்கற்ற நான்மறை முற்றனல் ஓம்பும் வலிவ லந்தனில் வந்துகண் டடியேன் மன்னும் நாவலா ரூரன்வன் றொண்டன் ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ் பத்தும் உள்ளத் தாலுகந் தேத்தவல் லார்போய் மெலிவில் வானுல கத்தவர் ஏத்தவிரும்பி விண்ணுல கெய்துவர் தாமே. | 7.67.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மனத்துணைநாதர், தேவியார் – மாழையங்கண்ணியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.68 திருநள்ளாறு
பண் – தக்கேசி
திருச்சிற்றம்பலம்
688 | செம்பொன் மேனிவெண் ணீறணி வானைக்கரிய கண்டனை மால்அயன் காணாச் சம்பு வைத்தழல் அங்கையி னானைச்சாம வேதனைத் தன்னொப்பி லானைக் கும்ப மாகரி யின்னுரி யானைக் கோவின் மேல்வருங் கோவினை எங்கள் நம்ப னைநள் ளாறனை அமுதைநாயி னேன்மறந் தென்நினைக் கேனே. | 7.68.1 |
689 | விரைசெய் மாமலர்க் கொன்றையி னானை வேத கீதனை மிகச்சிறந் துருகிப் பரசு வார்வினைப் பற்றறுப் பானைப்பாலொ டானஞ்சும் ஆடவல் லானைக் குரைக டல்வரை ஏழுல குடைய கோனை ஞானக் கொழுந்தினைத் தொல்லை நரைவிடை யுடையநல் லாறனை அமுதைநாயி னேன்மறந் தென்நினைக் கேனே. | 7.68.2 |
690 | பூவில் வாசத்தைப் பொன்னினை மணியைப்புவியைக் காற்றினைப் புனல்அனல் வெளியைச் சேவின் மேல்வருஞ் செல்வனைச் சிவனைத்தேவ தேவனைத் தித்திக்குந் தேனைக் காவி யங்கண்ணிப் பங்கனைக் கங்கைச் சடைய னைக்கா மரத்திசை பாட நாவில் ஊறும்நள் ளாறனை அமுதைநாயி னேன்மறந் தென்நினைக் கேனே. | 7.68.3 |
691 | தஞ்சம் என்றுதன் தாளது வடைந்த பாலன் மேல்வந்த காலனை உருள நெஞ்சில் ஓர்உதை கொண்ட பிரானைநினைப்ப வர்மனம் நீங்ககில் லானை விஞ்சை வானவர் தானவர் கூடிக் கடைந்த வேலையுள் மிக்கெழுந் தெரியும் நஞ்சம் உண்டநள் ளாறனை அமுதைநாயி னேன்மறந் தென்நினைக் கேனே. | 7.68.4 |
692 | மங்கை பங்கனை மாசிலா மணியைவான நாடனை ஏனமோ டன்னம் எங்கு நாடியுங் காண்பரி யானை ஏழை யேற்கெளி வந்தபி ரானை அங்கம் நான்மறை யால்நிறை கின்ற அந்த ணாளர் அடியது போற்றும் நங்கள் கோனைநள் ளாறனை அமுதைநாயி னேன்மறந் தென்நினைக் கேனே. | 7.68.5 |
693 | கற்ப கத்தினைக் கனகமால் வரையைக்காம கோபனைக் கண்ணுத லானைச் சொற்ப தப்பொருள் இருளறுத் தருளுந் தூய சோதியை வெண்ணெய் நல்லூரில் அற்பு தப்பழ ஆவணங் காட்டி அடிய னாஎன்னை ஆளது கொண்ட நற்ப தத்தைநள் ளாறனை அமுதைநாயி னேன்மறந் தென்நினைக் கேனே. | 7.68.6 |
694 | மறவ னைஅன்று பன்றிப்பின் சென்ற மாய னைநால்வர்க் காலின்கீழ் உரைத்த அறவ னைஅம ரர்க்கரி யானைஅமரர் சேனைக்கு நாயக னான குறவர் மங்கைதன் கேள்வனைப் பெற்ற கோனை நான்செய்த குற்றங்கள் பொறுக்கும் நறைவி ரியும்நள் ளாறனை அமுதைநாயி னேன்மறந் தென்நினைக் கேனே. | 7.68.7 |
695 | மாதி னுக்குடம் பிடங்கொடுத் தானைமணியி னைப்பணி வார்வினை கெடுக்கும் வேத னைவேத வேள்வியர் வணங்கும் விமல னையடி யேற்கெளி வந்த தூதனைத் தன்னைத் தோழமை அருளித் தொண்ட னேன்செய்த துரிசுகள் பொறுக்கும் நாத னைநள் ளாறனை அமுதைநாயி னேன்மறந் தென்நினைக் கேனே. | 7.68.8 |
696 | இலங்கை வேந்தன் எழில்திகழ் கயிலை எடுப்ப ஆங்கிம வான்மகள் அஞ்சத் துலங்கு நீண்முடி ஒருபதுந் தோள்கள்இருப துந்நெரித் தின்னிசை கேட்டு வலங்கை வாளொடு நாமமுங் கொடுத்த வள்ள லைப்பிள்ளை மாமதிச் சடைமேல் நலங்கொள் சோதிநள் ளாறனை அமுதைநாயி னேன்மறந் தென்நினைக் கேனே. | 7.68.9 |
697 | செறிந்த சோலைகள் சூழ்ந்தநள் ளாற்றெஞ் சிவனை நாவலூர்ச் சிங்கடி தந்தை மறந்து நான்மற்று நினைப்பதே தென்றுவனப்ப கையப்பன் ஊரன்வன் றொண்டன் சிறந்த மாலைகள் அஞ்சினோ டஞ்சுஞ்சிந்தையுள் ளுருகிச் செப்ப வல்லார்க் கிறந்து போக்கில்லை வரவில்லை யாகி இன்பவெள் ளத்துள் இருப்பர்க ளினிதே. | 7.68.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – தெர்ப்பாரணியயீசுவரர்,
தேவியார் – போகமார்த்தபூண்முலையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.69 திருவடமுல்லைவாயில்
பண் – தக்கேசி
திருச்சிற்றம்பலம்
698 | திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன் சீருடைக் கழல்களென் றெண்ணி ஒருவரை மதியா துறாமைகள் செய்துமூடியும் உறைப்பனாய்த் திரிவேன் முருகமர் சோலை சூழ்திரு முல்லைவாயிலாய் வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்பாசுப தாபரஞ் சுடரே. | 7.69.1 |
699 | கூடிய இலயம் சதிபிழை யாமைக் கொடியிடை உமையவள் காண ஆடிய அழகா அருமறைப் பொருளேஅங்கணா எங்குற்றா யென்று தேடிய வானோர் சேர்திரு முல்லைவாயிலாய் திருப்புகழ் விருப்பால் பாடிய அடியேன் படுதுயர் களையாய்பாசுப தாபரஞ் சுடரே. | 7.69.2 |
700 | விண்பணிந் தேத்தும் வேதியா மாதர் வெருவிட வேழமன் றுரித்தாய் செண்பகச் சோலை சூழ்திரு முல்லைவாயிலாய் தேவர்தம் மரசே தண்பொழில் ஒற்றி மாநகர் உடையாய்சங்கிலிக் காஎன்கண் கொண்ட பண்பநின் னடியேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே. | 7.69.3 |
701 | பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப் பொறிவரி வண்டிசை பாட அந்நலங் கமலத் தவிசின்மேல் உறங்கும் அலவன்வந் துலவிட அள்ளல் செந்நெலங் கழனி சூழ்திரு முல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால் பன்னலந் தமிழாற் பாடுவேற் கருளாய்பாசுப தாபரஞ் சுடரே. | 7.69.4 |
702 | சந்தன வேருங் காரகிற் குறடுந்தண்மயிற் பீலியுங் கரியின் தந்தமுந் தரளக் குவைகளும் பவளக்கொடிகளுஞ் சுமந்துகொண் டுந்தி வந்திழி பாலி வடகரை முல்லைவயிலாய் மாசிலா மணியே பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய்பாசுப தாபரஞ் சுடரே. | 7.69.5 |
703 | மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார்வள்ளலே கள்ளமே பேசிக் குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங்கொள்கையால் மிகைபல செய்தேன் செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த திருமுல்லை வாயிலாய் அடியேன் பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய்பாசுப தாபரஞ் சுடரே. | 7.69.6 |
704 | மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய வார்குழல் மாமயிற் சாயல் அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார் அருநடம் ஆடல றாத திணிபொழில் தழுவு திருமுல்லை வாயிற் செல்வனே எல்லியும் பகலும் பணியது செய்வேன் படுதுயர் களையாய்பாசுப தாபரஞ் சுடரே. | 7.69.7 |
705 | நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில் நாயினேன் தன்னையாட் கொண்ட சம்புவே உம்ப ரார்தொழு தேத்துந்தடங்கடல் நஞ்சுண்ட கண்டா செம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில்தேடியான் திரிதர்வேன் கண்ட பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய்பாசுப தாபரஞ் சுடரே. | 7.69.8 |
706 | மட்டுலா மலர்கொண் டடியிணை வணங்கும் மாணிதன் மேல்மதி யாதே கட்டுவான் வந்த காலனை மாளக் காலினால் ஆருயிர் செகுத்த சிட்டனே செல்வத் திருமுல்லை வாயிற் செல்வனே செழுமறை பகர்ந்த பட்டனே அடியேன் படுதுயர் களையாய்பாசுப தாபரஞ் சுடரே. | 7.69.9 |
707 | சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச் சூழ்கொடி முல்லையாற் கட்டிட் டெல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட் டருளிய இறைவனே என்றும் நல்லவர் பரவுந் திருமுல்லை வாயில் நாதனே நரைவிடை ஏறீ பல்கலைப் பொருளே படுதுயர் களையாய்பாசுப தாபரஞ் சுடரே. | 7.69.10 |
708 | விரைதரு மலர்மேல் அயனொடு மாலும் வெருவிட நீண்டஎம் மானைத் திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற் செல்வனை நாவலா ரூரன் உரைதரு மாலையோர் அஞ்சினோ டஞ்சும் உள்குளிர்ந் தேத்தவல் லார்கள் நரைதிரை மூப்பும் நடலையு மின்றிநண்ணுவர் விண்ணவர்க் கரசே. | 7.69.11 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மாசிலாமணியீசுவரர், தேவியார் – கொடியிடைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.70 திருவாவடுதுறை
பண் – தக்கேசி
திருச்சிற்றம்பலம்
709 | கங்கை வார்சடை யாய்கண நாதாகால காலனே காமனுக் கனலே பொங்கு மாகடல் விடமிடற் றானேபூத நாதனே புண்ணியா புனிதா செங்கண் மால்விடை யாய்தெளி தேனேதீர்த்த னேதிரு வாவடு துறையுள் அங்க ணாஎனை அஞ்சலென் றருளாய்ஆரெ னக்குற வமரர்கள் ஏறே. | 7.70.1 |
710 | மண்ணின் மேல்மயங் கிக்கிடப் பேனை வலிய வந்தெனை ஆண்டுகொண் டானே கண்ணி லேன்உடம் பில்லடு நோயாற் கருத்த ழிந்துனக் கேபொறை ஆனேன் தெண்ணி லாஎறிக் குஞ்சடை யானேதேவ னேதிரு வாவடு துறையுள் அண்ண லேயெனை அஞ்சலென் றருளாய்ஆரெ னக்குற வமரர்கள் ஏறே. | 7.70.2 |
711 | ஒப்பி லாமுலை யாளொரு பாகாஉத்த மாமத்த மார்தரு சடையாய் முப்பு ரங்களைத் தீவளைத் தங்கே மூவ ருக்கருள் செய்யவல் லானே செப்ப ஆல்நிழற் கீழிருந் தருளுஞ்செல்வ னேதிரு வாவடு துறையுள் அப்ப னேயெனை அஞ்சலென் றருளாய்ஆரெ னக்குற வமரர்கள் ஏறே. | 7.70.3 |
712 | கொதியி னால்வரு காளிதன் கோபங் குறைய ஆடிய கூத்துடை யானே மதியி லேன்உடம் பில்லடு நோயால் மயங்கி னேன்மணி யேமண வாளா விதியி னாலிமை யோர்தொழு தேத்தும் விகிர்த னேதிரு வாவடு துறையுள் அதிப னேயெனை அஞ்சலென் றருளாய்ஆரெ னக்குற வமரர்கள் ஏறே. | 7.70.4 |
713 | வந்த வாளரக் கன்வலி தொலைத்து வாழும் நாள்கொடுத் தாய்வழி முதலே வெந்த வெண்பொடி பூசவல் லானேவேட னாய்விச யற்கருள் புரிந்த இந்து சேகர னேஇமை யோர்சீர் ஈச னேதிரு வாவடு துறையுள் அந்த ணாஎனை அஞ்சலென் றருளாய்ஆரெ னக்குற வமரர்கள் ஏறே. | 7.70.5 |
714 | குறைவி லாநிறை வேகுணக் குன்றேகூத்த னேகுழைக் காதுடை யானே உறவி லேன்உனை அன்றிமற் றடியேன் ஒருபி ழைபொறுத் தால்இழி வுண்டே சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச் செம்பொ னேதிரு வாவடு துறையுள் அறவ னேயெனை அஞ்சலென் றருளாய்ஆரெ னக்குற வமரர்கள் ஏறே. | 7.70.6 |
715 | வெய்ய மாகரி ஈருரி யானேவேங்கை ஆடையி னாய்விதி முதலே மெய்ய னேஅடல் ஆழியன் றரிதான் வேண்ட நீகொடுத் தருள்புரி விகிர்தா செய்ய மேனிய னேதிகழ் ஒளியே செங்க ணாதிரு வாவடு துறையுள் ஐய னேயெனை அஞ்சலென் றருளாய்ஆரெ னக்குற வமரர்கள் ஏறே. | 7.70.7 |
716 | கோதி லாவமு தேஅருள் பெருகு கோல மேஇமை யோர்தொழு கோவே பாதி மாதொரு கூறுடை யானே பசுப தீபர மாபர மேட்டீ தீதி லாமலை யேதிரு வருள்சேர் சேவ காதிரு வாவடு துறையுள் ஆதி யேயெனை அஞ்சலென் றருளாய்ஆரெ னக்குற வமரர்கள் ஏறே. | 7.70.8 |
717 | வான நாடனே வழித்துணை மருந்தேமாசி லாமணி யேமறைப் பொருளே ஏன மாவெயி றாமையும் எலும்பும் ஈடு தாங்கிய மார்புடை யானே தேனெய் பால்தயிர் ஆட்டுகந் தானேதேவ னேதிரு வாவடு துறையுள் ஆனை யேயெனை அஞ்சலென் றருளாய்ஆரெ னக்குற வமரர்கள் ஏறே. | 7.70.9 |
718 | வெண்ட லைப்பிறை கொன்றையும் அரவும்வேரி மத்தமும் விரவிமுன் முடித்த இண்டை மாமலர்ச் செஞ்சடை யானைஈச னைத்திரு வாவடு துறையுள் அண்ட வாணனைச் சிங்கடி யப்பன்அணுக்க வன்றொண்டன் ஆர்வத்தால் உரைத்த தண்ட மிழ்மலர் பத்தும்வல் லார்கள் சாத லும்பிறப் பும்மறுப் பாரே. | 7.70.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.71 திருமறைக்காடு
பண் – காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
719 | யாழைப்பழித் தன்னமொழி மங்கையொரு பங்கன் பேழைச்சடை முடிமேற்பிறை வைத்தான்இடம் பேணில் தாழைப்பொழி லூடேசென்று பூழைத்தலை நுழைந்து வாழைக்கனி கூழைக்குரங் குண்ணும்மறைக் காடே. | 7.71.1 |
720 | சிகரத்திடை இளவெண்பிறை வைத்தான்இடந் தெரியில் முகரத்திடை முத்தின்னொளி பவளத்திரள் ஓதத் தகரத்திடை தாழைத்திரள் ஞாழற்றிரள் நீழல் மகரத்தொடு சுறவங்கொணர்ந் தெற்றும்மறைக் காடே. | 7.71.2 |
721 | அங்கங்களும் மறைநான்குடன் விரித்தானிடம் அறிந்தோம் தெங்கங்களும் நெடும்பெண்ணையும் பழம்வீழ்மணற் படப்பைச் சங்கங்களும் இலங்கிப்பியும் வலம்புரிகளும் இடறி வங்கங்களும் உயர்கூம்பொடு வணங்கும்மறைக் காடே. | 7.71.3 |
722 | நரைவிரவிய மயிர்தன்னொடு பஞ்சவடி மார்பன் உரைவிரவிய உத்தமனிடம் உணரல்லுறு மனமே குரைவிரவிய குலசேகரக் கொண்டற்றலை விண்ட வரைபுரைவன திரைபொருதிழிந் தெற்றும்மறைக் காடே. | 7.71.4 |
723 | சங்கைப்பட நினையாதெழு நெஞ்சேதொழு தேத்தக் கங்கைச்சடை முடியுடையவர்க் கிடமாவது பரவை அங்கைக்கடல் அருமாமணி உந்திக்கரைக் கேற்ற வங்கத்தொடு சுறவங்கொணர்ந் தெற்றும்மறைக் காடே. | 7.71.5 |
724 | அடல்விடையினன் மழுவாளினன் அலராலணி கொன்றைப் படருஞ்சடை முடியுடையவர்க் கிடமாவது பரவைக் கடலிடையிடை கழியருகினிற் கடிநாறுதண் கைதை மடலிடையிடை வெண்குருகெழு மணிநீர்மறைக் காடே. | 7.71.6 |
725 | முளைவளரிள மதியுடையவன் முன்செய்தவல் வினைகள் களைகளைந்தெனை ஆளல்லுறு கண்டன்னிடஞ் செந்நெல் வளைவிளைவயற் கயல்பாய்தரு குணவார்மணற் கடல்வாய் வளைவளையொடு சலஞ்சலங்கொணர்ந் தெற்றும்மறைக் காடே. | 7.71.7 |
726 | நலம்பெரியன சுரும்பார்ந்தன நங்கோனிடம் அறிந்தோம் கலம்பெரியன சாருங்கடற் கரைபொருதிழி கங்கைச் சலம்புரிசடை முடியுடையவர்க் கிடமாவது பரவை வலம்புரியொடு சலஞ்சலங்கொணர்ந் தெற்றும்மறைக் காடே. | 7.71.8 |
727 | குண்டாடியுஞ் சமணாடியுங் குற்றுடுக்கையர் தாமுங் கண்டார்கண்ட காரணம்மவை கருதாதுகை தொழுமின் எண்டோ ளினன் முக்கண்ணினன் ஏழிசையினன் அறுகால் வண்டாடுதண் பொழில்சூழ்ந்தெழு மணிநீர்மறைக் காடே. | 7.71.9 |
728 | பாரூர்பல புடைசூழ்வள வயல்நாவலர் வேந்தன் வாரூர்வன முலையாள்உமை பங்கன்மறைக் காட்டை ஆரூரன தமிழ்மாலைகள் பாடும்மடித் தொண்டர் நீரூர்தரு நிலனோடுயர் புகழாகுவர் தாமே. | 7.71.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மறைக்காட்டீசுவரர், தேவியார் – யாழைப்பழித்தநாயகி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.72 திருவலம்புரம்
பண் – காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
729 | எனக்கினித் தினைத்தனைப் புகலிடம் அறிந்தேன் பனைக்கனிப் பழம்படும் பரவையின் கரைமேல் எனக்கினி யவன்தமர்க் கினியவன் எழுமையும் மனக்கினி யவன்றன திடம்வலம் புரமே. | 7.72.1 |
730 | புரமவை எரிதர வளைந்தவில் லினன்அவன் மரவுரி புலியதள் அரைமிசை மருவினன் அரவுரி இரந்தவன் இரந்துண விரும்பிநின் றிரவெரி யாடிதன் இடம்வலம் புரமே. | 7.72.2 |
731 | நீறணி மேனியன் நெருப்புமிழ் அரவினன் கூறணி கொடுமழு ஏந்தியோர் கையினன் ஆறணி அவிர்சடை அழல்வளர் மழலைவெள் ளேறணி அடிகள்தம் இடம்வலம் புரமே. | 7.72.3 |
732 | கொங்கணை சுரும்புண நெருங்கிய குளிரிளந் தெங்கொடு பனைபழம் படுமிடந் தேவர்கள் தங்கிடும் இடந்தடங் கடற்றிரை புடைதர எங்கள தடிகள்நல் இடம்வலம் புரமே. | 7.72.4 |
733 | கொடுமழு விரகினன் கொலைமலி சிலையினன் நெடுமதில் சிறுமையின் நிரவவல் லவனிடம் படுமணி முத்தமும் பவளமும் மிகச்சுமந் திடுமணல் அடைகரை இடம்வலம் புரமே. | 7.72.5 |
734 | கருங்கடக் களிற்றுரிக் கடவுள திடங்கயல் நெருங்கிய நெடும்பெணை அடும்பொடு விரவிய மருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம்புணர்ந் திருங்கடல் அணைகரை இடம்வலம் புரமே. | 7.72.6 |
735 | நரிபுரி காடரங் காநடம் ஆடுவர் வரிபுரி பாடநின் றாடும்எம் மான்இடம் புரிசுரி வரிகுழல் அரிவையோர் பால்மகிழ்ந் தெரியெரி யாடிதன் இடம்வலம் புரமே. | 7.72.7 |
736 | பாறணி முடைதலை கலனென மருவிய நீறணி நிமிர்சடை முடியினன் நிலவிய மாறணி வருதிரை வயலணி பொழிலது ஏறுடை அடிகள்தம் இடம்வலம் புரமே. | 7.72.8 |
737 | சடசட விடுபெணை பழம்படும் இடவகை படவட கத்தொடு பலிகலந் துலவிய கடைகடை பலிதிரி கபாலிதன் இடமது இடிகரை மணலடை இடம்வலம் புரமே. | 7.72.9 |
738 | குண்டிகைப் படப்பினில் விடக்கினை ஒழித்தவர் கண்டவர் கண்டடி வீழ்ந்தவர் கனைகழல் தண்டுடைத் தண்டிதன் இனமுடை அரவுடன் எண்டிசைக் கொருசுடர் இடம்வலம் புரமே. | 7.72.10 |
739 | வருங்கல மும்பல பேணுதல் கருங்கடல் இருங்குலப் பிறப்பர்தம் இடம்வலம் புரத்தினை அருங்குலத் தருந்தமிழ் ஊரன்வன் றொண்டன்சொல் பெருங்குலத் தவரொடு பிதற்றுதல் பெருமையே. | 7.72.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வலம்புரநாதர், தேவியார் – வடுவகிர்க்கண்ணம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.73 திருவாரூர்
பண் – காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
740 | கரையுங் கடலும் மலையுங் காலையும் மாலையும் எல்லாம் உரையில் விரவி வருவான் ஒருவன் உருத்திர லோகன் வரையின் மடமகள் கேள்வன் வானவர் தானவர்க் கெல்லாம் அரையனி ருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர். | 7.73.1 |
741 | தனியனென் றெள்கி அறியேன் தம்மைப் பெரிது முகப்பன் முனிபவர் தம்மை முனிவன் முகம்பல பேசி மொழியேன் கனிகள் பலவுடைச் சோலைக் காய்க்குலை ஈன்ற கமுகின் இனிய னிருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர். | 7.73.2 |
742 | சொல்லிற் குலாவன்றிச் சொல்லேன் தொடர்ந்தவர்க் குந்துணை அல்லேன் கல்லில் வலிய மனத்தேன் கற்ற பெரும்புல வாணர் அல்லல் பெரிதும் அறுப்பான் அருமறை ஆறங்கம் ஓதும் எல்லை இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர். | 7.73.3 |
743 | நெறியும் அறிவுஞ் செறிவும் நீதியும் நான்மிகப் பொல்லேன் மிறையுந் தறியும் உகப்பன் வேண்டிற்றுச் செய்து திரிவன் பிறையும் அரவும் புனலும் பிறங்கிய செஞ்சடை வைத்த இறைவன் இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர். | 7.73.4 |
744 | நீதியில் ஒன்றும் வழுவேன் நிட்கண் டகஞ்செய்து வாழ்வேன் வேதியர் தம்மை வெகுளேன் வெகுண்டவர்க் குந்துணை ஆகேன் சோதியிற் சோதிஎம் மானைச் சுண்ணவெண் ணீறணிந் திட்ட ஆதி இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர். | 7.73.5 |
745 | அருத்தம் பெரிதும் உகப்பேன் அலவலை யேன்அலந் தார்கள் ஒருத்தர்க் குதவியேன் அல்லேன் உற்றவர்க் குந்துணை அல்லேன் பொருத்தமே லொன்று மிலாதேன் புற்றெடுத் திட்டிடங் கொண்ட அருத்தன் இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர். | 7.73.6 |
746 | சந்தம் பலஅறுக் கில்லேன் சார்ந்தவர் தம்மடிச் சாரேன் முந்திப் பொருவிடை யேறி மூவுல குந்திரி வானே கந்தங் கமழ்கொன்றை மாலைக் கண்ணியன் விண்ணவ ரேத்தும் எந்தை இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர். | 7.73.7 |
747 | நெண்டிக் கொண்டேயுங் கிலாய்ப்பன் நிச்சய மேயிது திண்ணம் மிண்டர்க்கு மிண்டலாற் பேசேன் மெய்ப்பொரு ளன்றி உணரேன் பண்டங் கிலங்கையர் கோனைப் பருவரைக் கீழடர்த் திட்ட அண்டன் இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர். | 7.73.8 |
748 | நமர்பிறர் என்ப தறியேன் நான்கண்ட தேகண்டு வாழ்வேன் தமரம் பெரிதும் உகப்பன் தக்கவா றொன்றும் இலாதேன் குமரன் திருமால் பிரமன் கூடிய தேவர் வணங்கும் அமரன் இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர். | 7.73.9 |
749 | ஆசை பலஅறுக் கில்லேன் ஆரையும் அன்றி உரைப்பேன் பேசிற் சழக்கலாற் பேசேன் பிழைப்புடை யேன்மனந் தன்னால் ஓசை பெரிதும் உகப்பேன் ஒலிகடல் நஞ்சமு துண்ட ஈசன் இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர். | 7.73.10 |
750 | எந்தை இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ என்று சிந்தை செயுந்திறம் வல்லான் திருமரு வுந்திரள் தோளான் மந்த முழவம் இயம்பும் வளவயல் நாவலா ரூரன் சந்தம் இசையொடும் வல்லார் தாம்புகழ் எய்துவார் தாமே. | 7.73.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.74 திருத்துருத்தியும் – திருவேள்விக்குடியும்
பண் – காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
751 | மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும் அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார்அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார் சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக்குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் என்னைநான் மறக்குமா றெம்பெரு மானைஎன்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை. | 7.74.1 |
752 | கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங்கொய்புன ஏனலோ டைவனஞ் சிதறி மாடுமா கோங்கமே மருதமே பொருதுமலையெனக் குலைகளை மறிக்குமா றுந்தி ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக்குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் பாடுமா றறிகிலேன் எம்பெரு மானைப் பழவினை உள்ளன பற்றறுத் தானை. | 7.74.2 |
753 | கொல்லுமால் யானையின் கொம்பொடு வம்பார் கொழுங்கனிச் செழும்பயன் கொண்டுகூட் டெய்திப் புல்கியுந் தாழ்ந்தும் போந்து தவஞ்செய்யும் போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச் செல்லுமா காவிரித் துருத்தியார் வேள்விக்குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் சொல்லுமா றறிகிலேன் எம்பெரு மானைத் தொடர்ந்தடுங் கடும்பிணித் தொடர்வறுத் தானை. | 7.74.3 |
754 | பொறியுமா சந்தனத் துண்டமோ டகிலும் பொழிந்திழிந் தருவிகள் புன்புலங் கவரக் கறியுமா மிளகொடு கதலியும் உந்திக் கடலுற விளைப்பதே கருதித்தன் கைபோய் எறியுமா காவிரித் துருத்தியார் வேள்விக்குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் அறியுமா றறிகிலேன் எம்பெரு மானை அருவினை உள்ளன ஆசறுத் தானை. | 7.74.4 |
755 | பொழிந்திழி மும்மதக் களிற்றின மருப்பும்பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்தி இழிந்திழிந் தருவிகள் கடும்புனல் ஈண்டிஎண்டிசை யோர்களும் ஆடவந் திங்கே சுழிந்திழி காவிரித் துருத்தியார் வேள்விக்குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் ஒழிந்திலேன் பிதற்றுமா றெம்பெரு மானைஉற்றநோய் இற்றையே உறவொழித் தானை. | 7.74.5 |
756 | புகழுமா சந்தனத் துண்டமோ டகிலும் பொன்மணி வரன்றியும் நன்மலர் உந்தி அகழுமா அருங்கரை வளம்படப் பெருகிஆடுவார் பாவந்தீர்த் தஞ்சனம் அலம்பித் திகழுமா காவிரித் துருத்தியார் வேள்விக்குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் இகழுமா றறிகிலேன் எம்பெரு மானைஇழித்தநோய் இம்மையே ஒழிக்கவல் லானை. | 7.74.6 |
757 | வரையின்மாங் கனியொடு வாழையின் கனியும் வருடியும் வணக்கியும் மராமரம் பொருது கரையுமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க் காம்பீலி சுமந்தொளிர் நித்திலங் கைபோய் விரையுமா காவிரித் துருத்தியார் வேள்விக்குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் உரையுமா றறிகிலேன் எம்பெரு மானை உலகறி பழவினை அறவொழித் தானை. | 7.74.7 |
758 | ஊருமா தேசமே மனமுகந் துள்ளிப்புள்ளினம் பலபடிந் தொண்கரை உகளக் காருமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்கவரிமா மயிர்சுமந் தொண்பளிங் கிடறித் தேருமா காவிரித் துருத்தியார் வேள்விக்குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் ஆருமா றறிகிலேன் எம்பெரு மானை அம்மைநோய் இம்மையே ஆசறுத் தானை. | 7.74.8 |
759 | புலங்களை வளம்படப் போக்கறப் பெருகிப்பொன்களே சுமந்தெங்கும் பூசல்செய் தார்ப்ப இலங்குமார் முத்தினோ டினமணி இடறிஇருகரைப் பெருமரம் பீழந்துகொண் டெற்றிக் கலங்குமா காவிரித் துருத்தியார் வேள்விக்குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் விலங்குமா றறிகிலேன் எம்பெரு மானை மேலைநோய் இம்மையே வீடுவித் தானை. | 7.74.9 |
760 | மங்கையோர் கூறுகந் தேறுகந் தேறிமாறலார் திரிபுரம் நீறெழச் செற்ற அங்கையான் கழலடி அன்றிமற் றறியான்அடியவர்க் கடியவன் தொழுவனா ரூரன் கங்கையார் காவிரித் துருத்தியார் வேள்விக்குடியுளார் அடிகளைச் சேர்த்திய பாடல் தங்கையால் தொழுதுதம் நாவின்மேற் கொள்வார் தவநெறி சென்றம ருலகம்ஆள் பவரே. | 7.74.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.75 திருவானைக்கா
பண் – காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
761 | மறைகள் ஆயின நான்கும் மற்றுள பொருள்களு மெல்லாந் துறையுந் தோத்திரத் திறையுந் தொன்மையும் நன்மையு மாய அறையும் பூம்புனல் ஆனைக் காவுடை ஆதியை நாளும் இறைவன் என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடை யாரே. | 7.75.1 |
762 | வங்கம் மேவிய வேலை நஞ்செழ வஞ்சர்கள் கூடித் தங்கள் மேல்அட ராமை உண்ணென உண்டிருள் கண்டன் அங்கம் ஓதிய ஆனைக் காவுடை ஆதியை நாளும் எங்கள் ஈசனென் பார்கள் எம்மையும் ஆளுடை யாரே. | 7.75.2 |
763 | நீல வண்டறை கொன்றை நேரிழை மங்கையோர் திங்கள் சால வாளர வங்கள் தங்கிய செஞ்சடை எந்தை ஆல நீழலுள் ஆனைக் காவுடை ஆதியை நாளும் ஏலு மாறுவல் லார்கள் எம்மையும் ஆளுடை யாரே. | 7.75.3 |
764 | தந்தை தாயுல குக்கோர் தத்துவன் மெய்த்தவத் தோர்க்குப் பந்த மாயின பெருமான் பரிசுடை யவர்திரு வடிகள் அந்தண் பூம்புனல் ஆனைக் காவுடை ஆதியை நாளும் எந்தை என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடை யாரே. | 7.75.4 |
765 | கணைசெந் தீயர வந்நாண் கல்வளை யுஞ்சிலை யாகத் துணைசெய் மும்மதில் மூன்றுஞ் சுட்டவ னேயுல குய்ய அணையும் பூம்புனல் ஆனைக் காவுடை ஆதியை நாளும் இணைகொள் சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடை யாரே. | 7.75.5 |
766 | விண்ணின் மாமதி சூடி விலையிலி கலன்அணி விமலன் பண்ணின் நேர்மொழி மங்கை பங்கினன் பசுவுகந் தேறி அண்ண லாகிய ஆனைக் காவுடை ஆதியை நாளும் எண்ணு மாறுவல் லார்கள் எம்மையும் ஆளுடை யாரே. | 7.75.6 |
767 | தார மாகிய பொன்னித் தண்டுறை ஆடி விழுத்தும் நீரில் நின்றடி போற்றி நின்மலா கொள்ளென ஆங்கே ஆரங் கொண்டவெம் மானைக் காவுடை ஆதியை நாளும் ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடை யாரே. | 7.75.7 |
768 | உரவம் உள்ளதோர் உழையின் உரிபுலி அதளுடை யானை விரைகொள் கொன்றையி னானை விரிசடை மேற்பிறை யானை அரவம் வீக்கிய ஆனைக் காவுடை ஆதியை நாளும் இரவும் எல்லியும் பகலும் ஏத்துவார் எமையுடை யாரே. | 7.75.8 |
769 | வலங்கொள் வாரவர் தங்கள் வல்வினை தீர்க்கும் மருந்து கலங்கக் காலனைக் காலாற் காமனைக் கண்சிவப் பானை அலங்கல் நீர்பொரும் ஆனைக் காவுடை ஆதியை நாளும் இலங்கு சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடை யாரே. | 7.75.9 |
770 | ஆழி யாற்கருள் ஆனைக் காவுடை ஆதிபொன் னடியின் நீழ லேசர ணாக நின்றருள் கூர நினைந்து வாழ வல்லவன் றொண்டன் வண்டமிழ் மாலைவல் லார்போய் ஏழு மாபிறப் பற்று எம்மையும் ஆளுடை யாரே. | 7.75.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சம்புகேசுவரர்,
தேவியார் – அகிலாண்டநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.76 திருவாஞ்சியம்
பண் – பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
771 | பொருவ னார்புரி நூலர் புணர்முலை உமையவ ளோடு மருவ னார்மரு வார்பால் வருவதும் இல்லைநம் அடிகள் திருவ னார்பணிந் தேத்துந் திகழ்திரு வாஞ்சியத் துறையும் ஒருவ னார்அடி யாரை ஊழ்வினை நலிய வொட்டாரே. | 7.76.1 |
772 | தொறுவில் ஆனிள ஏறு துண்ணென இடிகுரல் வெருவிச் செறுவில் வாளைகள் ஓடச் செங்கயல் பங்கயத் தொதுங்கக் கறுவி லாமனத் தார்கள் காண்டகு வாஞ்சியத் தடிகள் மறுவி லாதவெண் ணீறு பூசுதல் மன்னுமொன் றுடைத்தே. | 7.76.2 |
773 | தூர்த்தர் மூவெயி லெய்து சுடுநுனைப் பகழிய தொன்றாற் பார்த்த னார்திரள் தோள்மேற் பன்னுனைப் பகழிகள் பாய்ச்சித் தீர்த்த மாமலர்ப் பொய்கைத் திகழ்திரு வாஞ்சியத் தடிகள் சாத்து மாமணிக் கச்சங் கொருதலை பலதலை யுடைத்தே. | 7.76.3 |
774 | சள்ளை வெள்ளையங் குருகு தானது வாமெனக் கருதி வள்ளை வெண்மலர் அஞ்சி மறுகியோர் வாளையின் வாயில் துள்ளு தெள்ளுநீர்ப் பொய்கைத் துறைமல்கு வாஞ்சியத் தடிகள் வெள்ளை நுண்பொடிப் பூசும் விகிர்தமொன் றொழிகிலர் தாமே. | 7.76.4 |
775 | மைகொள் கண்டர்எண் டோ ளர் மலைமக ளுடனுறை வாழ்க்கைக் கொய்த கூவிள மாலை குலவிய சடைமுடிக் குழகர் கைதை நெய்தலங் கழனி கமழ்புகழ் வாஞ்சியத் தடிகள் பைதல் வெண்பிறை யோடு பாம்புடன் வைப்பது பரிசே. | 7.76.5 |
776 | கரந்தை கூவிள மாலை கடிமலர்க் கொன்றையுஞ் சூடிப் பரந்த பாரிடஞ் சூழ வருவர்நம் பரமர்தம் பரிசால் திருந்து மாடங்கள் நீடு திகழ்திரு வாஞ்சியத் துறையும் மருந்த னார்அடி யாரை வல்வினை நலிய வொட்டாரே. | 7.76.6 |
777 | அருவி பாய்தரு கழனி அலர்தரு குவளையங் கண்ணார் குருவி யாய்கிளி சேப்பக் குருகினம் இரிதரு கிடங்கிற் பருவ ரால்குதி கொள்ளும் பைம்பொழில் வாஞ்சியத் துறையும் இருவ ராலறி யொண்ணா இறைவன தறைகழல் சரணே. | 7.76.7 |
778 | களங்க ளார்தரு கழனி அளிதரக் களிதரு வண்டு உளங்க ளார்கலிப் பாடல் உம்பரில் ஒலித்திடுங் காட்சி குளங்க ளானிழற் கீழ்நற் குயில்பயில் வாஞ்சியத் தடிகள் விளங்கு தாமரைப் பாதம் நினைப்பவர் வினைநலி விலரே. | 7.76.8 |
779 | வாழை யின்கனி தானும் மதுவிம்மு வருக்கையின் சுளையுங் கூழை வானரந் தம்மிற் கூறிது சிறிதெனக் குழறித் தாழை வாழையந் தண்டாற் செருச்செய்து தருக்குவாஞ் சியத்துள் ஏழை பாகனை யல்லால் இறையெனக் கருதுத லிலமே. | 7.76.9 |
780 | செந்நெ லங்கலங் கழனித் திகழ்திரு வாஞ்சியத் துறையும் மின்ன லங்கலஞ் சடையெம் இறைவன தறைகழல் பரவும் பொன்ன லங்கனல் மாடப் பொழிலணி நாவலா ரூரன் பன்ன லங்கனல் மாலை பாடுமின் பத்தரு ளீரே. | 7.76.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சுகவாஞ்சிநாதர்,
தேவியார் – வாழவந்தநாயகி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.77 திருவையாறு
பண் – காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
781 | பரவும் பரிசொன் றறியேன்நான் பண்டே உம்மைப் பயிலாதேன் இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினைய மாட்டேன்நான் கரவில் அருவி கமுகுண்ணத் தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை அரவந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ. | 7.77.1 |
782 | எங்கே போவே னாயிடினும் அங்கே வந்தென் மனத்தீராய்ச் சங்கை யொன்றும் இன்றியே தலைநாள் கடைநாள் ஒக்கவே கங்கை சடைமேற் கரந்தானே கலைமான் மறியுங் கனல்மழுவுந் தங்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ. | 7.77.2 |
783 | மருவிப் பிரிய மாட்டேன்நான் வழிநின் றொழிந்தேன் ஒழிகிலேன் பருவி விச்சி மலைச்சாரற் பட்டை கொண்டு பகடாடிக் குருவி ஓப்பிக் கிளிகடிவார் குழன்மேல் மாலை கொண்டோ ட்டந் தரவந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ. | 7.77.3 |
784 | பழகா நின்று பணிசெய்வார் பெற்ற பயனொன் றறிகிலேன் இகழா துமக்காட் பட்டோ ர்க்கு வேக படமொன் றரைச்சாத்தி குழகா வாழைக் குலைத்தெங்கு கொணர்ந்து கரைமேல் எறியவே அழகார் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ. | 7.77.4 |
785 | பிழைத்த பிழையொன் றறியேன்நான் பிழையைத் தீரப் பணியாயே மழைக்கண் நல்லார் குடைந்தாட மலையும் நிலனுங் கொள்ளாமைக் கழைக்கொள் பிரசங் கலந்தெங்குங் கழனி மண்டிக் கையேறி அழைக்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ. | 7.77.5 |
786 | கார்க்கொள் கொன்றைச் சடைமேலொன் றுடையாய் விடையாய் கையினால் மூர்க்கர் புரமூன் றெரிசெய்தாய் முன்னீ பின்னீ முதல்வன்நீ வார்க்கொள் அருவி பலவாரி மணியும் முத்தும் பொன்னுங்கொண் டார்க்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ. | 7.77.6 |
787 | மலைக்கண் மடவாள் ஒருபாலாய்ப் பற்றி உலகம் பலிதேர்வாய் சிலைக்கொள் கணையால் எயிலெய்த செங்கண் விடையாய் தீர்த்தன்நீ மலைக்கொள் ளருவி பலவாரி மணியும் முத்தும் பொன்னுங்கொண் டலைக்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ. | 7.77.7 |
788 | போழும் மதியும் புனக்கொன்றைப் புனல்சேர் சென்னிப் புண்ணியா சூழும் அரவச் சுடர்ச்சோதீ உன்னைத் தொழுவார் துயர்போக வாழு மவர்கள் அங்கங்கே வைத்த சிந்தை உய்த்தாட்ட ஆழுந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ. | 7.77.8 |
789 | கதிர்கொள் பசியே ஒத்தேநான் கண்டேன் உம்மைக் காணாதேன் எதிர்த்து நீந்த மாட்டேன்நான் எம்மான் றம்மான் றம்மானே விதிர்த்து மேகம் மழைபொழிய வெள்ளம் பரந்து நுரைசிதறி அதிர்க்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ. | 7.77.9 |
790 | கூசி அடியார் இருந்தாலுங் குணமொன் றில்லீர் குறிப்பில்லீர் தேச வேந்தன் திருமாலும் மலர்மேல் அயனுங் காண்கிலாத் தேச மெங்குந் தெளித்தாடத் தெண்ணீர் அருவி கொணர்ந்தெங்கும் வாசந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ. | 7.77.10 |
791 | கூடி அடியார் இருந்தாலுங் குணமொன் றில்லீர் குறிப்பில்லீர் ஊடி இருந்தும் உணர்கிலேன் உம்மைத் தொண்டன் ஊரனேன் தேடி யெங்குங் காண்கிலேன் திருவா ரூரே சிந்திப்பன் ஆடுந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ. | 7.77.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – செம்பொற்சோதியீசுவரர், தேவியார் – அறம் வளர்த்த நாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.78 திருக்கேதாரம்
பண் – நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
792 | வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம் பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான் தாழாதறஞ் செய்ம்மின்தடங் கண்ணான்மல ரோனுங் கீழ்மேலுற நின்றான்றிருக் கேதாரமெ னீரே. | 7.78.1 |
793 | பறியேசுமந் துழல்வீர்பறி நரிகீறுவ தறியீர் குறிகூவிய கூற்றங்கொளும் நாளாலறம் உளவே அறிவானிலும் அறிவானல நறுநீரொடு சோறு கிறிபேசிநின் றிடுவார்தொழு கேதாரமெ னீரே. | 7.78.2 |
794 | கொம்பைப்பிடித் தொருக்காலர்கள் இருக்கால்மலர் தூவி நம்பன்னமை ஆள்வானென்று நடுநாளையும் பகலுங் கம்பக்களிற் றினமாய்நின்று சுனைநீர்களைத் தூவிச் செம்பொற்பொடி சிந்துந்திருக் கேதாரமெ னீரே. | 7.78.3 |
795 | உழக்கேயுண்டு படைத்தீட்டிவைத் திழப்பார்களுஞ் சிலர்கள் வழக்கேயெனிற் பிழைக்கேமென்பர் மதிமாந்திய மாந்தர் சழக்கேபறி நிறைப்பாரொடு தவமாவது செயன்மின் கிழக்கேசல மிடுவார்தொழு கேதாரமெ னீரே. | 7.78.4 |
796 | வாளோடிய தடங்கண்ணியர் வலையிலழுந் தாதே நாளோடிய நமனார்தமர் நணுகாமுனம் நணுகி ஆளாயுய்ம்மின் அடிகட்கிடம் அதுவேயெனில் இதுவே கீளோடர வசைத்தானிடங் கேதாரமெ னீரே. | 7.78.5 |
797 | தளிசாலைகள் தவமாவது தம்மைப்பெறி லன்றே குளியீருளங் குருக்கேத்திரங் கோதாவிரி குமரி தெளியீருளஞ் சீபர்ப்பதந் தெற்குவடக் காகக் கிளிவாழையொண் கனிகீறியுண் கேதாரமெ னீரே. | 7.78.6 |
798 | பண்ணின்றமிழ் இசைபாடலின் பழவேய்முழ வதிரக் கண்ணின்னொளி கனகச்சுனை வயிரம்மவை சொரிய மண்ணின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண் டெறியக் கிண்ணென்றிசை முரலுந்திருக் கேதாரமெ னீரே. | 7.78.7 |
799 | முளைக்கைப்பிடி முகமன்சொலி முதுவேய்களை இறுத்துத் துளைக்கைக்களிற் றினமாய்நின்று சுனைநீர்களைத் தூவி வளைக்கைப்பொழி மழைகூர்தர மயில்மான்பிணை நிலத்தைக் கிளைக்கமணி சிந்துந்திருக் கேதாரமெ னீரே. | 7.78.8 |
800 | பொதியேசுமந் துழல்வீர்பொதி அவமாவதும் அறியீர் மதிமாந்திய வழியேசென்று குழிவீழ்வதும் வினையாற் கதிசூழ்கடல் இலங்கைக்கிறை மலங்கவரை அடர்த்துக் கெதிபேறுசெய் திருந்தானிடங் கேதாரமெ னீரே. | 7.78.9 |
801 | நாவின்மிசை அரையன்னொடு தமிழ்ஞானசம் பந்தன் யாவர்சிவன் அடியார்களுக் கடியானடித் தொண்டன் தேவன்றிருக் கேதாரத்தை ஊரன்னுரை செய்த பாவின்தமிழ் வல்லார்பர லோகத்திருப் பாரே. | 7.78.10 |
இத்தலம் வடநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – கேதாரேசுவரர், தேவியார் – கேதாரேசுவரியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.79 திருப்பருப்பதம்
பண் – நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
802 | மானும்மரை இனமும்மயில் இனமுங்கலந் தெங்குந் தாமேமிக மேய்ந்துதடஞ் சுனைநீர்களைப் பருகிப் பூமாமரம் உரிஞ்சிப்பொழி லூடேசென்று புக்குத் தேமாம்பொழில் நீழல்துயில் சீபர்ப்பத மலையே. | 7.79.1 |
803 | மலைச்சாரலும் பொழிற்சாரலும் புறமேவரும் இனங்கள் மலைப்பாற்கொணர்ந் திடித்தூட்டிட மலங்கித்தன களிற்றை அழைத்தோடியும் பிளிறீயவை அலமந்துவந் தெய்த்துத் திகைத்தோடித்தன் பிடிதேடிடுஞ் சீபர்ப்பத மலையே. | 7.79.2 |
804 | மன்னிப்புனங் காவல்மட மொழியாள்புனங் காக்கக் கன்னிக்கிளி வந்துகவைக் கோலிக்கதிர் கொய்ய என்னைக்கிளி மதியாதென்று எடுத்துக்கவண் ஒலிப்பத் தென்னற்கிளி திரிந்தேறிய சீபர்ப்பத மலையே. | 7.79.3 |
805 | மையார்தடங் கண்ணாள்மட மொழியாள்புனங் காக்கச் செவ்வேதிரிந் தாயோவெனப் போகாவிட விளிந்து கைபாவிய கவணால்மணி எறியஇரிந் தோடிச் செவ்வாயன கிளிபாடிடுஞ் சீபர்ப்பத மலையே. | 7.79.4 |
806 | ஆனைக்குலம் இரிந்தோடித்தன் பிடிசூழலிற் றிரியத் தானப்பிடி செவிதாழ்த்திட அதற்குமிக இரங்கி மானக்குற அடல்வேடர்கள் இலையாற்கலை கோலித் தேனைப்பிழிந் தினிதூட்டிடுஞ் சீபர்ப்பத மலையே. | 7.79.5 |
807 | மாற்றுக்களி றடைந்தாயென்று மதவேழங்கை யெடுத்தும் ஊற்றித்தழல் உமிழ்ந்தும்மதம் பொழிந்தும்முகஞ் சுழியத் தூற்றத்தரிக் கில்லேனென்று சொல்லிஅயல் அறியத் தேற்றிச்சென்று பிடிசூழறுஞ் சீபர்ப்பத மலையே. | 7.79.6 |
808 | அப்போதுவந் துண்டீர்களுக் கழையாதுமுன் னிருந்தேன் எப்போதும்வந் துண்டாலெமை எமர்கள்சுழி யாரோ இப்போதுமக் கிதுவேதொழில் என்றோடியக் கிளியைச் செப்பேந்திள முலையாள்எறி சீபர்ப்பத மலையே. | 7.79.7 |
809 | திரியும்புரம் நீறாக்கிய செல்வன்றன கழலை அரியதிரு மாலோடயன் றானும்மவர் அறியார் கரியின்னினம் ஓடும்பிடி தேனுண்டவை களித்துத் திரிதந்தவை திகழ்வாற்பொலி சீபர்ப்பத மலையே. | 7.79.8 |
810 | ஏனத்திரள் கிளைக்கஎரி போலமணி சிதறத் தீயென்றவை மலைச்சாரலிற் றிரியுங்கர டீயும் மானும்மரை இனமும்மயில் மற்றும்பல வெல்லாந் தேனுண்பொழில் சோலைமிகு சீபர்ப்பத மலையே. | 7.79.9 |
811 | நல்லாரவர் பலர்வாழ்தரு வயல்நாவல வூரன் செல்லல்லுற அரியசிவன் சீபர்ப்பத மலையை அல்லலவை தீரச்சொன தமிழ்மாலைகள் வல்லார் ஒல்லைச்செல உயர்வானகம் ஆண்டங்கிருப் பாரே. | 7.79.10 |
இத்தலம் வடநாட்டிலுள்ளது. இது ஸ்ரீசைலம் என்றும்
மல்லிகார்ச்சுனம் என்றும் பெயர்பெறும்.
சுவாமிபெயர் – பருவதநாதர், தேவியார் – பருவதநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.80 திருக்கேதீச்சரம்
பண் – நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
812 | நத்தார்புடை ஞானம்பசு ஏறிந்நனை கவிழ்வாய் மத்தம்மத யானைஉரி போர்த்தமழு வாளன் பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேற் செத்தாரெலும் பணிவான்றிருக் கேதீச்சரத் தானே. | 7.80.1 |
813 | சுடுவார்பொடி நீறுந்நல துண்டப்பிறைக் கீளுங் கடமார்களி யானைஉரி அணிந்தகறைக் கண்டன் படவேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேற் திடமாஉறை கின்றான்றிருக் கேதீச்சரத் தானே. | 7.80.2 |
814 | அங்கம்மொழி அன்னாரவர் அமரர்தொழு தேத்த வங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரிற் பங்கஞ்செய்த பிறைசூடினன் பாலாவியின் கரைமேற் செங்கண்ணர வசைத்தான்றிருக் கேதீச்சரத் தானே. | 7.80.3 |
815 | கரியகறைக் கண்டனல்ல கண்மேலொரு கண்ணான் வரியசிறை வண்டியாழ்செயும் மாதோட்டநன் னகருட் பரியதிரை எறியாவரு பாலாவியின் கரைமேற் றெரியும்மறை வல்லான்றிருக் கேதீச்சரத் தானே. | 7.80.4 |
816 | அங்கத்துறு நோய்களடி யார்மேலொழித் தருளி வங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரிற் பங்கஞ்செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேற் தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக் கேதீச்சரத் தானே. | 7.80.5 |
817 | வெய்யவினை யாயஅடி யார்மேலொழித் தருளி வையம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரிற் பையேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேற் செய்யசடை முடியான்றிருக் கேதீச்சரத் தானே. | 7.80.6 |
818 | ஊனத்துறு நோய்களடி யார்மேலொழித் தருளி வானத்துறு மலியுங்கடல் மாதோட்டநன் னகரிற் பானத்துறும் மொழியாளொடு பாலாவியின் கரைமேல் ஏனத்தெயி றணிந்தான்றிருக் கேதீச்சரத் தானே. | 7.80.7 |
819 | அட்டன்னழ காகவரை தன்மேலர வார்த்து மட்டுண்டுவண் டாலும்பொழில் மாதோட்டநன் னகரிற் பட்டவரி நுதலாளொடு பாலாவியின் கரைமேற் சிட்டன்நமை யாள்வான்றிருக் கேதீச்சரத் தானே. | 7.80.8 |
820 | மூவரென இருவரென முக்கண்ணுடை மூர்த்தி மாவின்கனி தூங்கும்பொழில் மாதோட்டநன் னகரிற் பாவம்வினை யறுப்பார்பயில் பாலாவியின் கரைமேல் தேவன்னெனை ஆள்வான்றிருக் கேதீச்சரத் தானே. | 7.80.9 |
821 | கறையார்கடல் சூழ்ந்தகழி மாதோட்டநன் னகருட் சிறையார்பொழில் வண்டியாழ்செயுங் கேதீச்சரத் தானை மறையார்புகழ் ஊரன்னடித் தொண்டனுரை செய்த குறையாத்தமிழ் பத்துஞ்சொலக் கூடாகொடு வினையே. | 7.80.10 |
இத்தலம் ஈழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – கேதீசுவரர், தேவியார் – கௌரியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.81 திருக்கழுக்குன்றம்
பண் – நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
822 | கொன்று செய்த கொடுமை யாற்பல சொல்லவே நின்ற பாவம் வினைகள் தாம்பல நீங்கவே சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடங் கன்றி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே. | 7.81.1 |
823 | இறங்கிச் சென்று தொழுமின் இன்னிசை பாடியே பிறங்கு கொன்றைச் சடையன் எங்கள் பிரானிடம் நிறங்கள் செய்த மணிகள் நித்திலங் கொண்டிழி கறங்கு வெள்ளை அருவித் தண்கழுக் குன்றமே. | 7.81.2 |
824 | நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால் ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத் தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான் காள கண்டன் உறையுந் தண்கழுக் குன்றமே. | 7.81.3 |
825 | வெளிறு தீரத் தொழுமின் வெண்பொடி ஆடியை முளிறி லங்குமழு வாளன் முந்தி உறைவிடம் பிளிறு தீரப் பெருங்கைப் பெய்ம்மதம் மூன்றுடைக் களிறி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே. | 7.81.4 |
826 | புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன் இலைகொள் சூலப் படையன் எந்தை பிரானிடம் முலைகள் உண்டு தழுவிக் குட்டி யொடுமுசுக் கலைகள் பாயும் புறவில் தண்கழுக் குன்றமே. | 7.815 |
827 | மடமு டைய அடியார் தம்மனத் தேஉற விடமு டைய மிடறன் விண்ணவர் மேலவன் படமு டைய அரவன் றான்பயி லும்மிடங் கடமு டைய புறவில் தண்கழுக் குன்றமே. | 7.81.6 |
828 | ஊன மில்லா அடியார் தம்மனத் தேஉற ஞான மூர்த்தி நட்ட மாடிநவி லும்மிடந் தேனும் வண்டும் மதுவுண் டின்னிசை பாடியே கான மஞ்சை உறையுந் தண்கழுக் குன்றமே. | 7.81.7 |
829 | அந்த மில்லா அடியார் தம்மனத் தேஉற வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன் சிந்தை செய்த மலர்கள் நித்தலுஞ் சேரவே கந்தம் நாறும் புறவில் தண்கழுக் குன்றமே. | 7.81.8 |
830 | பிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்ஞகன் குழைகொள் காதன் குழகன் றானுறை யும்மிடம் மழைகள் சாலக் கலித்து நீடுயர் வேயவை குழைகொள் முத்தஞ் சொரியுந் தண்கழுக் குன்றமே. | 7.81.9 |
831 | பல்லில் வெள்ளைத் தலையன் றான்பயி லும்மிடம் கல்லில் வெள்ளை அருவித் தண்கழுக் குன்றினை மல்லின் மல்கு திரள்தோள் ஊரன் வனப்பினாற் சொல்லல் சொல்லித் தொழுவா ரைத்தொழு மின்களே. | 7.81.10 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வேதகிரியீசுவரர், தேவியார் – பெண்ணினல்லாளம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.82 திருச்சுழியல்
பண் – நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
832 | ஊனாய்உயிர் புகலாய்அக லிடமாய் முகில்பொழியும் வானாய்வரு மதியாய்விதி வருவானிடம் பொழிலின் தேனாதரித் திசைவண்டினம் மிழற்றுந்திருச் சுழியல் நானாவிதம் நினைவார்தமை நலியார்நமன் தமரே. | 7.82.1 |
833 | தண்டேர்மழுப் படையான்மழ விடையான்எழு கடல்நஞ் சுண்டேபுரம் எரியச்சிலை வளைத்தான்இமை யவர்க்காத் திண்டேர்மிசை நின்றானவன் உறையுந்திருச் சுழியல் தொண்டேசெய வல்லாரவர் நல்லார்துயர் இலரே. | 7.82.2 |
834 | கவ்வைக்கடல் கதறிக்கொணர் முத்தங்கரைக் கேற்றக் கொவ்வைத்துவர் வாயார்குடைந் தாடுந்திருச் சுழியல் தெய்வத்தினை வழிபாடுசெய் தெழுவாரடி தொழுவார் அவ்வத்திசைக் கரசாகுவர் அலராள்பிரி யாளே. | 7.82.3 |
835 | மலையான்மகள் மடமாதிட மாகத்தவள் மற்றுக் கொலையானையின் உரிபோர்த்தவெம் பெருமான்றிருச் சுழியல் அலையார்சடை யுடையானடி தொழுவார்பழு துள்ளம் நிலையார்திகழ் புகழால்நெடு வானத்துயர் வாரே. | 7.82.4 |
836 | உற்றான்நமக் குயரும்மதிச் சடையான்புலன் ஐந்துஞ் செற்றார்திரு மேனிப்பெரு மானூர்திருச் சுழியல் பெற்றான்இனி துறையத்திறம் பாமைத்திரு நாமங் கற்றாரவர் கதியுட்செல்வர் ஏத்தும்மது கடனே. | 7.82.5 |
837 | மலந்தாங்கிய பாசப்பிறப் பறுப்பீர்துறைக் கங்கைச் சலந்தாங்கிய முடியான்அமர்ந் திடமாந்திருச் சுழியல் நிலந்தாங்கிய மலராற்கொழும் புகையால்நினைந் தேத்துந் தலந்தாங்கிய புகழாம்மிகு தவமாஞ்சது ராமே. | 7.82.6 |
838 | சைவத்தசெவ் வுருவன்றிரு நீற்றன்னுரு மேற்றன் கைவைத்தொரு சிலையால்அரண் மூன்றும்மெரி செய்தான் தெய்வத்தவர் தொழுதேத்திய குழகன்றிருச் சுழியல் மெய்வைத்தடி நினைவார்வினை தீர்தல்லெளி தன்றே. | 7.82.7 |
839 | பூவேந்திய பீடத்தவன் றானும்மடல் அரியுங் கோவேந்திய வினையத்தொடு குறுகப்புகல் அறியார் சேவேந்திய கொடியானவன் உறையுந்திருச் சுழியல் மாவேந்திய கரத்தான்எம சிரத்தான்றன தடியே. | 7.82.8 |
840 | கொண்டாடுதல் புரியாவரு தக்கன்பெரு வேள்விச் செண்டாடுதல் புரிந்தான்திருச் சுழியற்பெரு மானைக் குண்டாடிய சமண்ஆதர்கள் குடைச்சாக்கியர் அறியா மிண்டாடிய அதுசெய்தது வானால்வரு விதியே. | 7.82.9 |
841 | நீரூர்தரு நிமிலன்றிரு மலையார்க்கயல் அருகே தேரூர்தரும் அரக்கன்சிரம் நெரித்தான்றிருச் சுழியல் பேரூரென உரைவானடி பெயர்நாவலர் கோமான் ஆரூரன தமிழ்மாலைபத் தறிவார்துயர் இலரே. | 7.82.10 |
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – இணைத்திருமேனிநாதர், தேவியார் – துணைமாலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.83 திருவாரூர்
பண் – புறநீர்மை
திருச்சிற்றம்பலம்
842 | அந்தியும் நண்பகலும் அஞ்சுப தஞ்சொல்லி முந்தி எழும்பழைய வல்வினை மூடாமுன் சிந்தை பராமரியாத் தென்றிரு வாரூர்புக் கெந்தை பிரானாரை யென்றுகொல் எய்துவதே. | 7.83.1 |
843 | நின்ற வினைக்கொடுமை நீங்க இருபொழுதுந் துன்று மலரிட்டுச் சூழும் வலஞ்செய்து தென்றல் மணங்கமழுந் தென்றிரு வாரூர்புக் கென்றன் மனங்குளிர என்றுகொல் எய்துவதே. | 7.83.2 |
844 | முன்னை முதற்பிறவி மூதறி யாமையினாற் பின்னை நினைந்தனவும் பேதுற வும்மொழியச் செந்நெல் வயற்கழனித் தென்றிரு வாரூர்புக் கென்னுயிர்க் கின்னமுதை என்றுகொல் எய்துவதே. | 7.83.3 |
845 | நல்ல நினைப்பொழிய நாள்களில் ஆருயிரைக் கொல்ல நினைப்பனவுங் குற்றமும் அற்றொழியச் செல்வ வயற்கழனித் தென்றிரு வாரூர்புக் கெல்லை மிதித்தடியேன் என்றுகொல் எய்துவதே. | 7.83.4 |
846 | கடுவரி மாக்கடலுட் காய்ந்தவன் தாதையைமுன் சுடுபொடி மெய்க்கணிந்த சோதியை வன்றலைவாய் அடுபுலி ஆடையனை ஆதியை ஆரூர்புக் கிடுபலி கொள்ளியைநான் என்றுகொல் எய்துவதே. | 7.83.5 |
847 | சூழொளி நீர்நிலந்தீத் தாழ்வளி ஆகாசம் வானுயர் வெங்கதிரோன் வண்டமிழ் வல்லவர்கள் ஏழிசை ஏழ்நரம்பின் ஓசையை ஆரூர்புக் கேழுல காளியைநான் என்றுகொல் எய்துவதே. | 7.83.6 |
848 | கொம்பன நுண்ணிடையாள் கூறனை நீறணிந்த வம்பனை எவ்வுயிர்க்கும் வைப்பினை ஒப்பமராச் செம்பொனை நன்மணியைத் தென்றிரு வாரூர்புக் கென்பொனை என்மணியை என்றுகொல் எய்துவதே. | 7.83.7 |
849 | ஆறணி நீண்முடிமேல் ஆடர வஞ்சூடிப் பாறணி வெண்டலையிற் பிச்சைகொள் நச்சரவன் சேறணி தண்கழனித் தென்றிரு வாரூர்புக் கேறணி எம்மிறையை என்றுகொல் எய்துவதே. | 7.83.8 |
850 | மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல் அண்ணலும் நண்ணரிய ஆதியை மாதினொடுந் திண்ணிய மாமதில்சூழ் தென்றிரு வாரூர்புக் கெண்ணிய கண்குளிர என்றுகொல் எய்துவதே. | 7.83.9 |
851 | மின்னெடுஞ் செஞ்சடையான் மேவிய ஆரூரை நன்னெடுங் காதன்மையால் நாவலர் கோன்ஊரன் பன்னெடுஞ் சொல்மலர்கொண் டிட்டன பத்தும்வல்லார் பொன்னுடை விண்ணுலகம் நண்ணுவர் புண்ணியரே. | 7.83.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.84 திருக்கானப்பேர்
பண் – புறநீர்மை
திருச்சிற்றம்பலம்
852 | தொண்ட ரடித்தொழலுஞ் சோதி இளம்பிறையுஞ் சூதன மென்முலையாள் பாகமு மாகிவரும் புண்டரி கப்பரிசாம் மேனியும் வானவர்கள் பூச லிடக்கடல்நஞ் சுண்ட கருத்தமருங் கொண்ட லெனத்திகழுங் கண்டமும் எண்டோ ளுங்கோல நறுஞ்சடைமேல் வண்ணமுங் கண்குளிரக் கண்டு தொழப்பெறுவ தென்றுகொ லோஅடியேன்கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. | 7.84.1 |
853 | கூத லிடுஞ்சடையுங் கோளர வும்விரவுங் கொக்கிற குங்குளிர்மா மந்தமும் ஒத்துனதாள் ஓத லுணர்ந்தடியார் உன்பெரு மைக்குநினைந் துள்ளுரு காவிரசும் ஓசையைப் பாடலும்நீ ஆத லுணர்ந்தவரோ டன்பு பெருத்தடியேன் அங்கையின் மாமலர்கொண் டென்கண தல்லல்கெடக் காத லுறத்தொழுவ தென்றுகொ லோவடியேன்கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. | 7.84.2 |
854 | நானுடை மாடெனவே நன்மை தரும்பரனை நற்பத மென்றுணர்வார் சொற்பத மார்சிவனைத் தேனிடை இன்னமுதை மற்றத னிற்றெளிவைத்தேவர்கள் நாயகனைப் பூவுயர் சென்னியனை வானிடை மாமதியை மாசறு சோதியனைமாருத மும்மனலும் மண்டல மும்மாய கானிடை மாநடனென் றெய்துவ தென்றுகொலோகார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. | 7.84.3 |
855 | செற்றவர் முப்புரம்அன் றட்ட சிலைத்தொழிலார் சேவக முந்நினைவார் பாவக முந்நெறியுங் குற்றமில் தன்னடியார் கூறும் இசைப்பரிசுங்கோசிக மும்மரையிற் கோவண மும்மதளும் மற்றிகழ் திண்புயமும் மார்பிடை நீறுதுதைமாமலை மங்கையுமை சேர்சுவ டும்புகழக் கற்றன வும்பரவிக் கைதொழல் என்றுகொலோகார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. | 7.84.4 |
856 | கொல்லை விடைக்கழகுங் கோல நறுஞ்சடையிற் கொத்தல ரும்மிதழித் தொத்தும் அதனருகே முல்லை படைத்தநகை மெல்லிய லாளொருபால் மோகம் மிகுத்திலங்குங் கூறுசெய் யெப்பரிசுந் தில்லை நகர்ப்பொதுவுற் றாடிய சீர்நடமுந் திண்மழு வுங்கைமிசைக் கூரெரி யும்மடியார் கல்ல வடப்பரிசுங் காணுவ தென்றுகொலோகார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. | 7.84.5 |
857 | பண்ணு தலைப்பயனார் பாடலும் நீடுதலும்பங்கய மாதனையார் பத்தியும் முத்தியளித் தெண்ணு தலைப்பெருமான் என்றெழு வாரவர்தம் ஏசற வும்மிறையாம் எந்தையை யும்விரவி நண்ணு தலைப்படுமா றெங்ஙனம் என்றயலே நைகிற என்னைமதித் துய்யும்வண் ணமருளுங் கண்ணு தலைக்கனியைக் காண்பதும் என்றுகொலோ கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. | 7.84.6 |
858 | மாவை உரித்ததள்கொண் டங்கம் அணிந்தவனைவஞ்சர் மனத்திறையும் நெஞ்சணு காதவனை மூவர் உருத்தனதாம் மூல முதற்கருவைமூசிடு மால்விடையின் பாகனை ஆகமுறப் பாவக மின்றிமெய்யே பற்று மவர்க்கமுதைப்பால்நறு நெய்தயிரைந் தாடு பரம்பரனைக் காவல் எனக்கிறையென் றெய்துவ தென்றுகொலோகார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. | 7.84.7 |
859 | தொண்டர் தமக்கெளிய சோதியை வேதியனைத்தூய மறைப்பொருளாம் நீதியை வார்கடல்நஞ் சுண்டத னுக்கிறவா தென்றும் இருந்தவனைஊழி படைத்தவனோ டொள்ளரி யும்முணரா அண்டனை அண்டர்தமக் காகம நூல்மொழியும் ஆதியை மேதகுசீர் ஓதியை வானவர்தங் கண்டனை அன்பொடுசென் றெய்துவ தென்றுகொலோகார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. | 7.84.8 |
860 | நாதனை நாதமிகுத் தோசைய தானவனைஞான விளக்கொளியாம் ஊனுயி ரைப்பயிரை மாதனை மேதகுதன் பத்தர் மனத்திறையும் பற்று விடாதவனைக் குற்றமில் கொள்கையனைத் தூதனை என்றனையாள் தோழனை நாயகனைத்தாழ்மக ரக்குழையுந் தோடும் அணிந்ததிருக் காதனை நாயடியேன் எய்துவ தென்றுகொலோகார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. | 7.84.9 |
861 | கன்னலை இன்னமுதைக் கார்வயல் சூழ்கானப்பேருறை காளையைஒண் சீருறை தண்டமிழால் உன்னி மனத்தயரா உள்ளுரு கிப்பரவும் ஒண்பொழில் நாவலர்கோன் ஆகிய ஆரூரன் பன்னும் இசைக்கிளவி பத்திவை பாடவல்லார்பத்தர் குணத்தினராய் எத்திசை யும்புகழ மன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும்மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே. | 7.84.10 |
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே காளையார் கோயில்.
சுவாமிபெயர் – காளைநாதேசுவரர், தேவியார் – பொற்கொடியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.85 திருக்கூடலையாற்றூர்
பண் – புறநீர்மை
திருச்சிற்றம்பலம்
862 | வடிவுடை மழுவேந்தி மதகரி உரிபோர்த்துப் பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடுங் கொடியணி நெடுமாடக் கூடலை யாற்றூரில் அடிகளிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. | 7.85.1 |
863 | வையகம் முழுதுண்ட மாலொடு நான்முகனும் பையர விளவல்குற் பாவையொ டும்முடனே கொய்யணி மலர்ச்சோலைக் கூடலை யாற்றூரில் ஐயனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. | 7.85.2 |
864 | ஊர்தொறும் வெண்டலைகொண் டுண்பலி இடுமென்று வார்தரு மென்முலையாள் மங்கையொ டும்முடனே கூர்நுனை மழுவேந்திக் கூடலை யாற்றூரில் ஆர்வனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. | 7.85.3 |
865 | சந்தண வும்புனலுந் தாங்கிய தாழ்சடையன் பந்தண வும்விரலாள் பாவையொ டும்முடனே கொந்தண வும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில் அந்தணன் வழிபோந்த அதிசயம் அறியேனே. | 7.85.4 |
866 | வேதியர் விண்ணவரும் மண்ணவ ருந்தொழநற் சோதிய துருவாகிச் சுரிகுழல் உமையோடுங் கோதிய வண்டறையுங் கூடலை யாற்றூரில் ஆதியிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. | 7.85.5 |
867 | வித்தக வீணையொடும் வெண்புரி நூல்பூண்டு முத்தன வெண்முறுவல் மங்கையொ டும்முடனே கொத்தல ரும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில் அத்தனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. | 7.85.6 |
868 | மழைநுழை மதியமொடு வாளர வஞ்சடைமேல் இழைநுழை துகிலல்குல் ஏந்திழை யாளோடுங் குழையணி திகழ்சோலைக் கூடலை யாற்றூரில் அழகனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. | 7.85.7 |
869 | மறைமுதல் வானவரும் மாலயன் இந்திரனும் பிறைநுதல் மங்கையொடும் பேய்க்கண முஞ்சூழக் குறள்படை யதனோடுங் கூடலை யாற்றூரில் அறவனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. | 7.85.8 |
870 | வேலையின் நஞ்சுண்டு விடையது தானேறிப் பாலன மென்மொழியாள் பாவையொ டும்முடனே கோலம துருவாகிக் கூடலை யாற்றூரில் ஆலனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. | 7.85.9 |
871 | கூடலை யாற்றூரிற் கொடியிடை யவளோடும் ஆடலு கந்தானை அதிசயம் இதுவென்று நாடிய இன்றமிழால் நாவல வூரன்சொற் பாடல்கள் பத்தும்வல்லார் தம்வினை பற்றறுமே. | 7.85.10 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – நெறிகாட்டுநாயகர், தேவியார் – புரிகுழலாளம்மை.
இது திருப்புறம்பயமென்னுந் தலத்தினின்று மெழுந்தருளித் திருக்கூடலையாற்றூருக்குச்
சமீபமாகச்செல்லுகின்றவர், அந்தத் தலத்துக்குள் செல்லாமல், திருமுதுகுன்றை
நோக்கிச்செல்லுங் கருத்தினராக, அந்தமார்க்கத்தில் பரமசிவம் ஒரு பிராமணராய்
நிற்கக்கண்டு ஐயரே திருமுதுகுன்றுக்கு மார்க்கமெதுவென்ன, இந்தக் கூடலையாற்றூர்
மார்க்கமாச் செல்லுகின்றதென்று சொல்லி வழிகாட்டிப் பின்செல்ல, சுந்தரமூர்த்தி
சுவாமிகள் முன்சென்று கூடலையாற்றூருக்குச் சமீபமாகச் சார்ந்தபோது
பின்வந்த பிராமணர் மறையக்கண்டு அதிசயங்கொண்டு ஓதியபதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.86 திருவன்பார்த்தான்பனங்காட்டூர்
பண் – சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
872 | விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானை அடையில்அன் புடையானை யாவர்க்கும் அறியொண்ணா மடையில்வா ளைகள்பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர்ச் சடையிற்கங்கை தரித்தானைச் சாராதார் சார்பென்னே. | 7.86.1 |
873 | அறையும்பைங் கழலார்ப்ப அரவாட அனலேந்திப் பிறையுங்கங் கையுஞ்சூடிப் பெயர்ந்தாடும் பெருமானார் பறையுஞ்சங் கொலிஓவாப் படிறன்றன் பனங்காட்டூர் உறையுமெங்கள் பிரானாரை உணராதார் உணர்வென்னே. | 7.86.2 |
874 | தண்ணார்மா மதிசூடித் தழல்போலுந் திருமேனிக் கெண்ணார்நாண் மலர்கொண்டங் கிசைந்தேத்தும் அடியார்கள் பண்ணார்பா டல்அறாத படிறன்றன் பனங்காட்டூர்ப் பெண்ணாணா யபிரானைப் பேசாதார் பேச்சென்னே. | 7.86.3 |
875 | நெற்றிக்கண் ணுடையானை நீறேறுந் திருமேனிக் குற்றமில் குணத்தானைக் கோணாதார் மனத்தானைப் பற்றிப்பாம் பரையார்த்த படிறன்றன் பனங்காட்டூர்ப் பெற்றொன்றே றும்பிரானைப் பேசாதார் பேச்சென்னே. | 7.86.4 |
876 | உரமென்னும் பொருளானை உருகிலுள் ளுறைவானைச் சிரமென்னுங் கலனானைச் செங்கண்மால் விடையானை வரம்முன்ன மருள்செய்வான் வன்பார்த்தான் பனங்காட்டூர்ப் பரமன்எங் கள்பிரானைப் பரவாதார் பரவென்னே. | 7.86.5 |
877 | எயிலார்பொக் கம்எரித்த எண்டோ ள்முக் கண்இறைவன் வெயிலாய்க்காற் றெனவீசி மின்னாய்த்தீ எனநின்றான் மயிலார்சோ லைகள்சூழ்ந்த வன்பார்த்தான் பனங்காட்டூர்ப் பயில்வானுக் கடிமைக்கட் பயிலாதார் பயில்வென்னே. | 7.86.6 |
878 | மெய்யன்வெண் பொடிபூசும் விகிர்தன்வே தமுதல்வன் கையில்மான் மழுவேந்திக் காலன்கா லம்அறுத்தான் பைகொள்பாம் பரையார்த்த படிறன்றன் பனங்காட்டூர் ஐயன்எங் கள்பிரானை அறியாதார் அறிவென்னே. | 7.86.7 |
879 | வஞ்சமற்ற மனத்தாரை மறவாத பிறப்பிலியைப் பஞ்சிச்சீ றடியாளைப் பாகம்வைத் துகந்தானை மஞ்சுற்ற மணிமாட வன்பார்த்தான் பனங்காட்டூர் நெஞ்சத்தெங் கள்பிரானை நினையாதார் நினைவென்னே. | 7.86.8 |
880 | மழையானுந் திகழ்கின்ற மலரோனென் றிருவர்தாம் உழையாநின் றவருள்க உயர்வானத் துயர்வானைப் பழையானைப் பனங்காட்டூர் பதியாகத் திகழ்கின்ற குழைகாதற் கடிமைக்கட் குழையாதார் குழைவென்னே. | 7.86.9 |
881 | பாரூரும் பனங்காட்டூர்ப் பவளத்தின் படியானைச் சீரூருந் திருவாரூர்ச் சிவன்பேர்சென் னியில்வைத்த ஆரூரன் அடித்தொண்டன் அடியன்சொல் அடிநாய்சொல் ஊரூரன் உரைசெய்வார் உயர்வானத் துயர்வாரே. | 7.86.10 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பனங்காட்டீசுவரர், தேவியார் – அமிர்தவல்லியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.87 திருப்பனையூர்
பண் – சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
882 | மாடமாளிகை கோபுரத்தொடு மண்டபம்வள ரும்வளர்பொழில் பாடல் வண்டறையும் பழனத் திருப்பனையூர்த் தோடுபெய்தொரு காதினிற்குழை தூங்கத்தொண்டர்கள் துள்ளிப்பாடநின் றாடு மாறுவல்லார் அவரே அழகியரே. | 7.87.1 |
883 | நாறுசெங்கழு நீர்மலர்நல்லமல்லிகை சண்பகத்தொடு சேறுசெய் கழனிப் பழனத் திருப்பனையூர் நீறுபூசிநெய் யாடிதன்னை நினைப்பவர்தம் மனத்தனாகிநின் றாறு சூடவல்லார் அவரே அழகியரே. | 7.87.2 |
884 | செங்கண்மேதிகள் சேடெறிந்து தடம்படிதலிற் சேலினத்தொடு பைங்கண் வாளைகள் பாய்பழனத் திருப்பனையூர்த் திங்கள்சூடிய செல்வனாரடி யார்தம்மேல்வினை தீர்ப்பராய்விடி லங்கிருந் துறைவார் அவரே அழகியரே. | 7.87.3 |
885 | வாளைபாய மலங்கிளங்கயல் வரிவராலுக ளுங்கழனியுள் பாளையொண் கமுகம் புடைசூழ் திருப்பனையூர்த் தோளுமாகமுந் தோன்றநட்டமிட் டாடுவாரடித் தொண்டர்தங்களை ஆளு மாறுவல்லார் அவரே அழகியரே. | 7.87.4 |
886 | கொங்கையார்பல ருங்குடைந் தாடநீர்க்குவ ளைமலர்தர பங்கயம் மலரும் பழனத் திருப்பனையூர் மங்கைபாகமும் மாலோர்பாகமுந் தாமுடையவர் மான்மழுவினோ டங்கைத் தீயுகப்பார் அவரே அழகியரே. | 7.87.5 |
887 | காவிரிபுடை சூழ்சோணாட்டவர் தாம்பரவிய கருணையங்கடலப் பாவிரி புலவர் பயிலுந் திருப்பனையூர் மாவிரிமட நோக்கிஅஞ்ச மதகரியுரி போர்த்துகந்தவர் ஆவில்ஐந் துகப்பார் அவரே அழகியரே. | 7.87.6 |
888 | மரங்கள்மேல்மயி லாலமண்டப மாடமாளிகை கோபுரத்தின்மேல் திரங்கல்வன் முகவன் புகப்பாய் திருப்பனையூர்த் துரங்கன்வாய்பிளந் தானுந்தூமலர்த் தோன்றலுமறி யாமற்றோன்றிநின் றரங்கில் ஆடவல்லார் அவரே அழகியரே. | 7.87.7 |
889 | மண்ணெலாம்முழ வம்மதிர்தர மாடமாளிகை கோபுரத்தின்மேற் பண்ணி யாழ்முரலும் பழனத் திருப்பனையூர் வெண்ணிலாச் சடைமேவியவிண்ணவரொடு மண்ணவர்தொழ அண்ணலாகி நின்றார் அவரே அழகியரே. | 7.87.8 |
890 | குரக்கினங்குதி கொள்ளத்தேனுகக் குண்டுதண்வயற் கெண்டைபாய்தரப் பரக்குந் தண்கழனிப் பழனத் திருப்பனையூர் இரக்கமில்லவர் ஐந்தொடைத்தலை தோளிருபது தாள்நெரிதர அரக்கனை அடர்த்தார் அவரே அழகியரே. | 7.87.9 |
891 | வஞ்சிநுண்ணிடை மங்கைபங்கினர் மாதவர்வள ரும்வளர்பொழில் பஞ்சின் மெல்லடியார் பயிலுந் திருப்பனையூர் வஞ்சியும்வளர் நாவலூரன் வனப்பகையவ ளப்பன்வன்றொண்டன் செஞ்சொற் கேட்டுகப்பார் அவரே அழகியரே. | 7.87.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சவுந்தரேசர், தேவியார் – பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.88 திருவீழிமிழலை
பண் – சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
892 | நம்பினார்க்கருள் செய்யுமந்தணர் நான்மறைக்கிட மாயவேள்வியுள் செம்பொ னேர்மடவாரணி பெற்ற திருமிழலை உம்பரார்தொழு தேத்தமாமலை யாளொடும்முட னேஉறைவிடம் அம்பொன் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே. | 7.88.1 |
893 | விடங்கொள்மாமிடற் றீர்வெள்ளைச்சுருளொன் றிட்டுவிட்ட காதினீரென்று திடங்கொள் சிந்தையினார் கலிகாக்குந் திருமிழலை மடங்கல்பூண்டவி மானம்மண்மிசை வந்திழிச்சிய வானநாட்டையும் அடங்கல் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே. | 7.88.2 |
894 | ஊனைஉற்றுயிர் ஆயினீரொளி மூன்றுமாய்த்தெளி நீரோடானஞ்சின் தேனை ஆட்டுகந்தீர் செழுமாடத் திருமிழலை மானைமேவிய கையினீர்மழு வேந்தினீர்மங்கை பாகத்தீர்விண்ணில் ஆன வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே. | 7.88.3 |
895 | பந்தம்வீடிவை பண்ணினீர்படி றீர்மதிப்பிதிர்க் கண்ணியீரென்று சிந்தை செய்திருக்குஞ் செங்கையாளர் திருமிழலை வந்துநாடகம் வானநாடியர் ஆடமாலயன் ஏத்தநாடொறும் அந்தண் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே. | 7.88.4 |
896 | புரிசைமூன்றையும் பொன்றக்குன்றவில் லேந்திவேதப் புரவித்தேர்மிசைத் திரிசெய் நான்மறையோர் சிறந்தேத்துந் திருமிழலைப் பரிசினாலடி போற்றும்பத்தர்கள் பாடியாடப் பரிந்துநல்கினீர் அரிய வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே. | 7.88.5 |
897 | எறிந்தசண்டி இடந்தகண்ணப்பன் ஏத்துபத்தர்கட் கேற்றம்நல்கினீர் செறிந்த பூம்பொழில் தேன்துளிவீசுந் திருமிழலை நிறைந்தஅந்தணர் நித்தநாடொறும் நேசத்தாலுமைப் பூசிக்கும்மிடம் அறிந்து வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே. | 7.88.6 |
898 | பணிந்தபார்த்தன் பகீரதன்பல பத்தர்சித்தர்க்குப் பண்டுநல்கினீர் திணிந்த மாடந்தொறுஞ் செல்வம்மல்கு திருமிழலை தணிந்தஅந்தணர் சந்திநாடொறும் அந்திவானிடு பூச்சிறப்பவை அணிந்து வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே. | 7.88.7 |
899 | பரந்தபாரிடம் ஊரிடைப்பலி பற்றிப்பார்த்துணுஞ் சுற்றமாயினீர் தெரிந்த நான்மறை யோர்க்கிடமாய திருமிழலை இருந்துநீர்தமி ழோடிசைகேட்கும் இச்சையாற்காசு நித்தல்நல்கினீர் அருந்தண் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே. | 7.88.8 |
900 | தூயநீரமு தாயவாறது சொல்லுகென்றுமைக் கேட்கச்சொல்லினீர் தீயராக் குலையாளர் செழுமாடத் திருமிழலை மேயநீர்பலி ஏற்றதென்னென்று விண்ணப்பஞ்செய் பவர்க்குமெய்ப்பொருள் ஆய வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே. | 7.88.9 |
901 | வேதவேதியர் வேதநீதியர் ஓதுவார்விரி நீர்மிழலையுள் ஆதி வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுகென்று நாதகீதம்வண் டோ துவார்பொழில் நாவலூரன்வன் றொண்டன்நற்றமிழ் பாதம் ஓதவல்லார் பரனோடு கூடுவரே. | 7.88.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வீழியழகர், தேவியார் – சுந்தரகுசாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.89 திருவெண்பாக்கம்
பண் – சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
902 | பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்காற் பழியதனைப் பாராதே படலமென்கண் மறைப்பித்தாய் குழைவிரவு வடிகாதா கோயிலுளா யேயென்ன உழையுடையான் உள்ளிருந்து உளோம்போகீர் என்றானே. | 7.89.1 |
903 | இடையறியேன் தலையறியேன் எம்பெருமான் சரணமென்பேன் அடையுடையன் நம்மடியான் என்றவற்றைப் பாராதே விடையுடையான் விடநாகன் வெண்ணீற்றன் புலியின்றோல் உடையுடையான் எனையுடையான் உளோம்போகீர் என்றானே. | 7.89.2 |
904 | செய்வினையொன் றறியாதேன் திருவடியே சரணென்று பொய்யடியேன் பிழைத்திடினும் பொறுத்திடநீ வேண்டாவோ பையரவா இங்கிருந்தா யோவென்னப் பரிந்தென்னை உய்யஅருள் செய்யவல்லான் உளோம்போகீர் என்றானே. | 7.89.3 |
905 | கம்பமருங் கரியுரியன் கறைமிடற்றன் காபாலி செம்பவளத் திருவுருவன் சேயிழையோ டுடனாகி நம்பியிங்கே இருந்தீரே என்றுநான் கேட்டலுமே உம்பர்தனித் துணையெனக்கு உளோம்போகீர் என்றானே. | 7.89.4 |
906 | பொன்னிலங்கு நறுங்கொன்றை புரிசடைமேற் பொலிந்திலங்க மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகமா எருதேறித் துன்னியிரு பால்அடியார் தொழுதேத்த அடியேனும் உன்னதமாய்க் கேட்டலுமே உளோம்போகீர் என்றானே. | 7.89.5 |
907 | கண்ணுதலாற் காமனையுங் காய்ந்ததிறற் கங்கைமலர் தெண்ணிலவு செஞ்சடைமேல் தீமலர்ந்த கொன்றையினான் கண்மணியை மறைப்பித்தாய் இங்கிருந்தா யோவென்ன ஒண்ணுதலி பெருமானார் உளோம்போகீர் என்றானே. | 7.89.6 |
908 | பார்நிலவு மறையோரும் பத்தர்களும் பணிசெய்யத் தார்நிலவு நறுங்கொன்றைச் சடையனார் தாங்கரிய கார்நிலவு மணிமிடற்றீர் இங்கிருந்தீ ரேயென்ன ஊரரவம் அரைக்கசைத்தான் உளோம்போகீர் என்றானே. | 7.89.7 |
909 | வாரிடங்கொள் வனமுலையாள் தன்னோடு மயானத்துப் பாரிடங்கள் பலசூழப் பயின்றாடும் பரமேட்டி காரிடங்கொள் கண்டத்தன் கருதுமிடந் திருஒற்றி யூரிடங்கொண் டிருந்தபிரான் உளோம்போகீர் என்றானே. | 7.89.8 |
910 | பொன்னவிலுங் கொன்றையினாய் போய்மகிழ்க்கீ ழிருவென்று சொன்னஎனைக் காணாமே சூளறவு மகிழ்க்கீழே என்னவல்ல பெருமானே இங்கிருந்தா யோவென்ன ஒன்னலரைக் கண்டாற்போல் உளோம்போகீர் என்றானே. | 7.89.9 |
911 | மான்றிகழுஞ் சங்கிலியைத் தந்துவரு பயன்களெல்லாந் தோன்றஅருள் செய்தளித்தாய் என்றுரைக்க உலகமெலாம் ஈன்றவனே வெண்கோயில் இங்கிருந்தா யோவென்ன ஊன்றுவதோர் கோலருளி உளோம்போகீர் என்றானே. | 7.89.10 |
912 | ஏராரும் பொழில்நிலவு வெண்பாக்கம் இடங்கொண்ட காராறும் மிடாற்றானைக் காதலித்திட் டன்பினொடுஞ் சீராருந் திருவாரூர்ச் சிவன்பேர்சென் னியில்வைத்த ஆரூரன் தமிழ்வல்லார்க் கடையாவல் வினைதானே. | 7.89.11 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. இது திருவிளம்பூதூரென்று வழங்குகிறது.
சுவாமிபெயர் – வெண்பாக்கத்தீசுவரர், தேவியார் – கனிவாய்மொழியம்மை.
இது திருவொற்றியூரில் சங்கிலிநாச்சியாருக்குக் கூறிய சபதத்தை
மறந்து திருவாரூருக்குச் செல்லுங்கருத்தினால், திருவொற்றியூரெல்லையைக்
கடந்த அளவில் பார்வைமறைய அவ்வண்ணமேயெழுந்தருளி
வெண்பாக்கத்திற்சென்று ஆலயத்துக்குளடைந்து தரிசித்துக்
கோயிலிலிருக்கின்றீரோவென்ன, பரமசிவம் ஊன்றுகோலொன்றருளிச்செய்து
நாம் கோயிலுலிருக்கிறோம் நீர் போமென்று அருளிச்செய்தபோது ஓதிய பதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.90 கோயில்
பண் – குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
913 | மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனேநீ வாழும் நாளுந் தடுத்தாட்டித் தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான் கடுத்தாடுங் கரதலத்திற் றமருகமும் எரிஅகலுங் கரியபாம்பும் பிடித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே. | 7.90.1 |
914 | பேராது காமத்திற் சென்றார்போல் அன்றியே பிரியா துள்கிச் சீரார்ந்த அன்பராய்ச் சென்றுமுன் னடிவீழுந் திருவி னாரை ஓராது தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான் பேராளர் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே. | 7.90.2 |
915 | நரியார்தங் கள்ளத்தாற் பக்கான பரிசொழிந்து நாளும் உள்கிப் பிரியாத அன்பராய்ச் சென்றுமுன் அடிவீழுஞ் சிந்தை யாரைத் தரியாது தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான் பெரியோர்கள் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே. | 7.90.3 |
916 | கருமையார் தருமனார் தமர்நம்மைக் கட்டியகட் டறுப்பிப் பானை அருமையாந் தன்னுலகந் தருவானை மண்ணுலகங் காவல் பூண்ட உரிமையாற் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும் பெருமையார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே. | 7.90.4 |
917 | கருமானின் உரியாடைச் செஞ்சடைமேல் வெண்மதியக் கண்ணி யானை உருமன்ன கூற்றத்தை உருண்டோ ட உதைத்துகந் துலவா இன்பம் தருவானைத் தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான் பெருமானார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே. | 7.90.5 |
918 | உய்த்தாடித் திரியாதே உள்ளமே ஒழிகண்டாய் ஊன்கண் ஓட்டம் எத்தாலுங் குறைவில்லை என்பர்காண் நெஞ்சமே நம்மை நாளும் பைத்தாடும் அரவினன் படர்சடையன் பரஞ்சோதி பாவந் தீர்க்கும் பித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே. | 7.90.6 |
919 | முட்டாத முச்சந்தி மூவா யிரவர்க்கு மூர்த்தி என்னப் பட்டானைப் பத்தராய்ப் பாவிப்பார் பாவமும் வினையும் போக விட்டானை மலையெடுத்த இராவணனைத் தலைபத்தும் நெரியக் காலால் தொட்டானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே. | 7.90.7 |
920 | கற்றானுங் குழையுமா றன்றியே கருதுமா கருத கிற்றார்க் கெற்றாலுங் குறைவில்லை என்பர்காண் உள்ளமே நம்மைநாளுஞ் செற்றாட்டித் தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான் பெற்றேறிப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே. | 7.90.8 |
921 | நாடுடைய நாதன்பால் நன்றென்றுஞ் செய்மனமே நம்மை நாளுந் தாடுடைய தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான் மோடுடைய சமணர்க்கும் முடையுடைய சாக்கியர்க்கும் மூடம் வைத்த பீடுடைய புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே. | 7.90.9 |
922 | பாரூரும் அரவல்குல் உமைநங்கை யவள்பங்கன் பைங்கண் ஏற்றன் ஊரூரன் தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான் ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீகொங்கில் அணிகாஞ் சிவாய்ப் பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தே பெற்றா மன்றே. | 7.90.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.91 திருவொற்றியூர்
பண் – குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
923 | பாட்டும் பாடிப் பரவித் திரிவார் ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில் காட்டுங் கலமுந் திமிலுங் கரைக்கே ஓட்டுந் திரைவாய் ஒற்றி யூரே. | 7.91.1 |
924 | பந்துங் கிளியும் பயிலும் பாவை சிந்தை கவர்வார் செந்தீ வண்ணர் எந்தம் அடிகள் இறைவர்க் கிடம்போல் உந்துந் திரைவாய் ஒற்றி யூரே. | 7.91.2 |
925 | பவளக் கனிவாய்ப் பாவை பங்கன் கவளக் களிற்றின் உரிவை போர்த்தான் தவழும் மதிசேர் சடையாற் கிடம்போல் உகளுந் திரைவாய் ஒற்றி யூரே. | 7.91.3 |
926 | என்ன தெழிலும் நிறையுங் கவர்வான் புன்னை மலரும் புறவிற் றிகழுந் தன்னை முன்னம் நினைக்கத் தருவான் உன்னப் படுவான் ஒற்றி யூரே. | 7.91.4 |
927 | பணங்கொள் அரவம் பற்றிப் பரமன் கணங்கள் சூழக் கபாலம் ஏந்தி வணங்கும் இடைமென் மடவார் இட்ட உணங்கல் கவர்வான் ஒற்றி யூரே. | 7.91.5 |
928 | படையார் மழுவன் பால்வெண் ணீற்றன் விடையார் கொடியன் வேத நாவன் அடையார் வினைகள் அறுப்பான் என்னை உடையான் உறையும் ஒற்றி யூரே. | 7.91.6 |
929 | சென்ற புரங்கள் தீயில் வேவ வென்ற விகிர்தன் வினையை வீட்ட நன்று நல்ல நாதன் நரையே றொன்றை உடையான் ஒற்றி யூரே. | 7.91.7 |
930 | கலவ மயில்போல் வளைக்கை நல்லார் பலரும் பரவும் பவளப் படியான் உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான் உலவுந் திரைவாய் ஒற்றி யூரே. | 7.91.8 |
931 | பற்றி வரையை எடுத்த அரக்கன் இற்று முரிய விரலால் அடர்த்தார் எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம் ஒற்றுந் திரைவாய் ஒற்றி யூரே. | 7.91.9 |
932 | ஒற்றி யூரும் அரவும் பிறையும் பற்றி யூரும் பவளச் சடையான் ஒற்றி யூர்மேல் ஊரன் உரைத்த கற்றுப் பாடக் கழியும் வினையே. | 7.91.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.92 திருப்புக்கொளியூர் அவிநாசி
பண் – குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
933 | எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே உற்றாயென் றுன்னையே உள்குகின் றேனுணர்ந் துள்ளத்தாற் புற்றா டரவா புக்கொளி யூரவி நாசியே பற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே. | 7.92.1 |
934 | வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாணிநீ ஒழிவ தழகோ சொல்லாய் அருளோங்கு சடையானே பொழிலாருஞ் சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை இழியாக் குளித்த மாணியெ னைக்கிறி செய்ததே. | 7.92.2 |
935 | எங்கேனும் போகினும் எம்பெரு மானை நினைந்தக்காற் கொங்கே புகினுங் கூறைகொண் டாறலைப் பாரிலை பொங்கா டரவா புக்கொளி யூரவி நாசியே எங்கோ னேயுனை வேண்டிக்கொள் வேன்பிற வாமையே. | 7.92.3 |
936 | உரைப்பார் உரையுகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய் அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய் புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவி நாசியே கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே. | 7.92.4 |
937 | அரங்காவ தெல்லா மாயிடு காடது வன்றியுஞ் சரங்கோலை வாங்கி வரிசிலை நாணியிற் சந்தித்துப் புரங்கோட எய்தாய் புக்கொளி யூரவி நாசியே குரங்காடு சோலைக் கோயில்கொண் டகுழைக் காதனே. | 7.92.5 |
938 | நாத்தா னும்உனைப் பாடலன் றிநவி லாதெனாச் சோத்தென்று தேவர் தொழநின்ற சுந்தரச் சோதியாய் பூத்தாழ் சடையாய் புக்கொளி யூரவி நாசியே கூத்தா உனக்குநான் ஆட்பட்ட குற்றமுங் குற்றமே. | 7.92.6 |
939 | மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறஞ் சந்திகள் தோறுஞ் சலபுட்பம் இட்டு வழிபடப் புந்தி உறைவாய் புக்கொளி யூரவி நாசியே நந்தி உனைவேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே. | 7.92.7 |
940 | பேணா தொழிந்தேன் உன்னைய லாற்பிற தேவரைக் காணா தொழிந்தேன் காட்டுதி யேலின்னங் காண்பன்நான் பூணாண் அரவா புக்கொளி யூரவி நாசியே காணாத கண்கள் காட்டவல் லகறைக் கண்டனே. | 7.92.8 |
941 | நள்ளாறு தெள்ளா றரத்துறை வாய்எங்கள் நம்பனே வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய் புள்ளேறு சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை உள்ளாடப் புக்க மாணியென் னைக்கிறி செய்ததே. | 7.92.9 |
942 | நீரேற ஏறுநிமிர் புன்சடை நின்மல மூர்த்தியைப் போரேற தேறியைப் புக்கொளி யூரவி நாசியைக் காரேறு கண்டனைத் தொண்டன் ஆரூரன் கருதிய சீரேறு பாடல்கள் செப்பவல் லார்க்கில்லை துன்பமே. | 7.92.10 |
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அவிநாசியப்பர், தேவியார் – பெருங்கருணைநாயகி.
இது முதலையுண்டபிள்ளையை அழைப்பித்தபதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.93 திருநறையூர்ச்சித்தீச்சரம்
பண் – குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
943 | நீரும் மலரும் நிலவுஞ் சடைமேல் ஊரும் அரவம் உடையான் இடமாம் வாரும் அருவி மணிபொன் கொழித்துச் சேரும் நரையூர்ச் சித்தீச் சரமே. | 7.93.1 |
944 | அளைப்பை அரவேர் இடையாள் அஞ்சத் துளைக்கைக் கரித்தோல் உரித்தான் இடமாம் வளைக்கை மடவார் மடுவிற் றடநீர்த் திளைக்கும் நறையூர்ச் சித்தீச் சரமே. | 7.93.2 |
945 | இகழுந் தகையோர் எயில்மூன் றெரித்த பகழி யொடுவில் லுடையான் பதிதான் முகிழ்மென் முலையார் முகமே கமலந் திகழும் நறையூர்ச் சித்தீச் சரமே. | 7.93.3 |
946 | மறக்கொள் அரக்கன் வரைதோள் வரையால் இறக்கொள் விரற்கோன் இருக்கும் இடமாம் நறக்கொள் கமலம் நனிபள் ளியெழத் திறக்கும் நறையூர்ச் சித்தீச் சரமே. | 7.93.4 |
947 | முழுநீ றணிமே னியன்மொய் குழலார் எழுநீர் மைகொள்வான் அமரும் இடமாம் கழுநீர் கமழக் கயல்சேல் உகளுஞ் செழுநீர் நறையூர்ச் சித்தீச் சரமே. | 7.93.5 |
948 | ஊனா ருடைவெண் டலையுண் பலிகொண் டானார் அடலே றமர்வான் இடமாம் வானார் மதியம் பதிவண் பொழில்வாய்த் தேனார் நறையூர்ச் சித்தீச் சரமே. | 7.93.6 |
949 | காரூர் கடலில் விடமுண் டருள்செய் நீரூர் சடையன் நிலவும் இடமாம் வாரூர் முலையார் மருவும் மறுகில் தேரூர் நறையூர்ச் சித்தீச் சரமே. | 7.93.7 |
950 | கரியின் உரியுங் கலைமான் மறியும் எரியும் மழுவும் உடையான் இடமாம் புரியும் மறையோர் நிறைசொற் பொருள்கள் தெரியும் நறையூர்ச் சித்தீச் சரமே. | 7.93.8 |
951 | பேணா முனிவன் பெருவேள் வியெலாம் மாணா மைசெய்தான் மருவும் இடமாம் பாணார் குழலும் முழவும் விழவிற் சேணார் நறையூர்ச் சித்தீச் சரமே. | 7.93.9 |
952 | குறியில் வழுவாக் கொடுங்கூற் றுதைத்த எறியும் மழுவாட் படையான் இடமாம் நெறியில் வழுவா நியமத் தவர்கள் செறியும் நறையூர்ச் சித்தீச் சரமே. | 7.93.10 |
953 | போரார் புரமெய் புனிதன் அமருஞ் சீரார் நறையூர்ச் சித்தீச் சரத்தை ஆரூ ரன்சொல் லிவைவல் லவர்கள் ஏரார் இமையோர் உலகெய் துவரே. | 7.93.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.94 திருச்சோற்றுத்துறை
பண் – கௌசிகம்
திருச்சிற்றம்பலம்
954 | அழல்நீர் ஒழுகி யனைய சடையும் உழையீ ருரியும் உடையான் இடமாம் கழைநீர் முத்துங் கனகக் குவையுஞ் சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே. | 7.94.1 |
955 | பண்டை வினைகள் பறிய நின்ற அண்ட முதல்வன் அமலன் இடமாம் இண்டை கொண்டன் பிடைய றாத தொண்டர் பரவுஞ் சோற்றுத் துறையே. | 7.94.2 |
956 | கோல அரவுங் கொக்கின் இறகும் மாலை மதியும் வைத்தான் இடமாம் ஆலும் மயிலும் ஆடல் அளியுஞ் சோலை தருநீர்ச் சோற்றுத் துறையே. | 7.94.3 |
957 | பளிக்குத் தாரை பவள வெற்பிற் குளிக்கும் போல்நூற் கோமாற் கிடமாம் அளிக்கும் ஆத்தி அல்லான் மதுவந் துளிக்குஞ் சோலைச் சோற்றுத் துறையே. | 7.94.4 |
958 | உதையுங் கூற்றுக் கொல்கா விதிக்கு வதையுஞ் செய்த மைந்தன் இடமாம் திதையுந் தாதுந் தேனுஞ் ஞிமிறுந் துதையும் பொன்னிச் சோற்றுத் துறையே. | 7.94.5 |
959 | ஓதக் கடல்நஞ் சினையுண் டிட்ட பேதைப் பெருமான் பேணும் பதியாம் சீதப் புனலுண் டெரியைக் காலுஞ் சூதப் பொழில்சூழ் சோற்றுத் துறையே. | 7.94.6 |
960 | இறந்தார் என்பும் எருக்குஞ் சூடிப் புறங்காட் டாடும் புனிதன் கோயில் சிறந்தார் சுற்றந் திருவென் றின்ன துறந்தார் சேருஞ் சோற்றுத் துறையே. | 7.94.7 |
961 | காமன் பொடியாக் கண்ணொன் றிமைத்த ஓமக் கடலார் உகந்த இடமாம் தேமென் குழலார் சேக்கை புகைத்த தூமம் விசும்பார் சோற்றுத் துறையே. | 7.94.8 |
962 | இலையால் அன்பால் ஏத்து மவர்க்கு நிலையா வாழ்வை நீத்தார் இடமாம் தலையாற் றாழுந் தவத்தோர்க் கென்றுந் தொலையாச் செல்வச் சோற்றுத் துறையே. | 7.94.9 |
963 | சுற்றார் தருநீர்ச் சோற்றுத் துறையுள் முற்றா மதிசேர் முதல்வன் பாதத் தற்றார் அடியார் அடிநாய் ஊரன் சொற்றான் இவைகற் றார்துன் பிலரே. | 7.94.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.95 திருவாரூர்
பண் – செந்துருத்தி
திருச்சிற்றம்பலம்
964 | மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி ஆளா யிருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே. | 7.95.1 |
965 | விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன் விரும்பி ஆட்பட்டேன் குற்ற மொன்றுஞ் செய்த தில்லை *கொத்தை ஆக்கினீர் எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே. *விச்சை – வித்தையென்பதுபோல் கொச்சை – கொத்தை எனநின்றது. | 7.95.2 |
966 | அன்றில் முட்டா தடையுஞ் சோலை ஆரூர் அகத்தீரே கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி யவைபோல என்றும் முட்டாப் பாடும் அடியார் தங்கண் காணாது குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால் வாழ்ந்து போதீரே. | 7.95.3 |
967 | துருத்தி உறைவீர் பழனம் பதியாச் சோற்றுத் துறையாள்வீர் இருக்கை திருவா ரூரே உடையீர் மனமே எனவேண்டா அருத்தி யுடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வருத்தி வைத்து மறுமை பணித்தால் வாழ்ந்து போதீரே. | 7.95.4 |
968 | செந்தண் பவளந் திகழுஞ் சோலை இதுவோ திருவாரூர் எந்தம் அடிகேள் இதுவே ஆமா றுமக்காட் பட்டோ ர்க்குச் சந்தம் பலவும் பாடும் அடியார் தங்கண் காணாது வந்தெம் பெருமான் முறையோ வென்றால் வாழ்ந்து போதீரே. | 7.95.5 |
969 | தினைத்தா ளன்ன செங்கால் நாரை சேருந் திருவாரூர்ப் புனைத்தார் கொன்றைப் பொன்போல் மாலைப் புரிபுன் சடையீரே தனத்தா லின்றித் தாந்தாம் மெலிந்து தங்கண் காணாது மனத்தால் வாடி அடியார் இருந்தால் வாழ்ந்து போதீரே. | 7.95.6 |
970 | ஆயம் பேடை அடையுஞ் சோலை ஆரூர் அகத்தீரே ஏயெம் பெருமான் இதுவே ஆமா றுமக்காட் பட்டோ ர்க்கு மாயங் காட்டிப் பிறவி காட்டி மறவா மனங்காட்டிக் காயங் காட்டிக் கண்ணீர் கொண்டால் வாழ்ந்து போதீரே. | 7.95.7 |
971 | கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க் கலந்த சொல்லாகி இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை இகழா தேத்துவோம் பழிதா னாவ தறியீர் அடிகேள் பாடும் பத்தரோம் வழிதான் காணா தலமந் திருந்தால் வாழ்ந்து போதீரே. | 7.95.8 |
972 | பேயோ டேனும் பிரிவொன் றின்னா தென்பர் பிறரெல்லாங் காய்தான் வேண்டிற் கனிதா னன்றோ கருதிக் கொண்டக்கால் நாய்தான் போல நடுவே திரிந்தும் உமக்காட் பட்டோ ர்க்கு வாய்தான் திறவீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே. | 7.95.9 |
973 | செருந்தி செம்பொன் மலருஞ் சோலை இதுவோ திருவாரூர் பொருந்தித் திருமூ லத்தா னம்மே இடமாக் கொண்டீரே இருந்தும் நின்றுங் கிடந்தும் உம்மை இகழா தேத்துவோம் வருந்தி வந்தும் உமக்கொன் றுரைத்தால் வாழ்ந்து போதிரே. | 7.95.10 |
974 | காரூர் கண்டத் தெண்டோ ள் முக்கண் கலைகள் பலவாகி ஆரூர்த் திருமூ லத்தா னத்தே அடிப்பே ராரூரன் பாரூர் அறிய என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் வாரூர் முலையாள் பாகங் கொண்டீர் வாழ்ந்து போதீரே. | 7.95.11 |
காஞ்சீபுரத்தில் ஆலந்தானெனும் பதிகமோதி ஒருகண்பெற்று,
இந்தத்தலத்தில் இந்தப்பதிகமோதி மற்றொரு கண்ணும் பெற்றது.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.96 திருவாரூர்ப்பரவையுண்மண்டளி
பண் – பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
975 | தூவாயா தொண்டுசெய் வார்படு துக்கங்கள் காவாயே கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும் நாவாயால் உன்னையே நல்லன சொல்லுவேற் காவாவென் பரவையுண் மண்டளி யம்மானே. | 7.96.1 |
976 | பொன்னானே புலவர்க்கு நின்புகழ் போற்றலாம் தன்னானே தன்னைப் புகழ்ந்திடுந் தற்சோதி மின்னானே செக்கர் வானத் திளஞாயி றன்னானே பரவையுண் மண்டளி யம்மானே. | 7.96.2 |
977 | நாமாறா துன்னையே நல்லன சொல்லுவார் போமாறென் புண்ணியா புண்ணியம் ஆனானே பேய்மாறாப் பிணமிடு காடுகந் தாடுவாய்க் காமாறென் பரவையுண் மண்டளி யம்மானே. | 7.96.3 |
978 | நோக்குவேன் உன்னையே நல்லன நோக்காமைக் காக்கின்றாய் கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும் வாக்கென்னும் மாலைகொண் டுன்னை என்மனத் தார்க்கின்றேன் பரவையுண் மண்டளி யம்மானே. | 7.96.4 |
979 | பஞ்சேரும் மெல்லடி யாளையோர் பாகமாய் நஞ்சேரும் நன்மணி கண்டம் உடையானே நெஞ்சேர நின்னையே உள்கி நினைவாரை அஞ்சேலென் பரவையுண் மண்டளி யம்மானே. | 7.96.5 |
980 | அம்மானே ஆகம சீலர்க் கருள்நல்கும் பெம்மானே பேரரு ளாளன் பிடவூரன் தம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோர் அம்மானே பரவையுண் மண்டளி யம்மானே. | 7.96.6 |
981 | விண்டானே மேலையார் மேலையார் மேலாய எண்டானே எழுத்தொடு சொற்பொருள் எல்லாமுன் கண்டானே கண்டனைக் கொண்டிட்டுக் காட்டாயே அண்டானே பரவையுண் மண்டளி யம்மானே. | 7.96.7 |
982 | காற்றானே கார்முகில் போல்வதோர் கண்டத்தெங் கூற்றானே கோல்வளை யாளையோர் பாகமாய் நீற்றானே நீள்சடை மேல்நிறை வுள்ளதோர் ஆற்றானே பரவையுண் மண்டளி யம்மானே. | 7.96.8 |
983 | செடியேன்நான் செய்வினை நல்லன செய்யாத கடியேன்நான் கண்டதே கண்டதே காமுறுங் கொடியேன்நான் கூறுமா றுன்பணி கூறாத அடியேன்நான் பரவையுண் மண்டளி யம்மானே. | 7.96.9 |
984 | கரந்தையும் வன்னியும் மத்தமுங் கூவிளம் பரந்தசீர்ப் பரவையுண் மண்டளி யம்மானை நிரம்பிய ஊரன் உரைத்தன பத்திவை விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே. | 7.96.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.97 திருநனிபள்ளி
பண் – பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
985 | ஆதியன் ஆதிரை யன்அயன் மால்அறி தற்கரிய சோதியன் சொற்பொரு ளாய்ச்சுருங் காமறை நான்கினையும் ஓதியன் உம்பர்தங் கோனுல கத்தினுள் எவ்வுயிர்க்கும் நாதியன் நம்பெரு மான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே. | 7.97.1 |
986 | உறவிலி ஊன மிலிஉண ரார்புரம் மூன்றெரியச் செறுவிலி தன்னினை வார்வினை யாயின தேய்ந்தழிய அறவில கும்மரு ளான்மரு ளார்பொழில் வண்டறையும் நறவிரி கொன்றையி னான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே. | 7.97.2 |
987 | வானுடை யான்பெரி யான்மனத் தாலும்நினைப் பரியான் ஆனிடை ஐந்தமர்ந் தான்அணு வாகியோர் தீயுருக்கொண் டூனுடை இவ்வுட லம்ஒடுங் கிப்புகுந் தான்பரந்தான் நானுடை மாடெம் பிரான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே. | 7.97.3 |
988 | ஓடுடை யன்கல னாவுடை கோவண வன்உமையோர் பாடுடை யன்பலி தேர்ந்துண்ணும் பண்புடை யன்பயிலக் காடுடை யன்னிட மாமலை ஏழுங் கருங்கடல்சூழ் நாடுடை நம்பெரு மான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே. | 7.97.4 |
989 | பண்ணற் கரிய தொருபடை ஆழி தனைப்படைத்துக் கண்ணற் கருள்புரிந் தான்கரு தாதவர் வேள்விஅவி உண்ணற் கிமையவ ரையுருண் டோ ட உதைத்துகந்து நண்ணற் கரிய பிரான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே. | 7.97.5 |
990 | மல்கிய செஞ்சடை மேல்மதி யும்மர வும்முடனே புல்கிய ஆரணன் எம்புனி தன்புரி நூல்விகிர்தன் மெல்கிய விற்றொழி லான்விருப் பன்பெரும் பார்த்தனுக்கு நல்கிய நம்பெரு மான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே. | 7.97.6 |
991 | அங்கமோ ராறவை யும்அரு மாமறை வேள்விகளும் எங்கும் இருந்தந் தணர்எரி மூன்றவை ஓம்புமிடம் பங்கய மாமுகத் தாளுமை பங்கன் உறைகோயில் செங்கயல் பாயும் வயற்றிரு ஊர்நனி பள்ளியதே. | 7.97.7 |
992 | திங்கட் குறுந்தெரி யற்றிகழ் கண்ணியன் நுண்ணியனாய் நங்கட் பிணிகளை வான்அரு மாமருந் தேழ்பிறப்பும் மங்கத் திருவிர லால்அடர்த் தான்வல் லரக்கனையும் நங்கட் கருளும் பிரான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே. | 7.97.8 |
993 | ஏன மருப்பினொ டும்மெழில் ஆமையும் பூண்டுகந்து வான மதிளர ணம்மலை யேசிலை யாவளைத்தான் ஊனமில் காழிதன் னுள்ளுயர் ஞானசம் பந்தற்கன்று ஞானம் அருள்புரிந் தான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே. | 7.97.9 |
994 | காலமும் நாழிகை யுந்நனி பள்ளி மனத்தினுள்கி கோலம தாயவ னைக்குளிர் நாவல ஊரன்சொன்ன மாலை மதித்துரைப் பார்மண் மறந்துவா னோருலகிற் சாலநல் லின்பமெய் தித்தவ லோகத் திருப்பவரே. | 7.97.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – நற்றுணையப்பர், தேவியார் – பர்வதராசபுத்திரி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.98 திருநன்னிலத்துப்பெருங்கோயில்
பண் – பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
995 | தண்ணியல் வெம்மையி னான்றலை யிற்கடை தோறும்பலி பண்ணியல் மென்மொழி யார்இடக் கொண்டுழல் பண்டரங்கன் புண்ணிய நான்மறை யோர்முறை யாலடி போற்றிசைப்ப நண்ணிய நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே. | 7.98.1 |
996 | வலங்கிளர் மாதவஞ் செய்மலை மங்கையோர் பங்கினனாய்ச் சலங்கிளர் கங்கைதங் கச்சடை யொன்றிடை யேதரித்தான் பலங்கிளர் பைம்பொழில் தண்பனி வெண்மதி யைத்தடவ நலங்கிளர் நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே. | 7.98.2 |
997 | கச்சிய னின்கருப் பூர்விருப் பன்கரு திக்கசிவார் உச்சியன் பிச்சையுண் ணியுல கங்களெல் லாமுடையான் நொச்சியம் பச்சிலை யான்நுரை தீர்புன லாற்றொழுவார் நச்சிய நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே. | 7.98.3 |
998 | பாடிய நான்மறை யான்படு பல்பிணக் காடரங்கா ஆடிய மாநடத் தானடி போற்றியென் றன்பினராய்ச் சூடிய செங்கையி னார்பல தோத்திரம் வாய்த்தசொல்லி நாடிய நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே. | 7.98.4 |
999 | பிலந்தரு வாயினொ டுபெரி தும்வலி மிக்குடைய சலந்தரன் ஆகம் இருபிள வாக்கிய சக்கரமுன் நிலந்தரு மாமகள் கோன்நெடு மாற்கருள் செய்தபிரான் நலந்தரு நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே. | 7.98.5 |
1000 | வெண்பொடி மேனியி னான்கரு நீல மணிமிடற்றான் பெண்படி செஞ்சடை யான்பிர மன்சிரம் பீடழித்தான் பண்புடை நான்மறை யோர்பயின் றேத்திப்பல் கால்வணங்கும் நண்புடை நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே. | 7.98.6 |
1001 | தொடைமலி கொன்றைதுன் றுஞ்சடை யன்சுடர் வெண்மழுவாட் படைமலி கையன்மெய் யிற்பகட் டீருரிப் போர்வையினான் மடைமலி வண்கம லம்மலர் மேல்மட வன்னம்மன்னி நடைமலி நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே. | 7.98.7 |
1002 | குளிர்தரு திங்கள்கங் கைகுர வோடரக் கூவிளமும் மிளிர்தரு புன்சடை மேலுடை யான்விடை யான்விரைசேர் தளிர்தரு கோங்குவேங் கைதட மாதவி சண்பகமும் நளிர்தரு நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே. | 7.98.8 |
1003 | கமர்பயில் வெஞ்சுரத் துக்கடுங் கேழற்பின் கானவனாய் அமர்பயில் வெய்திய ருச்சுன னுக்கருள் செய்தபிரான் தமர்பயில் தண்விழ வில்தகு சைவர் தவத்தின்மிக்க நமர்பயில் நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே. | 7.98.9 |
1004 | கருவரை போலரக் கன்கயி லைம்மலைக் கீழ்க்கதற ஒருவிர லாலடர்த் தின்னருள் செய்த உமாபதிதான் திரைபொரு பொன்னிநன் னீர்த்துறை வன்றிகழ் செம்பியர்கோன் நரபதி நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே. | 7.98.10 |
1005 | கோடுயர் வெங்களிற் றுத்திகழ் கோச்செங்க ணான்செய்கோயில் நாடிய நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனைச் சேடியல் சிங்கிதந் தைசடை யன்றிரு வாரூரன் பாடிய பத்தும்வல் லார்புகு வார்பர லோகத்துள்ளே. | 7.98.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.99 திருநாகேச்சரம்
பண் – பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
1006 | பிறையணி வாணு தலாள்உமை யாளவள் பேழ்கணிக்க நிறையணி நெஞ்சனுங் கநீல மால்விடம் உண்டதென்னே குறையணி குல்லைமுல் லைஅளைந் துகுளிர் மாதவிமேற் சிறையணி வண்டுகள் சேர்திரு நாகேச் சரத்தானே. | 7.99.1 |
1007 | அருந்தவ மாமுனி வர்க்கரு ளாகியோர் ஆலதன்கீழ் இருந்தற மேபுரி தற்கியல் பாகிய தென்னைகொலாங் குருந்தய லேகுர வம்மர வின்னெயி றேற்றரும்பச் செருந்திசெம் பொன்மல ருந்திரு நாகேச் சரத்தானே. | 7.99.2 |
1008 | பாலன தாருயிர் மேற்பரி யாது பகைத்தெழுந்த காலனை வீடுவித் துக்கருத் தாக்கிய தென்னைகொலாங் கோல மலர்க்குவ ளைக்கழு நீர்வயல் சூழ்கிடங்கிற் சேலொடு வாளைகள் பாய்திரு நாகேச் சரத்தானே. | 7.99.3 |
1009 | குன்ற மலைக்கும ரிகொடி யேரிடை யாள்வெருவ வென்றி மதகரி யின்னுரி போர்த்தது மென்னைகொலாம் முன்றில் இளங்கமு கின்முது பாளை மதுவளைந்து தென்றல் புகுந்துல வுந்திரு நாகேச் சரத்தானே. | 7.99.4 |
1010 | அரைவிரி கோவணத் தோடர வார்த்தொரு நான்மறைநூல் உரைபெரு கவ்வுரைத் தன்று உகந்தருள் செய்ததென்னே வரைதரு மாமணி யும்வரைச் சந்தகி லோடுமுந்தித் திரைபொரு தண்பழ னத்திரு நாகேச் சரத்தானே. | 7.99.5 |
1011 | தங்கிய மாதவத் தின்றழல் வேள்வியி னின்றெழுந்த சிங்கமும் நீள்புலி யுஞ்செழு மால்கரி யோடலறப் பொங்கிய போர்புரிந் துபிளந் தீருரி போர்த்ததென்னே செங்கயல் பாய்கழ னித்திரு நாகேச் சரத்தானே. | 7.99.6 |
1012 | நின்றவிம் மாதவத் தையொழிப் பான்சென் றணைந்துமிகப் பொங்கிய பூங்கணை வேள்பொடி யாக விழித்தலென்னே பங்கய மாமலர் மேன்மது வுண்டுவண் தேன்முரலச் செங்கயல் பாய்வயல் சூழ்திரு நாகேச் சரத்தானே. | 7.99.7 |
1013 | வரியர நாண தாகமா மேரு வில்லதாக அரியன முப்புரங் கள்ளவை யாரழ லூட்டலென்னே விரிதரு மல்லிகை யும்மலர்ச் சண்பக மும்மளைந்து திரிதரு வண்டுபண் செய்திரு நாகேச் சரத்தானே. | 7.99.8 |
1014 | அங்கியல் யோகுதன் னையழிப் பான்சென் றணைந்துமிகப் பொங்கிய பூங்கணை வேள்பொடி யாக விழித்தலென்னே பங்கய மாமலர் மேல்மது வுண்டுபண் வண்டறையச் செங்கயல் நின்றுக ளுந்திரு நாகேச் சரத்தானே. | 7.99.9 |
1015 | குண்டரைக் கூறையின் றித்திரி யுஞ்சமண் சாக்கியப்பேய் மிண்டரைக் கண்டதன் மைவிர வாகிய தென்னைகொலோ தொண்டிரைத் துவணங் கித்தொழில் பூண்டடி யார்பரவுந் தெண்டிரைத் தண்வயல் சூழ்திரு நாகேச் சரத்தானே. | 7.99.10 |
1016 | கொங்கணை வண்டரற் றக்குயி லும்மயி லும்பயிலுந் தெங்கணை பூம்பொழில் சூழ்திரு நாகேச் சரத்தானை வங்கம் மலிகடல் சூழ்வயல் நாவலா ரூரன்சொன்ன பங்கமில் பாடல்வல் லாரவர் தம்வினை பற்றறுமே. | 7.99.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – செண்பகாரணியேசுவரர்,
தேவியார் – குன்றமுலையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.100 திருநொடித்தான்மலை
பண் – பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
1017 | தானெனை முன்படைத் தானத றிந்துதன் பொன்னடிக்கே நானென பாடலந் தோநாயி னேனைப் பொருட்படுத்து வானெனை வந்தெதிர் கொள்ளமத் தயானை அருள்புரிந்து ஊனுயிர் வேறுசெய் தான்நொடித் தான்மலை உத்தமனே. | 7.100.1 |
1018 | ஆனை உரித்த பகைஅடி யேனொடு மீளக்கொலோ ஊனை உயிர்வெருட் டிஒள்ளி யானை நினைந்திருந்தேன் வானை மதித்தம ரர்வலஞ் செய்தெனை ஏறவைக்க ஆனை அருள்புரிந் தான்நொடித் தான்மலை உத்தமனே. | 7.100.2 |
1019 | மந்திரம் ஒன்றறி யேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் சுந்தர வேடங்க ளாற்றுரி சேசெயுந் தொண்டனெனை அந்தர மால்விசும் பில்அழ கானை அருள்புரிந்த துந்தர மோநெஞ்ச மேநொடித் தான்மலை உத்தமனே. | 7.100.3 |
1020 | வாழ்வை உகந்தநெஞ் சேமட வார்தங்கள் வல்வினைப்பட் டாழ முகந்தவென் னைஅது மாற்றி அமரரெல்லாஞ் சூழ அருள்புரிந் துதொண்ட னேன்பரம் அல்லதொரு வேழம் அருள்புரிந் தான்நொடித் தான்மலை உத்தமனே. | 7.100.4 |
1021 | மண்ணுல கிற்பிறந் துநும்மை வாழ்த்தும் வழியடியார் பொன்னுல கம்பெறு தல்தொண்ட னேனின்று கண்டொழிந்தேன் விண்ணுல கத்தவர் கள்விரும் பவெள்ளை யானையின்மேல் என்னுடல் காட்டுவித் தான்நொடித் தான்மலை உத்தமனே. | 7.100.5 |
1022 | அஞ்சினை ஒன்றிநின் றுஅலர் கொண்டடி சேர்வறியா வஞ்சனை யென்மன மேவைகி வானநன் னாடர்முன்னே துஞ்சுதல் மாற்றுவித் துத்தொண்ட னேன்பர மல்லதொரு வெஞ்சின ஆனைதந் தான்நொடித் தான்மலை உத்தமனே. | 7.100.6 |
1023 | நிலைகெட விண்ணதி ரநில மெங்கும் அதிர்ந்தசைய மலையிடை யானையே றிவழி யேவரு வேன்எதிரே அலைகட லால்அரை யன்அலர் கொண்டுமுன் வந்திறைஞ்ச உலையணை யாதவண் ணம்நொடித் தான்மலை உத்தமனே. | 7.100.7 |
1024 | அரவொலி ஆகமங் கள்அறி வாரறி தோத்திரங்கள் விரவிய வேதஒ லிவிண்ணெ லாம்வந் தெதிர்ந்திசைப்ப வரமலி வாணன்வந் துவழி தந்தெனக் கேறுவதோர் சிரமலி யானைதந் தான்நொடித் தான்மலை உத்தமேனே. | 7.100.8 |
1025 | இந்திரன் மால்பிர மன்னெழி லார்மிகு தேவரெல்லாம் வந்தெதிர் கொள்ளஎன் னைமத்த யானை அருள்புரிந்து மந்திர மாமுனி வர்இவ னாரென எம்பெருமன் நந்தமர் ஊரனென் றான்நொடித் தான்மலை உத்தமனே. | 7.100.9 |
1026 | ஊழிதோ றூழிமுற் றுமுயர் பொன்னொடித் தான்மலையைச் சூழிசை யின்கரும் பின்சுவை நாவல ஊரன்சொன்ன ஏழிசை இன்றமி ழால்இசைந் தேத்திய பத்தினையும் ஆழி கடலரை யாஅஞ்சை யப்பர்க் கறிவிப்பதே. * நொடித்தான்மலையென்பது – கயிலைமலை. | 7.100.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
சுந்தரமூர்த்திசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள்
ஏழாம் திருமுறை முற்றும்.
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.