சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

முன்னேச்சுவரம்

   
  • இறைவன்: முன்னைநாதர்.
  • இறைவி: வடிவாம்பிகை.
  • தல மரம்: அரச மரம்.
  • தீர்த்தம் : மாயவனாறு.

 

ஈழத்தில் மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாய் அமைந்த புராதன சிவத்தலங்களுள் முன்னேசுவரமும் ஒன்றாகும். ஈழநாட்டின் வட மேற்குப் பகுதியிலுள்ள சிலாபத்தில் உள்ளது. முன்னேசுவரம் சிவமகாபுராணத்திற் கூறப்படும் அழகேசுவரம் என்னும் திருத்தலம் இம் முன்னேசுவரமே என்பது ஆன்றோர் கருத்து. இராமன், வியாசர் முதலானோரும் வேறு பல முனிவர்களும் வழிபட்ட தலமிதுவெனத் தட்சணகயிலாய புராணம் கூறுகின்றது.

 

இலங்கை மன்னர்களான கஐபாகு, ஆறாவது பராக்கிரமபாகு ஆகியோரும் இத்தலத்தை வழிபட்டுப் பேறுகள் பெற்றுள்ளனர். திருக்கோணேசுவர ஆலயத்திற்குத் திருப்பணி செய்த குளக்கோட்டன் இவ்வாலயத்தைப் புனர்நிர்மாணஞ் செய்து இதற்கென 64 கிராமங்களை அளித்துப் பெருஞ் சிறப்புச் செய்தானென வரலாறு கூறுகின்றது.

கற்பிட்டிக்குடா முழுவதும், சிலாபத்தில் இருந்து உடப்பு வரையான 12 மைல் சுற்றாடல் நிலங்கள் முழுவதும் இக்கோவிலுக்கே சொந்தமாக அந்நாட்களில் இருந்தன. இக் கிராமங்களில் இருந்தவர்கள் இவ் வாலயத்தில் பலதரப்பட்ட தொண்டு செய்பவர்களாகவே இருந்தனர். கோட்டை அரசருள் சிறப்புப் பெற்றவனாக விளங்கிய ஆறாம் பராக்கிரமபாகு, கி. பி. 1448இல் இக் கோவிலுக்குத் திருப்பணிகள் பல செய்து பல கிராமங்களையும் மானியம் செய்தான் எனக் கோவிற் பட்டயங்கள் கூறுகின்றன.

போர்த்துக்கேயர் இலங்கையைக் கைப்பற்றியபோது இக்கோவிலை இடித்தழித்ததுடன். கோவிலுக்குரிய அணிகலன்களையும் மற்றும் விலை மதிப்பு வாய்ந்த பொருள்களையும் கவர்ந்து சென்றனர். இவர்களினால் அழிக்கப்பட்ட இக் கோவிலைக் கண்டி அரசனாகிய ஸ்ரீ இராஜசிங்கன் 1753ஆம் ஆண்டில் திருத்தியமைத்து குடமுழுக்குச் செய்வித்துக் கோவிலுக்குரிய சொத்துக்களைக் கோவிலுக்கு உரிமையாக்குவித்தான். 1576இல் போர்த்துக்கேயரினால் அழிக்கப்பட்ட இக்கோயிலைத் திருத்தம் செய்வதற்காக நுண் கலைஞர்களை இந்தியாவில் இருந்து அழைப்பித்தான் எனவும் கூறப்படுகின்றது.

நெடுங்காலத்திற்குமுன் இவ்வாலயத் திருக்கிணற்றிலும், திருக்குளத்திலும் கண்டெடுக்கப்பட்ட விநாயகர், சுப்பிரமணியர், ஆறுமுகப்பெருமான், நடராசர் முதலான விக்கிரகங்கள் இங்கு பிரதிட்டை செய்து பூசிக்கப்பட்டு வருகின்றன. உலகம் படைக்கப்பட்டபோது உலக நன்மைக்காக இவ்வாலயத்துச் சிவலிங்கம் சுயம்புலிங்கமாகத் தோன்றியதென்றும், இதனால் இச் சிவலிங்கப்பிரானுக்கு சுயம்புரேசார் எனப் பெயர் வந்ததாகவும் ஐதீகம். இன்று இவ்வாலயச் சூழலில் பெருமளவு சைவ சமயத்தவர்கள் இல்லாதிருப்பினும். நித்திய நைமித்திய பூசைகள் குறைவின்றி ஒழுங்காக நடைபெறுகின்றன. நவராத்திரி விழா இங்கு அதிசிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

1963 இல் இவ்வாலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுக் குடமுழுக்கு வைபவம் நடைபெற்றது. அறுபத்துமூன்று நாயன்மார்கட்கும் சிலை வைத்து நாள்தோறும் பூசை வழிபாடாற்றிவரும் தனிச் சிறப்புப் பெற்ற தலம் ஈழத்தில் இது ஒன்றேயாம். ” மருதங்குளம், பிரமணியபுரம், வீரபாண்டியம், இரட்டைக்குளம், பூக்குளம், தாமரைக்குளம், காக்காப் பள்ளி, பொத்துவில், மணற்குளம், மண்டைகொண்டான், கழுவாமடு, தீர்த்தக்கரை, மானாவரி, குசலை, கருக்குப்பனை, கோட்டைப்பிட்டி, ஆனை விழுந்தான், முத்துப்பந்தி, மதுரஞ்சோலை போன்ற இடங்களில் பண்டைநாளில் இவ்வாலயத்தோடு நெருக்கமான தொடர்புடைய சைவத் தமிழ்மக்கள் வாழ்ந்துவந்ததாகக் கூறப்படுகின்றது.

 

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.