சமீபத்திய செய்தி

முன்னேச்சரம் இலங்கையில் உள்ள பழைமையான சிவன் கோயில்களில் காலத்தால் மிகவும் முற்பட்ட கோயில் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன முறையாய் அமைந்த இத்திருத்தலம் அழகீசுவரம் எனவும் வழங்கப்படுகின்றது. முன்னேசுவரம் கோயில் இலங்கையில் உள்ள ஐந்து பெரும் சிவாலயங்களில் (ஈசுவரங்களில்) ஒன்று. இக்கோயிலில் மக்கள் இன, சமய, மொழி வேறுபாடின்றி வழிபட்டு வருகின்றனர்.
இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி வி்ழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.
ஈழத்தில் மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாய் அமைந்த புராதன சிவத்தலங்களுள் முன்னேசுவரமும் ஒன்றாகும். ஈழநாட்டின் வட மேற்குப் பகுதியிலுள்ள சிலாபத்தில் உள்ளது. முன்னேச்சரம் சிவமகாபுராணத்திற் கூறப்படும் அழகேசுவரம் என்னும் திருத்தலம் இம் முன்னேசுவரமே என்பது ஆன்றோர் கருத்து. இராமன், வியாசர் முதலானோரும், வேறு பல முனிவர்களும் வழிபட்ட தலம் இது என தட்சணகயிலாய புராணம் கூறுகின்றது. இலங்கை மன்னர்களான கஜபாகு , ஆறாவது பராக்கிரமபாகு ஆகியோரும் இத்தலத்தை வழிபட்டுப் பலரும் பேறுகள் பெற்றுள்ளனர். திருக்கோணேசுவர ஆலயத்திற்குத் திருப்பணி செய்த குளக்கோட்டன் இவ்வாலயத்தைப் புனர்நிர்மாணஞ் செய்து இதற்கென 64 கிராமங்களை அளித்துப் பெருஞ் சிறப்புச் செய்தானென வரலாறு கூறுகின்றது. கற்பிட்டிக்குடா முழுவதும், சிலாபத்தில் இருந்து உடப்பு வரையான 12 மைல் சுற்றாடல் நிலங்கள் முழுவதும் இக்கோவிலுக்கே சொந்தமாக அந்நாட்களில் இருந்தன. இக் கிராமங்களில் இருந்தவர்கள் இவ்வாலயத்தில் பலதரப்பட்ட தொண்டு செய்பவர்களாகவே இருந்தனர். கோட்டை அரசருள் சிறப்புப் பெற்றவனாக விளங்கிய ஆறாம் பராக்கிரமபாகு, கி. பி. 1448இல் இக் கோவிலுக்குத் திருப்பணிகள் பல செய்தான் எனக் கோவிற் பட்டயங்கள் கூறுகின்றன.
போர்த்துக்கேயர் இலங்கையைக் கைப்பற்றியபோது இக்கோவிலை இடித்தழித்ததுடன், கோவிலுக்குரிய அணிகலன்களையும் மற்றும் விலை மதிப்பு வாய்ந்த பொருள்களையும் கவர்ந்து சென்றனர். இவர்களினால் அழிக்கப்பட்ட இக் கோவிலைக் கண்டி அரசனாகிய ஸ்ரீ இராஜசிங்கன் 1753ஆம் ஆண்டில் திருத்தியமைத்தான்.
குடமுழுக்குச் செய்வித்துக் கோவிலுக்குரிய சொத்துக்களைக் கோவிலுக்கு உரிமையாக்குவித்தான். 1576இல் போர்த்துக்கேயரினால் அழிக்கப்பட்ட இக்கோயிலைத் திருத்தம் செய்வதற்காக நுண் கலைஞர்களை இந்தியாவில் இருந்து அழைப்பித்தான் எனவும் கூறப்படுகின்றது. நெடுங்காலத்திற்குமுன் இவ்வாலயத் திருக்கிணற்றிலும், திருக்குளத்திலும் கண்டெடுக்கப்பட்ட விநாயகர், சுப்பிரமணியர், ஆறுமுகப்பெருமான், நடராசர் முதலான விக்கிரகங்கள் இங்கு பிரதிட்டை செய்து பூசிக்கப்பட்டு வருகின்றன.
உலகம் படைக்கப்பட்டபோது உலக நன்மைக்காக இவ்வாலயத்துச் சிவலிங்கம் சுயம்புலிங்கமாகத் தோன்றியதென்று கூறப்படுகிறது. இன்று இவ்வாலயச் சூழலில் பெருமளவு சைவ சமயத்தவர்கள் இல்லாதிருப்பினும், நித்திய நைமித்திய பூசைகள் குறைவின்றி ஒழுங்காக நடைபெறுகின்றன. வசந்த நவராத்திரி விழா இங்கு அதிசிறப்பாக நடைபெற்றுவருகின்றது.
1963 இல் இவ்வாலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுக் குடமுழுக்கு வைபவம் நடைபெற்றது.
அறுபத்துமூன்று நாயன்மார்கட்கும் சிலை வைத்து, நாள்தோறும் பூசை வழிபாடாற்றிவரும் தனிச் சிறப்புப் பெற்ற தலம் ஈழத்தில் இது ஒன்றேயாம்.
கோயில்கொண்ட இறைவன் பெயர் முன்னைநாதர். இறைவி வடிவாம்பிகை. தீர்த்தம் மாயவனாறு (தெதுரு ஓயா) தொன்மைபற்றிக்கூறும் நூல்கள் தட்சணகயிலாய புராணம், முன்னேசுவர மான்மியம், முன்னேசுவர அந்தாது, முன்னேசுவரப் பாமாலை, முன்னைநாத சுவாமி வடிவழகம்மை, முன்னைநாதசுவாமி நவதூது.
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.