சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
மாலினை மாலுற நின்றான் மலைமகள் தன்னுடைய பாலனைப் பான்மதி சூடியைப் பண்புண ரார்மதின்மேற் போலனைப் போர்விடை யேறியைப் பூந்துருத் திமகிழும் ஆலனை ஆதிபு ராணனை நானடி போற்றுவதே. 1
மறியுடை யான்மழு வாளினன் மாமலை மங்கையோர்பால் குறியுடை யான்குண மொன்றறிந் தாரில்லை கூறிலவன் பொறியுடை வாளர வத்தவன் பூந்துருத் தியுறையும் அறிவுடை ஆதி புராணனை நானடி போற்றுவதே. 2
மறுத்தவர் மும்மதில் மாயவொர் வெஞ்சிலை கோத்தோரம்பால் அறுத்தனை ஆலதன் கீழனை ஆல்விட முண்டதனைப் பொறுத்தனைப் பூதப் படையனைப் பூந்துருத் தியுறையும் நிறத்தனை நீல மிடற்றனை யானடி போற்றுவதே. 3
உருவினை ஊழி முதல்வனை ஓதி நிறைந்துநின்ற திருவினைத் தேசம் படைத்தனைச் சென்றடைந் தேனுடைய பொருவினை யெல்லாந் துரந்தனைப் பூந்துருத் தியுறையுங் கருவினைக் கண்மூன் றுடையனை யானடி போற்றுவதே. 4
தக்கன்றன் வேள்வி தகர்த்தவன் சார மதுவன்றுகோள் மிக்கன மும்மதில் வீயவோர் வெஞ்சிலை கோத்தொரம்பால் புக்கனன் பொன்றிகழ்ந் தன்னதோர் பூந்துருத் தியுறையும் நக்கனை நங்கள் பிரான்றனை நானடி போற்றுவதே. 5
அருகடை மாலையுந் தானுடை யான்அழ காலமைந்த உருவுடை மங்கையுந் தன்னொரு பாலுல காயுநின்றான் பொருபடை வேலினன் வில்லினன் பூந்துருத் தியுறையுந் திருவுடைத் தேச மதியனை யானடி போற்றுவதே. 6
மன்றியுந் நின்ற மதிலரை மாய வகைகெடுக்கக் கன்றியுந் நின்று கடுஞ்சிலை வாங்கிக் கனலம்பினாற் பொன்றியும் போகப் புரட்டினன் பூந்துருத் தியுறையும் அன்றியுஞ் செய்த பிரான்றனை யானடி போற்றுவதே. 7
மின்னிறம் மிக்க இடையுமை நங்கையொர் பான்மகிழ்ந்தான் என்னிற மென்றம ரர்பெரி யாரின்னந் தாமறியார் பொன்னிற மிக்க சடையவன் பூந்துருத் தியுறையும் என்னிற வெந்தை பிரான்றனை யானடி போற்றுவதே. 8
அந்தியை நல்ல மதியினை யார்க்கும் அறிவரிய செந்தியை வாட்டுஞ்செம் பொன்னினை சென்றடைந் தேனுடைய புந்தியைப் புக்க அறிவினை பூந்துருத் தியுறையும் நந்தியை நங்கள் பிரான்றனை நானடி போற்றுவதே. 9
பைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு சடையிடையே வைக்கையும் வானிழி கங்கையும் மங்கை நடுக்குறவே மொய்க்கை அரக்கனை யூன்றினன் பூந்துருத் தியுறையும் மிக்கநல் வேத விகிர்தனை நானடி போற்றுவதே.
திருச்சிற்றம்பலம்
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.