சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

04.072 விண்ணவர் மகுட

திருச்சிற்றம்பலம்

விண்ணவர் மகுட கோடி 
  மிடைந்தசே வடியர் போலும்
பெண்ணொரு பாகர் போலும் 
  பேடலி யாணர் போலும்
வண்ணமால் அயனுங் காணா 
  மால்வரை எரியர் போலும்
எண்ணுரு வநேகர் போலும் 
  இன்னம்பர் ஈச னாரே.   1 
  
 
பன்னிய மறையர் போலும் 
  பாம்பரை யுடையர் போலுந்
துன்னிய சடையர் போலுந் 
  தூமதி மத்தர் போலும்
மன்னிய மழுவர் போலும் 
  மாதிடம் மகிழ்வர் போலும்
என்னையும் உடையர் போலும் 
  இன்னம்பர் ஈச னாரே.   2 
 

மறியொரு கையர் போலும் 
  மாதுமை யுடையர் போலும்
பறிதலைப் பிறவி நீக்கிப் 
  பணிகொள வல்லர் போலுஞ்
செறிவுடை அங்க மாலை 
  சேர்திரு வுருவர் போலும்
எறிபுனற் சடையர் போலும் 
  இன்னம்பர் ஈச னாரே.   3  
 

விடமலி கண்டர் போலும் 
  வேள்வியை அழிப்பர் போலுங்
கடவுநல் விடையர் போலுங் 
  காலனைக் காய்வர் போலும்
படமலி அரவர் போலும் 
  பாய்புலித் தோலர் போலும்
இடர்களைந் தருள்வர் போலும் 
  இன்னம்பர் ஈச னாரே.   4 
 

அளிமலர்க் கொன்றை துன்றும் 
  அவிர்சடை யுடையர் போலுங்
களிமயிற் சாய லோடுங் 
  காமனை விழிப்பர் போலும்
வெளிவளர் உருவர் போலும் 
  வெண்பொடி யணிவர் போலும்
எளியவர் அடியர்க் கென்றும் 
  இன்னம்பர் ஈச னாரே.   5  
 
கணையமர் சிலையர் போலுங் 
  கரியுரி உடையர் போலுந்
துணையமர் பெண்ணர் போலுந் 
  தூமணிக் குன்றர் போலும்
அணையுடை அடியர் கூடி 
  அன்பொடு மலர்கள் தூவும்
இணையடி உடையர் போலும் 
  இன்னம்பர் ஈச னாரே.   6  
  
 
பொருப்பமர் புயத்தர் போலும் 
  புனலணி சடையர் போலும்
மருப்பிள வாமை தாங்கு 
  மார்பில்வெண் ணூலர் போலும்
உருத்திர மூர்த்தி போலும் 
  உணர்விலார் புரங்கள் மூன்றும்
எரித்திடு சிலையர் போலும் 
  இன்னம்பர் ஈச னாரே.   7
  
 
காடிடம் உடையர் போலுங் 
  கடிகுரல் விளியர் போலும்
வேடுரு வுடையர் போலும் 
  வெண்மதிக் கொழுந்தர் போலுங்
கோடலர் வன்னி தும்பை 
  கொக்கிற கலர்ந்த கொன்றை
ஏடமர் சடையர் போலும் 
  இன்னம்பர் ஈச னாரே.   8 
  
		
காறிடு விடத்தை யுண்ட 
  கண்டரெண் டோ ளர் போலும்
நீறுடை யுருவர் போலும் 
  நினைப்பினை அரியர் போலும்
பாறுடைத் தலைகை ஏந்திப் 
  பலிதிரிந் துண்பர் போலும்
ஏறுடைக் கொடியர் போலும் 
  இன்னம்பர் ஈச னாரே.   9 
   
		
ஆர்த்தெழு மிலங்கைக் கோனை 
  அருவரை அடர்ப்பர் போலும்
பார்த்தனோ டமர் பொருது 
  படைகொடுத் தருள்வர் போலுந்
தீர்த்தமாங் கங்கை தன்னைத் 
  திருச்சடை வைப்பர் போலும்
ஏத்தஏ ழுலகும் வைத்தார் 
  இன்னம்பர் ஈச னாரே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமி : எழுத்தறிந்தவீசுவரர்; அம்பாள் : கொந்தார்பூங்குழலம்மை. 10


திருச்சிற்றம்பலம்

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.