சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
படுகுழிப் பவ்வத் தன்ன பண்டியைப் பெய்த வாற்றாற் கெடுவதிம் மனிதர் வாழ்க்கை காண்டொறுங் கேது கின்றேன் முடுகுவர் இருந்துள் ஐவர் மூர்க்கரே இவர்க ளோடும் அடியனேன் வாழ மாட்டேன் ஆரூர்மூ லட்ட னீரே. 1
புழுப்பெய்த பண்டி தன்னைப் புறமொரு தோலால் மூடி ஒழுக்கறா ஒன்ப துவாய் ஒற்றுமை யொன்று மில்லை சழக்குடை இதனுள் ஐவர் சங்கடம் பலவுஞ் செய்ய அழிப்பனாய் வாழ மாட்டேன் ஆரூர்மூ லட்ட னீரே. 2
பஞ்சின்மெல் லடியி னார்கள் பாங்கரா யவர்கள் நின்று நெஞ்சில்நோய் பலவுஞ் செய்து நினையினும் நினைய வொட்டார் நஞ்சணி மிடற்றி னானே நாதனே நம்ப னேநான் அஞ்சினேற் கஞ்ச லென்னீர் ஆரூர்மூ லட்ட னீரே. 3
கெண்டையந் தடங்கண் நல்லார் தம்மையே கெழும வேண்டிக் குண்டராய்த் திரிதந் தைவர் குலைத்திடர்க் குழியில் நூக்கக் கண்டுநான் தரிக்க கில்லேன் காத்துக்கொள் கறைசேர் கண்டா அண்டவா னவர்கள் போற்றும் ஆரூர்மூ லட்ட னீரே. 4
தாழ்குழல் இன்சொல் நல்லார் தங்களைத் தஞ்ச மென்று ஏழையே னாகி நாளும் என்செய்கேன் எந்தை பெம்மான் வாழ்வதேல் அரிது போலும் வைகலும் ஐவர் வந்து ஆழ்குழிப் படுக்க வாற்றேன் ஆரூர்மூ லட்ட னீரே. 5
மாற்றமொன் றருள கில்லீர் மதியிலேன் விதியி லாமை சீற்றமுந் தீர்த்தல் செய்யீர் சிக்கன வுடைய ராகிக் கூற்றம்போல் ஐவர் வந்து குலைத்திட்டுக் கோகு செய்ய ஆற்றவுங் கில்லேன் நாயேன் ஆரூர்மூ லட்ட னீரே. 6
உயிர்நிலை யுடம்பே காலா உள்ளமே தாழி யாகத் துயரமே ஏற்ற மாகத் துன்பக்கோ லதனைப் பற்றிப் பயிர்தனைச் சுழிய விட்டுப் பாழ்க்குநீர் இறைத்து மிக்க அயர்வினால் ஐவர்க் காற்றேன் ஆரூர்மூ லட்ட னீரே. 7
கற்றதேல் ஒன்று மில்லை காரிகை யாரோ டாடிப் பெற்றதேற் பெரிதுந் துன்பம் பேதையேன் பிழைப்பி னாலே முற்றினால் ஐவர் வந்து முறைமுறை துயரஞ் செய்ய அற்றுநான் அலந்து போனேன் ஆரூர்மூ லட்ட னீரே. 8
பத்தனாய் வாழ மாட்டேன் பாவியேன் பரவி வந்து சித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவுஞ் செய்ய மத்துறு தயிரே போல மறுகுமென் னுள்ளந் தானும் அத்தனே அமரர் கோவே ஆரூர்மூ லட்ட னீரே. 9
தடக்கைநா லைந்துங் கொண்டு தடவரை தன்னைப் பற்றி எடுத்தவன் பேர்க்க ஓடி இரிந்தன பூத மெல்லாம் முடித்தலை பத்துந் தோளும் முறிதர இறையே யூன்றி அடர்த்தருள் செய்த தென்னே ஆரூர்மூ லட்ட னீரே.
சுவாமி:புற்றிடங்கொண்டார்;அம்பாள்:அல்லியம்பூங்கோதை.10
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : நான்காம்-திருமுறை
பண் : திருநேரிசை
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
தலம் : ஆரூர்
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.