சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
நெற்றிமேற் கண்ணி னானே நீறுமெய் பூசி னானே கற்றைப்புன் சடையி னானே கடல்விடம் பருகி னானே செற்றவர் புரங்கள் மூன்றுஞ் செவ்வழல் செலுத்தி னானே குற்றமில் குணத்தி னானே கோடிகா வுடைய கோவே. 1
கடிகமழ் கொன்றை யானே கபாலங்கை யேந்தி னானே வடிவுடை மங்கை தன்னை மார்பிலோர் பாகத் தானே அடியிணை பரவ நாளும் அடியவர்க் கருள்செய் வானே கொடியணி விழவ தோவாக் கோடிகா வுடைய கோவே. 2
நீறுமெய் பூசி னானே நிழல்திகழ் மழுவி னானே ஏறுகந் தேறி னானே இருங்கடல் அமுதொப் பானே ஆறுமோர் நான்கு வேதம் அறமுரைத் தருளி னானே கூறுமோர் பெண்ணி னானே கோடிகா வுடைய கோவே. 3
காலனைக் காலாற் செற்றன் றருள்புரி கருணை யானே நீலமார் கண்டத் தானே நீண்முடி யமரர் கோவே ஞாலமாம் பெருமை யானே நளிரிளந் திங்கள் சூடுங் கோலமார் சடையி னானே கோடிகா வுடைய கோவே. 4
பூணர வாரத் தானே புலியுரி அரையி னானே காணில்வெண் கோவ ணமுங் கையிலோர் கபால மேந்தி ஊணுமூர்ப் பிச்சை யானே உமையொரு பாகத் தானே கோணல்வெண் பிறையி னானே கோடிகா வுடைய கோவே. 5
கேழல்வெண் கொம்பு பூண்ட கிளரொளி மார்பி னானே ஏழையேன் ஏழை யேன்நான் என்செய்கேன் எந்தை பெம்மான் மாழையொண் கண்ணி னார்கள் வலைதனில் மயங்கு கின்றேன் கூழைஏ றுடைய செல்வா கோடிகா வுடைய கோவே. 6
அழலுமிழ் அங்கை யானே அரிவையோர் பாகத் தானே தழலுமிழ் அரவம் ஆர்த்துத் தலைதனிற் பலிகொள் வானே நிழலுமிழ் சோலை சூழ நீள்வரி வண்டி னங்கள் குழலுமிழ் கீதம் பாடுங் கோடிகா வுடைய கோவே. 7
ஏவடு சிலையி னாலே புரமவை எரிசெய் தானே மாவடு வகிர்கொள் கண்ணாள் மலைமகள் பாகத் தானே ஆவடு துறையு ளானே ஐவரால் ஆட்டப் பட்டேன் கோவடு குற்றந் தீராய் கோடிகா வுடைய கோவே. 8
ஏற்றநீர்க் கங்கை யானே இருநிலந் தாவி னானும் நாற்றமா மலர்மேல் ஏறும் நான்முகன் இவர்கள் கூடி ஆற்றலால் அளக்க லுற்றார்க் கழலுரு வாயினானே கூற்றுக்குங் கூற்ற தானாய் கோடிகா வுடைய கோவே. 9
பழகநான் அடிமை செய்வேன் பசுபதீ பாவ நாசா மழகளி யானை யின்றோல் மலைமகள் வெருவப் போர்த்த அழகனே அரக்கன் திண்டோ ள் அருவரை நெரிய வூன்றுங் குழகனே கோல மார்பா கோடிகா வுடைய கோவே.
சுவாமி:கோடீசுவரர்;அம்பாள்:வடிவாம்பிகையம்மை.10
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : நான்காம்-திருமுறை
பண் : திருநேரிசை
நாடு : சோழநாடு காவிரி வடகரை
தலம் : கோடிகா
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.