சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
நங்கையைப் பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார் அங்கையில் அனலும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார் தங்கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார் கங்கையைச் சடையுள் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. 1
விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார் பண்ணினைப் பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார் மண்ணினைத் தாவ நீண்ட மாலினுக் கருளும் வைத்தார் கண்ணினை நெற்றி வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. 2
வாமனை வணங்க வைத்தார் வாயினை வாழ்த்த வைத்தார் சோமனைச் சடைமேல் வைத்தார் சோதியுட் சோதி வைத்தார் ஆமனை யாட வைத்தார் அன்பெனும் பாசம் வைத்தார் காமனைக் காய்ந்த கண்ணார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. 3
அரியன அங்கம் வேதம் அந்தணர்க் கருளும் வைத்தார் பெரியன புரங்கள் மூன்றும் பேரழ லுண்ண வைத்தார் பரியதீ வண்ண ராகிப் பவளம்போல் நிறத்தை வைத்தார் கரியதோர் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. 4
கூரிருள் கிழிய நின்ற கொடுமழுக் கையில் வைத்தார் பேரிருள் கழிய மல்கு பிறைபுனற் சடையுள் வைத்தார் ஆரிருள் அண்டம் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார் காரிருள் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. 5
உட்டங்கு சிந்தை வைத்தார் உள்குவார்க் குள்ளம் வைத்தார் விட்டங்கு வேள்வி வைத்தார் வெந்துயர் தீர வைத்தார் நட்டங்கு நடமும் வைத்தார் ஞானமு நவில வைத்தார் கட்டங்கந் தோண்மேல் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. 6
ஊனப்பே ரொழிய வைத்தார் ஓதியே உணர வைத்தார் ஞானப்பேர் நவில வைத்தார் ஞானமு நடுவும் வைத்தார் வானப்பே ராறும் வைத்தார் வைகுந்தற் காழி வைத்தார் கானப்பேர் காதல் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே 7
கொங்கினும் அரும்பு வைத்தார் கூற்றங்கள் கெடுக்க வைத்தார் சங்கினுள் முத்தம் வைத்தார் சாம்பலும் பூச வைத்தார் அங்கமும் வேதம் வைத்தார் ஆலமும் உண்டு வைத்தார் கங்குலும் பகலும் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. 8
சதுர்முகன் தானும் மாலுந் தம்மிலே இகலக் கண்டு எதிர்முக மின்றி நின்ற எரியுரு வதனை வைத்தார் பிதிர்முகன் காலன் றன்னைக் கால்தனிற் பிதிர வைத்தார் கதிர்முகஞ் சடையில் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. 9
மாலினாள் நங்கை அஞ்ச மதிலிலங் கைக்கு மன்னன் வேலினான் வெகுண் டெடுக்கக் காண்டலும் வேத நாவன் நூலினான் நோக்கி நக்கு நொடிப்பதோ ரளவில் வீழக் காலினால் ஊன்றி யிட்டார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி:பால்வண்ணவீசுவரர்;
அம்பாள்:பொற்பதவேதநாயகி.10
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : நான்காம்-திருமுறை
பண் : திருநேரிசை
நாடு : சோழநாடு காவிரி வடகரை
தலம் : கழிப்பாலை
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.