சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
வெண்ணிலா மதியந் தன்னை விரிசடை மேவ வைத்து உண்ணிலாப் புகுந்து நின்றங் குணர்வினுக் குணரக் கூறி விண்ணிலார் மீயச் சூரார் வேண்டுவார் வேண்டு வார்க்கே அண்ணியார் பெரிதுஞ் சேயார் அதிகைவீ ரட்ட னாரே. 1
பாடினார் மறைகள் நான்கும் பாயிருள் புகுந்தென் உள்ளங் கூடினார் கூட லால வாயிலார் நல்ல கொன்றை சூடினார் சூடல் மேவிச் சூழ்சுடர்ச் சுடலை வெண்ணீ றாடினார் ஆடல் மேவி அதிகைவீ ரட்ட னாரே. 2
ஊனையே கழிக்க வேண்டில் உணர்மின்கள் உள்ளத் துள்ளே தேனைய மலர்கள் கொண்டு சிந்தையுட் சிந்திக் கின்ற ஏனைய பலவு மாகி இமையவர் ஏத்த நின்று ஆனையின் உரிவை போர்த்தார் அதிகைவீ ரட்ட னாரே. 3
துருத்தியாங் குரம்பைதன்னில் தொண்ணூற்றங் கறுவர் நின்று விருத்திதான் தருக வென்று வேதனை பலவுஞ் செய்ய வருத்தியால் வல்ல வாறு வந்துவந் தடைய நின்ற அருத்தியார்க் கன்பர் போலும் அதிகைவீ ரட்ட னாரே. 4
பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத் துள்ளார் துத்திஐந் தலைய நாகஞ் சூழ்சடை முடிமேல் வைத்து உத்தர மலையர் பாவை உமையவள் நடுங்க அன்று அத்தியின் உரிவை போர்த்தார் அதிகைவீ ரட்ட னாரே. 5
வரிமுரி பாடி யென்றும் வல்லவா றடைந்து நெஞ்சே கரியுரி மூட வல்ல கடவுளைக் காலத் தாலே சுரிபுரி விரிகு ழலாள் துடியிடைப் பரவை யல்குல் அரிவையோர் பாகர் போலும் அதிகைவீ ரட்ட னாரே. 6
நீதியால் நினைசெய் நெஞ்சே நிமலனை நித்த மாகப் பாதியாம் உமைதன் னோடும் பாகமாய் நின்ற எந்தை சோதியாய்ச் சுடர்வி ளக்காய்ச் சுண்ணவெண் ணீற தாடி ஆதியும் ஈறு மானார் அதிகைவீ ரட்ட னாரே. 7
எல்லியும் பகலு மெல்லாந் துஞ்சுவேற் கொருவர் வந்து புல்லிய மனத்துக் கோயில் புக்கனர் காம னென்னும் வில்லிஐங் கணையி னானை வெந்துக நோக்கி யிட்டார் அல்லியம் பழன வேலி அதிகைவீ ரட்ட னாரே. 8
ஒன்றவே யுணர்தி ராகில் ஓங்காரத் தொருவ னாகும் வென்றஐம் புலன்கள் தம்மை விலக்குதற் குரியீ ரெல்லாம் நன்றவன் நார ணனும் நான்முகன் நாடிக் காண்குற் றன்றவர்க் கரியர் போலும் அதிகைவீ ரட்ட னாரே. 9
தடக்கையால் எடுத்து வைத்துத் தடவரை குலுங்க ஆர்த்துக் கிடக்கையால் இடர்க ளோங்கக் கிளர்மணி முடிகள் சாய முடக்கினார் திருவி ரல்தான் முருகமர் கோதை பாகத் தடக்கினார் என்னை யாளும் அதிகைவீ ரட்ட னாரே.
சுவாமி : வீரட்டானேஸ்வரர்; அம்பாள் : திரிபுரசுந்தரி. 10
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : நான்காம்-திருமுறை
பண் : திருநேரிசை
நாடு : நடுநாடு
தலம் :அதிகை வீரட்டானம்
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.