சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
பற்றற் றார்சேர் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச் சிற்றம் பலத்தெந் திகழ்கனியைத் தீண்டற் கரிய திருவுருவை *வெற்றி யூரில் விரிசுடரை விமலர் கோனைத் திரைசூழ்ந்த ஒற்றி யூரெம் உத்தமனை உள்ளத் துள்ளே வைத்தேனே. * வெற்றியூரென்பது வைப்புத்தலங்களிலொன்று. 1
ஆனைக் காவில் அணங்கினை ஆரூர் நிலாய அம்மானைக் கானப் பேரூர்க் கட்டியைக் கானூர் முளைத்த கரும்பினை வானப் பேரார் வந்தேத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை மானக் கயிலை மழகளிற்றை மதியைச் சுடரை மறவேனே. 2
மதியங் கண்ணி ஞாயிற்றை மயக்கந் தீர்க்கும் மருந்தினை அதிகை மூதூர் அரசினை ஐயா றமர்ந்த ஐயனை விதியைப் புகழை வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை நெதியை ஞானக் கொழுந்தினை நினைந்தேற் குள்ளம் நிறைந்ததே. 3
புறம்ப யத்தெம் முத்தினைப் புகலூர் இலங்கு பொன்னினை *உறந்தை யோங்கு சிராப்பள்ளி உலகம் விளக்கு ஞாயிற்றைக் கறங்கு மருவிக் கழுக்குன்றிற் காண்பார் காணுங் கண்ணானை அறஞ்சூழ் அதிகை வீரட்டத் தரிமான் ஏற்றை அடைந்தேனே. * உறந்தையென்பது உறையூர். 4
கோலக் காவிற் குருமணியைக் *குடமூக் குறையும் விடமுணியை ஆலங் காட்டி லந்தேனை அமரர் சென்னி யாய்மலரைப் பாலிற் றிகழும் பைங்கனியைப் பராய்த் துறையெம் பசும்பொன்னைச் சூலத் தானைத் துணையிலியைத் தோளைக் குளிரத் தொழுதேனே. *குடமூக்கென்பது கும்பகோணம். 5
மருக லுறையுமா ணிக்கத்தை வலஞ் சுழியின் மாலையை கருகா வூரிற் கற்பகத்தைக் காண்டற் கரிய கதிரொளியைப் பெருவே ளூரெம் பிறப்பிலியைப் பேணு வார்கள் பிரிவரிய திருவாஞ் சியத்தெஞ் செல்வனைச் சிந்தை யுள்ளே வைத்தேனே. 6
எழிலார் இராச சிங்கத்தை இராமேச் சுரத்தெம் எழிலேற்றைக் குழலார் கோதை வரைமார்பிற் குற்றா லத்தெங் கூத்தனை நிழலார் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை அழலார் வண்ணத் தம்மானை அன்பி லணைத்து வைத்தேனே. 7
மாலைத் தோன்றும் வளர்மதியை மறைக்காட் டுறையும் மணாளனை ஆலைக் கரும்பி னின்சாற்றை அண்ணா மலையெம் அண்ணலைச் சோலைத் துருத்தி நகர்மேய சுடரிற் றிகழுந் துளக்கிலியை மேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கி யிட்டேனே. 8
சோற்றுத் துறையெஞ் சோதியைத் துருத்தி மேய தூமணியை ஆற்றிற் பழனத் தம்மானை ஆல வாயெம் மருமணியை நீற்றிற் பொலிந்த நிமிர்திண்டோ ள் நெய்த்தா னத்தெந் நிலாச்சுடரைத் தோற்றக் கடலை அடலேற்றைத் தோளைக் குளிரத் தொழுதேனே. 9
புத்தூ ருறையும் புனிதனைப் பூவ ணத்தெம் போரேற்றை வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக் குடியெம் வேதியனைப் பொய்த்தார் புரமூன் றெரித்தானைப் பொதியில் மேய புராணனை வைத்தேன் என்றன் மனத்துள்ளே *மாத்தூர் மேய மருந்தையே. * மாத்தூரென்பது - திருவாமாத்தூர். 10
முந்தித் தானே முளைத்தானை மூரி வெள்ளே றூர்ந்தானை அந்திச் செவ்வான் படியானை அரக்க னாற்றல் அழித்தானைச் சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொன் மாலை யடிச்சேர்த்தி எந்தை பெம்மான் என்னெம்மான் என்பார் பாவ நாசமே. 11
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : நான்காம்-திருமுறை
பண் : பழம்பஞ்சுரம்
நாடு : பொது
தலம் : பொது
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.