சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
விடகிலேன் அடிநாயேன் வேண்டியக்கால் யாதொன்றும் இடகிலேன் அமணர்கள்தம் அறவுறைகேட் டலமலந்தேன் தொடர்கின்றேன் உன்னுடைய தூமலர்ச்சே வடிகாண்பான் அடைகின்றேன் ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே. 1
செம்பவளத் திருவுருவர் திகழ்சோதி குழைக்காதர் கொம்பமருங் கொடிமருங்குற் கோல்வளையா ளொருபாகர் வம்பவிழும் மலர்க்கொன்றை வளர்சடைமேல் வைத்துகந்த அம்பவள ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே. 2
நணியானே சேயானேநம்பானே செம்பொன்னின் துணியானே தோலானே சுண்ணவெண் ணீற்றானே மணியானே வானவர்க்கு மருந்தாகிப் பிணிதீர்க்கும் அணியானே ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே. 3
ஊழித்தீ யாய்நின்றாய் உள்குவார் உள்ளத்தாய் வாழித்தீ யாய்நின்றாய் வாழ்த்துவார் வாயானே பாழித்தீ யாய்நின்றாய் படர்சடைமேற் பனிமதியம் ஆழித்தீ ஐயாறார்க் காளாய்நான் உய்ந்தேனே. 4
சடையானே சடையிடையே தவழுந்தண் மதியானே விடையானே விடையேறிப் புரமெரித்த வித்தகனே உடையானே உடைதலைகொண் டூரூருண் பலிக்குழலும் அடையானே ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே. 5
நீரானே தீயானே நெதியானே கதியானே ஊரானே உலகானே உடலானே உயிரானே பேரானே பிறைசூடீ பிணிதீர்க்கும் பெருமானென் றாராத ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே. 6
கண்ணானாய் மணியானாய் கருத்தானாய் *அருத்தானாய் எண்ணானாய் எழுத்தானாய் எழுத்தினுக்கோர் இயல்பானாய் விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனே அண்ணான ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே. * அருத்தனாயென்பதற்கு - உண்ணப்படும் பொருள்களாயின எனப் பொருள்படுகின்றது. 7
மின்னானாய் உருமானாய் வேதத்தின் பொருளானாய் பொன்னானாய் மணியானாய் பொருகடல்வாய் முத்தானாய் நின்னானார் இருவர்க்குங் காண்பரிய நிமிர்சோதி அன்னானே ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே. 8
முத்திசையும் புனற்பொன்னி மொய்பவளங் கொழித்துந்தப் பத்தர்பலர் நீர்மூழ்கிப் பலகாலும் பணிந்தேத்த எத்திசையும் வானவர்கள் எம்பெருமா னெனஇறைஞ்சும் அத்திசையாம் ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே. 9
கருவரைசூழ் கடலிலங்கைக் கோமானைக் கருத்தழியத் திருவிரலால் உதகரணஞ் செய்துகந்த சிவமூர்த்தி பெருவரைசூழ் வையகத்தார் பேர்நந்தி என்றேத்தும் அருவரைசூழ் ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
சுவாமி : செம்பொற்சோதீசுவரர்; அம்பாள் : அறம்வளர்த்தநாயகி. 10
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : நான்காம்-திருமுறை
பண் : பழந்தக்கராகம்
நாடு : சோழநாடு காவிரி வடகரை
தலம் : ஐயாறு
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.