சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான் முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னிப் பொன்மாலை மார்பன்என் புதுநலமுண் டிகழ்வானோ. 1
கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள் பண்டரங்க வேடத்தான் பாட்டோ வாப் பழனத்தான் வண்டுலாந் தடமூழ்கி மற்றவனென் தளிர்வண்ணங் கொண்டநாள் தானறிவான் குறிக்கொள்ளா தொழிவானோ. 2
மனைக்காஞ்சி* இளங்குருகே மறந்தாயோ மதமுகத்த பனைக்கைமா வுரிபோர்த்தான் பலர்பாடும் பழனத்தான் நினைக்கின்ற நினைப்பெல்லாம் உரையாயோ நிகழ்வண்டே சுனைக்குவளை மலர்க்கண்ணாள் சொற்றூதாய்ச் சோர்வாளோ. * மனைக்காஞ்சியென்பது வீட்டுக்குச் சமீபத்திலிருக்குங் காஞ்சிமரம். 3
புதியையாய் இனியையாம் பூந்தென்றால் புறங்காடு பதியாவ திதுவென்று பலர்பாடும் பழனத்தான் மதியாதார் வேள்விதனைமதித்திட்ட மதிகங்கை விதியாளன் என்னுயிர்மேல் விளையாடல் விடுத்தானோ. 4
மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும் விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப் பண்பொருந்த இசைபாடும் பழனஞ்சேர் அப்பனையென் கண்பொருந்தும் போழ்தத்துங் கைவிடநான் கடவேனோ. 5
பொங்கோத மால்கடலிற் புறம்புறம்போய் இரைதேருஞ் செங்கால்வெண் மடநாராய் செயற்படுவ தறியேன்நான் அங்கோல வளைகவர்ந்தான் அணிபொழில்சூழ் பழனத்தான் தங்கோல நறுங்கொன்றைத் தாரருளா தொழிவானோ. 6
துணையார முயங்கிப்போய்த் துறைசேரும் மடநாராய் பணையார வாரத்தான் பாட்டோ வாப் பழனத்தான் கணையார இருவிசும்பிற் கடியரணம் பொடிசெய்த இணையார மார்பன்என் எழில்நலமுண் டிகழ்வானோ. 7
கூவைவாய்* மணிவரன்றிக் கொழித்தோடுங் **காவிரிப்பூம் பாவைவாய் முத்திலங்கப் பாய்ந்தாடும் பழனத்தான் கோவைவாய் மலைமகள்கோன் கொல்லேற்றின் கொடியாடைப் பூவைகாள் மழலைகாள் போகாத பொழுதுளதே. *கூவைவாய்மணி என்பது பூமியினிடத்தில் பொருந்திய முத்துக்கள் - அவையாவன - யானைக்கொம்பு, பன்றிக்கொம்பு, நாகம், பசுவின்பல், மூங்கிற்கணு, கொக்கின்கழுத்து, கற்புள்ள மாதர்கண்டம் என்னுமிவ்விடங்களி லுண்டாயிருக்கு முத்துக்களாம். **காவிரிப்பூம்பாவைவாய் முத்து என்பது நீர்முத்து எனக்கொள்க. அவை - சங்கு, இப்பி, மீன், தாமரை மலர் என்னு மிவைகளி லுண்டாகு முத்துக்கள். இதனை "சிறைகொள் நீர்த்தரளத் திரல்கொணித்திலத்த" எனத் திருமாளிகைத்தேவர் அருளிச்செய்த திருவிசைப்பா, 2-வது பதிகம் 5-வது திருப்பாடலானு முணர்க. 8
புள்ளிமான் பொறியரவம் புள்ளுயர்த்தான் மணிநாகப் பள்ளியான் தொழுதேத்த இருக்கின்ற பழனத்தான் உள்ளுவார் வினைதீர்க்கும் என்றுரைப்பர் உலகெல்லாங் கள்ளியேன் நான்இவற்கென் கனவளையுங் கடவேனோ. 9
வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும் பஞ்சிக்காற் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான் அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே.
சுவாமி : ஆபத்சகாயர்; அம்பாள் : பெரியநாயகியம்மை. 10
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : நான்காம்-திருமுறை
பண் : பழந்தக்கராகம்
நாடு : சோழநாடு காவிரி வடகரை
தலம் : பழனம்
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.