சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
சொற்றுணை வேதியன்
  சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி
  பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர்
  கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது
  நமச்சி வாயவே.   1  
       
		
பூவினுக் கருங்கலம்
  பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம்
  அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங்
  கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம்
  நமச்சி வாயவே.   2 
        
		
விண்ணுற அடுக்கிய
  விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை
  யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.   3
        
		
இடுக்கண்பட் டிருக்கினும்
  இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று
  வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு
  மருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது
  நமச்சி வாயவே.   4 
        
		
வெந்தநீ றருங்கலம்
  விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம்
  அருமறை யாறங்கந்
திங்களுக் கருங்கலந்
  திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம்
  நமச்சி வாயவே.   5 
       
		
சலமிலன் சங்கரன்
  சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு
  நல்கு வான்நலன்
குலமில ராகிலுங்
  குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது
  நமச்சி வாயவே.   6 
        
		
வீடினார் உலகினில்
  விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி
  கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென்
  றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று
  நமச்சி வாயவே.   7
         
		
இல்லக விளக்கது
  இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது
  சோதி யுள்ளது
பல்லக விளக்கது
  பலருங் காண்பது
நல்லக விளக்கது
  நமச்சி வாயவே.   8 
       
        
		
முன்னெறி யாகிய
  முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர
  ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங்
  கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது
  நமச்சி வாயவே.   9 
        
		
மாப்பிணை தழுவிய
  மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி
  பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய
  நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக்
  கிடுக்க ணில்லையே.
        
		இது சமணர்கள் கற்றூணிற்கட்டிக் கடலிலே வீழ்த்தினபோது ஓதியருளியது. 10
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : நான்காம்-திருமுறை
பண் : காந்தாரபஞ்சமம்
நாடு : பொது
தலம் : பொது
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.