சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
முளைக்கதிர் இளம்பிறை மூழ்க வெள்ளநீர் வளைத்தெழு சடையினர் மழலை வீணையர் திளைத்ததோர் மான்மறிக் கையர் செய்யபொன் கிளைத்துழித் தோன்றிடுங் கெடில வாணரே. 1
ஏறினர் ஏறினை ஏழை தன்னொரு கூறினர் கூறினர் வேதம் அங்கமும் ஆறினர் ஆறிடு சடையர் பக்கமுங் கீறின வுடையினர் கெடில வாணரே. 2
விடந்திகழ் கெழுதரு மிடற்றர் வெள்ளைநீ றுடம்பழ கெழுதுவர் முழுதும் வெண்ணிலாப் படர்ந்தழ கெழுதரு சடையிற் பாய்புனல் கிடந்தழ கெழுதிய கெடில வாணரே. 3
விழுமணி அயிலெயிற் றம்பு வெய்யதோர் கொழுமணி நெடுவரை கொளுவிக் கோட்டினார் செழுமணி மிடற்றினர் செய்யர் வெய்யதோர் கெழுமணி அரவினர் கெடில வாணரே. 4
குழுவினர் தொழுதெழும் அடியர் மேல்வினை தழுவின கழுவுவர் பவள மேனியர் மழுவினர் மான்மறிக் கையர் மங்கையைக் கெழுவின யோகினர் கெடில வாணரே. 5
அங்கையில் அனலெரி யேந்தி யாறெனும் மங்கையைச் சடையிடை மணப்பர் மால்வரை நங்கையைப் பாகமு நயப்பர் தென்றிசைக் கெங்கைய தெனப்படுங் கெடில வாணரே. 6
கழிந்தவர் தலைகல னேந்திக் காடுறைந் திழிந்தவ ரொருவரென் றெள்க வாழ்பவர் வழிந்திழி மதுகர மிழற்ற மந்திகள் கிழிந்ததேன் நுகர்தருங் கெடில வாணரே. 7
கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக் கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக் கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே கிடந்துதான் நகுதலைக் கெடில வாணரே. 8
வெறியுறு விரிசடை புரள வீசியோர் பொறியுறு புலியுரி யரைய தாகவும் நெறியுறு குழலுமை பாக மாகவுங் கிறிபட உழிதர்வர் கெடில வாணரே. 9
பூண்டதேர் அரக்கனைப் பொருவில் மால்வரைத் தூண்டுதோ ளவைபட அடர்த்த தாளினார் ஈண்டுநீர்க் கமலவாய் மேதி பாய்தரக் கீண்டுதேன் சொரிதருங் கெடில வாணரே.
சுவாமி : அம்பாள் :வீரட்டானேஸ்வரர்;அம்பாள் : திரிபுரசுந்தரி. 10
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : நான்காம்-திருமுறை
பண் : காந்தாரம்
நாடு : நடுநாடு
தலம் : அதிகை வீரட்டானம்
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.