சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
அங்கமும் வேதமும் ஓதுநாவர் அந்தணர் நாளும் அடிபரவ மங்குல் மதிதவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் செங்கய லார்புனற் செல்வமல்கு சீர் கொள்செங் காட்டங் குடியதனுள் கங்குல் விளங்கெரி யேந்தியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே. 1
நெய்தவழ் மூவெரி காவலோம்பும் நேர்புரி நூன்மறை யாளரேத்த மைதவழ் மாட மலிந்தவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் செய்தவ நான்மறை யோர்களேத்துஞ் சீர்கொள் செங்காட்டங் குடியதனுள் கைதவழ் கூரெரி யேந்தியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே. 2
தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர் தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ மால்புகை போய்விம்மு மாடவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் சேல்புல்கு தண்வயற் சோலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் கால்புல்கு பைங்கழ லார்க்கஆடுங் கணபதி யீச்சரங் காமுறவே. 3
நாமரு கேள்வியர் வேள்வியோவா நான்மறை யோர்வழி பாடுசெய்ய மாமரு வும்மணிக் கோயில்மேய மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் தேமரு பூம்பொழிற் சோலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் காமரு சீர்மகிழ்ந் தெல்லியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே. 4
பாடல் முழவும் விழவும்ஓவாப் பன்மறை யோரவர் தாம்பரவ மாட நெடுங்கொடி விண்தடவும் மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் காடக மே1யிடமாக ஆடுங் கணபதி யீச்சரங் காமுறவே.
பாடம் : 1காடயலே 5
புனையழ லோம்புகை அந்தணாளர் பொன்னடி நாடொறும் போற்றிசைப்ப மனைகெழு மாட மலிந்தவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் சினைகெழு தண்வயல் சோலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் கனைவளர் கூரெரி ஏந்தியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே. 6
பூண்டங்கு மார்பின் இலங்கைவேந்தன் பொன்னெடுந்தோள்வரை யாலடர்த்து மாண்டங்கு நூன்மறையோர் பரவ மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் சேண்டங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் காண்டங்கு தோள்பெயர்த் தெல்லியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே. 8
அந்தமும் ஆதியும் நான்முகனும் அரவணை யானும் அறிவரிய மந்திர வேதங்க ளோதுநாவர் மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் செந்தமி ழோர்கள் பரவியேத்துஞ் சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் கந்தம் அகிற்புகை யேகமழுங் கணபதி யீச்சரங் காமுறவே. 9
இலைமரு தேயழ காகநாளு மிடுதுவர்க் காயொடு சுக்குத்தின்னும் நிலையமண் தேரரை நீங்கிநின்று2 நீதரல் லார்தொழு மாமருகல் மலைமகள் தோள்புணர் வாயருளாய் மாசில்செங் காட்டங் குடியதனுள் கலைமல்கு தோலுடுத் தெல்லியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே.
பாடம் : 2நீங்கிநின்ற,நீங்கநின்ற 10
நாலுங்குலைக்கமு கோங்குகாழி ஞானசம் பந்தன் நலந்திகழும் மாலின் மதிதவழ் மாடமோங்கும் மருகலின் மற்றதன் மேல்மொழிந்த சேலுங் கயலுந் திளைத்தகண்ணார் சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் சூலம்வல் லான்கழ லேத்துபாடல் சொல்லவல் லார்வினை யில்லையாமே.
சுவாமி : மாணிக்கவண்ணர்; அம்பாள் : வண்டுவார் குழலி.
சுவாமி : உத்தராபதீஸ்வரர்; அம்பாள் : சூளிகாம்பாள். 11
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : நட்டபாடை
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
தலம் : மருகல்
சிறப்பு: திருமருகலும் – திருச்செங்காட்டங்குடியும்
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.