சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற வாணுதல் மான்விழி மங்கையோடும் பொய்ம்மொழி யாமறை யோர்களேத்தப் புகலி நிலாவிய புண்ணியனே எம்மிறை யேஇமை யாதமுக்கண் ஈசஎன் நேசவி தென்கொல்சொல்லாய் மெய்ம்மொழி நான்மறை யோர்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே. 1
கழல்மல்கு பந்தொடம் மானைமுற்றில் கற்றவர் சிற்றிடைக் கன்னிமார்கள் பொழில்மல்கு கிள்ளையைச் சொற்பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே எழில்மல ரோன்சிர மேந்தி உண்டோர் இன்புறு செல்வமி தென்கொல்சொல்லாய் மிழலையுள் வேதிய ரேத்திவாழ்த்த விண்ணிழி கோயில் விரும்பியதே. 2
கன்னிய ராடல் கலந்துமிக்க கந்துக வாடை கலந்து துங்கப் பொன்னியல் மாடம் நெருங்குசெல்வப் புகலி நிலாவிய புண்ணியனே இன்னிசை யாழ்மொழி யாளோர்பாகத் தெம்மிறை யேஇது என்கொல்சொல்லாய் மின்னியல் நுண்ணிடை யார்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே. 3
நாக பணந்திகழ் அல்குல்மல்கு நன்னுதல் மான்விழி மங்கையோடும் பூக வனம்பொழில் சூழ்ந்தஅந்தண் புகலி நிலாவிய புண்ணியனே ஏக பெருந்தகை யாயபெம்மான் எம்மிறை யேஇது என்கொல்சொல்லாய் மேக முரிஞ்செயில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே. 4
சந்தள றேறுத டங்கொள்கொங்கைத் தையலொ டுந்தள ராதவாய்மைப் புந்தியி னால்மறை யோர்களேத்தும் புகலி நிலாவிய புண்ணியனே எந்தமை யாளுடை ஈசஎம்மான் எம்மிறை யேஇது என்கொல்சொல்லாய் வெந்தவெண் நீறணி வார்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே. 5
சங்கொளி1 இப்பி சுறாமகரந் தாங்கி நிரந்து தரங்கம்மேன்மேற் பொங்கொலி நீர்சுமந் தோங்குசெம்மைப் புகலி நிலாவிய புண்ணியனே எங்கள்பி ரானிமை யோர்கள்பெம்மான் எம்மிறை யேஇது என்கொல்சொல்லாய் வெங்கதிர் தோய்பொழில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.
பாடம் : 1சங்கொலி 6
காமனெ ரிப்பிழம் பாகநோக்கிக் காம்பன தோளியொ டுங்கலந்து பூமரு நான்முகன் போல்வரேத்தப் புகலி நிலாவிய புண்ணியனே ஈமவ னத்தெரி ஆட்டுகந்த எம்பெரு மான்இது என்கொல்சொல்லாய் வீமரு தண்பொழில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே. 7
இலங்கையர் வேந்தெழில் வாய்த்ததிண்டோ ளிற்றல றவ்விர லொற்றியைந்து புலங்களைக் கட்டவர் போற்றஅந்தண் புகலி நிலாவிய புண்ணியனே இலங்கெரி யேந்திநின் றெல்லியாடும் எம்மிறை யேஇது என்கொல்சொல்லாய் விலங்கலொண் மாளிகை சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே. 8
செறிமுள ரித்தவி சேறியாறுஞ் செற்றதில்2 வீற்றிருந் தானுமற்றைப் பொறியர வத்தணை யானுங்காணாப் புகலி நிலாவிய புண்ணியனே எறிமழு வோடிள மான்கையின்றி யிருந்தபி ரான்இது என்கொல்சொல்லாய் வெறிகமழ் பூம்பொழில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.
பாடம் : 2சேறியாரும் சேற்றிதில் 9
பத்தர் கணம்பணிந் தேத்தவாய்த்த பான்மைய தன்றியும் பல்சமணும் புத்தரும் நின்றலர் தூற்றஅந்தண் புகலி நிலாவிய புண்ணியனே எத்தவத் தோர்க்குமி லக்காய்நின்ற எம்பெரு மான்இது என்கொல்சொல்லாய் வித்தகர் வாழ்பொழில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே. 10
விண்ணிழி கோயில் விரும்பிமேவும் வித்தக மென்கொலி தென்றுசொல்லிப் புண்ணிய னைப்புக லிந்நிலாவு பூங்கொடி யோடிருந் தானைப்போற்றி நண்ணிய கீர்த்தி நலங்கொள்கேள்வி நான்மறை ஞானசம் பந்தன்சொன்ன பண்ணியல் பாடல்வல் லார்களிந்தப் பாரொடு விண்பரி பாலகரே.
சுவாமி : பிரமபுரீஸ்வரர்; அம்பாள் : திருநிலைநாயகி.
சுவாமி : நேத்திரார்ப்பணேசுவரர்; அம்பாள் : சுந்தரகுஜாம்பிகை. 11
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : நட்டபாடை
நாடு : சோழநாடு காவிரி வடகரை
தலம் : சீர்காழி – 03-புகலி
சிறப்பு: திருவீழிமிழலையும்
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.